யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் ஜூலை 15 ஆம் திகதி மீள ஆரம்பம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கடவை பராமரிப்பு பணிகளுக்காக கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது.

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடிப் புகையிரத சேவைகள் அநுராதபுரம் புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு புகையிரத மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு புகையிரதச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசனப் பதிவுகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.