கொவிட் வைரஸின் தோற்றத்தை ஆராய புதிய குழுவைநியமித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

கொவிட் வைரஸின் தோற்றத்தை தீர்மானிக்க தமக்கு கிடைத்துள்ள “கடைசி வாய்ப்பு” இது என்று உலக சுகாதார ஸ்தாபனம்புதன்கிழமை (14) தெரிவித்தது.

இதற்காக கொவிட் தொற்று தொடர்பான முதலாவது தொற்றாளரின் தகவல்களை வழங்குமாறு சீனாவை உலக சுகாதார ஸ்தாபனம்வலியுறுத்தியுள்ளது.

கொவிட் வைரஸின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான புதிய அறிவியல் ஆலோசனைக் குழுவின் 26 உறுப்பினர்களை உலக சுகாதாரஸ்தாபனம் புதன்கிழமை பெயரிட்டது.

இந்த குழுவில் வுகானில் நடந்த கூட்டு விசாரணையில் பங்கேற்ற மரியன் கூப்மன்ஸ், தியா ஃபிஷர், ஹங் நுயென் மற்றும் சீன விலங்குசுகாதார நிபுணர் யாங் யுங்குய் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதன் போது பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ், கொவிட் வைரஸ்தோற்றம் தொடர்பான முதல் நாட்களின் மூல தரவு பற்றாக்குறையால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வக தணிக்கைக்குஅழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப குழுவின் அதிகாரியான மரியா வான் கெர்கோவ், வைரஸ்விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதை அறிய இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுகூறினார்.

இதனிடையே ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சீனாவின் தூதுவர் சென் சூ, ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூட்டு ஆய்வின் முடிவுகள்“மிகவும் தெளிவாக உள்ளன” என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான முதல் நபர் மத்திய சீன நகரமான வுஹானில் டிசம்பர் 2019 இல் பதிவாகியது.

சீனாவின் ஆய்வகங்களில் ஒன்றிலிருந்து வைரஸ் கசிந்தது என்று கோட்பாடுகளை சீனா மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது. மேலும் ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க சீனா மறுத்து வருகின்றது.

Posted in Uncategorized

தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்பை மாற்றுவதற்கு அனுமதி

எந்தவொரு தொலைபேசி வலையமைப்பில் இருந்தும் பாவனையார்களுக்கு வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி பாவனையாளர்கள் அனைவருக்கும் தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு  (Number Portability)  சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றார்கள் – சிறீதரன்

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது.

அத்துடன் வெளியில் காணி அதிகாரம்  பொலிஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்வபு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் Decide Mckinnon இன் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதம்

பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சகல இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கசார்பற்றதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு திருக்குமார் நடேசன் தொடர்பில் மாத்திரமின்றி, பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பிலும், 2016 இல் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பன்டோரா ஆவணம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
எனினும் பத்திரிகையொன்றில் பன்டோரா ஆவணத்தில் 93 இலங்கையர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒருவருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் ஆலோசனை வழங்கவேண்டும்.
இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.
இதேபோன்று 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் 65 இலங்கையர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரபல ஆங்கில பத்திரிகையொன்று 2016.05.10 ஆம் திகதி தகவல்களை வெளியிட்டுள்ளது.
எனவே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.
அதற்கமைய ஒரு நபருக்கு எதிராக மாத்திரமின்றி இவ்வாறு செயற்படும் அனைவருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
இதன்மூலம் எந்தவொரு நபரும் இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை பேண முற்படல் மற்றும் ஊழல் – மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலாக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Posted in Uncategorized

பன்டோரா விவகாரம்; சிறப்பு விசாரணை ஆரம்பம்

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பன்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

பன்டோரா  ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரி செலுத்துதல் தொடர்பான வரி கோப்புகள் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் வரி ஏய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விளக்கம்

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது. எனினும் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப்படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (14) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாட்டினால் இன்று போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நிலைமை மோசமான சூழலில் காணப்படுகின்றது. நாட்டிற்கே உணவை வழங்குகின்ற விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சாமானிய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாயம் செய்வது ஒரு பக்கம். குத்தகை என்ற அடிப்படையில் நிலத்தை பெற்று விவசாயம் செய்கின்ற நிலையும் காணப்படுகிறது. மேலும் தமது தங்க நகைகளை அடகு வைத்தும், வங்கிக் கடன்களை பெற்றும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

தற்போது விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படாமையால் மிக மோசமான ஒரு நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் தமது உணவுக்கான பிரச்சினையையும் எதிர் நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. திட்டமிடப்படாத செயற்பாடு என கூறியமைக்கு காரணம் விவசாயிகளை இயற்கையான பசளைக்கு மாற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். உடனடியாக செயற்கை உரத்தை நிறுத்தி இயற்கை உரங்களுக்கு மாறுங்கள் என்று கூறினால் விவசாயிகளால் என்ன செய்ய முடியும்? வேடிக்கையாக உள்ளது.

எனவே விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை வழங்கிக் கொண்டு இயற்கையான உரத்திற்கு மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் படு மோசமான நிலமையை ஏற்படுத்தி, இன்று வெளியில் இருந்து பசளையை கொண்டு வர உள்ளதாக கூறுகின்றனர்.

விவசாயிகள் தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலமாக உள்ளது. ஆனால் உரம் இல்லை, மருந்து இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நடவடிக்கைகளுக்காக அடகு வைக்கின்ற தங்க நகைகளை மீட்கவும், பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தவும் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

இதனால் இலங்கை பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எங்களுடைய விவசாயிகளுக்கு உரத்த வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுடனும், விவசாய அமைப்புக்களுடனும் கலந்துரையாடி வருகிறோம்.என தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள்.

அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் தான் தேர்தல் இடம்பெறும் என கூறுகிறார்கள்.

அடுத்த வருடம் தேர்தலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். புதிய தேர்தல் முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்று டெல்லியில் சென்று பிரதமர் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தன் அதிகாரங்களை பிளஸ் என்று சொல்லி வெளியில் வந்த பின் 13 ஐ கொடுக்க முடியாது என்று சொல்லி பேசுகின்ற சந்தர்ப்பங்கள் போல் உள்ளது.

எனவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.

அதே நேரத்தில் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப் படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.

அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களது நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்சனைகளை கையாள்வது என்பது மிக ஒரு கேளித்தனமான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது அவருடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க திட்டத்தை வகுத்து செயல்படுவதே சாலச் சிறந்தது. என அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை யை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும்.

சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்படும். அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூன்று முக்கிய பொருள்களின் விலைகள் உயர்ந்தன

சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, அசாதாரணமாக உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்படுவதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ .150 முதல் 160 வரை உள்ளது மற்றும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தி காலம் தொடங்கியுள்ள நிலையில், வெங்காய விலை உயர்வு சாதாரணமானது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில், உச்சக்கட்டமாக 1 கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் வியாபாரிகள் கூறுயுள்ளனர்.

மேலும், கொழும்பில் ஒரு கிலோகிராம் இலங்கை உருளைக்கிழங்கின் சில்லறை விலை 130 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும்,  சில்லறை விலை 200 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 110 முதல் 115 ரூபாய் வரை இருந்தது. தற்போது அதன் சில்லறை விலை கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

விகாரை அமைக்க விவசாய காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள 64ஆம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக, பொதுமக்களின் விவசாயக் காணிகளை அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (14) காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மலையைச் சூழவுள்ள கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் அடங்கலாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பொதுமக்கள் உட்பட  முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரும்  கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கள் நிலம் எமக்கு வேண்டும், மாற்று காணி வேண்டாம்”, “அப்பாவிப் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் அநீதிக்கு பொலிஸ் துணை போகாது”, “அதிகாரங்களையும் அதிகாரிகளை வைத்து மக்களை விரட்டாதே”, “எங்கள் காணிகளில் விவசாயம் செய்வதற்கு எங்களிடம் வாடகை கேட்காதே” மற்றும்  “மூதூர் முஸ்லிம், தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை உடன் நிறுத்து” போன்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியாக, மூதூர் பிரதேச  செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

Posted in Uncategorized

உலகளவில் கொரோனாவால் 23 கோடி பேர் பாதிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் இன்று (14) பகல் 1 மணி வரையில் பின்வருமாறு அமைகிறது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது பாதிக்கப்பட்டுள்ளோர் – 239,973,258

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் – 4,890,017

கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் – 217,312,227

தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளர்களின் எண்ணிக்கை – 17,771,014

தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை – 80,596

திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மரண சடங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளை முதல் 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சில விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.