ரணில் பலமடைந்து வருகிறாரா? நிலாந்தன்

பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.அவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என ஜனாதிபதி ரணிலிடம் கேட்டுக்கொள்கின்றேன், அவ்வாறு செய்வது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்” என்று மேரி லோலர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் அவர்.எனினும், அந்த இருண்ட நாளை அவரால் தடுக்க முடியவில்லை.

கடந்த 21ஆம் திகதிவரை மொத்தம் 3353பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இவர்களில் 1255பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முழு உலகத்தையும் திருப்பி பார்க்க வைத்த அரகலயவின் பிரதான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதிகளாக கணிக்கப்படும் ஒரு நிலைமை ஏன் வந்தது?அரசியல் எதிர்ப்பை ஆக்கத்திறனோடு வெளிப்படுத்திய படைப்பாளிகள் குற்றவாளிகளாக வேட்டையாடப்படும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது?

காரணம் அரகலய மீண்டும் தோற்றம் பெறக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை.அரகலயவை உற்பத்தி செய்த பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தும் முற்றாக அகற்றப்படவில்லை.ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தபின் எரிவாயு எரிபொருள் போன்றன ஒப்பிட்டளவில் கிடைக்க தொடங்கி விட்டன.ஆனால் பொருட்களின் விலைகள் இறங்கவே இல்லை.அரசாங்கம் முட்டையின் விலையை நிர்ணயித்த போதிலும் சந்தையில் முட்டையின் விலை இறங்கவே இல்லை.அரசாங்கத்தின் விலை நிர்ணயங்கள் மக்களை கவரும் நோக்கிலானவை தவிர யதார்த்தமானவை அல்ல என்று வியாபாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மண்ணெண்ணையின் விலை அதிகரித்துவிட்டது.அது விவசாயிகளாலும் கடத்தொழிலாளர்களாலும் தாங்க முடியாத அதிகரிப்பு.எனவே கீழ் மத்தியதரவர்க்கம் மற்றும் ஏழைகளால் நுகரமுடியாத அளவுக்கு விலைகள் உச்சத்தில் நிற்கின்றன.இது மக்களை எப்பொழுதும் தெருவுக்கு கொண்டு வரக்கூடியது. அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகள் சீனாவின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முடிவுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு முன்னணிச் செயற்பாட்டாளர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே போட வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. அதாவது ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் மீண்டும் தோன்றலாம் என்ற ஆபத்தை அவர் முன்னுணர்கிறார்.இது முதலாவது பிரதான காரணம்.

இரண்டாவது காரணம் மே ஒன்பதாம் திகதியும் ஜூன் 9ஆம் திகதியும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் வீடுகளையும் தேடித்தேடி எரித்து அழித்தவர்களைப் பழிவாங்குவது.மீண்டும் ஒரு தடவை ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் வீடுகளை தாக்கத் துணியாதபடி அவர்களை அச்சுறுத்த வேண்டும்.அதற்காகத்தான் பயங்கரவாத தடைச் சட்டத்தை அவர் உபயோகித்திருக்கிறார்.அதாவது தன்னை பாதுகாத்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை அவருக்குண்டு.

பொருளாதார நெருக்கடியை நீக்கினால் பிரச்சனைகளின் மூலகாரணம் பலவீனமடைந்துவிடும் என்று நம்புகிறார்.பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்று சொன்னால் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது என்று சொன்னால் எதிர்க்கட்சிகளையும்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடிய மக்களையும் சமாளிக்க வேண்டும்.அதற்கு,சர்வ கட்சி அரசாங்கம் ஒரு கவர்ச்சியான தீர்வு.ஆனால் தந்திரசாலியான ரணிலை நம்பி அரசாங்கத்தில் இணைய எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இந்த வாரமும் இதுகுறித்து சஜித் பிரேமதாசவோடு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சஜித் அணி தயாராக இல்லை.ரணிலோடு இணைந்தால் அவர் தன்னுடைய அணியைக் விழுங்கி விடுவார் என்று சஜித் பயப்படுகிறார்.வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று சில நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பில் கூறி இருக்கிறார். ஜேவிபியும் அவ்வாறு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு தயார் இல்லை. தமிழ் கட்சிகளும் பெருமளவுக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை.

எனவே ஒரு சர்வகட்சி அரசாங்கத்துக்கான வாய்ப்புக்கள் குறைவாகத்தான் தெரிகின்றன.மாறாக எதிர்த் தரப்பிலிருந்து தனக்கு ஆதரவான ஆட்களை கழட்டி எடுக்கும் வேலையை ரணில் செய்யலாம்.அதை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.அது அவருக்குக் கைவந்த கலை.ஆனால் அவ்வாறு உருவாக்கப்படும் ஒரு அரசாங்கம் எதிர்க்கட்சிகளாலோ அல்லது மக்களாலோ ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்காது.

தாமரை மொட்டுக் கட்சியைப் பாதுகாக்க வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு. ரணிலைப் பாதுகாக்க வேண்டிய தேவை தாமரை மொட்டுக்கு உண்டு. எனவே ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பார்கள்.இது எதுவரை என்று சொன்னால், அடுத்த பெப்ரவரி மாதம் வரையிலும்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தோடு யாப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ரணிலுக்கு கிடைத்துவிடும்.அவ்வாறு கிடைத்தால் அதற்குப்பின் நடக்கக்கூடிய எந்த ஒரு தேர்தலிலும் தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுது அனுபவிக்கும் பெரும்பான்மையைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே.எனவே வரும் பெப்ரவரி மாதத்தோடு தனது பேரம் கீழிறங்கி விடும் என்று தாமரை மொட்டுக் கட்சிக்குத் தெரியும். தன்னுடைய பேரம் அதிகமாகிவிடும் என்று ரணிலுக்கு தெரியும். எனவே அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார்.

அடுத்த ஆறுமாத காலத்துக்குள் அவர் தன்னை பலப்படுத்த வேண்டும். யூ.என்.பியைப் பலப்படுத்த வேண்டும் என்று சொன்னால் சஜித் பிரேமதாசவை பலவீனப்படுத்த வேண்டும்.ஒன்றில் அவரை வழிக்குக் கொண்டு வர வேண்டும்.அல்லது தோற்கடிக்க வேண்டும்.

அடுத்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னரும் அவர் நாடாளுமன்றத்தை கலைப்பாரா என்பது சந்தேகம்தான்.ஏனெனில் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் நாடாளுமன்றம் பெருமளவுக்கு அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.தாமரை மொட்டின் பெரும்பான்மை பெருமளவு அவருக்கு கட்டுப்பட்டது ஆகிவிடும்.அதன்பின் அவர் விரும்பியபடி காய்களை நகர்த்தலாம். இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அவர் உள்ளூராட்சி சபை தேர்தல்களையும் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்தக்கூடும். தேர்தல் முடிவுகள் தாமரை மொட்டுக்கு பாதமாக அமையும். இப்பொழுது உள்ளூராட்சி மன்றங்கள் பெருமளவுக்கு தாமரை மொட்டின் கட்டுப்பாட்டுக்குள்தான் காணப்படுகின்றன. ஆனால் ஒரு புதிய தேர்தல் நடந்தால் தாமரை மொட்டு அந்த பலத்தை இழக்கக் கூடும்.அதேபோல மாகாண சபைகளுக்கான தேர்தலும் தாமரை மொட்தின் வீழ்ச்சியைக் காட்டக்கூடும்.எனவே புதிய உள்ளூராட்சி மன்றங்களும் புதிய மாகாண சபைகளும் தமது பலவீனத்தை வெளிப்படுத்தலாம் என்ற அச்சம் தாமரை மொட்டுக்கு உண்டு.

அதனால்தான் நாடாளுமன்றம் அடுத்த பெப்ரவரி மாதத்தின் பின் கலைக்கப்படுவதை எப்படித் தடுக்கலாம் என்று தாமரை மொட்டுக் கட்சி சிந்திக்கின்றது.ரணில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் 22 வது சட்டத் திருத்த வரைபில், 19வது திருத்தத்தில் உள்ளபடி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கான கால எல்லையை நாலரை ஆண்டுகளாக மாற்றும் ஏற்பாடு இணைக்கப்படவில்லை.இருபதாவது திருத்தத்தில் உள்ளபடியே 21/2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்று உள்ளது. இது தாமரை மொட்டைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்கு ரணில் செய்யும் தந்திரம் என்று அக்கட்சி நம்புகிறது.

அதனால்தான் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் காலத்தை 19இல் உள்ளதுபோல மாற்றுமாறு அண்மையில் ரணிலுக்கு கடிதம் கொடுத்திருந்தார்கள். அவர்களை சமாளிப்பதற்காக ரணில் இப்போதைக்கு பொது தேர்தல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்.

அவர்களை சமாளிப்பது என்பதைத் தவிர, வேறு ஒரு உள்நோக்கமும் அவரிடம் இருக்கலாம்.பெப்ரவரி மாதத்தின்பின் ஒப்பிட்டுளவில் தனக்கு அதிகம் கட்டுப்படும் நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு,தன் எஞ்சிய ஆட்சிக் காலத்தை எப்படிக் கடக்கலாம்,தனது சொந்த கட்சியை எப்படி மீள இணைக்கலாம் என்று அவர் திட்டமிடுவார்.

ஒரு தேர்தல் நடந்தால் முடிவுகள் தாமரை மொட்டுக்குப் பாதகமாகவும் எதிர்கட்சிகளுக்குச் சாதகமாகவும் அமையக்கூடும். ஆனால் யு.என்.பிக்கு அது எப்படி அமையும் என்று இப்பொழுது கூறுவது கடினம்.ஏனென்றால் யூ.என்.பி.இப்பொழுது இரண்டாக உடைந்து கிடக்கிறது.எனவே நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் அது எதிரிகளுக்கு சாதகமாக அமையும் என்று ரணில் அஞ்சுகிறார்.அதனால் அவர் நாடாளுமன்றத்தை கலைக்கவும் ஒரு புதிய தேர்தலை நடத்தவும் தயாராக இருக்க மாட்டார்.

எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கும் விருப்பமில்லை. வரும் பெப்ரவரி மாதத்தின் பின் தாமரை மொட்டு கட்சியானது அவரில் தங்கி இருக்கும் நிலைமைகள் மேலும் அதிகரிக்கும். அந்த நிலையை அப்படியே பேணியபடி அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிப்பதற்கு இடையில் யு.என்.பியை எப்படிப் பலப்படுத்தலாம் என்று திட்டமிடலாம்.

எனவே சஜித்தை எப்படி வளைத்தெடுப்பது என்பதே அவர் முன் உள்ள சவால். சஜித்தை வளைத்து எடுத்தால் ரணிலுக்கு இரட்டை லாபம் உண்டு. அதன் மூலம் ஒரு சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கலாம்.அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு வெளிக்காட்டலாம். இரண்டாவது சஜித்தை தோற்கடித்து விட்டால் அல்லது சஜித்தை வழிக்கு கொண்டு வந்து விட்டால் யூ.என்.பி மீள இணைந்துவிடும். அதன் மூலம் அடுத்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்றவற்றில் ரணில் முன்னரை விடப் பலமாகக் காணப்படுவார். எனவே இப்பொழுது ரணிலுக்கு உள்ள சவால்,சஜித்தை எப்படி வளைப்பது என்பதுதான். ஒரு புதிய தேர்தலுக்குப் போக அவர் தயாரில்லை. ஏனெனில்,ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார கேட்பது போல “134 எம்பிக்களா?அல்லது மக்களா?” என்ற கேள்விக்கு விடை கிடைக்கக்கூடிய ஒரு தேர்தலை நடத்த அவர் துணிய மாட்டார்?

மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை – காதர் மஸ்தான்

காற்றாலை மின் நிலையம் சம்பந்தமாக மக்களுடைய எதிர்ப்புகளை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால் காற்றாலை எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற எந்த திட்டங்களையும் நாட்டுக்குள் கொண்டு வர மாட்டோம்.

இலங்கையில் எங்கெங்கு காற்றாலை அமைக்க பொருத்தமான இடம் இருக்கிறதோ அந்த இடங்களை பார்த்து தான் காற்றாலைகளை அமைத்திருக்கிறோம் என்று தங்களுக்கு உயர் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்த லுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சனை தொடர்பாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இந்த காற்றாலை அமைக்கப்படுவதால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் மக்கள் தொடர்ச்சியாக அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன்.

சீன தூதுவர் மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்; இந்திய உயர்ஸ்தானிகரின் கண்டி விஜயம் இரத்து

இலங்கைக்காக சீன தூதுவர் Qi Zhenhong இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் திட்டமிடப்பட்டிருந்த கண்டிக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு அஸ்கிரி விகாரைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அஸ்கிரி பீட மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் மல்வத்து மஹா விகாரைக்கு சென்ற இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong, திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல நாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

இதனிடையே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கண்டிக்கு விஜமொன்றினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது

சுகயீனம் காரணமாக விஜயம் இரத்து செய்யப்பட்டதாக கண்டியில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது – மைத்திரி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நல்ல விடயமல்ல என அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உடன்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் தற்போதைய ஜனாதிபதியும் சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய ராஜபக்ஷ இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலை கட்டுமானத்தை நிறுத்தி , கோணேஸ்வரர் ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்க கோரிக்கை!

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்மாண பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதன் பணிப்பாளர் மனவிதானய தெரிவித்ததாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

பேராசிரியர் புஷ்பரட்ணம் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவிக்கும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் இன்று ம் விசேட சந்திப்பு இடம்பெற்றது

குறித்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் முக்கியமாக, கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மூன்று கோவில்கள் நீண்டகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்

அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளுக்கு தொல்பொருத்திணை கழுத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவித்த போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இந்த விடயத்தினை உடனடியாக அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் முல்லை தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த அந்த மலையில் வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன

எனவே அந்த விடயங்களை நிறுத்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம் எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாக தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை பெற்று தரமுயற்சிப்பதாக தெரிவித்தார் என்றார்,

Posted in Uncategorized

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தமை மற்றும் ஜனாதிபதியை கொடியை பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரஞ்சனை பாராளுமன்றம் அழைத்துச் செல்ல தயாராகும் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஏற்படும் முதலாவது வெற்றிடத்தில் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ரஞ்சனுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவருக்கு ஜனநாயக உரிமைகள் இருந்திருக்க வேண்டும்.

அந்தச் சுதந்திரத்தை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சகல அரசியல் உரிமைகளுடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

Posted in Uncategorized

கோட்டாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதியின் சலுகைகளை வழங்க முடியாது?

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல என்பதனால் அவருக்கு அந்தச் சலுகைகளை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பதவி விலகியவர் என்பதனால், ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.