தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா?

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சமூகத்தினுடான ஊடாட்டங்களை அதிகரிக்க விரும்புகின்றது. அதற்கான கதவுகளை திறந்து வைக்க விரும்புகின்றது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இதற்கான பகுதியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் சில வெற்றிகளையும் அரசாங்கம் எட்டியிருந்தது. தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொழும்புடன் உரையாடுவதற்கு இணங்கியிருந்தனர்.

இதன் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஒரு புதிய விடயமும் இடம்பெறவுள்ளது. அதாவது புலம்பெயர் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதனையும் வெறுமனே பொருளாதார நெருக்கடியை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாயமாக மட்டுமே நோக்குதல் சரியல்ல. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுக விளைகின்றது. இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. தமிழ் புலம்பெயர் சமூகம் தாயகத்தின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் உத்தியோகபூர்வமாக தலையீடு செய்வதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம் புலம்பெயர் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு பிரத்தியேக இடத்தை வழங்குகின்ற போது, தாயகத்திலுள்ள அரசியல் தரப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு புள்ளியில் சந்தி;க்காதுவிட்டால், அது இறுதியில் தாயக அரசியலை பலவீனப்படுத்தவே பயன்படும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகுந்த நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் ஒரு தந்திரோபாய நகர்வை மேற்கொள்ளுகின்றது. அதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் எதிர்-தந்திரோபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

முதலாவது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது முற்றிலும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. புலம்பெயர் அலுவலகம் என்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அணுகுதல் என்னும் இலக்கையே கொண்டிருக்கின்றது. சிறி.நரேந்திரமோடி பிரதமரானதைத் தொடர்ந்து, இந்திய புலம்பெயர் சமூகத்துடன் ஊடாடும் நிகழ்சிதிட்டமொன்றை அவர் முன்னெடுத்திருந்தார். கிட்டத்தட்ட இதுவும் அவ்வாறான ஒன்றுதான். ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்களை, தங்களது சொந்த நாட்டின் வளர்ச்சியின் மீது ஈடுபாடுள்ளவர்களாக மாற்றுவதும், அவர்கள் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் ஊடாடுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுமே புலம்பெயர் அலுவலகத்தின் பிரதான இலக்காக இருக்கப் போகின்றது. இதில் தமிழர்கள் பிரதானமாக நோக்கப்படுவர் ஏனெனில் ஒப்பீட்டடிப்படையில் தமிழ் புலம்பெயர் சமூகமளவிற்கு சிங்கள சமூகம் வளர்சியடைந்திருக்கவில்லை.

இதனை நமது புலம்பெயர் சமூக அமைப்புக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? வழமைபோல் சாதாரணமாக எதிர்த்துவிட்டு, கடந்து போகும் அணுகுமுறையை கைக் கொள்ளப் போகின்றோமா அல்லது, ஒரு எதிர்-தந்திரோபாய அடிப்படையில் கையாளப் போகின்றோமா? ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். அதாவது, நமது புலம்பெயர் அமைப்புக்கள் இதனை நிராகரிக்கலாம் ஆனால், உடன்பட்டுச் செல்பவர்களுடன் ஊடாடுவதன் மூலம், புலம்பெயர் அலுவலகத்தை இயக்க முடியும். குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் சிங்களவர்கள் இதற்கு பெருமளவில் ஆதரவை வழங்குவர். ஆனால் பொதுவாக புலம்பெயர் சமூகத்துடனான ஊடாட்டமாகவே இது காட்சிப்படுத்தப்படும்.

யூத டயஸ்போறா போன்ற நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லாவிட்டாலும் கூட, கருத்தில்கொள்ளத்தக்க ஒரு டயஸ்போறாவாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் திரட்சிபெற்றிருக்கின்றனர். காலப் போக்கில் இந்த நிலையில் மேலும் வளர்சியேற்படலாம். ஆனால் அந்த வளர்ச்சியென்பது தாயகத்தில் வாழும் மக்களுக்கு பயன்படவில்லையாயின், புலம்பெயர் சமூகமென்பது பயனற்ற ஒன்றாகிவிடும் ஆபத்துண்டு. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், ஈழத் தமிழர் புலம்பெயர் சமூகம் பெருமளவு திரட்சிபெற்ற சமூகமாக இருந்தது. தாயகம் தொடர்பான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மேலோங்கியிருந்தது. 2009இற்கு பின்னர் இந்த நிலைமை பெருமளவு வீழ்சியடைந்துவிட்டது. பொதுவாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டாலும் கூட, இதில் பல பிரிவுகளும் பார்வைகளும் உண்டு. இந்த நிலையில்தான், கொழும்பு, புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுகும் தந்திரோபாயமொன்றை முன்னெடுக்க முயல்கின்றது.

 

மற்றவர்கள் எங்களை நோக்கி வருகின்ற போது, அதனை எதிர்கொள்ளாமல் விலகிக் கொள்வது ஒன்று. இரண்டு அதனை எதிர்கொண்டு, அவர்கள் திறக்கும் கதவுகளால் சென்று, அதனை கையாள முற்படுவது என்பது இன்னொன்று. ஆனால் இந்த விடயத்தில் விலகிக் கொள்வது புத்திசாதுர்யமான அணுகுமுறையாக இருக்க முடியுமா?

தமிழ் புலம்பெயர் சமூக அமைப்புக்கள் தங்களை ஒரு பலமாக முன்னிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு நமது கதவை தட்டுகின்றது. இதனை எவ்வாறு கையாளலாம்? இதனை கையாளுவதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு வேலைத்திட்டத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். குறுகிய கால நிபந்தனைகளின் அடிப்படையில் விடயங்களை கையாள முற்படலாம். தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து குறித்த குறுகியகால நிபந்தனைகளை திட்டமிடலாம். புலம்பெயர் அலுவலகம் என்பது அடிப்படையில் மத்திய அரசின் கீழுள்ள கட்டமைப்பாகவே இருக்கும். தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர் தாயகத்துடன் நேரடியாக ஊடாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. மாகாண சபைகள் இயங்குமாக இருந்தால் அதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.

இவ்வாறானதொரு பின்னணியில் புலம்பெயர் அலுவலகத்துடன் தமிழ் புலம்பெயர் சமூகம் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும்? இந்த இடத்தில் தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு நிபந்தனையை முன்வைக்க முடியும். அதாவது, வடக்கு கிழக்கிலுள்ள சுயாதீன அமைப்புக்களுடன் இணைந்து தடையற்ற வகையில் செயற்படுவதற்கான சந்தர்பங்களை புலம்பெயர் அலுவலகம் ஏற்டுபடுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி சில கண்காணிப்புக்கள் (மறைமுகமாக) இருந்தாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்தின் தாயக செயற்பாடுகளில் எவ்வித இடையூறுகளும் இருக்கக் கூடாது. இதற்கான உத்தரவாதங்களை புலம்பெயர் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும். இப்படியான கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் வரையில், தமிழ் புலம்பெயர் சமூகம் மத்திய அரசின் அங்கங்களோடு இணைந்து செயற்பட முடியாதென்னும் நிபந்தனையை முன்வைக்கலாம். இதனை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போதைய சூழலில் இல்லை. ஒரேயடியாக நிராகரித்துவிட்டுச் செல்வதற்கு பதிலாக, இவ்வாறான அணுகுமுறையின் மூலம் ஊடாடுவது, ஒரு தந்திரோபாய அணுகுமுறையாக இருக்கின்ற அதே வேளை, புலம்பெயர்; சமூகம், தாயகத்திலுள்ள அமைப்புக்களுடன் இணைந்து, இயங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும் ஒரு வேளை ஒரு கட்டத்தில் இது தோல்வியுற்றாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளால் தாயக மக்கள் நன்மடைந்திருப்பர்.

குறுகிய கால நிபந்தனைகளை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதற்கு அமைவாக, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் ஊடாட்டத்தை அதிகரிக்கலாம். தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு பலமாக திரட்சிபெற்றிருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான தருணமிது. ஆனால் இதனை போதிய தயாரிப்புடனும் தந்திரோபாயத்துடனும் அணுக வேண்டும். உணர்சிவசப்பட்டும் அணுகக் கூடாது அதே வேளை, வழமையான எதிர்பரசியல் அணுகுமுறையின் ஊடாகவும் அணுகக் கூடாது. அத்துடன் போதிய வெளிப்படைத் தன்மையில்லாமல், ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் தொடர்புகளின் வழியாகவும் அணுகக் கூடாது. இது தொடர்பில் விரிவான கலந்தாலோசனைகள் அவசியம்.