கல்முனையில் சீரான எரிபொருள் விநியோகத்திற்கு குடும்ப அட்டை, பாஸ் நடைமுறை; மாநகர சபையில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானம்

கல்முனை மாநகர பிரதேசங்களில் எரிபொருள் விநியோகத்தை குளறுபடிகளின்றி சீராக முன்னெடுக்கும் பொருட்டு மண்ணெண்ணெய்க்கு குடும்ப அட்டையும் பெற்றோல், டீசல் விநியோகத்திற்காக வாகனங்களுக்கு விசேட அனுமதிப்பத்திரமும் (பாஸ்) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையில் நேற்று சனிக்கிழமை (25) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதில் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக், மாநகர சபை உறுப்பினர்களான சி.எம்.முபீத், ஹென்றி மகேந்திரன், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.சத்தார், எம்.எஸ்.எம்.றபீக், எம்.எம்.பைரூஸ், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் அப்துல் வாஹித் உட்பட கல்முனை மாநகராட்சி எல்லையினுள் இயங்கி வருகின்ற 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகத்தின்போது ஏற்படுகின்ற குளறுபடிகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை நிவர்த்தி செய்து, விநியோக நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்குரிய பொறிமுறைகள் தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

எரிபொருள்கள் விநியோகத்தின்போது உரிய மக்களுக்கு அவை கிடைப்பதை உறுதி செய்தல், பதுக்கல் மற்றும் முறைகேடான செயற்பாடுகளை முறியடித்தல், குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்த்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாநகர முதல்வர், அரசாங்க அதிபரின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் பெற்றுக் கொண்டதுடன் முதல்வர் தலைமையிலான குழுவினர் அவரை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இதற்கமைவாக எரிபொருள் விநியோக பிரச்சினைகளுக்கு அவசரத் தீர்வு காணுமுகமாக அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாட்டுடன் இங்கு சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் சுமார் 45ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்ற நிலையில், தேவையான ஒவ்வொரு குடும்பமும் மாதமொரு முறையாவது மண்ணெண்ணையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விசேட குடும்ப அட்டையை மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து வழங்குதல்.

அவ்வாறே கல்முனை மாநகராட்சி எல்லையினுள் பாவனையிலுள்ள வாகனங்கள் அனைத்துக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாகனத்திற்கும் எரிபொருள் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்தல். இதன்படி முதற்கட்டமாக அனைத்து முச்சக்கர வண்டிகளையும் இன்று திங்கள் (27) முதல் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்தல். இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களையும் ஏனைய வாகனங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தல்.

கடற்றொழில், விவசாயம், கைத்தொழில்துறைகளுக்கும் உணவுப் பண்டங்கள் உற்பத்தியாளர்களுக்கும் தேவையானளவு மண்ணெண்ணெய், டீசல் போன்றவற்றை அந்தந்த திணைக்களங்களின் சிபாரசுகளுக்கேற்ப விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல்.

சுகாதாரத்துறையினர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு பெற்றோல் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சரியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இவ்விடயங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர முதல்வர், பிரதி முதல்வர், ஆணையாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களினதும் உரிமையாளர்கள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோக நடவடிக்கைகளில் நிச்சயமற்றதன்மை காணப்படுவதால் தமக்குக் கிடைக்கின்ற எரிபொருள்களைக் கொண்டே மக்களுக்கு அவற்றை விநியோகிக்க முடியுமாக இருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதன்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கிழக்குப் பிராந்திய முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர், விநியோக நிலைவரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் கல்முனை பிராந்தியத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள்களை அதிகரித்துப் பெற்றுத்தருவதற்கான உயர்மட்ட முயற்சிகள் தன்னால் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ஏ.எம்.றகீப் உறுதியளித்தார்.

நிதி முகாமைத்துவத்திற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம்!

இலங்கையில் நிதி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் இன்று (27) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித்துள்ளது.

ராபர்ட் கப்ரோத், அமெரிக்காவிலுள்ள ஆசிய கருவூலத்தின் துணைச் செயலர் மற்றும் எச்.இ. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கும் கலந்துகொண்டார்.

மேலும், பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வேண்டுமென இலங்கை போக்குவத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விசேட ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள் அரச அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

வடமாகாணத்திலுள்ள ஏழு டிப்போவில் உள்ள ஊழியர்களும் டிப்போவிற்கு கடமைக்கு செல்வதற்கே பெற்றோல் கிடையாது. பெற்றோலை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.

எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிற நிலையில் பொதுமக்களை அவர்களது வேலைக்கு கொண்டு செல்வதற்கு நாம் பாரிய பணியாற்றுகிறோம்.

வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களுக்கு பெற்றோல் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பட்டியலில் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கவில்லை.

நாம் எரிபொருளை கடமை நேரத்தில் வரிசையில் நின்று பெறமுடியும்.

ஆனால் நாம் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்புவதற்கு கடமை லீவை யாரும் தரப்போவதில்லை. நாம் பயணிகளை இடைநடுவில் விட்டுவிட்டு பெற்றோல் நிரப்ப செல்ல முடியாதே! எமது சேவை தொடர்ந்து நடக்க வேண்டுமாக இருந்தால் எமது வாகனங்களுக்கு இரவு 6மணிக்கு பின்னர் எரிபொருளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட வேண்டும் என்றனர்.

Posted in Uncategorized

’காணாமல் போனோருக்கு நடந்தது என்ன?’

தான் அறிந்த வகையில், வலிந்து காணாமல் போனோரது குடும்பங்களின் முதல் கேள்வி, முதல் கோரிக்கை யாதெனில், கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதே என்று தான் நினைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

வடக்குக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவும்,  காணாமல் போனோர் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் “மக்கள் ஒத்துழைத்தால், காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என கூறி வந்துள்ளனர் என்று மனோ எம்.பி சுட்டிக்காட்டினார்.

மேலும் “காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை எனவும் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மக்களிடமிருந்து என்ன ஒத்துழைப்பை இவர்கள் கோருகிறார்கள் என எனக்கு தெரியவில்லை“ என்று மனோ.எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.

“இந்த முதல் கேள்விக்கு பதில் தேடுங்கள். அதையடுத்து  குடும்பங்கள் விரும்பினால், கொடுப்பனவுகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை, அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வழங்கலாம்“ என்று தெரிவித்த மனோ.எம்.பி, நீதி அமைச்சரும் அலுவலக தலைவர் மஹேஷ் கடுலந்தவும் இதைப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இது குறித்து மனோ எம்பி மேலும் தெரிவித்ததாவது, “கடந்த ஆட்சி காலத்தின் கடைசி வருடத்தில், இந்த காணாமல் போனோர் அலுவலகம் எனது அமைச்சின் கீழ் இருந்தது.

அப்போது அதன் தலைவராக, இன்றைய இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் சாலிய பீரிஸ் செயற்பட்டார். நிமல்கா பெர்ணாண்டோ ஆகியோரும் அங்கத்தவராக செயற்பட்டனர்.

அது ஒரு சுயாதீன ஆணைக்குழு அல்ல. எனினும்  சுயாதீன ஆணைக்குழுவுக்கு சமானமாக அது சுதந்திரமாக செயற்பட நான் அனுமதி அளித்து இருந்தேன்.

வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் கொடுக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அதை வழங்க முயன்ற போது, அந்த குடும்பத்தவர் அதை வாங்க மறுத்த போது அதை வலியுறுத்த வேண்டாம் என நான் பணிப்புரை விடுத்தேன்.

மேலும் மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அலுவலகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நிகழ்வுகளில் அமைச்சரான நான் கலந்துக்கொள்வதை தவிர்த்தேன்.

தென்னிலங்கை மாத்தறையில் அலுவலகம் திறக்கப்பட்ட போது அதில் நான் கலந்து கொண்டேன். 1988களில் தென்னிலங்கையில் இப்படி காணாமல் போனவர்களின் சிங்கள இளையோரின் குடும்பங்கள், இந்த கொடுப்பனவுகளை பெற விருப்பம் தெரிவித்தபோது, அவற்றை வழங்க நான் பணிப்புரை விடுத்தேன்.

2015 ஒக்டோபர், மனித உரிமை ஆணைக்குழுவின் 30/1ம் தீர்மானத்தின்படி, இந்த காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தை நாம் கடந்த ஆட்சியின் போது நிறைவேற்றினோம். அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும்கட்சியான ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன கட்சியினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இது நிகழ்ந்தது. எனினும் நாம் சட்டத்தை நிறைவேற்றி இந்த காணமல் போனோர் அலுவலகத்தை அமைத்தோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே.

2018ஆம் ஆண்டு இந்த அலுவலகம் எனது பொறுப்பில் வந்தபோது, கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன தங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதே வலிந்து காணாமல் போனோர் குடும்பங்களின் முதல் கோரிக்கை என்பதை துறைசார் அமைச்சராக நான் உணர்ந்தே இருந்தேன். இன்றும் அப்படியே இருக்கிறேன்.

கடந்த ஆட்சியின் போது பல கட்டமைப்பு முன்னேற்றங்கள் நிகழ்ந்தாலும்கூட, அன்று எதிர்கட்சியாக இருந்த, இன்றைய ஆளும்கட்சியான ராஜபக்ஷர்களின் பொதுஜன பெரமுன எம்மை முழுமையாக கடமையாற்ற விடவில்லை. இந்த காணமல் போனோர் அலுவலகம், முன்னாள் புலிகளுக்கு கொடுப்பனவுகள் கொடுக்கின்றது எனவும், புலிகளுக்காகவே அது அமைக்கப்பட்டது எனவும் கூறினர்.

இன்று திடீரென முற்போக்கு ஜனநாயகவாதிகளாக வேடம் பூண்டுள்ள பல்வேறு பிரபல அரசியல்வாதிகளும் எம்மை எதிர்த்தார்கள். பிரபல பெளத்த பிக்குகள் இனவாதம் கக்கினார்கள். முன்னாள் புலிகளுக்காக அமைக்கப்பட்ட அலுவலகம் இன்னொரு பிரபல புலியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது என என்னையும் திட்டி தீர்த்தார்கள்.

இன்று இவற்றுக்கு எல்லாம் பதில் கூறவேண்டிய காலம் வந்து விட்டது. இன்றும் இனவாதம் இல்லாமல் இல்லை. ஆனால், அந்த இனவாதத்தை நேரடியாக எதிர்க்கக்கூடிய காலம் வந்து விட்டது. மதம் அரசியலில் வேண்டாம் என்றும், விகாரைகளுக்கு திரும்புங்கள் என்றும் பெளத்த பிக்குகளை பார்த்து நேரடியாக கூறக்கூடிய காலம் வந்து விட்டது.

இவற்றையெல்லாம், இன்றைய பொருளாதார நெருக்கடி உருவாக்கி விட்டது.  அந்த நெருக்கடித்தான், பெரும்பான்மை சிங்கள இளையோர் மத்தியில் காலிமுக திடல் போராட்டத்தையும் உருவாக்கி விட்டது.

ஆகவே இனி நாங்கள், “எங்கே எங்கள் உறவுகள்? கடத்தப்பட்டு, சரணடைந்து, கைதாகி காணாமல் போன எங்கள் உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?” என கேள்விகள் எழுப்பும் வேளை வந்து விட்டது. 2007ஆம் வருடம் நானும், நண்பன் ரவிராஜும் ஆரம்பித்த மக்கள் கண்காணிப்பு குழுவின் நோக்கங்களை நிறைவேற்ற காலம் வந்து விட்டது என நினைக்கிறேன்“ என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும், அதன் பின்னரே தேர்தல்- பிரதமர் ரணில்

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என்றார். விசேட அறிக்கை மூலம் நேற்று முன்தினம் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டவுடன், பொருத்தமான 225 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும், அவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும் அதிகாரமும் பொது மக்களுக்குள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க நாட்டின் பிரஜை ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியுள்ளதுடன், அரசியல்வாதிகள் மற்றும் மக்களிடமிருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு காணப்பட்டால் மட்டுமே உலக நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வருமென பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும், ஒட்டுமொத்த மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு பிரதமர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in Uncategorized

30 இலங்கை தமிழர்கள் விடுதலை வேண்டி தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் இருக்கும் 30 இலங்கை தமிழர்கள் விடுதலை வேண்டி தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், விசா காலம் முடிந்தும், அனுமதியின்றி இந்தியாவில் நுழைந்த மற்றும் வெளிநாட்டுககு தப்ப முயன்றவர்கள் உட்பட பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட, இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட, 150 வெளிநாட்டினர் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றம் நிரூபிக்கப்படாமல் இங்கு பல ஆண்டுகளாக தாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், கடந்த மே மாதம், 20ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தங்களது கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் விதமாக, உண்ணாவிரதப் போராட்டம், தீப்பந்தம் ஏந்தி போராட்டம், பாடைகட்டி போராட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். தற்போது காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆனால், இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு, திருச்சி மாவட்ட அதிகாரிகளும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் இதுவரை செவி சாய்க்கவில்லை. இதனால் விரக்தியடைந்த நிரூபன், நிஷாந்தன், ராஜன், கயன் ஆகிய, 4 பேர் இன்று மரத்தின் மீது ஏறி குதிக்க போவதாக தற்கொலைப் போராட்டம் நடத்தினர்.

30 பேர் தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினர். யாரும் எதிர்பாராதவிதமாக, உமா ரமணன் (44) என்பவர் தனக்குத்தானே மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட முகாம்வாசிகள், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உமா ரமணன் சிசிச்சை பெற்று வருகிறார். விடுதலை வேண்டி, இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

உயர்மட்ட அமெரிக்க பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவொன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று  இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

குறித்த குழுவினரை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

இலங்கையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் அவர்கள் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்பு பிரதிநிதிகளை சந்திப்பார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வனைத்து சந்திப்புகளிலும், இலங்கையர்களுக்கு உதவுவதற்கான மிகவும் பயனுள்ள வழிகளை அவர்கள் ஆராய்வார்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கையர்கள் உழைக்கிறார்கள் மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கு இலங்கையர்கள் திட்டமிடுகிறார்கள் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை-70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடல்

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இயக்கங்களின் அன்றைய இயலுமையும் இன்றைய இயலாமையும் ?

யதீந்திரா?
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) அவர்களது, தலைவர் பத்மநாபா கொலைசெய்யப்பட்ட தினத்தை, தியாகிகள் தினமாக நினைவு கூர்ந்துவருகின்றனர். அண்மையில் 31வது தியாகிகள் தினம் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பேசுமாறு, பம்பநாபா அபிவிருத்தி ஒன்றியம் என்னும் பெயரில் இயங்கிவரும் ஒரு பிரிவினர், என்னை அழைத்திருந்தனர். இதன் போது நான் பகிர்ந்துகொண்ட சில விடயங்களையே – இங்கு கட்டுரையாக்கியிருக்கின்றேன்.

இதிலுள்ள கவலைக்குரிய விடயம் என்னவென்றால், தங்களின் தலைவருக்கான நினைவு தினத்தைக் கூட, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால், கருத்தொருமித்து, ஒருங்கிணைந்து முன்னெடுக்க முடியவில்லை. ஈழ அரசியலில், ஒற்றுமையின்மை என்னும் நோய், எவ்வாறு தமிழனத்தை பாதித்தது, பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு, ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு வாழும் சாட்சியாகும். ஒரு இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களாலேயே, தங்களுக்குள் ஒன்றுபட முடியவில்லையாயின், மற்றவர்கள் அனைவரையும் எவ்வாறு ஒரணியாக கொண்டுவர முடியும்? ஒற்றுமையின்மை என்னும் நோயிலிருந்து அவர்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? இந்தக் கேள்வியுடன்தான், தமிழ் தேசிய அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து செல்கின்றது. வரலாற்றோடு எவ்வித தொடர்புமில்லாத வியாபாரிகளின் ஆதிக்கத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. விரைவில் அது வியாபாரிகள் உகச்சரிக்கும் தமிழ் தேசியமாக உருமாறலாம்.

இனவிடுதலையை வென்றெடுப்பதற்கு ஆயுதப் போராட்டங்களே, ஒரேயொரு வழிமுறையாகும் என்னும் புறச்சூழலில்தான், தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. உலகின் பல பாகங்களிலும் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலமது. நான் இந்த காலகட்டத்தை சேர்ந்தவன் இல்லையென்றாலும், வரலாற்றை உற்று நோக்கும் மாணவன் என்னும் வகையில் விடயங்களை தேடியும், சம்பந்தப்பட்டவர்களோடு உரையாடியும் அறிந்துகொண்டதன் மூலம், இந்த வரலாற்று காலகட்டத்திற்குள் செல்ல முடிந்தது. இன்று முன்னாள் இயக்கங்கள் என்னும் அiமொழியுடன், எதைச் சாதிப்பதற்காக சென்றோம் – இப்போது எந்த நிலையில் இருக்கின்றோம் – இனி எங்களால் என்ன செய்ய முடியும்? என்னும் கேள்விகளுடன், வெறும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அன்றைய சூழலில், மாபெரும் கனவுகளுடன்தான் இயங்கங்களில் இணைந்து கொண்டவர்கள்.

உண்மையில், அன்றைய சூழலில் இயக்கங்களில் இணைந்து கொண்டவர்கள் பலர், எந்த இயக்கமென்று ஆராய்ந்து இணைந்தவர்களல்லர். அப்படி ஆராய்வதற்கான தேவையும் அப்போது இருந்திருக்கவில்லை. ஏனெனில், இயக்கங்களில் சிறந்தது எது என்னும் கேள்விகளில்லாத காலமது. அனைவருமே விடுதலைக்காக போராடுபவர்கள் என்னும் பெருமை மட்டுமே மேலோங்கியிருந்த காலமது. இயக்கங்களின் தலைமைகளுக்கிடையில் மோதல்களும், பேதங்களும் ஏற்பட்ட போது, அனைத்துமே நிர்மூலமாகியது. சமூதாயத்தை தலைகீழாக புரட்டிப் போடும் கனவுகளோடு சென்றவர்கள், துரோகி, ஒட்டுக்குழுக்கள், மண்டையன் குழுக்கள், காட்டிக்கொடுப்பவர்கள், கூலிப்படைகள் இப்படியான அடைமொழிகளிலிருந்து தப்பிப்பிதற்காக, சமூதாயத்தையேவிட்டே ஓடவேண்டிய துர்பாக்கிய நிலையுருவாகியது. இறுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது.

2015இல், ஒரு சில முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு சம்பந்தனிடம் கோரினர். அப்போது சம்பந்தன் அவர்களுக்கு வழங்கிய பதில் – உங்களிலிருந்துதான், கே.பி வந்தார். உங்களிலிருந்துதான் கருணா வந்தார். நீங்கள் அரச புலனாய்வு பிரிவோடு சேர்ந்து செயற்படுதாக சந்தேகங்கள் இருக்கின்றன – உங்களுக்கு எவ்வாறு, இடம்தரமுடியுமென்று கேட்டிருந்தார். இதிலுள்ள துர்பாக்கியம் என்னவென்றால், சம்பந்தன் அவ்வாறு கூறுகின்ற போது, முன்னாள் இயக்கங்களான கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், சம்பந்தனை மறுதலிக்கவோ கண்டிக்கவோ இல்லை. ஒரு கட்சியில் ஆசனங்கள் வழங்குவது – வழங்காமல் விடுவது அந்த கட்சியின் முடிவு. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கட்டாயம் ஆசனங்கள் வழங்கத்தான் வேண்டுமென்பதல்ல.

ஆனால் அவர்களை நிராகரிப்பதற்கு சொல்லப்படும் காரணத்தில்தான், இந்த சமூதாயத்தின் மோசமான சிந்தனைப் போக்கு வெளிப்படுகின்றது. முன்னர் ஏனைய இயக்கங்களை அரச ஒட்டுக் குழுக்களென்று கூறி, அவமானப்படுத்திய போது, அமைதியாக இருந்த தமிழ் சமூகம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவமானப்படுத்தப்பட்ட போதும், அமைதியாகவே இருந்தது. மொத்தத்தில் இயங்கங்களின் இன்றைய நிலை பூச்சியமாகும். ஏனைய இயக்கங்களுக்கு எது நடந்ததோ, அதுவே இப்போது, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் நடந்திருக்கின்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, பல பிரிவுகளாக இருப்பது போன்றுதான், விடுதலைப் புலியாதரவு புலம்பெயர் தரப்புக்களும் இருக்கின்றன.

இன்று இயக்கங்களின் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைமை எனலாம். எந்த மிதவாத அரசியல் கட்சிகளை புறம்தள்ளி இயக்கங்கள் தோற்றம்பெற்றனவோ – இன்று அதே மிதவாதிகளின் தயவில் – அவர்கள் போடும் ஆசனங்களை எண்ணிக்கொண்டிருக்கும் இழிநிலையில்தான் இயக்கங்களின் கதையிருக்கின்றது. தமிழரசு கட்சியின் தயவில் அல்லது விக்கினேஸ்வரன் போன்றவர்களின் தயவில், தங்களின் எதிர்காலத்தை தேடும் நிலையில்தான் இன்று முன்னாள் இயக்கங்களின் நிலையிருக்கின்றது. இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஒரு காலத்தின் அரசியலை தீர்மானித்தவர்களால், ஏன் இன்றைய ஜனநாயக அரசியலில் சொல்வாக்கு செலுத்தமுடியவில்லை? மிதவாதிகளிடமிருந்த அரசியல் பார்வைகளைவிடவும் செழுமையான அரசியல் பார்வைகள் இயக்கங்களின் தலைமைகளிடம் இருந்தது. அன்றைய சூழலில் மிகவும் ஆழுமைமிக்க தலைவராக கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூட, 1988இல், இடம்பெற்ற, மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை. இத்தனைக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமிர்தலிங்கம் ஆதரித்திருந்தார். அந்த ஒப்பந்தத்திற்கு பின்னர்தான், தமிழ் மக்கள் நிம்மதியாக நித்திரைகொள்ள முடிந்ததென்று, உரையாற்றிய, அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு, ஒரு வலுவான தலைமைத்துவத்தை வழங்க முன்வரவில்லை.

விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டே அமிர்தலிங்கம், அவ்வாறனதொரு முடிவை எடுத்ததாக சிலர் கூறுகின்றனர். ஆனாலும் ஒரு ஆளுமைமிக்க தலைவர் தனக்கு சரியென்று படும் ஒன்றில் பின்நிற்கக் கூடாது. இந்தப் பி;ன்புலத்தில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று பின்நோக்கி பார்த்தால், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முடிவை வரலாறு, நியாயப்படுத்தியிருக்கின்றது. இந்தியாவை புறம்தள்ளி, ஈழத்தமிழர்கள் எந்தவொரு அரசியல் தீர்வையும், எக்காலத்திலும் பெற முடியாதென்னும் வரலாற்று உண்மை நிருபிக்கப்பட்டிருக்கின்றது. பத்மநாபா கூறிய ஓரு கருத்தை சில வருடங்களுக்கு முன்னர் எனது கட்டுரையொன்றில், பயன்படுத்தியிருக்கின்றேன். அதாவது, இந்தியா என்பது ஒரு கருங்கல் பாறை. அதனோடு முட்டினால் நமது தலைதான் உடையும். ஈழத் தமிழர் அரசியலை பொறுத்தவரையில் அன்றும் இந்தியா கருங்கற்பாறைதான், இன்றும் கருங்கற்பாறை – என்றுமே பாறைதான். பாறை என்பது பலத்தின் அடைமொழி. அன்று எவருமே முன்வராத நிலையில்தான், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. இன்று அந்த மாகாணசபையை பாதுகாப்பது தொடர்பில்தான் உரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த இடத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அன்றைய முடிவு, வரலாற்றால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவை எதிர்;த்து போராட்டத்தை தொடர முடியாதென்னும் நிலையில்தான், விடுதலைப் புலிகள் தவிர்ந்த அனைத்து இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்திற்கு திரும்பின. இன்று மீளவும் தமிழ் தேசிய அரசியல் இந்தியாவின் தயவிற்காகவே காத்திருக்கின்றது. ஆகக் குறைந்தது 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலே இப்போதைக்கு போதுமானதென்னும் நிலைமை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் இப்போது கூட, முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் பயணிக்க முடியவில்லை. ஒன்றாக இணைந்து மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. இதற்கு யார் காரணமென்றால் அனைத்து இயங்களின் மீதும்தான் விரல் நீள வேண்டும். இத்தனை அனுபவங்களுக்கு பின்னரும் தங்களுக்குள் உடன்பட முடியவில்லையாயின், பின்னர் எதற்காக முன்னாள் இயக்கங்கள் என்னும் அடைமொழி? தியாகங்களால் உருப்பெற்ற வரலாற்றை சுமந்து கொண்டிருக்கும் முன்னாள் இயக்கங்கள், மிதவாதிகள் போடும் ஆசனங்களை எண்ணிக் கொண்டிருப்பதைவிடவும், தங்களின் இயக்க அடையாள கட்சிகளை கலைத்துவிட்டு செல்லவது பெருமையானது.

இன்றும் இயக்கங்களை பிரதிநித்துவம் செய்பவர்களுக்கு முதன்மையான பொறுப்புண்டு. ஏனெனில் தமிழ் சமூகம் அரசியல்ரீதியில் இன்று வந்திருக்கும் இடத்திற்கு அனைவருக்குமே பொறுப்புண்டு. விடுதலைப் புலிகளுக்கு முதன்மையான பொறுப்புண்டு. உண்மையில் 2009இல் பேரழிவு ஒன்றை சந்தித்த போது, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்போர், சார்பற்ற சுயவிமர்சனமொற்றிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு யாருமே தயாராக இருந்திருக்கவில்லை. இல்லாதவர் இருக்கின்றார் என்று கூறி, அரசியல் மாயைகளை கட்டமைப்பதிலேயே சிலர் கவனம் செலுத்தினர். இதன் விளைவைத்தான் இன்று தமிழர் அரசியல் எதிர்கொண்டிருக்கின்றது. இன்று அனைத்து இயங்கங்களும் ஒரு புள்ளியில்தான் வந்து சேர்ந்திருக்கின்றன அதாவது, தியாகங்கள் பெறுமதியற்றுப் போனமைக்கு, இருப்பவர்கள் வெறும் சாட்சியாகியிருக்கின்றனர். இப்போது ஒரு வழிமட்டுமே இருக்கின்றது. அதாவது, முன்னாள் இயக்கங்களின் இப்போதைய தலைமைகள், தங்களது ஒவ்வொரு இயக்கங்களினதும், முடிவுகளுக்காக மாண்டு போனவர்களது தியாகங்களை மதிப்பது உண்மையாயின், அனைவரும் ஓரணியில் சங்கமிக்க வேண்டும். ஆளுமைமிக்க ஜனநாயக அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டும். முயன்றால், இது முடியாத காரியமல்ல.

ஒரு வரலாற்றியலாளன் என்பவன், வரலாற்றை அதன் போக்கில் சென்று நோக்க வேண்டும் என்பார் வரலாற்றியல் அறிஞர் ஈ.எச்.கார். ஒரு அரசியல் வரலாற்று மாணவன் என்னும்வகையில், கடந்தகால வரலாற்றை அதன் போக்கில் நோக்கினால், இயக்கவழிப் பாதையில் எவருமே புனிதர்களல்லர். அனைவரது பக்கத்திலும் தவறுகள் உண்டு. அந்த தவறுகள் என்னவென்பது அந்த இயக்கங்களில் எஞ்சியிருப்போர்களுக்கு தெரியும். ஆனால் அனைத்து தவறுகளிலிருந்தும் பாடங்களை படிக்க வேண்டிய நிர்பந்தத்தை வரலாறு அவர்கள் மீது சுமத்தியிருக்கின்றது. வரலாற்று சுமையை இறக்கி வைப்பது தொடர்பில்தான் அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டும். வரலாறு மனிதர்களால்தான் உருவாக்கப்படுகின்றது. மனிதர்கள் உருவாக்கிய வரலாற்றின் திசைவழியை, மனிதர்களால் மாற்றியமைக்கவும் முடியும். தமிழ் இயக்கங்களின் வரலாறென்பது, ஒரு புறம் தியாகங்களால் உருப்பெற்ற வரலாறாக இருக்கும் போது, மறுபுறம், அது ஒரு இரத்தக்கறை படிந்த வரலாறு, கொலைகளை ஆராதித்த வரலாறு, மனித உரிமைகளை போற்றாத வரலாறு, அரசியல் தீண்டாமைகளை போற்றிய வரலாறு, குற்றவுணர்விற்கு அச்சம்கொள்ளாத வரலாறு. தமிழ் அரசியல் வரலாற்றின் இந்தப் பக்கமே, மறுபுறம், இயக்கங்களின் தியாகங்களை பெறுமதியற்றதாக்கியிருக்கின்றது. முன்னாள் இயக்கங்கள் அனைத்தும், ஜனநாயக நீரோட்டத்தில் ஒன்றுபட்டால், இந்த வரலாற்று கறைகளை சீர்செய்ய முடியும் .

“குரங்கு அம்மை நோய்” சமூக பரவலாக மாறியதா? உலக சுகாதார மையம் விளக்கம்

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடா்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெளியிட்ட அறிக்கையில், குரங்கு அம்மை நோய் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

சுமாா் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. குரங்கு அம்மை நோய் பாதித்தவா்களை கண்காணித்தல், அவர்களை தனிமைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை பரவுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவை கிடைப்பதை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.

குரங்கு அம்மை நோய் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. மேலும்,குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை அடையவில்லை. ஆனால் வளா்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது என தொிவித்து உள்ளாா். குரங்கு அம்மை நோய் தொடா்பான அவசர ஆலோசனையில் பங்கேற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுக்கு நன்றி தொிவித்தாா். தொடா்ந்து விழிப்புடன் இருப்பதற்கு அவா்களின் ஆலோசனையை பின்பற்றுவோம் என அவா் தொிவித்து உள்ளாா்.

Posted in Uncategorized