இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியழைக்க ஜனாதிபதி நடவடிக்கை

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

அரசாங்கத்துக்கு ட்ரான்ஸ்பேரன்சி அமைப்புக் கண்டனம்

நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டு குரல் எழுப்பிய பொதுமக்களை கைது செய்தல் மற்றும் அவர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் சொந்தமான பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கும் அந்நிறுவனம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஊழலற்ற நாட்டை உருவாக்கும் நோக்குடன் குரலெழுப்பிய பொதுமக்களை தன்னிச்சையாகவும் நியாயமான சந்தேகங்களுக்கு இடமின்றிய நிலையிலும் கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய சட்ட ஏற்பாடுகளை தவறாக பயன்படுத்துவதனை TISL நிறுவனமானது உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் இத்தகைய தன்னிச்சையான பிரயோகமானது பொதுமக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பின்பற்ற தயக்கம் காட்டும் நிலைமையினை உருவாக்கும் அதேவேளை இவை நாட்டுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடம்

சர்வதேச நிதியம், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீடு அளவில் உலக பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கடைசி மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பொருளாதார வளர்ச்சியில் உலகின் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 5-வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா பிரபல நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. நடப்பாண்டில் 7.7 சதவீதம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டு இருந்தது.

ஆனால் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் இந்த சதவீதத்தை எட்ட முடியவில்லை என சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்தில் இருந்த இந்தியா படிப்படியாக முன்னேறி இந்த இடத்துக்கு வந்துள்ளது.

குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. இங்கிலாந்தில் விரைவில் ஆட்சி தலைமை மாற உள்ளது. தற்போது அங்கு பொருளாதார வீழ்ச்சி அடைந்து உள்ளதால் புதிதாக பதவி ஏற்க உள்ள பிரதமருக்கு இது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார பின்னடைவு 2024-ம் ஆண்டு வரை நீடிக்கும் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

Posted in Uncategorized

மார்ச்சில் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதன் காலம் 2022 ஆம் ஆண்டு முடிவடைய இருந்தது. அமைச்சருக்கு உள்ள அதிகாரத்த்டதிற்கமைய அதன் காலம் 2023 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சித் தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அந்த தொகை எட்டு முதல் பத்து மில்லியன் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

Posted in Uncategorized

”இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்”: சீனா!

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீன சீன வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிக்கவும், கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சாதகமாக உதவுவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

”சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும்” – மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாட்டில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் மற்றும் நிறைவு விழா நேற்று மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் மத்திய செயற்குழு கூட்டத்தில்  அனுமதி வழங்கிய கட்சியின் யாப்பு திருத்தத்திற்கு அகில இலங்கை செயற்குழு இன்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.

சிரேஷ்ட உப தவிசாளர்கள் மற்றும் உப தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கட்சியின் கொள்கைக்கு  முரணாக ஒழுக்கத்தை மீறுவோரை கட்சியில் இருந்து நீக்குதல் தொடர்பிலான திருத்தமும் இதில் உள்ளடங்குகிறது.

‘எதிர்பார்ப்பிற்கு உயிர் கொடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

Posted in Uncategorized

பாராளுமன்ற செங்கோலுக்கு இல்லாத மரியாதை சீனாவின் உளவுக் கப்பலுக்கு வழங்கப்படுவதுதான் இந்த நாட்டின் ஜனநாயகம் – பா.உ.  ஜனா

இந்தக் காலகட்டத்தில் இந்தியா உணவுக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது. அதைவிட வேதனையான விடயம் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து மரியாதை கொடுக்காத தேரர் சீனக்கப்பல் வரும் போது மரியாதை கொடுத்து எழுந்து நிற்பது தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமாக கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு இல்லாமல் உள்ளது. ஏனெனில் அம்மாவட்ட விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே இடைப்போக வேளாண்மையை முடித்து தற்போது பெரும்போகத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதால் அவர்கள் பெற்ற கடன்களை அடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியானது இல்லை. இததனை விவசாய அமைச்சர் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாதீட்டு விவாதத்தின் போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையில் இந்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் விவாதித்துக் கொண்டிருக்கையில் சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்டத்தில் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்க முன்வந்திருப்பதையிட்டு ஓரளவுக்கு இந்த நாடு மூச்சு விடக்கூடிய நிலைமைக்கு வரும் என்பது எல்லோருடையதும் எதிர்பார்ப்பு. அதே வேளையில் அவர்கள் சில நிபந்தனைகளைக் கூட வைத்திருக்கிறார்கள். வரியைச் சரியாக பேணிப்பாதுகாப்பது, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம்,  ஊழல் அதுதான் இந்த நாட்டில் மலிந்து கிடப்பதும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானதும், அதைவிட மேலாக இலங்கைக்குக் கடந்த காலங்களில் கடன் கொடுத்த நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும்.
நேற்றைக்கு முதல் நாள் மத்திய வங்கியின் ஆளுனர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அவர் குறிப்பிடும் போது இந்த நாடு சுதந்திரமடைந்த காலமிருந்து தன்னிறைவடையவில்லை. கடன்கள் ஒவ்வொரு ஆண்டும் கடன்களைப் பெற்றிருப்பதாகச் சொன்னார். அதே வேளையில் 80 ஆண்டுகளில் பெற்ற கடன்களில் இந்த நாட்டை முன்னேற்றுவதாகக் கூறயிருந்தார்.
மகாவலி அபிவிருத்திக்கும் நீர் மூலமான மின்சார உற்பத்திக்குமாக கடன்களை அந்தக் கடன்கள் பெற்றிருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் மகாவலி அபிவிருத்தி ஊடாக அரிசியில் தன்னிறைவடைந்திருந்தாலும் மகாவலி அபிவிருத்தி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான குடியேற்றங்களை மையப்படுத்தியே அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீர் மூலமாக 60 வீதம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும் ஏனைய தற்போதைய ஊழலின் மத்தியில் டீசலில் இயக்கம் ஜெனரேற்றர்கள் மூலமாகவும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களிலும் ஊழல்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவித வருமானத்தையும் ஈட்டாத முதலீடுகளுக்காக கடன்களைப் பெற்று அதன் மூலமாக மில்லியன் கணக்கான டொலர்களை தரகுப் பணமாகப் பெற்றிருக்கின்றார்கள் என்பதனையும் அவர் மறைமுகமாகக் கூறியிருந்தார்.
80 காலகட்டத்தில் மகாவலி மூலமாக அரிசியில் தன்னிறைவு அமைந்திருந்தாலும் தற்போது என்னுடைய மாவட்ட நெல் உற்பத்தி, விவசாயம் சம்பந்தமாகப் பேசவேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் கூறியிருந்தேன் நெல் விலையைத் தீர்மானிப்பதும் பசளை இறக்குமதி செய்வதும் பொலநறுவை, அனுராதபுர விவசாயச் செய்கையைப் பொறுத்தே செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு போகங்களில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் நஸ்டத்தையடைந்திருக்கிறார்கள். ஒரு அந்தர் யூரியாவை 43ஆயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். களை நாசினிகளுக்கு 20ஆயிரத்துக்கும் மேல் கொடுத்திருக்கிறார்கள். இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சபைக்கு நெல்லைக் கொடுத்தவர்கள் தற்போது வரை பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் நெல் விலை 7000 ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போது 8000 ரூபாவாக மாறியிருக்கிறது. ஆனால். அந்த நெல்லை விவசாயிகள் வைத்திருந்திருந்திருந்தால் 8000 ரூபாவுக்கு விற்றிருப்பார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்த நெல்லுக்கு பணம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் டீசல் பற்றாக்குறை, களை நாசினி பற்றாக்குறை, யூரியா பற்றாக்குறையினால் மாவட்ட விவசாயிகள் வங்களில் கடன் பெற்று, நகைகளை அடகு வைத்து வேளாண்மை செய்கை பண்ணியிருந்தார்கள். ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியைச் செய்திருந்தார். கடன் தள்ளுபடி செய்ததும் கூட ஏனைய மாவட்டங்களின் அடிப்படையில் அந்தத் தள்ளுபடியைச் செய்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு அம்பாரைப் பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே வேளாண்மை செய்தவர்கள் என்பதால் பெற்ற கடன்களை அடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியில்லை. ஏனெனில், அந்தப் போகத்துக்குரிய கடனைச் செலுத்திவிட்டால்தான் அடுத்து போகத்துக்கு கடன் பெறமுடியும். எனவே விவசாய அமைச்சரின் கவனத்திற்கு இந்தத் தடவை பெரும்போகச் செய்கைக்கு முன்னர் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட விவசாயிகளுக்கான யூரியா பசளைகளை ஏற்கனவே கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்குரியவை ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாக அறிகின்றோம். எங்களுடைய மாவட்டத்திற்கும் நேரகாலத்திற்கு முன்னர் யூரியா பசளையை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 இலட்சம் ஏக்கர் பெரும்போகம் செய்யும் மக்கள் இம்முறை செய்கை பண்ணமாட்டார்கள் என்ற ஒரு முடிவை மாவட்ட செயலக மட்டத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதனை மிக வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் பெற்ற கடன்களினால் அம்பாந்தோட்டடைத் துறைமுகமாக இருந்தாலும் சரி, மத்தள விமான நிலையமாக இருந்தாலும் சரி, ராஜபக்ச விளையாட்டரங்காக இருந்தாலும் சரி, தாமரைக் கோபுரமாக இருந்தாலும் சரி இந்த நாட்டுக்கு எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக் கொடுப்பதாக இல்லை. எங்களைவிடச் சிறிய நாடான மாலைதீவிலிருந்து நாங்கள் கருவாடை இறக்குகின்றோம். மாசியை இறக்குகின்றோம். மீன்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குகின்றோம். இப்படியான வருமானத்தைத் தராத முதலீடுகளைச் செய்ததற்குப் பதிலாக இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இலங்கையைச் சுற்றிக் கடல் இருக்கின்றது. கடற்தொழில் செய்வதற்கான பயிற்சியும், அதற்கான படகுகளையும் வாங்கிக் கொடுத்திருந்தால் கூட மீன்களிலே, கருவாட்டிலே தன்னிறைவடைந்திருக்கும். வெளிநாடுகளுக்குக் கூட அதனை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று அதளபாதாளத்துக்குள் இந்தப் பொருளாதாரம் சிக்கிக் கிடக்கின்றது.
இந்த நெருக்கடிக்குள் எமது நாட்டுக்கு உதவிய நாடு நமது அயல்நாடு இந்தியா மத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியில் 4 பில்லியன் கடன்களை வழங்கியிருக்கின்றது. குறைந்த வட்டியில் 800 மில்லியனை உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக வழங்கியிருக்கிறது. கடன் அடிப்படையில் 700 மில்லியன் எரிபொருளுக்காக வழங்கியிருக்கிறது. விவசாய உரத்துக்காக 55 மில்லியன் டொலர் உதவியிருக்கிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணை. அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு, பால்மா, மருந்துப் பொருட்கள் இங்கு கிடைத்திருக்கின்றன. இந்தியா இந்தக் காலகட்டத்தில் உணவுக்கப்பலை அனுப்புகிறது. உதவிக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது.
ஒரு விடயத்தை மிகவும் வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து நிற்க முடியாத தேரர் சீனக்கப்பல் வரும் போது அதற்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்கிறார். இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா என்று கேட்கின்றேன் என்று தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்: ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்!

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வற் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்

*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்.

ஆர்ப்பாட்டப் பேரணியில் 25 பேர் கைது!

அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

இதன்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவ்வேளையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், அதன்போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 25 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா?

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சமூகத்தினுடான ஊடாட்டங்களை அதிகரிக்க விரும்புகின்றது. அதற்கான கதவுகளை திறந்து வைக்க விரும்புகின்றது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இதற்கான பகுதியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் சில வெற்றிகளையும் அரசாங்கம் எட்டியிருந்தது. தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொழும்புடன் உரையாடுவதற்கு இணங்கியிருந்தனர்.

இதன் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஒரு புதிய விடயமும் இடம்பெறவுள்ளது. அதாவது புலம்பெயர் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதனையும் வெறுமனே பொருளாதார நெருக்கடியை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாயமாக மட்டுமே நோக்குதல் சரியல்ல. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுக விளைகின்றது. இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. தமிழ் புலம்பெயர் சமூகம் தாயகத்தின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் உத்தியோகபூர்வமாக தலையீடு செய்வதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம் புலம்பெயர் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு பிரத்தியேக இடத்தை வழங்குகின்ற போது, தாயகத்திலுள்ள அரசியல் தரப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு புள்ளியில் சந்தி;க்காதுவிட்டால், அது இறுதியில் தாயக அரசியலை பலவீனப்படுத்தவே பயன்படும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகுந்த நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் ஒரு தந்திரோபாய நகர்வை மேற்கொள்ளுகின்றது. அதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் எதிர்-தந்திரோபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

முதலாவது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது முற்றிலும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. புலம்பெயர் அலுவலகம் என்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அணுகுதல் என்னும் இலக்கையே கொண்டிருக்கின்றது. சிறி.நரேந்திரமோடி பிரதமரானதைத் தொடர்ந்து, இந்திய புலம்பெயர் சமூகத்துடன் ஊடாடும் நிகழ்சிதிட்டமொன்றை அவர் முன்னெடுத்திருந்தார். கிட்டத்தட்ட இதுவும் அவ்வாறான ஒன்றுதான். ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்களை, தங்களது சொந்த நாட்டின் வளர்ச்சியின் மீது ஈடுபாடுள்ளவர்களாக மாற்றுவதும், அவர்கள் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் ஊடாடுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுமே புலம்பெயர் அலுவலகத்தின் பிரதான இலக்காக இருக்கப் போகின்றது. இதில் தமிழர்கள் பிரதானமாக நோக்கப்படுவர் ஏனெனில் ஒப்பீட்டடிப்படையில் தமிழ் புலம்பெயர் சமூகமளவிற்கு சிங்கள சமூகம் வளர்சியடைந்திருக்கவில்லை.

இதனை நமது புலம்பெயர் சமூக அமைப்புக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? வழமைபோல் சாதாரணமாக எதிர்த்துவிட்டு, கடந்து போகும் அணுகுமுறையை கைக் கொள்ளப் போகின்றோமா அல்லது, ஒரு எதிர்-தந்திரோபாய அடிப்படையில் கையாளப் போகின்றோமா? ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். அதாவது, நமது புலம்பெயர் அமைப்புக்கள் இதனை நிராகரிக்கலாம் ஆனால், உடன்பட்டுச் செல்பவர்களுடன் ஊடாடுவதன் மூலம், புலம்பெயர் அலுவலகத்தை இயக்க முடியும். குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் சிங்களவர்கள் இதற்கு பெருமளவில் ஆதரவை வழங்குவர். ஆனால் பொதுவாக புலம்பெயர் சமூகத்துடனான ஊடாட்டமாகவே இது காட்சிப்படுத்தப்படும்.

யூத டயஸ்போறா போன்ற நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லாவிட்டாலும் கூட, கருத்தில்கொள்ளத்தக்க ஒரு டயஸ்போறாவாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் திரட்சிபெற்றிருக்கின்றனர். காலப் போக்கில் இந்த நிலையில் மேலும் வளர்சியேற்படலாம். ஆனால் அந்த வளர்ச்சியென்பது தாயகத்தில் வாழும் மக்களுக்கு பயன்படவில்லையாயின், புலம்பெயர் சமூகமென்பது பயனற்ற ஒன்றாகிவிடும் ஆபத்துண்டு. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், ஈழத் தமிழர் புலம்பெயர் சமூகம் பெருமளவு திரட்சிபெற்ற சமூகமாக இருந்தது. தாயகம் தொடர்பான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மேலோங்கியிருந்தது. 2009இற்கு பின்னர் இந்த நிலைமை பெருமளவு வீழ்சியடைந்துவிட்டது. பொதுவாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டாலும் கூட, இதில் பல பிரிவுகளும் பார்வைகளும் உண்டு. இந்த நிலையில்தான், கொழும்பு, புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுகும் தந்திரோபாயமொன்றை முன்னெடுக்க முயல்கின்றது.

 

மற்றவர்கள் எங்களை நோக்கி வருகின்ற போது, அதனை எதிர்கொள்ளாமல் விலகிக் கொள்வது ஒன்று. இரண்டு அதனை எதிர்கொண்டு, அவர்கள் திறக்கும் கதவுகளால் சென்று, அதனை கையாள முற்படுவது என்பது இன்னொன்று. ஆனால் இந்த விடயத்தில் விலகிக் கொள்வது புத்திசாதுர்யமான அணுகுமுறையாக இருக்க முடியுமா?

தமிழ் புலம்பெயர் சமூக அமைப்புக்கள் தங்களை ஒரு பலமாக முன்னிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு நமது கதவை தட்டுகின்றது. இதனை எவ்வாறு கையாளலாம்? இதனை கையாளுவதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு வேலைத்திட்டத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். குறுகிய கால நிபந்தனைகளின் அடிப்படையில் விடயங்களை கையாள முற்படலாம். தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து குறித்த குறுகியகால நிபந்தனைகளை திட்டமிடலாம். புலம்பெயர் அலுவலகம் என்பது அடிப்படையில் மத்திய அரசின் கீழுள்ள கட்டமைப்பாகவே இருக்கும். தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர் தாயகத்துடன் நேரடியாக ஊடாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. மாகாண சபைகள் இயங்குமாக இருந்தால் அதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.

இவ்வாறானதொரு பின்னணியில் புலம்பெயர் அலுவலகத்துடன் தமிழ் புலம்பெயர் சமூகம் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும்? இந்த இடத்தில் தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு நிபந்தனையை முன்வைக்க முடியும். அதாவது, வடக்கு கிழக்கிலுள்ள சுயாதீன அமைப்புக்களுடன் இணைந்து தடையற்ற வகையில் செயற்படுவதற்கான சந்தர்பங்களை புலம்பெயர் அலுவலகம் ஏற்டுபடுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி சில கண்காணிப்புக்கள் (மறைமுகமாக) இருந்தாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்தின் தாயக செயற்பாடுகளில் எவ்வித இடையூறுகளும் இருக்கக் கூடாது. இதற்கான உத்தரவாதங்களை புலம்பெயர் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும். இப்படியான கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் வரையில், தமிழ் புலம்பெயர் சமூகம் மத்திய அரசின் அங்கங்களோடு இணைந்து செயற்பட முடியாதென்னும் நிபந்தனையை முன்வைக்கலாம். இதனை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போதைய சூழலில் இல்லை. ஒரேயடியாக நிராகரித்துவிட்டுச் செல்வதற்கு பதிலாக, இவ்வாறான அணுகுமுறையின் மூலம் ஊடாடுவது, ஒரு தந்திரோபாய அணுகுமுறையாக இருக்கின்ற அதே வேளை, புலம்பெயர்; சமூகம், தாயகத்திலுள்ள அமைப்புக்களுடன் இணைந்து, இயங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும் ஒரு வேளை ஒரு கட்டத்தில் இது தோல்வியுற்றாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளால் தாயக மக்கள் நன்மடைந்திருப்பர்.

குறுகிய கால நிபந்தனைகளை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதற்கு அமைவாக, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் ஊடாட்டத்தை அதிகரிக்கலாம். தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு பலமாக திரட்சிபெற்றிருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான தருணமிது. ஆனால் இதனை போதிய தயாரிப்புடனும் தந்திரோபாயத்துடனும் அணுக வேண்டும். உணர்சிவசப்பட்டும் அணுகக் கூடாது அதே வேளை, வழமையான எதிர்பரசியல் அணுகுமுறையின் ஊடாகவும் அணுகக் கூடாது. அத்துடன் போதிய வெளிப்படைத் தன்மையில்லாமல், ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் தொடர்புகளின் வழியாகவும் அணுகக் கூடாது. இது தொடர்பில் விரிவான கலந்தாலோசனைகள் அவசியம்.