இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 66.7% ஆக பதிவாகியுள்ளது.

மாணவர் செயற்பாட்டாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

அமைதியான போராட்டங்களில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை என அறிவித்திருந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சர்வதேச நியாயங்களுக்கேற்ப பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை, அவசரகால சட்டத்தை பயன்படுத்தியமை ஊடாக ஒடுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்படுமென அறிவித்த ஜனாதிபதி, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, 07 மாவட்டங்களுக்கு முப்படையினரை அழைத்துள்ளமை மூலம் அவரது கருத்திற்கும் செயற்பாட்டிற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவது புலனாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகைக்குள் நுழைந்தவர்களை கைது செய்ய தேடும் பொலிஸார்!

அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

2022.07.09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என கொழும்பு தெற்குப் பிரிவின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112 421 867, 0763 477 342, 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

Posted in Uncategorized

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் – மகிந்த ராஜபக்ச

நான் அரசியலில் தொடர்ந்தும் நீடிப்பேன் பொருத்தமான தருணத்திலேயே ஓய்வு பெறுவேன் அதுவரை நான் போகமாட்டேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக காணப்பட்டவேளை அவர் சிறந்த நிர்வாக திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதோடு ஜனாதிபதியாக அவர் கடும் அழுத்தங்களை சந்தித்தார் முன்னர் கடும்போக்குவாதியாக காணப்பட்டார் அவர தற்போது மென்மையானவராக மாறிவிட்டார் எனவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கருத்து தெரிக்கு பொழுது நான் போகலாமா என கேட்டிருந்தால் வேண்டாம் என்றே சொல்லியிருப்பேன் எனவும் முன்னாள் பிரதமர்மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொதுஜனபெரமுனவின் தலைவராக தொடர்ந்தும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அதனை கட்சியே தீர்மானிக்ககும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டாலும் நான் ஒரு சட்டத்தரணி என்னால் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணிபுரிய முடியும் அதனை செய்ய தயார் என ஆங்கில பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும் என அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தேவையுடையவர்களுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் விசேட தேவையுடையவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வரலாற்றுத் தவறை திருத்தி நாட்டிற்காக ஒன்றிணைவோம்”: ஜனாதிபதி

உலகில் ஏனைய நாடுகள் வெற்றிகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, ​​நாம் ஒன்றிணைந்து செயற்படாததால் எமது நாடு பின்னோக்கிச் செல்வதாகவும், அந்த முன்னேற்றத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று (20) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, பிற்பகல் அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி மகா விகாரைக்கு சென்று வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி நுகேதென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசிர்வதித்த நாயக்க தேரர், அரசாங்கத்தின் எதிர்வரும் வேலைத்திட்டத்திற்கு தமது ஆசிகளைத் தெரிவித்தார்.

நாட்டில் ஒழுக்கத்தை கட்டியெழுப்புவதே முதல் பணி என சுட்டிக்காட்டிய நுகேதென்ன பஞ்ஞானந்த நாயக்க தேரர், ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னோக்கிச் செல்லாது எனவும் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களைப்போன்று ஆசிரியர்களுக்கும் ஒழுக்கம் இருக்க வேண்டும் எனவும், சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்த போது, ​​ஆசிரியர் தொழிலின் ஒழுக்கம் அழிந்துள்ளதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால நிகழ்வுகளால் சமூகத்தில் சீர்குலைந்துள்ள ஒழுக்கத்தை மீளமைக்கப் பாடுபடும் ஜனாதிபதிக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் ஜேதவனாராம விகாராதிபதி வண. இகல ஹல்மில்லேவே ரதனபால நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம், நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரு கூட்டு வேலைத்திட்டத்தை அனைத்து மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அந்தப் பொறுப்பை தாமதமின்றி நிறைவேற்றுவதற்குத் தலைமை ஏற்குமாறும், தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய அவர், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் அபயகிரிய ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விகாராதிபதி வண. கல்லஞ்சியே ரதனசிறி நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரதேச மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் சீகிரியா போன்ற புராதன நகரங்களை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை தங்கவைக்கும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இசுறுமுனிய ரஜமஹா விகாரைக்குச் சென்று வண. மதவ சுமங்கல நாயக்க தேரரை தரிசித்து ஆசி பெற்றார்.

“இருபுறமும் எரியும் தீபத்தைப் போல” நாடு இருந்த வேளையில் ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றதை நினைவுகூர்ந்த தேரர், அந்தத் தீப்பிழம்புகளை அணைத்து மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வலிமையும் தைரியமும் தாராளமாகக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்

இசுறுமுனிய பழைய விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கு மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கியதுடன், அங்கு வருகை தந்திருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

அநுராதபுரம் ஸ்ரீ சாராநந்த மகா பிரிவேனாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வண. அடபாகே விமலஞான தேரர் தலைமையிலான மகா சங்கத்தினருடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கோரிக்கை!

இலங்கை அரசாங்கம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்கள், அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையை பிரயோகிக்காமல் இருப்பதற்கும், பிரஜைகளின் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்துமாறு அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்கள் இராஜாங்க செயலாளரிடம் கோரியுள்ளனர்.

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை,  ஊரடங்கு சட்டம் மற்றும் போராட்டங்களை அடக்குவதற்கு தோட்டாக்களை பயன்படுத்துதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உடனடி உதவிகளை வழங்குமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் ஆகியோரிடம் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது – ஐ.நா தெரிவிப்பு !

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமை கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உபகரணங்கள், மருந்து பற்றாக்குறை என்பன காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிப் பெண்கள் போஷாக்கற்ற உணவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுகிறது – யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் பிள்ளை

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்தார்.

கலாநிதி ஆறு. திருமுருகனால் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலய வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் திருக்கேதீச்சரம் ஆவணப்பெட்டகம் என்னும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பிராந்திய அலுவலகத்தில் கோப்பாய் சுப்ரமுனிய கோட்டம் முதல்வர் ரிஷி.தொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் வாழ்துரை வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் ,

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுகிறது 1953ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டில் இந்துக்கள் 22 வீதமாக காணப்பட்டது தற்போது 11 வீதமாக உள்ளது அடுத்துவரும் குடிசன மதிப்பீட்டில் எத்தனை வீதமாக குறைந்துள்ளதோ தெரியாது.

அண்மையில் திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் கல்வி பழைய மாணவர்கள் சென்று பார்வையிட்டு வந்தபின்னர் எமது ஆலயம் இருந்துபோல் இப்பவும் உள்ளது ஆனால் ஆலய சூழல் பொறுத்தவரை மற்றய ஆலயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதுவே உண்மையாகவும் உள்ளது இங்கு மட்டுமல்ல ஏனைய இடங்களில் இத்தகைய ஆக்கிரமிப்புக்குள்தான் இந்து ஆலயங்கள் உள்ளன இத்தகைய விடயங்களை நாங்கள் பார்த்துகொண்டிருக்க முடியாது. நாங்கள் விழிப்படைய வேண்டும்.

இன்றைய நூலினை தொகுத்து வழங்பிய கலாநிதி ஆறு திருமுகனின் சேவையைபோல் யாரும் செய்ய முடியாது அவர் சமய பணி சமூக பணி கல்வி பணி என பல பணிகளை செய்து வருகிறார் அவர்பணி தொடரவேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் நல்லை ஆதின குருமுதல்வர் ஆசி உரை ஆற்றினார் இந் நிகழ்விற்கு பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர்கள் அதிபர் ஆசரியர்கள் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம்: சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என Amnesty International எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க உள்ளிட்ட மூவர், 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, போராட்டக்காரர்கள் மீது தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் போன்ற நியாயமற்ற கடுமையான குற்றங்களை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized