ஹிஷாலினியின் சடலத்தை பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி, பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு நுவரெலியா நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி இன்று உத்தரவிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, டயகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை நாளை (30) காலை 8.30-க்கு தோண்டுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன, B அறிக்கையை சமர்ப்பித்து முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, கொழும்பு தெற்கு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான மூவரடங்கிய விசேட நிபுணர் குழு நேற்று பெயரிடப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, ஏனைய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.

நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமி ஹிஷாலினியை தொழிலுக்காக டயகம பகுதியிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளமையால், நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றவண்ணமுள்ளன.

Posted in Uncategorized

வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுக்க போராட்டம்-போக்குவரத்து தடை- அமைதியின்மை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட்டுவாகல் கடற்படைதளம் அமைக்கப்பட்டுள்ள காணியினை விடுவிக்க காணியின் உரிமையாளர்கள் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
காணி அளவீட்டுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வட்டுவாகல் கடற்படைத்தளம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி காணி அளவீட்டினை எதிர்த்துள்ளார்கள்.

போராட்டக்காரர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு முதன்மை சுமார் நான்கு மணிநேரம் பயணம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசார்,கடற்படையின் கலகம் அடக்கும் படையினர் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட காரர்களிடம் கருத்து தெரிவித்த நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்துவதால் நில அளவையினைகைவிட்டு காணி உரிமையாளர்களுடன் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் என சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு சொல்லிய நில அளவைத்திணைக்களத்தினர்போராட்ட காரர்களை திசைதிருப்பிவிட்டு கடற்படையினரின் வாகனத்தில் ஏறி கடற்படை முகாமிற்குள் சென்று காணி அளவீட்டினை முன்னெடுத்துள்ளார்கள்.மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அரச திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் காணிசுவீகரிப்பிற்கு மக்கள் கருத்தறியாமல் காணியினை அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்ட காரர்கள் வட்டுவாகல் முதன்மை வீதியில் குறுக்கே அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.இன்று நண்பகள் 1.00 மணிவரைக்கும் வீதியனை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டுவருவதால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் மாவட்ட செயலக அதிகாரியான மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்க வருகை தந்து போராட்ட கரர்களுடன் கலந்துரையாடியும் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்துவருகின்றது.

வட்டுவாகல் கடற்படை தளம் அமைந்துள்ள காணி தமிழ்மக்களுக்கு சொந்தமான காணியுடன் இரண்டு சிங்கள மக்களுக்கும் சொந்தமான காணியாகும் காணியின் உரிமையாளர்களான சிங்கள மக்களும் இன்று காலை குறித்த பகுதிக்கு வந்து தங்கள் காணியினை அளவீடுசெய்து அரசாங்கத்திற்கு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சி சாள்ஸ்நிர்மலநாதன்,ரெலோ வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,சிவாஜிலிங்கம், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

Posted in Uncategorized

மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ள ஹிஷாலினியின் சடலம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.

டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் (16), கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினால் எதிர்வரும் 30 ஆம் திகதி சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக மேலும் தெரிவித்தார்.

1983இல் தப்பிய சிப்பாய் அனுபவத்தை பகிந்தார்

பயங்கரவாத அமைப்பொன்றை முழுமையாகத் தோற்கடித்த ஒரே நாடு என்றவகையில் இலங்கை பெயர்பெற்று 12 வருடங்கள் கடந்துள்ளன.

எனினும், 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் ஞாபகங்கள் இன்னும் பலவற்றை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழத்துக்கான முதலாவது நகர்வு, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையுடன் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதியன்று, இராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். அதுவே இலங்கையின் விதியை மாற்றியது.

கறுப்பு ஜூலை அரங்கேற்றப்பட்டு (ஜூலை 23) சனிக்கிழமையுடன் 38 வருடங்கள் நிறைவடைந்தன.

எனினும், யாழ்ப்பாணம், திருநெல்வேலி தாக்குதல்களிலிருந்து தப்பிய இராணுவ அதிகாரியான உபாலி பெரேரா அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விபரிக்கையில்…

அக்காலத்தில், இராணுவத்தில் சேர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். நேர்முகத்தேர்வுகள் பலவற்றுக்கு முகங்கொடுக்கவேண்டும். உயர்கல்வித் தகுதிகள், விளையாட்டுத் திறமை, குடும்பப் பின்னணி ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும் என, இராணுவத்தில் சேர்ந்துகொள்வதற்கான நெருக்கடிகளை தொடர்ச்சியாக விவரித்தார்.

ஒருவாறு இராணுவத்தில் சேர்ந்துகொண்ட தான், பல்வேறான பயிற்சிகளைப் பெற்றுகொண்டதாகத் தெரிவித்ததுடன், அதன் கஷ்டங்களையும் விவரித்தார்.

தமிழ் இளைஞர்கள், தனிநாட்டுக்காக குழுவாகச் செயற்படுகின்றனர் என்பது தொடர்பில் 80ஆம் ஆண்டுகளில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்தன.

அவர்களின் ஆரம்ப இலக்கு, தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்ப் பொலிஸார் என்பதால், அவ்வளவு பெரிதாக அது விளங்கவில்லை.

நான், இணைக்கப்பட்டிருந்த படைப்பிரிவு யாழ்ப்பாணத்துக்குச் சென்றவேளையில், அங்கு படையினரின் ஐந்து முகாம்கள் இருந்தன. அவற்றில், மாதகல் பகுதியில் அமைந்திருந்த முகாமிலேயே நான் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தேன் என தனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டார்.

பாதுகாப்புப் பிரிவினருக்கு தேவைப்பட்ட சீலன் என்றழைக்கப்பட்ட சார்ள்ஸ் அன்ரனி, 1983 ஜூலை 15ஆம் திகதியன்று இராணுவ கமாண்டோ படையணியின் தாக்குதலில் மரணமடைந்தார்.

சார்ள்ஸ் அன்ரனி, பிரபாகரனின் நெருங்கிய நண்பன். (பிரபாகரனின் மூத்த மகனுக்கும் சார்ள்ஸ் அன்ரனி) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், புலிகளின் சிறப்புமிக்க படையணியாக சார்ள்ஸ் அன்ரனி படையணி உருவானது.

சார்ள்ஸ் அன்ரனியின் மரணத்தால் கடுங்கோபமடைந்திருந்த பிரபாகரன், அதன் பதில் தாக்குதல்களை படையினர் மீது மேற்கொள்வதற்கு திட்டம் வகுத்திருந்தார்.

இந்நிலையில், ஜூலை 23ஆம் திகதியன்று புலிகள், மிக முக்கியமான தாக்குதல் ஒன்றை யாழ்ப்பாணத்தில் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர் என படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவலொன்று கிடைத்தது.

அதனைப்பற்றி நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில், புலி இளைஞர்கள், இருந்திருந்து இராணுவத்தில் ஓரிருவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். இராணுவப் படையணியின் மீதோ, முகாம்கள் மீதோ தாக்குதல்களை நடத்தியிருக்கவில்லை.

ஆனாலும், பொலிஸ் நிலையங்களின் மீது தாக்குதல்களை நடத்தி, ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தனர்.

ஆனாலும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ரோந்து நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எங்களுடைய குழுவில் 15 பேர் அடங்கியிருந்தோம்.

அக்குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக இரண்டாம் லெப்டினன்ட் வாஸ் குணவர்தன இருந்தார். எனக்கு நல்ல ஞாபகத்தில் இருக்கிறது. அன்றையதினம் அவர் மிகவும் சந்தோஷமடைந்திருந்தார்.

இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர், ஆனந்தா- நாலந்தா கல்லூரிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், ஆனந்தா கல்லூரி வெற்றியீட்டியிருந்தது. “அந்த சந்தோஷத்தில் அவர் இருந்தார்”.

ரோந்து நடவடிக்கைகளுக்காக ஜீப் ஒன்றும் ட்ரக் ஒன்றும் எங்களுக்கு கிடைத்திருந்தது. அந்த ஜீப்பில் லெப்டினன்ட் வாஸ் உள்ளிட்ட ஐவர் ஏறிக்கொண்டனர். ட்ரக்கில் நான் 10ஆவது நபராக ஏறிக்கொண்டடேன்.

பலாலியிலிருந்து வழங்கப்பட்ட கட்டளைகளின் பிரகாரம், காங்கேசன்துறை வீதியால் யாழ்ப்பாணத்துக்குச் சென்று, பின்னர் நாக விஹாரைக்குச் சென்று குருநகர் முகாமில் பதிவு செய்யவேண்டும்.

அதற்காக இரவு 9 மணிக்கு புறப்பட்டோம். எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. அவ்வாறே செய்து பதிவு செய்துவிட்டுப் புறப்பட்டோம்.

கடுமையாக இருள் சூழ்ந்திருந்த யாழ்ப்பாணம்-பலாலி வீதியில், பல்கலைக்கழத்துக்கு அண்மையில், திருநெல்வேலியை அண்மித்தோம்.

திருநெல்வேலியின் தபால் பெட்டி சந்திதான், புலிகளின் இலக்காக இந்தது. அவ்விடத்தின் வீதி தற்போது இருமருங்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், 1983 ஆம் ஆண்டு இரண்டு புறங்களும் கட்டிடங்கள் மற்றும் மதில்களால் மறைக்கப்பட்டிருந்தன.

அங்கு தற்போது தொலைபேசி வசதிகள் உள்ளன. வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வீதியின் குறுக்காக கான் வெட்டப்பட்டிருந்தது. அந்த தாக்குதல்களுக்கு செல்லக்கிளி என்பவரே தலைமை தாங்கினார்.

அவருடன் கிட்டு ஐயர், விக்டர், புலேந்திரன், சந்தோஷம், அப்பையா, பாஷிட் காக்கா உள்ளிட்ட 14 பேரடங்கிய குழுவொன்று இருந்தது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கடத்தப்பட்ட எக்ஸ்ஃபோல்டர் உபகரணமே வெடிப்புச் சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டது. வீதியின் குறுக்காக வெட்டப்பட்டிருந்த கானின் ஊடாகவே, இருமருங்கிலும் இருந்த மதில்களுக்கு பின்பாக மறைந்திருந்தவர்கள் தொடர்புகளைப் பேணியிருந்தனர்.

நாங்கள் அவ்விடத்துக்கு இரவு திரும்பிய வேளையில், ரோந்து நடவடிக்கை நிறைவடைவதற்கு இன்னும் சில கிலோமீற்றர் தூரமே இருந்தது. ஆகையால், சகலரும் கவனயீனமாகவே இருந்தோம்.

இரவு 11 மணியிருக்கும் இரண்டு வாகனங்களும் ஏகநேரத்தில் வெடிக்குள் சிக்கிக்கொண்டன. ஜீப் முன்புறம் சேதமடைந்தது. பின்னால் சென்றுகொண்டிருந்த ட்ரக் வாகனமும் சிக்கிக்கொண்டது. (இங்கு விசேடமாக ஒன்றை சொல்லவேண்டும். சிலர் கூறுகின்றனர். இராணுவத்தைச் சேர்ந்த 13 பேரும் கண்ணிவெடியில் சிக்கி இறந்துவிட்டனர் என, கண்ணிவெடியில் சிக்கினால் யாரும் இறக்கமாட்டார்கள்) அவ்விடத்தில் ஜீப் சிக்கிகொண்டதை அடுத்து இருபுறங்களில் இருந்தும் துப்பாக்கிப்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வீதியின் நடுவே சிக்கிக்கொண்ட எங்களால் எதனையுமே செய்யமுடியவில்லை. துப்பாக்கிகள், ரைபிள்கள் மற்றும் அவர்களால் தயாரிக்கப்பட்ட குண்டுகளைக் கொண்டே, எம்மீது தாக்குதல்களை நடத்தினர்.

நாங்கள், வாகனங்களிலிருந்து கீழே இறங்கித்தான் பதில் தாக்குதல்களை நடத்தினோம். எங்களிடமிருந்த ஒரேயொரு தடுப்பணை வாகனங்கள் மட்டுமேயாகும். எனினும் புலிகளின் தாக்குதல்களை தாக்கப்பிடிக்கமுடியவில்லை பதில்தாக்குதல்களும் சத்தங்களும் குறைந்தன.

ஆனால், எனது இரு கால்களையும் துப்பாக்கி ரவைகள் துளைத்துச் சென்றிருந்தன. என்னுடன் இருந்த லான்ஸ் கோப்ரல் சுமதிபாலவின் வயிற்றில் துப்பாக்கி சூடு பட்டிருந்தது. துடிதுடித்தார் அவரையும் தூக்கிக்கொண்டு தோட்டத்துக்குள் சென்றுவிட்டேன்.

அங்கிருந்த புதருக்குள் அவரை படுக்கவைத்துவிட்டு சத்தம்போடவேண்டாம் என்றேன். நான் அங்கிருந்த கூரையொன்றின் மீதேறிப் பார்த்துகொண்டிருந்தேன். அப்போதுதான் பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை நிறுத்திவிட்டு, படையினருக்கு அருகில் வந்து, கத்தியால் வெட்டினர்.

சன்னங்களைக் கழற்றிகொண்டு ஆயுதங்களைச் சேகரித்துகொண்டிருந்தனர். அப்போதுதான் பார்த்தேன், என் கால்களில் இருந்து இரத்தம் பீச்சிட்டு ஓடிகொண்டிருந்தது. அங்கிருந்த வாழை மரத்திலிருந்து ஒரு பட்டியை பிய்த்து, இரத்தம் வெளியேறாத வகையில் காயத்துக்கு மேலே இறுகக்கட்டிக்கொண்டேன்.

துப்பாக்கி சத்தத்துக்கு நாய்கள் குரைத்தன. ஆனால் புலிகளுக்கு அது கணக்கே இல்லை. என் கால்களிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தது. அதன்பின்னர் எனது பூட்ஸை கழற்றி, அதிலிருந்த லேஸ்களை எடுத்து கால்களை மீண்டும் கட்டினேன்.

அந்த சொற்ப நேரத்தில் பயங்கரவாதிகள் போய்விட்டனர். சத்தம் குறைந்துவிட்டது. இன்றும் அந்தக் காட்சிகள் யாவும் எனது கண்முன்னே ஒரு திரைப்படக் காட்சிகளைப் போலவே இருக்கின்றன.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீற்றருக்கு அப்பால் இருந்த பஸ் டிப்போவுக்குச் சென்று, அங்கிருந்து முகாமுக்குத் தகவலை கொடுத்தோம். அப்போது எமது அணியைச் சேர்ந்த இரண்டொருவரும் அவ்விடத்துக்கு கடுங்காயங்களுடன் வந்துவிட்டனர். நான், புதருக்குள் மறைத்துவைத்த வீரர் தொடர்பிலும் தகவல் கொடுத்தேன்.

தகவல் கிடைத்ததும் எம்மை மீட்க மற்றுமொரு அணி வந்தது. அந்த அணி, புதருக்கு இருந்தவரையும் மீட்டது. நாங்கள் அனைவரும், யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோம். புதருக்கு மறைத்துவைத்த வீரர் அங்கு உயிரிழந்தார்.

அங்கிருந்தவர் ஒரு தமிழ் வைத்தியர், “பயப்பிடவேண்டாம் நான், உங்களை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்போகின்றேன் என்றார். நன்றாகவே கதைத்தார். அதற்குப் பின்னர் சுயநினைவை நான் இழந்துவிட்டேன். சுயநினைவு திரும்புபோது எனது நெஞ்சின் மீது யுத்த களத்திலிருந்த பதவியுயர்வு வைக்கப்பட்டிருந்தது.

அன்று மாலைதான் நானும் சுமதிபாலவும், மரணமடைந்த 13 வீரர்களின் சடலங்களை விமானத்தின் மூலம் கொழும்புக்குக் கொண்டுவந்தோம். உயிர்பிழைத்த சுமதிபால தற்போது உயிருடன் இல்லை.

சடலங்கள் யாவற்றையும் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. எனினும், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர்.

கோபத்தில் இருக்கும் மக்கள் ஏதாவது செய்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்காக, வானத்தை நோக்கி துப்பாகிப்பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களை பொலிஸார் கலைத்தனர்.

அங்கிருந்து கோபத்துடன் கலைந்து சென்றவர்கள், தமிழர்களின் கடைகளுக்குத் தீயிட்டனர். அதன்பின்னர், அதுவே இனங்களுக்கு இடையிலான மோதலாக மாறியது. (நன்றி: லங்காதீப)

ரிஷாத் தரப்பினரை எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து நீக்கிவிட்டோம் – எதிர்க்கட்சி தலைவர்

நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினை இன்று புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

தமிழர்களின் வரலாற்றை அழிக்க சிங்கள அரசாங்கம் முயற்சி -டானியல் வசந்த்

தமிழர்களின் வரலாற்றை இல்லாது செய்வதில் சிங்கள பேரினவாத அரசாங்கம் குறியாக இருக்கின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் டானியல் வசந்த் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 38வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

இந்த மண்ணை நாங்கள் பாதுகாக்காமல், இந்த மண்ணை நாங்கள் மீட்காமல் எமது இனத்தின் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நாங்கள் ஒரு போதும் கருதிவிட முடியாது.

இந்த மண்ணை மீட்பதற்காக எத்தனையோ உயிர்களை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். எதுவிதமான அடக்கு முறைகளுக்கும் அடிபணியாது, இந்த மண்ணுக்காக உண்மையிலேயே தமது இன்னுயிர்களை கொடுத்த மாபெரும் தலைவர்கள் தளபதி குட்டிமணி தலைவர் தங்கதுரை அவர்களோடு இணைந்த ஏனைய போராளிகளும், அன்று இந்த சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து இருந்தால் சிங்களவர்களின் அமைச்சர்களாகவோ அல்லது தளபதிகளாகவும் வாழ்ந்திருக்க முடியும். அவர்களது உயிர்களை இந்த மண்ணிற்காக கொடுத்திருக்கின்றார்கள் அவர்களை நினைவு கூருவது எமது கடமை.

எனவே ஒரு இனம் வாழ வேண்டும். வளர வேண்டுமென்றால் அவர்களது வரலாறு நிலைத்திருக்க வேண்டும். எமது வரலாறுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளை இந்த சிங்கள இனவாத அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

கறுப்பு ஜூலை படுகொலையின் நினைவேந்தல் சுவரொட்டிகளை நாங்கள் ஒரு புறமாக ஒட்டிச் செல்லும் பொழுது மறுபுறமாக சிங்கள இனவாதத்தின் காவல் துறையினரும் புலனாய்வுத் துறையினரும் அந்த சுவரொட்டிகளை கிழித்துக் கொண்டு வருகிறார்கள். அதற்கான காரணம் இந்த தலைவர்களின் வரலாறு எமது அடுத்த சந்ததியினருக்கு தெரிந்து விடக்கூடாது என்பது தான்.

மேலும் இன்று எமது நிலங்களை சிறுக சிறுக கைப்பற்றி எமது இருப்பை கேள்விக் குறியாக்கி கொண்டிருக்கின்றார்கள். எமது மண்ணையும் மக்களையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.

எனவே இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு எமது மண்ணையும் மக்களின் இருப்பையும் நிலை நிறுத்த பாடுபட வேண்டும் என்று ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம் என்றார்.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதற்கு உத்தரவாதமில்லை- ரெலோ தியாகராஜா நிரோஷ்

தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இனிஒருபோதும் இடம்பெறாது என்பதற்கு உத்தவாதம் இல்லை என்பதற்கு இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இடம்பெற்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவர்களை நினைவு கூர்வதும் இராணுவ மயமாக்கலின் ஊடாக தடை செய்யப்படுகின்றது.

இன்றும் கூட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வினை நாம் செய்ய முற்பட்ட வேளையிலும் பொலிஸார் எமது அலுவலகத்தை கண்காணித்தனர்.

இத்தகைய நிலைமைகள் காணப்படுகின்றமையினால், பல உறுப்பினர்கள் அச்சத்தின் நிமிர்த்தம் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

உலகம் அறிந்த கறுப்பு யூலை போன்ற இனவாதத் தாக்குதல்கள் இனியும் தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் நினைவு கூர்தல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் அனுஸ்டிக்கின்றோம்.

இதேவேளை யுத்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரனையோடு தமிழ் மக்கள் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும் எங்களது தலைவர்கள் சிறையில் கண்கள் தோட்டப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இழிக்கப்பட்டன. இவைகள் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் ஆகும்.

இவை போன்று தமிழர் வரலாற்றில் ஏராளமான கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளுக்கு 38 வருடங்கள் கடந்தபோதும் எமக்கு நீதி கிடைக்கவில்லை.

எதிர்வரும் காலங்களில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறாது என்பதற்கும் உத்தரவாதமில்லை என்பதனை இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? ரெலோ பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா கேள்வி

கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? ஏன தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடாத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

படுகொலைக்குள்ளான எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத வண்ணம் இந்த அரசானது எனக்கும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்கும் தடை விதித்திருக்கின்றது. 1983ம் ஆண்டு படுகொலைக்குப் பின்பு தொடர்ச்சியாக நாங்கள் வடக்கு கிழக்கிலே எமது தவைர்களுக்கான அஞ்சலியைச் செலுத்திவருகின்ற வேளையில் இம்முறை இந்த அரசினால் மாத்திரம் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

எங்களுடைய தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது இலங்கையில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. எமது கட்சியின் மூத்த தலைவர்கள் தான் தங்கதுரை, குட்டிமணி அவர்கள். எமது தலைவர்களை அஞ்சலி செலுத்துவதற்கு எமது கட்சிக்குத் தடை விதித்திருப்பதென்பது இந்த அரசின் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான செற்பாடாகவே இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழினத்திற்காகப் போராடி சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்டவர்கள். அந்த படுகொலை இடம்பெறுகின்ற போது அப்போது ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி கூட அவர்களின் ஆட்சிக் காலத்தில் நினைவுகூரல்களை மேற்கொள்வதற்கு அனுமதித்திருந்ததது. ஆனால் இந்த அரசாங்கம் இனவாதத்தை மாத்திரமே கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்?

தமிழ் மக்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனத்தையும் தரப்போவதில்லை.

1983ம் ஆண்டு எமது தலைவர்களின் படுகொலையினுடாகத் தான் உலகத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு இலங்கையில் தமிழர்கள் இருக்கின்றார்கள், இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. ஏன் தற்போது அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா கூட இந்தப் படுகொலையில் இருந்து தப்பித்தவர்தான். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இருந்து அவரும் அந்த நிகழ்வுகளின் தடைக்குத் துணை போகின்றார்.

எனவே இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எங்கள் இனத்தின் மீதும் எங்கள் மக்கள் மீதும் துவேசத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே நாங்கள் ஒற்றுமையாக இருந்து எமது இனத்தின் விடுதலைக்காகவும், எமது இனத்திற்காகப் போராடியவர்களுக்காகவும் அஞ்சலிக்க வேண்டும். இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளுக்கு அரசால் விதிக்கப்படும் தடைகளை தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இலங்கை அழிவின் பாதைக்கு செல்லாமல் இருப்பது அரசாங்கத்தின் செயல்பாட்டில்தான் உள்ளது- ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

இந்த நாடு சுபீட்சமாக வேண்டுமா அல்லது கடந்த காலங்களைப் போல அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டுமா என்பது இந்த அரசாங்கத்தின் கையில் தான் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடாத்துவதற்கு காவல்துறையினரால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜுலை 23 தொடக்கம் 27ம் திகதி வரை கறுப்பு ஜுலை என்பது இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் அகல முடியாத, அகற்ற முடியாத ஒரு கரிநாளாக பதிந்து கிடக்கின்றது. இந்த நாளை தமிழின அழிப்பின் உச்ச கட்டமாகவே நாங்கள் பார்ப்பதோடு, கறுப்பு ஜுலையாக இதனை நாங்கள் நினைவு கூருகின்றோம்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடங்கியது. பல்லாயிரக் கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் பூர்வீக இடமாகிய வடக்கு கிழக்கிற்கு பாதையூடாக வரமுடியாமல் கப்பல் மூலமாக மக்களை அனுப்பிய நாட்கள் அது

அதன் பின்னர் போராட்டத்தைத் தொடங்கிய தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணியுடன் அரசியற் கைதிகள் பலர் உட்பட 53 பேர் ஜுலை 25 மற்றும் 27ம் திகதிகளில் வெலிக்கடை சிறையிலே இலங்கை பாதுகாப்புப் படையின் ஆதரவு மற்றும் அனுசரணையுடன் ஏனைய கைதிகளினால் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தனக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் போது என்னைத் துக்கிலிடுவதன் மூலம் “ஒரு குட்டிமணியைத் தான் அழிப்பீர்கள் இதன் மூலம் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் போராட்டத்திற்கு வருவார்கள் அவர்கள் மூலம் தமிழீழம் மலரும் அதனைப் பார்ப்பதற்கு என் கண்கள் இருக்க வேண்டும். எனவே என் கண்களைப் பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்குத் தானம் செய்து விடுங்கள். அந்தக் கண்கள் மூலமாக மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்” என்று குட்டிமணி தெரிவித்தார்.

அந்தக் கருத்திற்காக குட்டிமணியின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு சப்பாத்துக் கால்களில் இட்டு நசுக்ககப்பட்ட வரலாறுகளும் அந்தச் சிறைச்சாலையிலே நடைபெற்றன.

இந்தத் தினத்தை தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் கறுப்பு ஜுலை தினமாகக கடந்த 37 வருடங்களாக நினைவு கூர்ந்து இந்த ஆண்டு 38வது ஆண்டாக நினைவு கூருகின்றோம். இந்த 37 வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த ஆண்டிலே மேலோங்கியிருக்கின்றது.

இந்த நினைவு தினத்தை நினைவு கூறக்கூடாது என்று அவர்கள் நினைவான பதாதைகள் கிழித்தெறியப்படுவது மாத்திரமல்லாமல். நீதி மன்றத் தடையுத்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலே எனக்கும், எமது கட்சியின் உபதலைவரும் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா அவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

1983ம் ஆண்டு நடைபெற்ற ஜுலைக் கலவர இன அழிப்பும், வெலிக்கடை சிறைச்சாலையினுள்ளே நடந்த படுகொலைகளும் உலகம் அறிந்த உண்மை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசு இந்த நினைவு தினத்தை நினைவுகூரக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றார்கள்.

1983ம் ஆண்டு இவர்கள் சார்ந்த கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற போர்ப்பிரகடணமானது இன்னொரு நாட்டுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தைப் போன்று தன் நாட்டுக்குள்ளேயே உரிமைக்காகப் போராடும் மக்களுக்கெதிராகச் செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.

அந்த அரசு 1983ம் ஆண்டிற்குப் பின்பு பல தடவைகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கூட இந்தக் கறுப்பு ஜுலை தினத்தை நினைவுகூருவதற்கு எத்தடையும் விதிக்கவில்லை.

அதற்கு மேலாக சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது கறுப்பு ஜுலைப் படுகொலைக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டிருந்தார். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நட்டஈடும் வழங்கியிருந்தார். அவ்வாறு கடந்த கால அரசாங்கங்கள் மன்னிப்புக் கேட்டதும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க காலத்தில் இதற்குத் தடை விதிக்காமல் இருந்ததும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாலும், இந்த நினைவுகூரல்கள் நியாயமானது என அவர்கள் எண்ணியதாலுமேயாகும்.

ஆனால் இன்று இந்த கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசு தன்னுடைய கட்சி சார்ந்த அரசு அந்த நேரம் இல்லாதிருந்த போதிலும் தற்போது கடந்த காலங்களில் நடந்த இவ்வாறான சம்பவங்களை நினைவுரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

அதாவது கடந்த காலங்களில் நாங்கள் செய்த அநியாயங்களை, அட்டூழியங்களை, படுகொலைகளை, சொத்து உட்பட பல அழிப்புகளையும் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட வேண்டும் என்று கூறுவது போலவே எமது நினைவுகளுக்கான தடைகளை விதித்துக் கொண்டிருக்கினள்றார்கள். இதற்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார்கள்.

நீங்கள் இன்று சீனாவில் எதிர்க்கட்சி இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரல் இல்லாமல் அரசு செய்வதை எதிர்த்துக் கதைக்க முடியாமல் ஒரு ஆட்சி இருப்பதைப் போன்று இந்த நாட்டிலும் இராணுவ ஆட்சியை, இராணுவ மயமாக்கும் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றீர்கள் என்பதைத் தான் நாங்கள் இதன் மூலம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

எது எவ்வாறிருந்தாலும் கடந்த காலங்களிலே நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தனங்கள், 2009 மே மாதம் செய்த இனஅழிப்புகள், மாறி மாறி வந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட 1957 கலவரம், 1978 கலவரம், உக்கிரமடைந்த 1983ல் நடைபெற்ற இன அழிப்பு போன்றனவற்றை நாங்கள் மறந்துவிடப் போவதில்லை என்பதோடு 1983ம் ஆண்டு செய்த இனஅழிப்புதான் தமிழ் மக்கள் மத்தியிலே, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவர்களைப் போராட்டத்திற்கு வீறுகொண்டு எழ வைத்தது என்பதை உணர வேண்டும்.

அவ்வாறான ஒரு நிலைமையை மீண்டும் இந்த அரசு ஏற்படுத்த முனையக் கூடாது.

இந்த நாடு சுபீட்சமாக வேண்டுமா அல்லது கடந்த காலங்களைப் போல அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டுமா என்பது இந்த அரசாங்கத்தின் கையில் தான் இருக்கின்றது” என்றார்.

Posted in Uncategorized

சூரிச் மாநிலத்தில் தமிழ்தேசிய வீரர்கள் 38 நினைவு தினம்

25.07.2021 ஞாயிறு சுவிஸ்லாந்து சூரிச் மாநிலத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், சுவிஸ் கிளையால் அனுஷ்டிக்கப்பட்டது.

1983 ஜூலையில் வெலிக்கடை படுகொலை செய்யப்பட்ட ஸ்தாபன தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் நடேசுதாசன், தேவன், சிவபாதம் மாஸ்டர். குமார குலசிங்கம்,
மற்றும் 53 அரசியல் கைதிகளின் படுகொலையும், அதன்பின் ஏற்பட்ட இனக் கலவரத்தில் கொல்லப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செய்யும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

சுவிஸ் கிளையின் செயலாளர் விமல் அவர்கள் அஞ்சலி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

எம் கிளையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சிவா அவர்களின் சிறிய அஞ்சலி உரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.

மேலும் ,வருகை தந்த அனைவருக்கும், மற்றும் தொலைபேசி வாயிலாகவும், இணையம் வாயிலாக ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறியும்,
அத்துடன் எமது ஸ்தாபன தலைவர்கள் பற்றியும் அவர்கள் வழிகாட்டலில் எமது பாதை பயணங்கள் பற்றியும் ,சுவிஸ் கிளையின் அமைப்பாளர் ஞானம் அவர்கள் நன்றி உரையுடன் கூடிய சிற் உரையை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் இணையம் வழியாகவும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது சிறப்பு.

நன்றி
சுவிஸ் கிளை நிர்வாகம்.