பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் – இலங்கை மத்திய வங்கி

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

பொருளாதாரத்தின் நிலை, சவால்கள் மற்றும் முன்னோக்கு மத்திய வங்கியின் 2022 வருடாந்த அறிக்கை என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊகங்கள் இருந்தாலும், நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய வங்கி எப்போதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஒருவித உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் இருந்தாலும், பொதுமக்களின் வைப்புத்தொகையைப் பாதுகாப்பது மற்றும் வங்கி அமைப்பின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி விகிதங்கள், குறிப்பாக சந்தை வட்டி விகிதங்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்க புள்ளிகளுக்குக் குறையும் என்றும், குறிப்பாக முழுமையான கடன் மறுசீரமைப்பு செயல்முறை அறிவிக்கப்பட்டவுடன் வட்டி விகிதங்களும் வேகமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் விடுதலை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் நேற்று கைது செய்தனர். தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் கடந்த மார்ச் 26ஆம் திகதி உடைத்தெறியப்பட்டன. அங்கு கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நீதிமன்ற அனுமதியுடன் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மீள் பிரதிஷ்டையின் போது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை ஆலய பூசாரியை யும் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்

இவர்கள் இருவரும் நேற்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும், இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்குக்கு முரணாக அமையும் என்று நீதிவான் சுட்டிக் காட்டி அவர்களை விடுதலை செய்தார். எனினும், ஆலயத்தில் கட்டுமானங்களையோ அல்லது மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன், பூசை வழிபாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அனுமதித்தார்.

இதேநேரம், ஆலயத்தின் இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டத்தரணி தி. திருவருள் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

“வெடுக்குநாறி எங்கள் சொத்து” வவுனியாவில் நேற்று போராட்டம்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கைதை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

வவுனியா மருத்துவமனை சுற்று வட்ட வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று மாலை இந்தப் போராட் டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “தமிழர்களின் தொன்மையை அழிக்காதே”, “வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி”, “நீதியில்லா நாட்டில் நீதிமன்றம் எதற்கு”, “கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்”, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஓர் அங்கமான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினமும் (10.05.2023) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , கிளிநொச்சி கந்த சுவாமி ஆலய முன்றலில் இன்றைய தினமும் (10-05-2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் முன்னதாக வர்த்தகர்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் பிடியரிசி பெற்றுக் குறித்த ஆலய முன்றலில் கஞ்சி காய்ச்சப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பு கஞ்சி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (10.05.2023) முன்னெடுத்துள்ளனனர்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சியினை நினைவுப்படுத்த வேண்டியதேவை குறித்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மக்களுக்குக் கஞ்சி வழங்கிய ஒருவர் சாட்சியமாக வழங்கியுள்ளதை நினைவு படுத்தியுள்ளார்.

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றாலே ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம் – ஹர்ஷ டி சில்வா

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி, சலுகை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதன் பிறகு எந்த நாடுகளுக்கு இதனை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். தற்போது ஆசியாவில் இலங்கை. பாகிஸ்தான் உட்பட 4 நாடுகளுக்கே இந்த ஜீ.எஸ்.பி சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜீ.எஸ்.பி. சலுகையைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திடம் 27 இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

அந்த இணக்கப்பாடுகளில் பிரதான விடயமாக இருப்பது, மனித உரிமை, தொழிலாளர் உரிமை, நல்லாட்சி மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பானதாகும். அதில் பிரதானமாக இருப்பது தேர்தல் உரிமையாகும்.

தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையை மீறும் பாரிய விடயமாகக் கருதப்படுகிறது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த விடயம்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். அதனால் அரசாங்கம் எந்தத் தீர்மானத்தை மேற்கொண்டாலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. சலுகை மீண்டும் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பல, மக்களுக்கு அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுகின்றன.

மக்களின் உள்ளத்தில் இருக்கும் விடயங்களை வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறானதொரு செயலை பயங்கரவாத செயல் எனத் தெரிவித்து, அவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பிரப்பிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிப்பதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓமான் முதலீட்டாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது தனது தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லப்போகிறார் எனத் தெரியவருகிறது.

இவ்வாறு இருக்கையில் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் 500 இறகும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்றாலும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. கட்டளையாளர் போல் நாட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுத்தால் ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்கப்பாவேதில்லை.

2010 இலும் எமது ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமலாக்கிக்கொண்டது இந்த அரசாங்கமாகும். ஜீ.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனால் 630 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் என்றும் எமது வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் ஜீ.எஸ்.பி சலுகையை பாதுகாத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – என்றார்.

பெளத்த சின்னங்கள் மீது சிவலிங்கங்கள்; சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு – சரத் வீரசேகர

நாட்டில் உண்மையில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் ஆராய வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, பொறுமையை சோதிக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்  அட்மிரல் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதற்கு வரலாற்று ரீதியில் பல சான்றுகள் உள்ளன. பௌத்த தொல்பொருள் சின்னங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. ஆகவே பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கையில் வாழும் அனைவருக்கும் உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த மதத்துக்கும், பௌத்த புராதன தனித்துவத்துக்கும் எதிராக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். பௌத்த மதத்தை அழிக்கிறார்கள். சிங்களவர்கள் பிற மதங்களை அழிக்கவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்களை  பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அழிக்கிறார்கள்.

பௌத்த மத வழிபாடுகளுக்கு பல்வேறு வழிகளில் தடையேற்படுத்துகிறார்கள். வெடுக்குநாறி பகுதியில் பௌத்த புராதான சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் உட்பட விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் கொழும்பில்  இந்துக்கள் மத வழிபாடுகளில்  ஈடுபட்டார்கள், தேர் இழுத்தார்கள், சிங்கள பௌத்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது.

தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ஆராய வேண்டும். இல்லாத பிரச்சினைகளை தோற்றுவித்து அதனை இனப்பிரச்சினை என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஆகவே பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதிய ஒத்துழைப்பினை வழங்குமாறு கனேடிய அதிகாரியிடம் ஜெஹான் பெரேரா கோரிக்கை

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் எதிர்வருங்காலங்களில் சிறப்பாக செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (08) கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தற்சமயம் கனேடிய அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைன் ஜெஹான் பெரேராவிடம் கேட்டறிந்துகொண்டார்.

அதற்குப் பதிலளித்த கலாநிதி ஜெஹான் பெரேரா தற்போது இலங்கையில் இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன பற்றி எடுத்துரைத்ததுடன், அந்த அலுவலகங்கள் தற்போது உரியவாறு முழுமையாக இயங்காத போதிலும், அவை உண்மையைக் கண்டறிவதை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சிறந்த கட்டமைப்புக்கள் என்று சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வருங்காலத்தில் அக்கட்டமைப்புக்கள் சிறப்பானமுறையில் இயங்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு ஆதரவளிக்குமாறும் அவசியமான உதவிகளை வழங்குமாறும் ஜெஹான் பெரேரா நவீதா ஹுஸைனிடம் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று இலங்கையைப் பொறுத்தமட்டில் மொழிசார் கற்கைநெறிகளுக்கும், பயிற்சி வழங்கலுக்கும் கனேடிய அரசாங்கம் முன்னுரிமையளித்துவரும் நிலையில், அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்தும் அவதானம் செலுத்துமாறு கனேடியப் பிரதிநிதியிடம் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்தார்.

மேலும் மாகாணசபைகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும், அதற்கு அவசியமான கட்டமைப்புக்களை நிறுவுமாறும் அவர் கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

மின்சாரதுறை மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

வலு சக்தி துறை மற்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்புக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் அதன் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திங்கட்கிழமை (08) அமைச்சில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் ஆலோசகர் அரிந்தம் கோஷ் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 8 வாரங்களுக்குள் மறுசீரமைப்புக்களுக்கான வரிபடத்தை தயாரித்து , அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தால் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின் தினம் தினம் திட்டமிட்ட பாரிய இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக பயன்படுத்தவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு தாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் வேறுபாடுகளை துறந்து தமிழினமாக தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்