அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்த இறுமாப்பில் எடுத்த முடிவுகளால் இன்று மக்களே அல்லற்படுகின்றனர் – ஜனா

தனக்கு அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்தது என்ற இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையே நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையான விவசாயம் அதள பாதாளத்துக்குள் வீழ்ந்ததன் ஒரே காரணமாகும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் இன்று அல்லற்படுவது நம் நாட்டு மக்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய குடும்பத்திற்கு இன்று உணவு கிடைக்குமா என்றே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழும்பஸ்தரும் சிந்திக்கின்ற நிலைமை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தவறான தீர்மானங்களால் உருவாகியிருக்கின்ற இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இன்றைய நிலையில் அவசியமாகும்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகமுடியாது. தனக்கு 5 வருடங்களுக்கு மக்கள் ஆணை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டபாய தெரிவிக்கிறார். கால வரையறையை அவர் எந்தவகையில் நிர்ணயிக்கிறார் என்பது தெரியவில்லை. மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்தவரை வேண்டாமென்று சொல்லும் மக்களிடம் அவர் கூறும் பதில் இதுதானா? அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வெளியேறுமாறு இளைஞர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இப்படியான ஒரு கருத்தை ஜனாதிபதியால் எவ்வாறு கூறமுடிகிறது?

நாட்டில் நடைபெற்ற யுத்தம், அதனால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குள் நாடு இருக்கையில் உலகளவில் ஏற்பட்ட கொவிட் தொற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரீட்சையாகும். அந்தப் பரீட்சையில் அவர் தோல்வியடைந்தார். அதனால் ஏற்படுத்தப்பட்ட விலை அதிகரிப்பும், கட்டுப்பாட்டு விலை அகற்றலும் நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு. இந்த விலை அதிகரிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது அடிப்படை வாழ்வாதாரத்துக்காக அன்றாடம் சிரமப்படும் அடிமட்ட மக்களாகும்.

விவசாயம் நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையாகும். அது இன்று அதள பாதாளத்துக்குள் வீழ்ந்து விட்டது. அதற்குக் காரணம் ஜனாதிபதி தனக்கு கிடைத்த 69 இலட்சம் மக்களின் வாக்கு காரணமாக ஏற்பட்ட இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையாகும். ஒரு கொள்கைளை நடைமுறைப்படுத்த முனையும் போது அது தொடர்பில் நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற சூழலை அறிந்து கொள்ளவேண்டும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் அல்லற்படுவது நாட்டு மக்களே.

கடந்த வருடத்தில் உரம் இன்மையால் நாட்டில் அரிசி விலை அதிகரித்துவிட்டது. அது தவிரவும் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன. இப்போது தொடங்கியிருக்கின்ற வேளாண்மைச் செய்கையாயினும் விளைச்சலைத் தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க வேண்டிய நிலையிலேயே விவசாயிகள் இருக்கின்றனர்.

காரணம் இம்முறையேனும் நேர காலத்துக்கு இரசாயன உரம் கிடைக்குமா என்பதிலேயே மக்கள் தங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் விவசாய அமைச்சர் இந்திய உதவித்திட்டத்திலே அறுபத்தையாயிரம் மெக்றித் தொன் உரம் ஒரு மாதத்துக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார். நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

உரத்தினை மானிய அடிப்படையில் நீங்கள் வழங்காவிட்டாலும், சாதாரண விலையிலாவது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நாற்பது, நாற்பத்தையாயிரம் ரூபாவுக்கு ஒரு அந்தர் யூரியாவை எடுத்து சிறு விவசாயிகள், வேளாண்மை செய்வோர், மரக்கறி செய்வோர், மலையகத் தொழிலாளர்கள் எப்படி அவர்களது விவசாயத்தை முன்னெடுப்பது?

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்கின்றோம். உள்ளுர் உற்பத்தியை விளைவிக்கக் கூடிய அளவிற்கு இரசாயன உரமின்றி எப்படி அந்த விளைச்சல் உருவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று நாங்கள் எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், வரிசையில் நின்று கொண்டிருக்கின்றோம். ஓரளவுக்கு எரிபொருளும், எரிவாயுவும் கிடைக்கின்றது. ஆனாலும் வரிசைகள் மாத்திரம் குறையவில்லை. பெற்றோலுக்கும், டீசலுக்கும் மக்கள் பெரும் ஏக்கத்தில் இருக்கின்றார்கள். எரிவாயு மேல்மாகாணத்தில் கொடுக்கப்படுகின்றது. மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மண்ணெண்ணை கூட தட்டுப்பாடாக இருக்கின்றது.

இன்று மண்ணெண்ணை இல்லாமல் சிறு விவசாயிகள் மரக்கறித் தோட்டம் செய்பவர்கள் தங்களது நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்க முடியாமல் இருக்கின்றார்கள். கடலுக்குச் செல்பவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமலிருக்கின்றார்கள். இன்று நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் இருக்கின்ற நிலையில், கட்டுப்பாடற்ற விலைகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிறு வியாபாரிகள் கூட நினைத்தபடி பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில், அரசாங்க உத்தியோகத்தர்கள், மாதாந்த வருமானம் பெறுபவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள்.

இவ்வாறான நேரத்தில் கமம் செய்பவர்கள், கடலுக்குச் செல்பவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் தங்களது தொழிலைக் கூட செய்ய முடியாமலிருக்கின்றார்கள். எனவே பெற்றோலிய அமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களுக்கு மண்ணெண்ணையையாவது கொடுக்க வேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோளாக இருக்கின்றது. எரிவாயுவைப் பெறமுடியாவிட்டால் மண்ணெண்ணையிலாவது தங்களது அடுப்புக்கள் எரியவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடற்ற விலையைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் முதலாளிகள் முதல் சிறுவியாபாரிகள் வரை தாங்கள் நினைத்தபடி விலைகளைத் தீர்மானிக்கின்றார்கள். இதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை – ஐநா வேண்டுகோள்

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்படப்போகின்ற 1.7 மில்லியன் பேருக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு 47.2 மில்லியன் டொலர் தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய நெருக்கடி காரணமாக எழுந்துள்ள அவசர தேவைகளைபூர்த்தி செய்வதற்கு ஐக்கியநாடுகளின் உதவியுடனான பல்துறை சர்வதேச உதவி தேவை என இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை தொடர்ந்தே ஐநா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள மனிதாபிமான அபிவிருத்தி சகாக்கள் 5.7 மில்லியன் மக்களிற்கு உடனடி உயிர்காக்கும் உதவி தேவைப்படுகின்றது என மதிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் உணவுப்பாதுகாப்பிற்கு பல விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனநாங்கள் தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் பல குடும்பங்களால் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் என இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்கு அவசரநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அபிவிருத்தி மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மிகவும் வலுவானதாக காணப்பட்ட இலங்கையின் சுகாதார துறை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுஇமோசமாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிற்கான தனது ஆதரவை சர்வதேச சமூகம் வெளிப்படுத்தவேண்டிய தருணம் இது என ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி தெரிவித்துள்ளார்.

ஐநாஇ மற்றும் மனிதாபிமான சகாக்கள்இ உதவி வழங்கும் சமூகத்தினர் தனியார் துறையினர் இதனிநபர்கள் இலங்கையில் நெருக்கடியால் அதிகளவு பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் ஆண்களிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் உயர் நடுத்தர வருமான நாடாக காணப்பட்ட இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கி;ன்றது மே மாதம் பணவீக்கம் 57.4 வீதமாக காணப்பட்டது,அதேவேளை முக்கிய உணவு பொருட்கள் சமைப்பதற்கான எரிபொருள் போக்குவரத்து தொழில்துறை போள்றவற்றில் பரந்துபட்ட தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன,நாளாந்த மின்துண்டிப்பும் காணப்படுகின்றது.

உற்பத்தி;க்கான அடிப்படை உள்ளீடுகள் கிடைக்காமை,நாணயத்தின் 80 வீத தேய்மானம்,அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை,மற்றும் நாடு அதன் கடன்களை செலுத்த தவறியமை காரணமாக பொருளாதாரம் கடும் மந்தநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

உணவு நெருக்கடி குறிப்பாக உணவுப்பாதுகாப்பு விவசாயம் வாழ்வாதாரம் சுகாதார சேவைகளை பெறுதல் ஆகியவற்றை பாதித்துள்ளது. இறுதி அறுவடையில் உணவு உற்பத்தி கடந்த வருடத்தை விட 40 முதல் 50 வீதம் குறைவாக காணப்பட்டது,தற்போதைய விவசாயபருவகாலம் ஆபத்தில் சிக்குண்டுள்ளது,விதைகள் உரங்கள் எரிபொருள் கடன் தட்டுப்பாடே இதற்கு காரணம்.

இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் ஐந்து மில்லியன் மக்கள் உணவு உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

சமீபத்தைய ஆய்வுகள் 86 வீதமான வீடுகள் உணவுண்பதை குறைப்பது போன்றவற்றை பின்பற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டு பங்காளிகளின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் அதன் உள்நாட்டு சந்தையின் நிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் இலங்கைக்கு சீனா அழைப்பு விடுக்கிறது என அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில் இருந்து அதே கவனத்தைப் பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஜாவோ, ஒரு நல்ல அண்டை நாடு என்ற வகையில், சீனா இலங்கை மக்களுக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.9 மில்லியன் டாலர்) மனிதாபிமான உதவி உட்பட பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளுடனும் நல்ல அண்டை நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்பதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியின் நேர்மறையான போக்கைப் பேணவும் மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன.

13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தில், 10 மெகாவாட்டிற்கும் அதிக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது விலைமனு கோரப்பட வேண்டும் என எதிர்கட்சி முன்வைத்த கோரிக்கை, குழுநிலை விவாதத்தின் போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் அளிக்கப்பட்டமையால், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இந்நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் போது, எவ்வித திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் மூன்று தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதன்போது பெரும்பான்மை வாக்குகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பாரியளவிலான மின் உற்பத்தி திட்டங்களுக்கான அனுமதி, போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் காரணமாக மின்சக்தி சட்டத்தின் திருத்தம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மின்சார பொறியியலாளர்கள் பணி பகிஷ்கரிப்பொன்றையும் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் நிறைவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குழுநிலை சந்தர்ப்பத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சட்டமூலத்திற்கான திருத்தங்களை முன்வைத்தார்.

இதன் பிரகாரம், எதிர்க்கட்சியினர் முன்வைத்த திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சியின் திருத்தம் 58 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது, திருத்தத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் கிடைத்தன.

தமது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அது தொடர்பிலான சரத்து மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, சட்டமூலத்தின் குறித்த சரத்திற்கு ஆதரவாக 116 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 46 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

இதற்கமைய, இலங்கை மின்சக்தி திருத்த சட்டமூலம் திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பூநகரியிலும் மன்னாரிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறைந்தபட்ச செலவீனங்கள் தொடர்பிலான கொள்கையை மீறும் வகையில், இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதால், பல்வேறு சிக்கல்கள் உருவாவதாக அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

எம்.பி. பதவியிலிருந்து பஸில் விலகல்! அரசியல் பயணம் தொடரும்

“அரச நிர்வாகப் பணியிலிருந்து நான் விலகுகின்றேன். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கின்றேன். எனினும், எனது அரசியல் பயணம் தடைப்படாது. அது தொடரும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது எம்.பி. பதவி விலகல் தொடர்பான கடிதத்தை இன்று கையளித்த பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊடங்கள் முன்பாக ஆங்கிலத்தில் பதிலளித்தால் மறுபடியும் ‘கப்புடா’ சர்ச்சை வந்துவிடும். சிங்கள மொழியிலேயே கதைக்கின்றேன்.

அமைச்சுப் பதவியை வகித்த காலத்தில் என்னால் முடிந்தவற்றை மக்களுக்காகச் செய்தேன். எனினும், மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்ய முடியாமல்போனது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் எனத் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே அவசியம்.

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவே உள்ளது” – என்றார்.

Posted in Uncategorized

ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைஆரம்பிக்கவேண்டும் – 9 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய விடுதலை முன்னணி பிவித்துரு ஹெல உறுமய உட்பட 9 கட்சிகள் எரிபொருளை நீண்ட கால அடிப்படையில் பெறுவதற்காக ரஸ்யாவுடன் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 9 அரசியல் கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை பெறுவதற்காக ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயங்கினால் ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்று எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயார் என அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு ரஸ்யா சாதகமாக பதிலளித்துள்ளது என தாங்கள் அறிந்துள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஐரோப்பா ரஸ்யாவிடமிருந்து ஒரு மில்லியன் பரல்களை கொள்வனவு செய்கின்றது என தெரிவித்துள்ள ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தங்களிற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும்-ரெலோ தலைவர் செல்வம் எம்பி

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலிட்டால் அவற்றை இந்த அரசு முடக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரவித்தார்.

இன்று (06) வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

21 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தின்பால் செயற்படுகின்ற கட்சிகளின் தலைவர்களை கூட்டி இரண்டு மூன்று தினங்களாக விவாதித்து வருகின்றோம். இதில் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை கூறிவருகின்றார்கள். பாராளுமன்றம் கூடியதும் தமிழ் பேசும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இவ் விடயம் தொடர்பில் ஆராயலாம் என எண்ணுகின்றோம். கஜேந்நிரகுமார் பென்னம்பலத்துடனும் பேச இருக்கின்றோம்.

ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுடைய குரலாக 21 வது திருத்த சட்டத்தில் எமது மக்களின் கோரக்கைகளை எவ்வாறு உள்ளடக்குவது என்பதுடன் இத் திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் முற்றாக ஒழிக்கப்படவில்லை என்பது இதில் காணப்படுகின்றது.

தற்போது மக்களுடைய கோரிக்கை ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும், ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் இந்த விடயத்தில் 19வது திருத்தச்சட்டத்தை கூடுதலாக பார்க்கலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது.

21 வது திருத்தச்சட்டம் தொடர்பாக ஒட்டுமொத்த குரலாக செயற்பட வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது. அந்த ஒட்டுமொத்த குரலுக்குள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைகள், எங்களுடைய தேசத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து ஒரே குரலாக தெரிவிக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது.

குறிப்பாக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குரலாக இணைந்து எங்களுடைய பிரச்சனைகளை உள்ளடக்கின்ற வாய்ப்புக்கள் இருக்கும் என நம்புகின்றேன்.

21வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் வருவதற்கு முன்னராக அமைச்சரவையிலே சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விவதாத்திற்கு வருவதற்கு முன்னர் எங்களுடைய ஒருமித்த கருத்தினை சொல்கின்ற வாய்ப்பபை உருவாக்க வேண்டும்.

“ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆகியவுடன் புலம்பெயர் தமிழர்களுடைய உதவியை கோரி இருந்தார். தற்போது சில புலம்பெயர் அமைப்புக்களும் நிபந்தனையுடன் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?“ என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,

இன்றைய சூழலிலே புலம்பெயர் உறவுகளிடம் பணம் கோருவது என்பது சந்தர்ப்பத்திற்காக அவர்களினை பயன்படுத்துவது போன்று தெரிகின்றது.

மேலும் இலங்கை அரசினால் புலம்பெயர் நாடுகளில் உள்ள எங்களுடைய அமைப்புக்கள் மீது ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது இலங்கை அரசினால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை வழங்குவதுடன் அதற்குரிய நிதியதிகாரத்தினை குறிப்பாக மாகாண முதலமைச்சர் நிதியினை கையாளக்கூடிய வசதியினை பிரதமர் செய்வதன் மூலமாக இந்நாட்டினுடைய பிரச்சனையை தீர்க்க முடியும்.

ஆகவே பிரதமர் இவ்விடயங்களை கவனம் செலுத்த வேண்டும். இவ்விடயங்களில் கவனம் செலுத்தாத வரை புலம்பெயர்ந்த உறவுகள் முதலீடுகளை செய்வதற்கு நிச்சயமாக வரமாட்டார்கள்.

அத்துடன் தற்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகின்றது. இச்சட்டம் நீக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலையில் புலம்பெயர் உறவுகள் தங்களுடைய முதலீடுகளை செய்த பின்னர் அரசாங்கம் திட்டமிட்டு விடுதலைப்புலிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து அவர்களுடைய முதலீடுகளை முடக்குகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை நங்கள் காணலாம்.

ஆகவே மாகாண சபைகள் நிதியினை கையாள்வதற்கான வாய்ப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் தடைகளை நீக்குதல் தொடர்பான விடயங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக எங்களுடைய மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாணசபைகளும் இவ்விடயங்களை நேர்த்தியான முறையிலே கையாண்டு மக்களுடைய பஞ்சம் மற்றும் பொருளாதார நிலைமைகளில் இருந்து மீள் எழுவதற்கான வாய்ப்பினை முன்னெடுக்க முடியும்.

தற்போது பரவலாக துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் விடுதலைப்புலிகளின் அதிகாரங்களை மிகவும் சமாளிக்க முடியாது என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார். எவ்வாறு உயிர்த்த ஞாயிறு படுகொலை செய்யப்பட்டதை போன்று விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் என்ற ரீதியிலே இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களை இணைத்துக்கொண்டு காலி முகத்திடலிலே இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டத்தினை கலைக்கின்ற நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் இந்த மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தை தீட்டுகின்றதா என்ற சந்தேகம் எங்களிற்கு உருவாகின்றது.

அந்த வகையிலே துப்பாக்கி சூடு செய்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை என்பதுடன் அவர்கள் எங்கு போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம் என்ற சதித்திட்டத்தினை அரசாங்கம் செய்கின்றது. எனவே நாங்கள் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். தமிழர்களின் கையிலே பிரச்சனையை திணித்து தமிழர்கள்தான் இதற்கு காரணம் என்ற சந்தர்ப்பத்தை செய்யக்கூடியவர்கள் தான் இன்று ஆட்சியில் இருக்கிறவர்கள். ஆகவே அவர்கள் இவ்விடயங்களை மிக சாதுர்யமாக கையாளக்கூடும் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை பௌத்த பீடாதிபதிகள் இந்தியாவிற்கு நன்றி

புத்தர் பிறந்த பூமியை இந்தியாவில் புத்த பூர்ணிமா என்று பிரபலமாக அறியப்படும் வெசாக் போயா தினம், புத்தரின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தொடர்புடைய மூன்று புனித ஸ்தலங்களில் பிரமாண்டமாகவும் அமைதியாகவும் கொண்டாடப்பட்டது.

லும்பினி, பௌத்கயா மற்றும் புது டெல்லி ஆகிய இடங்களில் சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் அனுசரணையுடன் இந்திய மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பங்கேற்பு சிறப்பானதொரு விடயமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தரின் பிறந்த இடமான நேபாளத்தின் லும்பினியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு இடம்பெற்ற நிகழ்ச்சிகளில், துறவிகள், உயரதிகாரிகள் மற்றும் பௌத்த உலகத்துடன் தொடர்புடைய ஏராளமானோர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டங்கள் பொதுவாக புத்தரின் வாழ்க்கை, பிறப்பு, ஞானம் மற்றும் போதனைகளைச் சுற்றி உருவானது, உரைகள் இன்றைய உலகத்தின் நிலை மற்றும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை அடைய புத்தர் போதித்த எட்டு வழிகளை உலகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிபளிக்கும் வகையில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

புதுடில்லியில் உள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்புக்கு சொந்தமான லும்பினியில் உள்ள இந்திய சர்வதேச புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையத்தை நிர்மாணிப்பதற்கான ‘ஷிலான்யாஸ்’ விழாவில் பிரதமர் மோடி மற்றும் பிரதமர் டியூபாவுடன் கலந்து கொண்டனர்.

இதே வேளை நான்கு நிகாயாக்களின் பிரதம பீடாதிபதிகளான ஸ்ரீ அமரபுர மகா நிகாயா அதி வணக்கத்திற்குரிய அக் மகா பண்டித கலாநிதி தொடம்பஹல சந்திரசிறி மகா தேரர், சியாம் மஹா நிகாயாவின் மல்வத்தை பிரிவின் பிரதி பீடாதிபதி வணக்கத்துக்குரிய திம்புல்குபுரே விமலதர்ம மகா தேரர்.

அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி வெண்டுருவே உபாலி அனுநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ ராமஞ்ஞ மகா நிகாயாவின் வணக்கத்திற்குரிய அக்க மஹா பண்டித மகுலேவே விமல மகாநாயக்க தேரர் ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், நெருக்கடி மிக்க சூழலில் உலகம் முழுவதும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பிற்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்துள்ளனர்.

கொந்தளிப்பு மற்றும் விரோதம். புத்த பூர்ணிமா தினத்தை நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசிற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் மகத்தான மற்றும் சரியான நேரத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இலங்கையர்கள் தங்கள் மதம், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரீகத்தை இந்தியாவிடமிருந்து பெற்றவர்கள் என்றும், இந்த உறவும் சகோதரத்துவமும் வலுவிலிருந்து வலுவாக வளர வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டனர்.

பௌத்த தத்துவக் கருத்துக்கள் முழு உலகத்திற்கும் எல்லா நேரங்களிலும் சரியானவை மற்றும் மிகவும் பொருத்தமானவை என்றும், பௌத்தத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் குறித்து மகா சங்கத்தினர் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தங்கள் செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் பணிகள் பற்றியும் இதன் போது ஆராயப்படவுள்ளன. வதிவிடங்களை மாற்றியவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் இடாப்பில் உள்ளீர்ப்பது சம்பந்தமாக இதன் போது கவனம் செலுத்தப்படும். தேர்தல்கள் சட்டதிட்டங்களில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் திருத்தங்கள் பற்றியும் ஆராயப்படும்.

பசளையை இறக்குமதி செய்தால் கஞ்சியையாவது மக்கள் குடித்து வாழ்வார்கள் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விவசாயிகள் சேமித்து வைத்த அரிசிகள் அனைத்தும் இரண்டு , மூன்று மாதங்களில் முடிவடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இனிவரும் காலங்களில் பட்டினி சாவுகள் வருவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளது.

சாதாரணமாக உழைக்கின்ற அன்றாட கூலி செய்கின்ற மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக, பரிதாபமாக இருக்கின்றது.

அரசாங்கம் முதலிலே பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் இருக்கின்ற வாழ்க்கையை உண்டு பண்ணலாம்.

பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுப்பதன் ஊடாக நெல் உற்பத்தி பெருகும். அதேபோல் தோட்டங்களை செய்கின்ற போது மரக்கறிகளை செய்கின்ற வாய்ப்புக்களும் ஏற்படும்.

அரசாங்கம் பசளையை விவசாயிகளுக்கு இறக்கி கொடுப்பதன் ஊடாக தான் பட்டினியில் இருந்து மக்களை மீட்க முடியும்.

இந்திய பாரத பிரதமர் இவ் விடயத்திலே கவனம் செலுத்தி உடனடியாக பசளையை தந்துதவுமாறு கேட்டிருக்கின்றேன். பசளை கிடைக்கின்ற போது ஓரளவிற்காவது பட்டினியை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புகளை உண்டு பண்ணலாம் என்பது எனது ஆலோசனை என மேலும் தெரிவித்தார்.