விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலைப் பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19 ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில், அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் என்ற வகையில் ஆனந்த கல்லூரியில் உருவான முதலாவது விமானப் படைத் தளபதியாகவும் கருதப்படுவார்.

1988 ஆம் ஆண்டில் பயிலுநராக கொத்தலால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துக்கொண்டதோடு, அநுராதபுரம் முகாமில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் முதலாம் இலக்க 33 ஆவது விமானப்படை பயிற்சி பாடநெறியில் பங்குபற்றி பாடநெறியின் மிகச்சிறந்த பயிலுநராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளில் விமானப்படை அதிகாரியாக பங்கேற்ற அவர் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானப்படை தளபதியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக அவர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (29) அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவை – சுகாதார அமைச்சு

 மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவைக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஶ்ரீ சந்திரகுப்தவிடம் வினவிய போது, இந்த பிரச்சினைகள் தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கூறினார்.

அதற்கமைய, நிலுவைக் கட்டணங்களை செலுத்துவதற்கான நிதியை உடனடியாக வெளியிட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம்(26) முதல் அமுலாகும் வகையில் 60 வகையான மருந்துகளின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 15 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இஸ்ரேலுக்கு எதிராக விசாரணை நடாத்த கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்தாசை வழங்கி போர்க்குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த யெஸ் ஜிவல் (Yesh gvul), மற்றும் டொரட் செடெக் (terat zedec), மனித உரிமைகள் சட்டத்தரணி ஈடேய் மெக் ஆகியோரே முன்வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் இஸ்ரேலிய ஆயுதங்களும் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தன என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்ற போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் போது நடந்த போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.

போரின்போது, பொதுமக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச ஆதரவு நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றென கண்டறியப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டுகளில், இஸ்ரேலின் இராணுவ தொழில்நுட்பத்தை கணிசமான அளவில் கொள்வனவு செய்து, ஆசியாவில் இஸ்ரேலின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவராக இலங்கையும் மாறியது.

அத்துடன், போரில் ஈடுபட்ட இலங்கைப் படையினருக்கும் இஸ்ரேல் பயிற்சியும் அளித்துள்ளது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட கபிர் விமானங்கள் உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இலங்ககையின் உள்நாட்டு போரில் இஸ்ரேலிய ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறித்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்தநிலையில், போர்க் குற்றங்களில் இஸ்ரேலின் தொடர்பை வெளிப்படுத்தவும், வழக்குத் தொடரவும் தாம் விரும்புவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணைகள் கோரப்படுகின்ற போதிலும் இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளில் இருந்து அவர்களுக்கு மறைமுகமாக உதவியவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை அதிகாரி டொனால்ட் பெரேராவும் போரில் இஸ்ரேல் உதவியதை உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த 2010 இல் இஸ்ரேலிய ஊடகமொன்று அளித்த செவ்வியில் அவர் இதனை பதிவிட்டார் என குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை வழங்கும் பிரேரணை வர்த்தமானியில் வெளியீடு

நெருக்கடி காரணமாக தேர்தலை நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான ஜயந்த கடகொடவின் தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தனிநபர் பிரேரணை மாநகர சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை திருத்தச் சட்டம் மற்றும் உள்ளுராட்சி மன்றச் சட்டம் ஆகியவற்றில் உள்ள பல சரத்துகளில் திருத்தங்களை அறிவித்துள்ளன.

இதன்படி, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச, மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 252) மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 255) ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜயந்த கெட்டகொடவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இது அமுல்படுத்தப்பட்டால், தேர்தல் அறிவிக்கப்பட்டு, நெருக்கடி காரணமாக மேற்படி தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், 12 மாதங்கள் கடந்தாலும் அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கப்பட்ட ஒரு காலத்திற்கு உள்ளூராட்சி மன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும்.

யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் ஜூலை 15 ஆம் திகதி மீள ஆரம்பம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கடவை பராமரிப்பு பணிகளுக்காக கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது.

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடிப் புகையிரத சேவைகள் அநுராதபுரம் புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு புகையிரத மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு புகையிரதச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசனப் பதிவுகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவின் ஒத்துழைப்பு

அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டன் நேற்று புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துமாறும் , கொழும்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹரகம இலங்கை பல் மருத்துவக் கல்லூரிக்கு நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அதற்கு வழங்கப்படும் வசதிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். உயர்ஸ்தானிகர் அதனை ஏற்றுக்கொண்டதுடன், பல் மருத்துவப் கல்லூரியை மீண்டும் கண்காணித்து ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அரசதுறை சீர்திருத்த வேலைத்திட்டங்களுக்கு நிபுணத்துவம் வழங்க நியூசிலாந்து தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். நியூசிலாந்தின் முன்னாள் பொதுச் சேவை ஆணையாளர் தலைமையிலான குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

காலாவதியான காணி கட்டளைச் சட்டத்தை திருத்தவும் திட்டமிட்டுள்ளதோடு , பழங்குடியின மக்களின் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கத்துடன் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் காலாவதியான காணிச் சட்டத்தை திருத்தியமைப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தேர்தல் சட்ட திருத்தம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

விமானிகள் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்துமாறு இலங்கை விமானிகள் சங்கம் கோரிக்கை

விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விமானிகள் பற்றாக்குறையால் இலங்கை விமான சேவை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. விமான சேவை முகாமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் சில தீர்மானங்களினால் விமானிகளான நாம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளோம்.

தற்போது இலங்கை விமான சேவைக்கு 330 விமானிகள் தேவைப்படுகின்றனர். எவ்வாறிருப்பினும் கடந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட விமானிகள் சேவையிலிருந்து இடை விலகியமையால் தற்போது விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உரிய நேரத்தில் சேவைகளை முன்னெடுப்பதில் எழுந்துள்ள சிக்கலால், விமான பயணிகளான மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இலங்கை விமான சேவையானது துறைசார் நிபுணத்துவத்துக்கு பொருத்தமான சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே வழங்குகின்றது.

கொவிட் நெருக்கடியின் பின்னர் சம்பளம் 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றோம். இம்முறை இலங்கை விமான சேவை 50 மில்லியன் டொலர் இலாபமீட்டியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

எனவே, தற்போது நிலவும் விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கான சம்பளம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழும்; பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார்.

அச்சந்திப்புக்களின் ஓரங்கமாக சர்வதேச பொருளாதாரக் கட்டமைப்புக்களில் ஒன்றான உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டியை சந்தித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் மற்றும் பொருளாதார மீட்சி செயன்முறை என்பன தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது இந்நெருக்கடியிலிருந்த மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று பெய்ஜிங்கில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள அமைச்சர் அலி சப்ரி, அவர்களை வர்த்தகத்துறைசார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், இலங்கையின் நல்லெண்ணத்தூதுவர்களாக செயற்படுமாறும் ஊக்குவித்துள்ளார்.

இந்திய ஆதரவினால் மாத்திரமே நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது – மிலிந்த மொரகொட

இந்தியாவின் ஒத்துழைப்பினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. இலங்கை கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியா உதவியளித்திருக்காவிட்டால் மிக மோசமான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்கும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது , இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர் கடனுதவியையும் , மேலும் பல நிவாரணங்களையும் வழங்கியுள்ளது.

உண்மையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்தியா ஆதரவளித்திருக்காவிட்டால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவியைப் பெற்றிருக்க முடியாது.

1948 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை கடந்த ஆண்டு பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இதன் காரணமாக முதன் முறையாக கடன்களை மீள செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவிக்க வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் பணவீக்கம் உயர்வடைந்தமை , மின்சாரத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமை , மருந்து, எரிபொருள் உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருட்கள் என்பவற்றின் இறக்குமதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

எவ்வாறிருப்பினும் அந்த நிலைமைகளிலிருந்து இலங்கை படிப்படியாக மீட்சிக்கான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயம் குறித்து அவர் தெரிவித்துள்ள போதிலும் , அது தொடர்பில் விரிவான விபரங்களை வெளியிடவில்லை