நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது – அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைகின்றது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அரசியல் கைதி பார்த்திபனின் தயாரின் இறுதிச் சடங்கு நேற்று திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அங்கு அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்றும் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், போருக்குப் பின் 13 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை.
கடந்த 26 ஆண்டுகளாக பிள்ளையை அரசியல் கைதியாக பிரிந்து அந்தப் பிள்ளையின் விடுதலைக்காகப் போராடிய தாய் இன்று மரணித்துள்ளார்.

அதுபோன்று கடந்த வராம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் சகாதேவன் நிலக்சனின் தாயாரும் மரணமடைந்தார்.

இதுபோன்று 2000 நாட்களை அண்மித்து நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய் தந்தையரும் நீதி கிட்டாமலேயே போராட்டக்கொட்டில்களிலேயே மடிந்து போகும் அபாயத்தினை காண்கின்றோம்.

இந்த நிலைமை மோசமடைகின்றது. இந்தத் தாயின் மகன் பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக 26 ஆண்டுகளாக சிறையில் நீதியின்றி விடுதலைக்காக ஏங்குகின்றார்.

அவர் தண்டிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மனித உரிமைகளை நசுக்கும் காட்டுமிராண்டித்தனமான சட்டம் என உலகமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான அநீதியான சட்டங்கள் வாயிலாகவே அப்பாவிகள், அல்லது சிறு குற்றங்களுடன் தொடர்புபட்ட தமிழ் இளையோர் சிறைகளில் தசாப்தக்கணக்கில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

தசாப்சக்கணக்கில் நீதி கிட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் இருந்து விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாய்மார்களே நீக்காக விட்டுக்கொடுப்பின்றி போராடுகின்றனர். அவர்களே அரசுக்கு எதிரான சாட்சியமாகவும் காணப்படுகின்றனர். தசாப்சக்கணக்கில் நீதி கி;ட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சீன ஜனாதிபதியிடம் இருந்து விசேட தகவல்

சீன ஜனாதிபதி Xi Jinping அனுப்பிய விசேட தகவலை இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிக்கைகு சென்று அவர் அதனை கையளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

IMF பிரதிநிதிகள், பிரதமருக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவு!

சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட பிரதிநிதிகள் குழு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான முதற்கட்ட கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் நாட்களில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் சர்வதேச நாணய நிதிய பணிக்குழாமினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் : பிரதமர் நீதியமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.திருத்தச்சட்ட மூலவரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவையின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து திருத்த வரைபிற்கு அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டது.

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பித்தமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அரசியமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமான திருத்தச்சட்ட வரைபு தொடர்பில் சகல கட்சிகளுடன் விளக்கப்படுத்தல் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

திருத்தச்சட்டமூல வரைபினை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணர்ந்து அமைச்சரவை பச்சை கொடி காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது.21ஆவது திருத்தத்திற்கு அங்கிகாரம் வழங்கியமைக்கு நீதியமைச்சர் அமைச்சரவைக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.

21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் வர்த்தமானியில் வெளியிட்டு ,வரைபினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார்,வரைபினை வெகுவிரைவில் பாராளுமன்றில் சமர்ப்பித்து,விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21ஆவது சட்டமூல வரைபினை கடந்த மே மாதம் 23ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.குறித்த வரைபினை நிறைவேற்ற முன்னர் சகல கட்சிகளின் யோசனைகளை பெற்று திருத்தப்பட்ட வரைபினை கடந்த 6ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கடந்த ஒருமாத காலமாக சகல அரசியல் கட்சிகளினதும்,சிவில் அமைப்புக்களினதும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற கட்சிதலைவர் கூட்டத்தில் 4 பிரதான விடயங்களுக்கு சகல கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

இரட்டை குடியுரிமையுடைய நபர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும்இஜனாதிபதி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனையையும்,

அத்துடன் அமைச்சரவையின் விடயதானங்கள் வேறாக்கத்தின் போது ஜனாதிபதி பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் (தற்போதைய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும், 10ஆவது பாராளுமன்றில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும்),

தற்போதைய 9ஆவது பாராளுமன்றம் செயற்பாட்டில் உள்ள நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க முடியும், அடுத்த பாராளுமன்றம் அமுலில் உள்ள போது ஜனாதிபதி எந்த அமைச்சினையும் வகிக்க கூடாது என்ற யோசனைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்ட யோசனைகளுக்கமைய 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.குறித்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவரும் குறித்த சட்டமூல வரைபினை சவாலுக்குட்படுத்தி,7 நாட்களுக்குள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய முடியும்.

தம்மிக்க பெரேரா அளித்துள்ள வாக்குறுதி தீர்ப்பு கிடைக்கும் வரை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப் போவதில்லை

அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார்.

அவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கின்றமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 05 அடிப்படை உரிமை மனுக்களும் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது, வர்த்தகரான தம்மிக்க பெரேரா சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்த்தன, யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அவுஸ்திரேலியாவிடம் இருந்து 50 மில்லியன் டொலர்கள்

இலங்கைக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவசரகால உணவு மற்றும் மருந்துப் பாவனைக்கான குறித்த நிதித்தொகை வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

குறித்த நிதி உதவியில், 22 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் உலக உணவுத் திட்டத்திற்காகவும் மூன்று மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மக்களின் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2022/23 க்குள் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மேலும் 23 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சின் நுழைவாயில்கள் மறிப்பு; கைதான 21 பேருக்கு பிணை

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 21 பேரும் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு நுழைவாயில்களை
ஆர்ப்பாட்டகாரர்கள் மறித்துள்ளதுடன், அந்த நுழைவாயில்களுக்கு முன்பாக சிறிய கூடாரங்களை
அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால், அத்தியாவசிய சேவைகளுக்கு சென்ற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும்
இடையில் நடத்தப்படவிருந்த கலந்துரையாடலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து கோட்டாகோகம போராட்டக்களம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று 73 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால், ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு
நுழைவாயில்களும் இன்று அதிகாலை மறிக்கப்பட்டன.

இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கான மூன்று நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளதுடன்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தியின் பின்னர் இந்தியாவில் இருந்து நேரடியாக சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் : சாட்சியாளரான புலிகள் இயக்கத்தின் முன்னாள் புலனாய்வாளருக்கு திட்டமிட்ட கும்பல் அழுத்தம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றின் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுவது குறித்து தகவல்கள் உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வுக்கு அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த, தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவில் கடமையாற்றியவரும் பின்னர் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கடமையாற்றியவருமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான முரளி எனும் சுமதிபால திருக்குமார் எனும் முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சியாளருக்கும் அவ்வழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நியாயமான சந்தேகம் இருப்பதால் அது குறித்து விசாரணை ஒன்று அவசியம் என வழக்கை நெறிப்படுத்தும் சட்ட மா அதிபர் திணைக்கள குழுவுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிபதிகளுக்கு அறிவித்தார்.

அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தில் சாட்சியாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்றூடாக, நிலைப்பாட்டை மாற்றி சாட்சியம் அளிக்க அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என்பது குறித்து மிக விரைவான விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அடுத்த தவணைக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் குமாரவுக்கு உத்தரவிட்டது.

இந் நிலையில் குறித்த வழக்கில் பிரதிவாதிகளான 9 இராணுவ புலனாய்வாளர்களின் பிணையும் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், கடும் எச்சரிக்கையுடன் மீண்டும் முன்பிருந்த நிபந்தனைகலின் கீழ் பிணையில் செல்ல கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு அவர்களுக்கு அனுமதியளித்தது. மீண்டும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தெரியவந்தால் பிணை வழக்கு முடியும் வரை ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அதன்படி, எக்னெலிகொட விவகாரத்தின் பிரதிவாதிகளான கிரித்தலை இராணுவ புலனாய் முகாமின் கட்டளைத் தளபதியாக இருந்த லெப்டினன் கேர்ணல் சம்மி அர்ஜுன குமாரரத்ன, ஸ்டாப் சார்ஜன் வடுகெதர வினிபிரியந்த டிலஞ்சன் உபசேனா எனபப்டும் சுரேஷ், ஸ்டாப் சார்ஜன் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ஷ எனும் நாதன், ஸ்டாப் சார்ஜன் செனவிரத்ன முதியன்சலாகே ரவீந்ர ரூபசேன எனபப்டும் ரஞ்சி, சமிந்த குமார அபேரத்ன, எஸ்.எம். கனிஷ்க குமார அபேரத்ன, ஐய்யா சாமி பாலசுப்ரமணியம், கி.ஜி. தரங்க பிரசாத் கமகே, எரந்த பீரிஸ் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவ்வழக்கு நீதிபதி சஞ்ஜீவ மொராயஸ் தலைமையில் மகேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னால் விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான உத்தர்வு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் நேற்று முன்தினம் மன்றில் சாட்சியமளித்த, அரச தரப்பின் 4 ஆவது சாட்சியாளரான முரளி எனும் சுமதிபால திருக்குமார், முன்னதாக சி.ஐ.டி. க்கு அளித்த வாக்கு மூலம் மற்றும் ஹோமாகம நீதிவானுக்கு குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம் அளித்த இரகசிய வாக்கு மூலத்துக்கு மாற்றமான நிலைப்பாட்டை சாட்சியாக வழங்கிய நிலையில், அவரை அரச தரப்புக்கு எதிரான சாட்சியாளராக சட்ட மா அதிபர் தரப்பு பெயரிட்டது.

அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கைஎடுக்க எதிர்ப்பார்ப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் இந்த விவகாரத்தை நெறிப்படுத்தும் குழுவில் உள்ளடங்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா நீதிமன்றுக்கு அறிவித்தார். ஏற்கனவே 3 ஆம் சாட்சியாளரான ரண்பண்டா என்பவர் தொடர்பிலும் அதே நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இந் நிலையிலேயே, 4 ஆம் சாட்சியாளரின் மேலதிக சாட்சி நெறிப்படுத்தல்கள் மற்றும் சாட்சிகள் கட்டளை சட்டத்தின் 154 ஆவது அத்தியாயத்துக்கு அமைவான குறுக்கு விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என மன்றில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

எனினும் குறித்த சாட்சியாளரான சுமதிபால திருக்குமார் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சானக ரணசிங்க, அவ்வாறு அவரை விளக்கமறியலில் வைப்பது நியாயமற்றது என வாதிட்டார்.

எனினும் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி வசந்த பெரேரா ஆகியோர் முன் வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், சாட்சியாளரான சுமதிபால திருக்குமாரை அடுத்த தவணை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

வழக்கில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அனில் சில்வா, அனுஜ பிரேமரத்ன, அனுர மெத்தேகொட உள்ளிட்டோர் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆஜரானார்.

2010 ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள், கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை இரகசியமாக சிறைவைக்கும் நோக்கத்தில் கடத்திச் சென்றமை, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளில் கிரேன்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் மேலும் 39 மில்லியன் டொலர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பு என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் சரவதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.