ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை: பிரித்தானிய போர்க்குற்ற விசாரணை பிரிவினால் இலங்கையர் கைது!

யாழ்ப்பாணத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில், இலங்கையர் ஒருவரை பிரித்தானிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (22) நோர்தாம்ப்டன்ஷையரில் உள்ள முகவரியில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டம் 2001 இன் பிரிவு 51 இன் கீழ் குற்றங்கள் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்ட பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2000ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் அவர் தொடர்புபட்ட சந்தேகத்தில் இந்த கைது இடம்பெற்றதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

”இந்த நடவடிக்கைகள் குறித்து நிமலராஜனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் தகவல்களை பெற அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் – குறிப்பாக இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து இப்போது வசிக்கும் இலங்கை சமூகத்தின் உறுப்பினர்கள்”என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புக் கட்டளை பிரினராலேயே இந்த கைது இடம்பெற்றது.

அந்த பிரிவிற்கு தலைமை தாங்கும் கொமாண்டர் ரிச்சர்ட் ஸ்மித் : “இது ஒரு முக்கியமான, சிக்கலான விசாரணையில் குறிப்பிடத்தக்க புதுப்பிப்பு.

குறிப்பாக திரு நிமலராஜனின் கொலை தொடர்பாக இன்னும் சிலருக்கு தகவல்கள் இருக்கலாம், மேலும் நிமலராஜனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க முன்வருமாறு அந்த மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக Mailbox.WarCrimesTeam@met.police.uk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Met Police War Crimes Unit ஆனது Met Police Terrorism Commandக்குள் உள்ளது. இங்கிலாந்தின் அதிகார வரம்பிற்குள் வரக்கூடிய மற்றும் உலகில் எங்கும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை அல்லது சித்திரவதை செய்ததாக சந்தேகிக்கப்படும் எவரையும் விசாரித்து நீதிக்கு கொண்டு வருவதற்கு இது உறுதிபூண்டுள்ளது.

இத்தகைய விசாரணைகள் பெரும்பாலும் வெளிநாட்டில் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எனவே அவை மிகவும் சிக்கலானதாகவும் நீண்டதாகவும் இருக்கும்.

போர்க் குற்றங்கள் குழுவிடம் குறிப்பிடப்பட்ட அனைத்து போர்க் குற்றச் சாட்டுகளும் போர்க்குற்றங்கள்/மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பரிந்துரை வழிகாட்டுதல்களின்படி பரிசீலிக்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு கையாளப்படுகின்றன.

போர்க் குற்றங்கள் குழு என்பது பிரித்தானிய போர்க் குற்ற வலையமைப்பின் ஒரு பகுதியாகும், இதில் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம், கிரவுன் ப்ராசிகியூஷன் மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உட்பட பல முக்கிய அமைப்புகளை உள்ளடக்கியது. போர்க் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இங்கிலாந்து இருக்காது என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

Posted in Uncategorized

நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மகாவலி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெருந்திரளானோரின் பங்குபற்றுதலுடன் குறித்த போராட்டமானது இன்று காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆரம்பமாகியுள்ளது.

போராட்டக்காரர்கள் “நிறுத்து நிறுத்து மகாவலி என்ற போர்வையில் தமிழரின் நிலங்களை அபகரிப்பதை நிறுத்து” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதைகளை ஏந்திய வண்ணம் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர்களின் பூர்வீக நிலங்களும் வாழ்வாதார நிலங்களும் சிங்கள குடியேற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது என இதன்போது போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

வத்திக்கானுக்கு விஜயமமானார் கர்தினால் அமெரிக்காவுக்கும் செல்வார் ?

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அங்கு புனித பாப்பரசர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளார்.

அத்தோடு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உலக ஆயர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளதோடு விசேட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பேராயர் அண்மையில் அமெரிக்க பேராயருடன் தொலைபேசியில் உரையாடியதோடு , அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவொன்றின் போது , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சாட்சிகளை மறைப்பதற்கு கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களமும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை தமக்கு வழங்கப்படவில்லை என்றும் கடும் விசனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ்மா ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான கத்தோலிக்க தேசியக் குழுவும் பல்வேறு விடயங்களை தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் பேராயர் வத்திக்கான் விஜயம் செய்துள்ள அதே வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா இராணுவத்திற்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்!

யுத்தக் குற்றத்தில் இராணுவத்தினர் சிலர் ஈடுபட்டிருக்கலாமென தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் சிறிலங்காவின முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்திற்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டங்களும் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை எனவும் முதலில் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து எமது இராணுவ வீரர்களை மீட்க வேண்டும் என குறிப்பிட்டார்.

முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அச்சப்படாமல் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட எவராவது இருந்தால் அவருக்கு தேசிய மட்டத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இராணுவ நீதிமன்றத்தின் முன் அவ்வாறானவரை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்காமல் இருப்பதால், சட்டமுறைமைகளை பின்பற்றி யுத்தத்தை முன்னெடுத்தவர்களும் பல குற்றச்சாட்டுக்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பது கவலைக்குரியது என்றார்.

நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டிய பொன்சேகா, “நாம் மிச்சல் பட்லெட்டுக்கு பயப்படவில்லை. அவர் ஆயிரக்கணக்கானோரிடம் இராணுவத்துக்கு எதிராக சாட்சியங்களை பெற்றுள்ளார். இவருக்கு சாட்சிகளை வழங்கிய நூற்றுக்கு 99 சதவீதமானவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள்” எனவும் கூறினார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களை தங்களது உணவு, மருந்து பொருள்களை வழங்கி இராணுவத்தினரே மீட்டார்கள் என்பது மிச்சல் பட்லெட்டுக்கு தெரியாது என்றார்.

தமிழ் மக்களை இனவழிப்பு செய்ததாக் கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும். யுத்ததை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட அதிகளவான வாக்குகளை தமிழ் மக்கள் வழங்கியிருந்தார்கள். இராணுவ வீரர்கள் தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக தமிழர்கள் நினைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

சர்வதேச சட்டங்களுக்கு அமையவே இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டது. எனினும் யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலர் தவறிழைத்திருக்கலாம் என எனக்கும் அப்போது சந்தேகம் இருந்தது. அவர்கள் தொடர்பில் ஆராய முடியும் எனவும் தெரிவித்தார்.

மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டுக்கு சில விடயங்களை நான் கூற வேண்டும். “புலிகள் ஒரு கொடுரூமான பயங்கரவாத அமைப்பு. அவர்கள் அப்பாவி மக்களை கொன்றனர். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களையும் கொன்றனர். இந்தியாவின் பிரதமரையும் கொன்றனர். தற்கொலை தாக்குதல்தாரிகளைக் கொண்டு அரசியல்வாதிகளை அவர்கள் கொன்றனர். தமிழ் தலைவர்களையும் கொன்றனர். மத வணக்கப்பாட்டு தளங்கள், பொருளாதார நிலையங்களையும் தாக்கியளித்தனர்“ என்றார்.

மேலும் புலிகளுக்கு ஆதரவானவர்களின் கருத்துகள் மாத்திரமே கேட்டறியப்படுகிறது. மிச்சல் பச்லெட்டு எங்களுக்கும் நியாயத்தை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.

Posted in Uncategorized

கூட்டமைப்பின் தலைமைத்துவ பலவீனம்? ஈழநாடு Editorial

ஓர் இனத்தை வழிநடத்தும் தலைமை பலவீனமாக இருந்தால், அந்த இனத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறப் போவதில்லை. யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னி ரெண்டு வருட கால அரசியல் நகர்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் இடம்பெறாமைக்கு, கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலுள்ள குறைபாடுகளே காரணமாகும். ஆனால், இப்போதும் அது அப்படியே தொடர்வதுதான் கவலைக்குரியது.

கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்காவுக்கு நிபுணர் குழுவொன்று சென்று வந்தது. ஆனால், அது பற்றி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி களின் தலைவர்களுக்குத் தெரியாது. இப்போது கூட்டமைப்பு – உலகத் தமிழர் பேரவையின் கூட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆனால், இது தொடர்பில் ஈழநாடு வினவியபோது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் சார்பில் அமெரிக்கா சென்றிருந்த நிபுணர் குழுவுடன் புலம்பெயர் அமைப்புக்கள் சார்பில் உலகத் தமிழர் பேரவையும் இணைந்திருந்தது. இது தொடர்பிலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அறிந்திருக்கவில்லை.
இவ்வாறான பல விடயங்கள் எந்த அடிப்படையில் நடைபெறுகின்றன?
ஒருமுறை நடந்தால் அது தவறுதலானது. பலமுறை நடந்தால் அது திட்ட மிட்ட ஒன்றாகும். இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறு கின்றபோது – ஏன் சம்பந்தன் அமைதியாகவே இருக்கின்றார்? சம்பந்த னால் எதனையும் கட்டுப்படுத்த முடியவில்லையா – அல்லது, சம்பந்தன் அவரின் தலைமைத்துவ தகுதியை முற்றிலுமாக இழந்துவிட்டாரா – அல்லது, கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவதற்கு சம்பந்தனால் முடியவில்லையா?

ஒருமுறை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு – ஏனையவர்களுக்கு அறிவிப்பது எனது வேலையல்ல, என்றவாறு கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் பதிலளித்திருந்தார். தனக்கு தரப் படும் வேலையை தான் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் சம்பந்தனுக்கு தெரிந்தே அனைத்தும் இடம்பெறுவதா கவே, ஒருவர் இதனை புரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது.

சம்பந்தனுக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடக்கிறதென்றால் – எதற்காக சம்பந்தன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை உதாசீனம் செய்கின்றார்? பங்காளிக் கட்சிகளுடன் இணைந்திருக்க அவர் விரும்ப வில்லையாயின், அவர்களை தனி வழியில் செல்லுமாறு சம்பந்தன் கோர வேண்டும். அவ்வாறில்லாது, கூட்டமைப்பாக இருப்பதானால் – அதற் குரிய அரசியல் ஒழுக்கத்துடன் சம்பந்தன் நடந்துகொள்ள வேண்டும்.

 

கூட்டமைப்புக்குள் இடம்பெறும் இதுபோன்ற விடயங்கள், தமிழ் மக்களின் உரிமைநோக்கிய அரசியலை பரிகசிப்புக்கு உரியதாக்கின்றது. இராஜதந்திர தரப்புக்கள் எவரை நம்பி பேசுவதென்னும் நிலைமையை தோற்றுவிக்கின்றது. இது தமிழ் மக்களின் உரிமை நோக்கிய நகர்வு களை மோசமாகப் பாதிக்கக்கூடியது. சம்பந்தன் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அவரின் உடல் நிலை அதற்கு இடம் கொடுக்காவிட்டால் – பொறுப்புக்களை ஏனைய கட்சியினரிடம் பகிர்ந்த ளிக்க முன்வர வேண்டும். இளம் தலைவர்களுக்கு இடமளிக்க வேண் டும்.

கூட்டமைப்பின் தலைமைத்துவம் என்பது – மூன்று கட்சிகள் மன முவந்து வழங்கியிருப்பது. அதனை சம்பந்தன் மதித்து நடக்க வேண்டும்.

 

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக நடந்துகொள்ள வேண்டும். அவர்
கூட்டமைப்பின் தலைவராக நடந்து கொள்ளாமையின் காரணமாகவே, கூட்டமைப்பில் எவரும் எதையும் செய்யலாம் என்னும் நிலைமை
காணப்படுகின்றது. கூட்டமைப்பின் அனைத்து தவறுகளுக்கும் –
அனைத்து பின்னடைவுகளுக்கும் – அனைத்து குழப்பங்களுக்கும் –
அனைத்து உள்முரண்பாடுகளுக்கும், ஒருவர்மீது குற்றம்சாட்ட முடியு
மென்றால், அது நிச்சயம் சம்பந்தனாக மட்டுமே இருக்கமுடியும்.

Posted in Uncategorized

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பலரும் கூட்டமைப்புக்குள் இருந்தபோது கோரிக்கை விடுத்து வந்தனர்.

முக்கியமாக, ஈ. பி. ஆர். எல். எவ். கட்சி கூட்டமைப்புக் குள் இருந்தபோது, இதற்காக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.

அந்தக் ‘குடைச்சல்’ காரணமாகவே அது கூட்டமைப்பி லிருந்து வெளியேற (அல்லது வெளியேற்றப்பட) நேர்ந்தது என்பதும் நமக்கெல்லாம் தெரிந்ததுதான்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அவ்வப்போது இதுதொடர்பாக குரல்கொடுத்தாலும், தமிழ் அரசுக் கட்சி யின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை எதிர்த்து ‘கெத்துக்காட்டும்’ மனபலம் அவர்களிடம் இல்லாத காரணத் தால் அது நடந்தேறவில்லை.

ஆனாலும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் எல்லாம் சேர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் கொடுத்திருக் கின்றன. தாங்கள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்குவதாக அவை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருப்பதாகவும், அதனால் கூட்டமைப்பை தனியாகப் பதிவு செய்யவேண்டியதில்லை என்றும் ஒருதடவை அதன் பேச்சாளர் விளக்கமளித்திருந்தார்.

கூட்டமைப்பில்தான் இந்த நிலை என்றால், ஒரேயோரு கட்சியை மாத்திரம் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணியும் அவ்வாறு எந்த பதிவையும் செய்யாமல் இயங்கி வருகின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனது குடும்பக் கட்சி யான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பெயரில் தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கின்றபோதிலும், தமது அரசியல் இயக்கத்தை தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணி என்ற பெயரிலேயே நடத்தி வருகின்றார்.

யாழ். முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேற்றியதாக அவர் கள் அறிவித்தபோது அவர், அப்படியொரு கட்சியில் தான் உறுப்பினராகவே இல்லாதபோது எப்படி தன்னை வெளி யேற்ற முடியும் என்று அவர்களை சட்ட சிக்கலுக்கு உள்ளாக் கியிருந்த அதேவேளை, அந்தப் பெயரில் கட்சியை பதிவுசெய் வதற்கு அவர் முயன்று கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

கூட்டமைப்பில் பல கட்சிகள் இருப்பதால் அவ்வாறு கட்சி கள் தமக்கிடையே ஒரு கூட்டணியை உருவாக்கி ஒரு பெயரில் இயங்குவது சரி. ஒரு கட்சி மட்டும் இன்னுமொரு பெயரில் இயங்கவேண்டிய தேவை எதற்காக வந்தது என்பதை அவர் களிடம்தான் கேட்டு அறியவேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற தனது கட்சியை பதிவு செய்வதற்கு முன்னதாக விக்னேஸ்வரன் கடந்த தேர்தலில் ஈ. பி. ஆர். எல். எவ்.உடன் கூட்டணி அமைத்தபோது, அந்தக் கூட்டணியில் பதிவுசெய்யப்படாத அனந்தியின் ஈழத் தமிழர் சுயாட்சி கழகமும் சிறிகாந்தா- சிவாஜியின் தமிழ்த் தேசியக் கட்சியும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தன. அதற்காக அவர்கள் கூட்டணி யிலிருந்த பதிவுசெய்யப்பட்ட ஒரேயோரு கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ். கட்சியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்று பெயரை மாற்றிவிட்டே தேர்தலைச் சந்தித் தார்கள். இப்போது ஈ. பி. ஆர். எல். எவ். என்றொரு கட்சியே இல்லை.

அதேபோல, தமிழ் காங்கிரஸ_ம் தனது பெயரை தமிழ்
தேசிய மக்கள் முன்னணி என்று மாற்றியிருக்கலாம். ஆனால்,
அதற்கு கஜேந்திரகுமார் குடும்பம் சம்மதிக்குமா என்பது
கேள்விக்குரியது. அதனால்தானோ என்னவோ தமிழ் காங்கி
ரஸ் என்ற கட்சியே முன்னணியாக வேடம் போட்டுக்
கொண்டு இயங்கிவருகின்றது.

இவை எல்லாம் எதற்காக இப்போது என்று நீங்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கலாம். பதின்மூன்றை ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழர் பிரச்னையை ஒற்றையாட்சிக்குள் முடக்கி விட்டார்கள் என்று பொங்கி எழுந்த முன்னணி, அதற்கு எதிராகப் போராடுவதற்கு பல நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டு மக்களுக்கு அறிவித்து போராட்டம் நடாத்தியிருந்ததும் நினைவிருக்கலாம்.

ஆனால், அதே முன்னணி தனது வருடாந்த மாநாட்டை முல்லைத்தீவில் கடந்த ஞாயிறன்று நடத்தியிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு கட்சியின் வருடாந்த மாநாடு என்றால் அது எத்தகைய தடல்புடலாக நடத்தப்படவேண்டியது என்பது அவர்கள் அறியாததல்ல.

ஆனால், அந்த மாநாடு பற்றிய அறிவிப்பு அது நடப்பதற்கு முதல்நாள் நள்ளிரவே ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

முன்னதாகவே இப்படியொரு மாநாடு நடப்பது குறித்து அறிவித்தால், இல்லாத கட்சி ஒன்றுக்கு ஏன் இந்த மாநாடு என்று கேட்டு யாராவது நீதிமன்றத்தை நாடி விடுவார்களோ என்ற அச்சம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்களை நன்கு அறிந்த சட்டத்தரணியான அரசியல்வாதி ஒருவர்.

ஜெனீவாவுக்கு செல்ல முன் 83 தூதுவர்களுடன் சந்திப்பு

83 தூதுவர்களுடன் சந்திப்பு: வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 பெப்ரவரி 18ம் திகதி இந்திய தலைநகர் டெல்லியியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.
பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

தற்போதைய அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விளக்கங்களின் தொடர்ச்சியாக, டெல்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் பாராட்டினார். மாநாட்டில் 83 தூதுவர்கள் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகள் பேரவையின் 2021 செப்டெம்பர் அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியமையை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலைபேறான அபிவிருத்திச் சபை ஆகிய உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்த அமைச்சர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக் காட்டினார்.

Posted in Uncategorized

கடந்த 24 மாதங்களில் இலங்கையில் 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது!

கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதன் விளைவாக நாட்டின் பணவீக்கமானது 16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் தாமதித்ததால் டீசல் கப்பலுக்கு 38,000 டொலர்கள் தாமதக் கட்டணம்

டீசல் பற்றாக்குறை காரணமாக பொது போக்குவரத்து சேவையும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.

டீசல் இன்மையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இடைநடுவே நின்ற சம்பவமொன்று களுத்துறையில் இன்று பதிவானது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த, மாத்தறை டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று டீசல் தீர்ந்தமையால் களுத்துறை நகர் மத்தியில் நின்றது.

இதனிடையே, தனியார் பஸ் சேவைக்கு இரண்டு நாட்களுக்கு போதுமான அளவு டீசலே கையிருப்பிலுள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

டீசல் பற்றாக்குறையால் கொள்கலன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

முல்லைத்தீவின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருள் காணப்படவில்லையென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

நேற்று (22) நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போது திறைசேரி செயலாளர் இலங்கை வங்கிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அந்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் கடலில் உள்ளதாகக் கூறிய அவர், அதற்குத் தேவையான டொலரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், 37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலுக்காக இரண்டு நாட்கள் தாமதத்தின் பின்னர் 35 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, டீசலை ஏற்றிய கப்பலுக்கு இரண்டு நாட்கள் தாமதக் கட்டணமாக 38,000 டொலர் கட்டணம் செலுத்த நேர்ந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக்க கோரும் மனு மீது மார்ச் 9 ஆம் திகதி விசாரணை

இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ராம் சேது எனப்படுகின்ற ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனம் செய்யுமாறு கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான A.S.போபன்னா , ஹிமா கோஹ்லி ஆகியோர் அங்கம் வகித்த நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், அதனை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சுப்ரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கமைய, இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்துமாறு ​கோரும், சுப்ரமணியம் சுவாமியின் மனுவை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளள மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவிற்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.

இராமர் பாலத்தின் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கு உரித்தானவை. அவை இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளன.

தலைமன்னாரிலுள்ள இராமர் பாலத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த வருடம் மார்ச் மாதமும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதமும் சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்காணித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று கடந்த வருடம் நவராத்திரி விழாவிற்காக இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் ராமர் பாலத்தின் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்றை இட்டிருந்தார்.

ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரகடனப்படுத்துவதில் இந்திய பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் குறைந்தது அவரிடம் இது குறித்து வினவியேனும் தகவல் வரவில்லை.

அன்று அவர்கள் கடைப்பிடித்த மௌனத்தின் விளைவாக இன்று எமது நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் எமது நாட்டுக்குரிய மணல் திட்டுக்களும் இந்தியாவின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.