இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் வேண்டும் – உலக தமிழர் பேரவை

ஜெனிவாவில் நடைபெறும், மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென உலக தமிழர் பேரவை (GTF) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேரவை, போரின் போது பாரியளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், அனைத்து சமூகங்களினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) ஆற்றிய பங்கு இந்த விடயத்தில் முக்கியமானது. கடந்த மாதம் வரை உயர் ஸ்தானிகராக மிச்செல் பெச்லெட்டின் முன்மாதிரியான சேவைக்காக, பேரவை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.

அத்துடன் புதிய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை பேரவை வரவேற்றுள்ளது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியானது, இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்துடன் தொடர்புடைய பொறுப்பற்ற நிர்வாகத்தின் செயற்பாடுகள் என்பது, உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. ஆழமடைந்து வரும் இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையின்மை, பொறுப்புக்கூறல் இல்லாமை, பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையில்லாமை மற்றும் ஊழல் என்பன அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையை அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) மாணவர் தலைவர்களை தடுத்து வைப்பதற்கும், நீண்டகாலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் கைதிகளைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கும் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக ஆணையாளரின் அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் 2022 இல், பாதுகாப்புக்காக 373.1 பில்லியன் ரூபா அதாவது 1.86 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது, இது மொத்த அரசாங்க செலவினத்தில் 15 சதவீதம் ஆகும். இது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பெரும் நிதி நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டில் இத்தகைய உயர் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அதுவும் வடக்கு – கிழக்கில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படுவதை ஆணையாளரின் அறிக்கை கண்டித்துள்ளது. இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எந்தவொரு வெளிப்புறப் பொறிமுறைக்கும் இணங்காது, இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்ளக உண்மையைத் தேடும் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பை சர்வதேச சமூகம் அவதானிக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை கேட்டுள்ளது. இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது கருத்து தெரிவித்தமைக்காக இந்தியாவுக்கு தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான அர்ப்பணிப்புகளில் இலங்கை அரசாங்கத்தால் அளவிடக்கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து இந்திய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டதை பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கை ஒரு குறுக்கு வழியில் இருப்பதாக உலக தமிழர் பேரவை கருதுகிறது. துரதிஷ்டவசமாக, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், ஆரோக்கியமான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை. எனினும் அதனை பொருட்படுத்தாமல், இலங்கை தொடர்பான பொறுப்புள்ள செயல் பாடுகள், சர்வதேச சமூகத்தால் மனசாட்சியுடன் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமே இது சாத்தியமாகும். 2022 பெப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களின் உயர் ஸ்தானிகரின் அறிக்கைகளில் பட்டியலிடப்பட்டுள்ள விரிவான பரிந்துரைகள், ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுக்கும் மற்றும் பொதுச் செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளான, மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஆகிய இரண்டுக்கும் ஒரு நிபுணத்துவ பொறிமுறையை நிறுவுவதன் மூலம், கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஆணையை வலுப்படுத்த முடியும் என்ற யோசனையை அங்கீகரிப்பதாக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கையின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த பரிந்துரைகளை வழங்குதல். தீர்மானத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய காலப்பகுதியில் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான போதுமான நிதியளிப்பது என்பன, இலங்கை தொடர்பான முக்கிய குழு உட்பட உறுப்பு நாடுகளின் பொறுப்பாகும் என்று உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்!

விடுதலைக் கோரி மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று தான் மெகசின் சிறைச்சாலைக்கு சென்று, கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 11 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி எழுதிய கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும், அதனை சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

சட்ட விவகாரங்கள் தொடர்பில் அவ்விடத்திலிருந்தே கைதிகளின் சட்டத்தரணிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.

உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களையும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி மாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தமிழ் அரசியல்  கைதிகளின் உறவினர்கள் ஆரம்பித்த  அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்  இன்று கைவிடப்பட்டது.

ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து, தற்காலிகமாக உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் தமது வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், தமது போராட்டம் தொடரும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

ஐநா அமர்வில் கலந்துகொள்ள நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி!

ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் திங்கட்கிழமை (19) நியூயார்க் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

கடந்த 13 ஆம்  திகதி ஆரம்பமான பொதுச்சபையின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 7 இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு!

தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தலைமையிலான 7 நாடுகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் ஏற்கனவே கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு ஐக்கிய நாடுகளின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகிக்கும் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி நாட்டில் இருந்து வௌியேறியுள்ள காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோனும், நிதி, பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளின் பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக கீதா குமாரசிங்கவும், தொழிநுட்ப பதில் அமைச்சராக கனக ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இலங்கை உள்ளது – ஜனாதிபதி

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர்.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன.

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை.

தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ரணிலுக்கு 4ஆவது இடம்

எதிர்வரும் 19ஆம் திகதியன்று, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குக்காக லண்டனுக்குச் செல்லும் முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்களைக் காட்டும் ஒரு கிரஃபிக் (வரைகலையை) ஏஃப்பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 4ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் ஜப்பானிய பேரரசர் நருஹிடோவுக்கு அடுத்த இடத்தில் ஜனாதிபதி ரணில் பெயரிடப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

திணறும் அரச நிறுவனங்கள்: சம்பளம் வழங்குவதில் சிக்கல்?

பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களை கொள்வனவு செய்வது மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது போன்றவை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அறியமுடிகிறது.

அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கடுமையான நெருக்கடி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது, இருப்பினும், பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால், மனிதாபிமான உதவிக்கான உயர்ந்த தேவை வெளிப்பட்டது என அவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மன்னார் மற்றும் அம்பாறையின் இரண்டு நகரங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நகர சபைகள் கலைக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized