கஜேந்திரகுமார் எம்.பி பிணையில் விடுதலை

கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கஜேந்திரகுமார் எம்.பி இன்று காலை கொழும்பில் அவரது வீட்டில் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை 5 மணியளவில் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணியில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடமையில் இருந்த பொலிஸாரைத் தாக்கி, அவர்களைக் கடமையைச் செய்யவிடாது நடந்துகொண்டார் என்பதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கும் வரையில் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வாசித்துக் காட்டியிருந்தனர். அதன் பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பொலிஸாரினால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமார் எம்.பிக்கு அழைப்பு

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளையதினம் ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்புக்கு செல்லும் நிலையில் இந்த அழைப்பு பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்க உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் கலந்துரையாடிய பின்னர் அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவை எடுப்பேன் என பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சபாநாயகரை தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்தி ஒன்றினை அவருக்கு அனுப்பியுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் இச்சம்பவம் தொடர்பாக பிரதி சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டார் என்றும் கூறியுள்ளார்.

முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சற்குணதேவியின் வீட்டினை சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்ட காரணத்தை தெரிவிக்காமல் வாகனத்தில் ஏற்றிச் சென்ற பொலிஸார் அவரை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் சற்குணதேவியின் வீட்டிற்கு சென்ற இனந்தெரியாதவர்கள் அவரை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் என கூறி அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Posted in Uncategorized

கஜேந்திரகுமார் எம்.பியை துப்பாக்கியால் சுட முயற்சியா?

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் குறிவைத்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருதங்கேணி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நடத்திய கூட்டமொன்றை கண்காணிப்பதற்காக சிவில் உடையில் சென்ற புலனாய்வாளர்களுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது.

சிவில் உடையில் வந்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட புலனாய்வாளர்களை, அடையாளம் காணும் முயற்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்ட போது, அவர்களை தாக்கி விட்டு, தப்பியோட புலனாய்வாளர்கள் முயன்றதால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.

இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்களுடன் தமிழ் பக்கம் பேசியபோது, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு-

மருதங்கேணி பொது விளையாட்டரங்கில் கிரிக்கெட் கிளப் ஒன்றின் கடினப்பந்து அணி உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த போது, இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, அருகிலுள்ள மரத்தின் கீழ் நின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொலிஸ் பாதுகாப்பை ஏற்காதவர். அவரது பாதுகாப்பில் எமது கட்சி உறுப்பினர்கள் அக்கறையுடன் இருப்பார்கள்.

எமக்கு அருகிலுள்ள மரத்தின் கீழ் நின்ற இருவரும் நடத்தையில் சந்தேகம் தோன்றியது. அவர்கள் இடுப்பில் பிஸ்டல் வைத்திருப்பதை போல தோன்றியது.

அதனால் அவர்களிடம் சென்று, இங்கு ஏன் நிற்கிறீர்கள் என கேட்டோம்.

அருகில் பரீட்சை நிலையம் உள்ளது. எமக்கு முறைப்பாடு கிடைத்தது. அதனால் பார்வையிட வந்தோம் என்றார்கள்.

பரீட்சை நிலையத்தை பார்வையிட இங்கு வந்து நிற்கும் நீங்கள் யார் என்றோம்.

தாம் சிஐடியினர் என்றார்.

அடையாளத்தை காட்டுமாறு கேட்டோம். அப்போது கஜேந்திரகுமார் எம்.பியும் அங்கு வந்து அடையாளத்தை காட்டுமாறு கேட்டார். ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை பிடிக்க முயன்ற போது கஜேந்திரகுமார் எம்.பியை தாக்கிவிட்டு தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடிக்க முயன்ற யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளர் தீபன் திலீசனை ஹெல்மெட்டினால் தாக்கிவிட்டு தப்பியோடினார்.

மற்றையவர் பிடிக்கப்பட்டார்.

இதன்போது, அருகிலுள்ள பாடசாலையில் இருந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்தனர். அதில் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கெட்ட வார்த்தைகள் பேசி, தனது இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை உருவி, கஜேந்திரகுமாரை சுடுவதை போல மிரட்டினார் என்றார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்

விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள்.

அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள் அரசியல்வாதிகளும் கட்சித் தொண்டர்களும்.

அதே நாளில் இரவு யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு தொகையாக வந்த தமிழ் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே இரவு குடாநாட்டின் மற்றொரு தொங்கலில் வல்வெட்டித் துறையில் நடந்த இந்திர விழாவில் பங்குபற்ற ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். அங்கே இசை நிகழ்ச்சிகளும் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வெசாக் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது? சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் திரண்ட மக்களை விட சிங்கள பௌத்த விழா ஒன்றில் பெருந்திரளான தமிழ்மக்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

அதைவிடப் பெருந்தொகையானவர்கள் ஒரு ஊரின் இந்திர விழாவில் பங்கு பற்றியிருக்கிறார்கள். அந்த ஊர் எதுவென்று பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிறந்த ஊரும், ஆயுதப் போராட்டத்தில் அதிக தொகை தியாகிகளைக் கொடுத்த ஊரும் ஆகும். இதுதான் யாழ்ப்பாணத்தின் ஆகப்பிந்திய மூன்று காட்சிகள்.

தையிட்டி விகாரைக்கு எதிராக குறைந்தளவு மக்களே திரண்டமைக்கு என்ன காரணம்? அந்த போராட்டத்திற்கான அழைப்பை தமிழ்த் தேசிய பேரவை என்ற ஒரு அமைப்பு விடுத்திருந்தது.

அதை ஒரு பொதுக் கட்டமைப்பு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைக்கின்றது. அந்தப் பெயரை முன்னணி ஏற்கனவே பயன்படுத்தியுமிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து அந்த அமைப்பை வித்தியாசப்படுத்துவதற்காக பெயரில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கட்டமைப்பின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் அங்கே திரண்டு வரவில்லை. அதற்கு யார் பொறுப்பு? அழைத்த கட்சி பொறுப்பா? அல்லது வராத மக்கள் பொறுப்பா?

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். ஒரு கட்சி அழைத்த ஆர்ப்பாட்டங்களை விடவும், சிவில் சமூகங்களின் தலைமையில் பல கட்சிகள் அழைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு சனம் திரள்கிறது.

பொங்கு தமிழ், எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி என்று உதாரணங்களைக் கூறலாம்.

ஒரு கட்சி அழைக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தொகையான மக்கள் வருவது என்றால், அந்தக் கட்சிக்கு கிராம மட்டத்தில் பரவலான கட்டமைப்புகள் இருக்க வேண்டும். முன்னணியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை.

மிகக் குறுகிய கால அழைப்புக்குள் அவ்வளவு தொகை மக்களைத் திரட்ட முடியாது. அப்படித் திரட்டுவதென்றால் அந்தப் போராட்டத்திற்கான காரணம் மக்கள் மத்தியில் அதிகம் நொதிக்க வேண்டும். முன்னணி விவகாரத்தை பொலிஸாரோடு ஒரு மோதலாக மாற்றியது.

எனினும் மக்கள் மத்தியில் நொதிப்பு எதுவும் நிகழவில்லை. அதனால் மக்களும் அங்கே பெரியளவில் போகவில்லை. போராட்டத்தைத் தொடங்கிய அன்றிரவு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் மற்றொருவருமாக குறைந்த தொகையினர்தான் அங்கே காணப்பட்டார்கள். அடுத்த நாளும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே அங்கே காணப்பட்டார்கள்.

அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிரான பெரும்பாலான போராட்டங்களில் குறைந்தளவு மக்கள்தான் கலந்து கொள்கிறார்கள்.

இதில் வவுனியாவில் நடந்த ஊர்வலத்தில் ஒப்பீட்டளவில் கூடுதலான தொகையினர் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குபடுத்திய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியிலும் பெரிய அளவில் மக்கள் பங்களிக்கவில்லை.

அந்தப் பேரணியின் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான அமைப்பே காணப்பட்டது. அண்மை வாரங்களாக நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்கள் குறியீட்டு வகைப்பட்ட சிறு திரள் போராட்டங்கள்தான். அல்லது ஒரு நாள் கடையடைப்புகள்தான்.

அரசாங்கத்துக்கு நோகக்கூடிய போராட்டங்கள் அவையல்ல. உலக சமூகத்தை தம்மை நோக்கி ஈர்க்கத்தக்க சக்தி அவற்றுக்கு குறைவு. தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை  வெளிக் கொண்டு வந்தது மட்டும்தான் அவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

தையிட்டியிலும் அதே நிலைமைதான். தையிட்டி விகாரை விவகாரமானது முன்னணி தலையிட்ட பின் சூடு பிடித்தது. ஆனாலும் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்ல முன்னணியால் முடியவில்லை. அது ஏறக்குறைய ஒரு கட்சிப் போராட்டம்தான்.

போராட்டம் தொடங்கிய மறு நாள் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கே காணப்பட்டார்கள். ஆனால் அது “பிரசன்ற் மார்க்” பண்ணும் வேலை தான். அது ஒரு முழுமையான பங்களிப்பு அல்ல. அதன் பின் நடந்த போராட்டங்களில் ஏனைய கட்சிகள் முழுமனதோடு ஒத்துழைக்கவில்லை.

அவ்வாறு ஒத்துழைப்பு நல்கத்தக்க நல்லுறவை முன்னணி ஏனைய கட்சிகளோடு பேணவும் இல்லை. தன்னை ஒரு தூய தேசியவாத கட்சியாகக் காட்டிக் கொள்ளும் முன்னணி, ஏனைய கட்சிகளை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள், வெளிநாடுகளின் கைக்கூலிகள், ஏஜென்ட்கள் போன்ற வார்த்தைகளின் மூலம் விமர்சித்து வருகிறது.

அதனால் ஏனைய கட்சிகளோடு இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் அக்கட்சிக்கு நடைமுறையில் வரையறைகள் உண்டு.

அதற்காக ஏனைய கட்சிகள் பரிசுத்தம் என்றில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்த கடையடைப்பில் ஏனைய ஏழு கட்சிகள் ஒன்றாகத் திரண்டன.

ஆனால் அந்தத் திரட்சி விசுவாசமானது அல்ல. ஏனென்றால் தமிழரசுக் கட்சி தனது முன்னாள் பங்காளிக் கட்சிகளை ஒட்டுக்குழுக்கள் என்றும், போதைப்பொருள் வித்தவர்கள் என்றும், ராணுவச் சோதனைச் சாவடிகளில் முகமூடி அணிந்து தலையாட்டியவர்கள் என்றும்,கா ட்டிக் கொடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தது. எனினும் தேவை என்று வந்த பொழுது அந்தக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக திரண்டு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

ஆனால் முன்னணி அவ்வாறான உறவுகளுக்குத் தயாரில்லை. எனவே ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அல்லது எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்றால் ஏனைய கட்சிகளை நம்பி முன்னணி அதில் களமிறங்க முடியாது.

தமிழ் சிவில் சமூக மையத்தைத் தவிர ஏனைய, குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் முன்னணிக்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக பொதுக் கட்டமைப்புகளைக் குறித்து அண்மையில் ஓர் ஊடகத்துக்கு கஜேந்திரகுமார் வழங்கிய பேட்டியில் அவர் பெரும்பாலான பொதுக் கட்டமைப்புகளை நிராகரித்திருந்தார்.

அவற்றை புலம்பெயர்ந்த தமிழர்கள் இயக்குகிறார்கள், வெளிநாட்டு உளவு அமைப்புகள் இயக்குகின்றன என்ற பொருள் தரும் விதத்தில் அவருடைய பேட்டி அமைந்திருந்தது.

அதன்படி பொதுக்கட்டமைப்புகளையும் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னரும், அன்னை பூபதியின் நினைவிடத்திலும் பொதுக்கட்டமைப்போடு முன்னணி முரண்பட்டது. இந்த மோதல்கள் வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் இடம்பெற வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏற்கனவே ஒரு பொதுக் கட்டமைப்பு அந்த நினைவு கூர்தல் தொடர்பாக அறிக்கை விட்டிருக்கிறது.

இவ்வாறு நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்புகளோடு முரண்படும் முன்னணியானது, எதிர்காலத்தில் பொதுக் கட்டமைப்புகளோடு இணைந்து மக்களை அணி திரட்டும் வாய்ப்புகளும் மங்கலாகவே தெரிகின்றன.

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் மக்களைத் திரட்ட முடியாமல் போனமை என்பது தனிய முன்னணியின் தோல்வி மட்டுமல்ல. அந்த விகாரை விடயத்தில் தொடக்கத்தில் இருந்தே மெத்தனமாக இருந்த, அல்லது வேறு உள்நோக்கங்களோடு அதை கண்டும்காணாமலும் விட்ட பிரதேச சபைத் தவிசாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.

அப்பொழுது கூட்டமைப்பு இப்பொழுது தமிழரசுக் கட்சி. இதில் தமிழரசு கட்சிக்கும் குற்றப் பொறுப்பு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக விகாரை கட்டப்பட்டு வருவது எல்லாருக்குமே தெரியும். இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பிரதேச சபை தவிசாளர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்பது மேலதிக தகவல்.

விகாரை படிப்படியாக கட்டப்பட்டு 100 அடிவரை உயர்ந்த பின்தான் எல்லாருடைய கண்களுக்கும் தெரிந்தது என்பதே தமிழரசிகளின் கையலாகாத்தனம் தான்.

முன்னணி அதைத் தன் கையில் எடுத்து போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியாமல் போனதும் அக்கட்சியின் பலவீனம்தான். தையிட்டி விகாரை தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் மீதுந்தான் கட்டப்பட்டிருக்கிறது.

யாழ்.மக்களை முன்னணியினர் இனியும் ஏமாற்ற முடியாது; கட்டி முடிக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக ஏமாற்று நாடகம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

யாழ்ப்பாண தமிழ் மக்களை இனியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏமாற்ற முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37 வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மிகப்பெரிய ஒரு கதவடைப்பு போராட்டத்தினை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடாத்தினோம். பாரிய போராட்டமாக தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு முதற்தடவையாக இங்கு நடாத்திக் காட்டி இருந்தோம்.

எதற்காக அதனை செய்திருந்தோம் என்பதை அறியாத ஒரு தரப்பு- நான் நேரடியாகவே கூறுகின்றேன்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த கர்த்தாலை தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நடாத்திய கர்த்தாலை எள்ளி நகையாடினார்கள்.

தமிழ் மக்களின் உணர்வினை எள்ளி நகையாடினார்கள். அதனுடைய விளைவு இன்று தெரிகிறது.

தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையினை இடித்து விட போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஏன் இந்த கர்த்தாலை நடாத்தினோம் என்றால் அண்மையில் நாவற்குழி ஜம்புகோள பட்டினம், குருந்தூர் மலையில் விகாரைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. அத்தோடு கலாச்சார சின்னங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் இருப்பு அழித்தொழிக்கப்படுவதற்கு எதிராக எமது கண்டனத்தினை தென்னிலங்கைக்கு பதிவு செய்வதற்குமாக சர்வதேச அரங்கிற்கும் வெளிப்படுத்துவதற்குமாக ஆரம்ப கட்டமாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அது பரிபூரண வெற்றியாக அமைந்திருந்தது.

அதனை எள்ளி நகையாடி அந்த கர்த்தாலுக்கு அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தவர்கள் இன்று தையிட்டியிலே கட்டி முடித்து கலசம் வைக்கப்பட்டிருக்கும் விகாரையினை அகற்றுவற்கு நாங்கள் போராடுகின்றோம் என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாளை சாவகச்சேரியில், நெடுங்கேணியில் விகாரை வரும். எல்லா இடங்களிலும் வரும். இவ்வாறு தனித்தனியே போராட போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்த போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி.

அதற்காகத்தான் நாங்கள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து கர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் போராட்டத்தினை தையிட்டியில் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும்.

சரியான தலைமையினை தெரிவு செய்யவேண்டும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்.

மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபடுவோருக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம் எம்.பி

தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக கூட்டமைப்பு மற்ற கட்சிகளை விவாதத்திற்கு அழைத்தமை வரவேற்கத்தக்கது- கஜேந்திரகுமார் –

சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இலங்கை நிலைமை தொடர்பாக இந்திய பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.

அப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் பின்வருமாறு:

நவம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் தமிழ்க் கட்சிகளை இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அழைத்தார். அத்தோடு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள தீவு நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் அவர்களின் (தமிழர்களின்) நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்தார். எனினும் இந்தக் கூட்டத்திற்கான திகதியை இன்னும் பெறாத நிலையில் தமிழ் அரசியல்வாதிகள், இந்த உத்தேச சந்திப்புத் தொடர்பில் மிகவும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இலங்கைத் தலைவர்கள் பலர் கடந்த காலங்களில் தீவின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் அவை எவையும் நிறைவேற்றப்படாமல் தவறாமல் தோல்வியில் முடிந்தன.

மிக சமீபத்தில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் ஆட்சியில் இருந்த மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம், புதிய அரசமைப்பை உருவாக்க முயற்சித்தது. ஆனால், பணியை முடிக்கவில்லை. இது அவர்களின் அரசை ஆதரித்த தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்துஇ நமது 75 ஆவது சுதந்திர தினத்தில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு முனைப்புடன் முயற்சிப்போம். நம் நாட்டின் விஷயங்களில் மற்றவர்கள் தலையிடத் தேவையில்லை. எங்களுடைய பிரச்சினைகளை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மிகப்பெரிய குழுவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது அழைப்பை வரவேற்றதுடன்இ முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் பல தசாப்தங்களாக பல்வேறு சிங்களத் தலைவர்களுடன் அரசமைப்புத் தீர்வொன்றை மேற்கொள்ள முயற்சித்து வரும் நிலையில், ஜனாதிபதியின் உறுதிமொழி இம்முறை உண்மையானதாக இருக்கும் என நம்புகிறார் எனத் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி அரசமைப்பை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கைத் தலைமை தயாராக வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு கூட்டாட்சி அமைப்பில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை அடைவதற்கான நோக்கத்தை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்வதால் இந்த வாரம் கலந்துரையாடலுக்கு அவர்களை (ஏனைய கட்சிகளை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி தமிழ்க் கட்சிகளின் கூட்டம் நடைபெறவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீவிரத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பும் அதேவேளையில் நாங்கள் அதை (தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தை) நடத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.

நவம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற தேநீர் விருந்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மேற்படி சந்திப்பு (தமிழ்க் கட்சிகளுடனான) சந்திப்புக் குறித்துத் தாம் நேரில் கேட்டார் என சுமந்திரன் கூறினார்.

ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் வருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார். அவர் அறிவித்த இந்த வாரச் சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது வேண்டுமானால் இந்த வாரம் சந்திக்கலாம் என்றார். இது அவரது பதில்கள் எதையும் தீவிரமாக செய்ய தீவிரத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது என்றார் சுமந்திரன் எம்.பி.

அதிக அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வின் தேவை இலங்கையில் இந்திய ஈடுபாட்டின் மையமாகவும் உள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் அமர்வில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான தமது கடப்பாடுகள் குறித்து இலங்கையினால் அளக்கப்படக் கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து கவலையுடன் இந்திய பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகள் அதன் போதாமைகளை அடிக்கடி சுட்டிக்காட்டினாலும், இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதேவேளையில்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தலைமை தாங்கும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டியை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்துக்கு அண்மையில் அழைத்தது வரவேற்கத்தக்கது என்றார்.

அவரது பார்வையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தைக் கூட்டினாலும், சமஷ்டி அரசமைப்பின் அடிப்படையில் விவாதத்தை நடத்துவதற்கு அவர் வெளிப்படையாக உறுதியளிக்காத வரையில், ஈடுபடுவதில் அர்த்தமில்லை என்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியுடனான உரையாடலை நினைவுகூர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனாதிபதி சமஷ்டியை நிராகரித்தார் என்றார். அப்படியானால், நாம் அவருடன் என்ன பேசப் போகிறோம்? அவர் தனது அரசு சட்டபூர்வமானது நிலையானது. மேலும் அவர் அனைத்து நடிகர்களுடனும் பேசுகிறார் என்பதை உலகுக்கு காட்ட விரும்புகிறார். நாங்கள் பேச்சு மேசையில் இருப்பது அவருக்குத் தேவை.

அவர் ஜனாதிபதி தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உறுதிமொழியில் நேர்மையாக இருந்தால் சமஷ்டி என்பது இந்தப் பேச்சுக்களுக்கு முன் நிபந்தனையாக இருக்க வேண்டும். சிங்கள மக்களிடம் பொய் சொல்லாமல் அவர் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றார்.

தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதியின் அழைப்புக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மகிழ்ச்சியடையவில்லை என்றாலும் இந்த ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி இலங்கைக்கு ஆன்மாவைத் தேடுவதற்கான உண்மையான வாய்ப்பை வழங்கியுள்ளது என்கிறார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் கவலைகளைத் தீர்க்கமாக நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

தெற்கு மக்கள் ஏமாற்றமடைந்தனர் என உணர்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் தங்கள் பெயரில் போர் புரிந்ததையும் அவர்களின் பெயரில் இனவாதக் கொள்கைகளை கடைப்பிடிப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். ஒரு நாடாக நாம் இப்போது ஒன்றாகச் செயற்பட முடிந்தால் நாம் நிச்சயமாக விடயங்களைச் சரிசெய்ய முடியும் என்று அவர் கூறினார்.