தமிழக நன்கொடை உதவித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் “அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சய பாத்திர உதவிகள்” எனும் தொனிப்பொருளில் அமைந்த குறித்த நன்கொடை உதவித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி (27) மாலை 3.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ். இந்திய துணைத்தூதுவர் ஜெ. ராகேஷ் நடராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு மற்றும் செல்வபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச சேர்ந்த முப்பது பேருக்கான உதவி வழங்கி வைக்கப்பட்டது.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்.குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோகிராம் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மிகுதி வழங்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பைக்கட்டுக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இதில் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருந்தால் ஒரு பால்மா பை மட்டும் வழங்கப்படும்.

21 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை ; ஐ.ம.ச. சுட்டிக்காட்டு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

21ஆவது திருத்தத்தை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல கட்சிகளின் யோசனைகளையும் பெற்று அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்த்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்,இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல்,சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் ஸ்தாபிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஏதேனும் சூட்சமம் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குதல் அல்லது இரத்து செய்யல் விவகாரத்தில் பொதுஜன அபிப்ராயத்தை கோருவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகார விவகாரத்தை இருகட்டமாக செயற்படுத்த வேண்டும்.பொதுசன அபிப்ராயத்தை கோருவதும் சாதகமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலான விவகாரம் தற்போது உயர்நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அவ்விடயம் குறித்து எவ்வித நிலைப்பாட்டையும், அடுத்தக்கட்ட நகர்வுனையும் தற்போது முன்னெடுக்க முடியாது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அமைச்சு பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தல், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பிரதான யோசனைகளுக்கு சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றத்தில் சகல தரப்பினரது யோசனைகளையும் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.புதிய அரசியலமைப்பு உருவாக்க பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

சகல கட்சிகளினதும் யோசனைகளை பெற்று எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்து விரைவாக நிறைவேற்றிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறிதொரு கூட்டத்தை நடத்தி அரசியலமைப்பு வரைபு யோசனை பெறலை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் தமது யோசனைகளை நீதியமைச்சரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இந்தியா – ஜப்பான் இணைந்து இலங்கைக்கு உதவ தீர்மானம்

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது

டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை அரசினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும் ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது.

மேலும் இந்தியா ஏற்கெவே இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், 1.5 பில்லியன் டொலர் உதவியை இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் தற்போது இணைந்து இலங்கைக்கு உதவி வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.

கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது இலங்கை மீனவர்கள் அதிருப்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இன்று இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தற்போது இலங்கை மீனவ சமூகத்திற்கு மத்தியில் பாரிய மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிவாரண உதவிகளை செய்வதை போல காண்பித்து, தமது உரிமையை பறித்தெடுக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை – இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவை அறுக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நன்றி- பிபிசி

Posted in Uncategorized

“சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை”-பிரதமர் ரணில்

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவி புரிய நாடுகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றவுடன் பெரும் நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருவார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள். எரிபொருள் எரிவாயு, உரபிரச்னைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்திற்கு 50 நாள்: இன்று கொழும்பில் பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றன.

இதனையொட்டி இன்றைய தினம் கொழும்பில் பேரணியை நடத்துவதற்கு அரச எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் திட்டமிட்டவாறு இன்று பிற்பகல் பேரணியை நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – ஞானசார தேரர் !

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மருத்துவ பொருட்களின் சவால்கள்-இலங்கைக்கு WHO முழு ஒத்துழைப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங், (Dr.Alaka Singh) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை நேற்று முன்தினம் (25)  சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

இதன் போதே இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ் அகதி குடும்பத்தினரை விடுவித்த அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்

அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய ஆட்சி காலக்கட்டத்தில் பல்வேறு இன்னல்களையும் பல ஆண்டுக்கால தடுப்புக் காவலையும் எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இவர்கள் முன்பு வாழ்ந்த பிலோயலா பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோயலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

வன்முறைகள் தொடர்பில் ஆராய முன்னாள் படைத் தளபதிகள் தலைமையில் குழு!

மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடக்கம் மே 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வரையில் ஆராய முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் ஏயார் மார்ஷலாக செயற்பட்ட ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை முதல் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized