நல்லாட்சிக் காலத்தில் திருடர்கள் பாதுகாக்கப்பட்டார்களா? கடும் கோபத்திற்குள்ளாகி வெளியேறிச் சென்ற ரணில்!

பிணை முறி விவகாரத்தில் அரசாங்கத்தின் பணம் கொள்ளையிடப்படவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிங்கள ஊடகத்தின் வலையொளித் தளம் ஒன்றின் செய்தியாளரால் கேட்கப்பட்ட கேள்வியால் ரணில் கடும் கோபமடைந்து செய்தியாளர் சந்திப்பை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுப்பப்பட்ட கேள்வியால் கோபத்திற்கு உள்ளான அவர், நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப் பாதுகாப்பதமை தொடர்பாகவும் இவர்கள் அனைவரும் நண்பர்கள், இவர்கள் திருடர்களை பிடிக்க மாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை தொடர்பிலும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து கோபத்திற்கு உள்ளான ரணில், தான் திருடன் இல்லை என ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியாளரிடம் கோரியுள்ளார். சிக்கிக்கொண்ட இடத்தில் தொடர்ந்தும் சிக்க வேண்டாம்.

நேர்காணலை முன்னெடுப்பது என்றால், நாம் வேறு பிரச்சினைகள் பற்றி பேசுவோம் எனவும் கோபமாகத் தெரிவித்துள்ளார். திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கூறுங்கள் இரண்டில் ஒன்றை செய்வோம் அல்லது ஊடக சந்திப்பை நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ந்தும் அந்த கேள்வி தொடுக்கப்பட்டதால், இல்லை இதனை நிறுத்துவோம். நீங்கள் படித்து விட்டு மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு நாள் வாருங்கள் எனக் கூறி விட்டு எழுந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த நேர்காணலில் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாகவும் செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார், இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, அது அரச பணம் அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனக்கும் அதில் தொடர்பில்லை என அரச தலைவர் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலும் நான் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

தமிழ் மக்களிடம் ரெலோ கோரிக்கை

இந்தியாவை நோக்கிய கோரிக்கையின் வழியாக இலங்கை அரசின் இனவழிப்புக்கு எதிராக தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு ஒருமித்த பலத்துடன் மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிராக போராட்டத்தை நடத்தி தமிழர் தரப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடு படும் அரசின் கைக்கூலிகளின் நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.

மாகாண சபை முறைமையை முற்றுமுழுதாக நீக்கி தமிழர்களை பலம் அற்றவர்களாக ஆக்குவோம் என்ற சபதத்தோடு அரசகட்டளை ஏறியவர் இன்றைய ஜனாதிபதி. புதிய அரசியல் யாப்பின் மூலம் அதை நிறைவேற்ற தயாராகி வருகிறார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மாகாணசபை முறையை அழித்து ஒழித்து தமிழர்களுக்கு இருக்கும் ஆகக்குறைந்த அதிகார முறைமையை நீக்குவோம் என்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.

அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவிற்கான தூதுவராக சென்ற மிலிந்த மொரகொட தமிழர்கள் அரசியல் தீர்வை கோரவில்லை, அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க கோருகிறார்கள் என்று கூறி வருகிறார். மாகாண சபை முறைமை ஒரு வெள்ளை யானைக்கு ஒப்பானது என்று இந்தியாவிலே தெரிவித்து வருகிறார்.

வியாத்மக என்ற சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பு மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டி தமிழர்களை எமது தாயக பூமியிலேயே அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மகா சங்க பவுத்த பிக்குகள் இதே திசையிலே பயணிக்கிறார்கள்.

13வது திருத்த சட்டம் எமது அரசியல் தீர்வு அல்ல என்பதை நாம் தெட்டத் தெளிவாக கூறியுள்ளோம். நிரந்தரமான அரசியல் தீர்வை நாம் எட்டும் வரையும் மாகாண சபை முறைமை அரசியல் யாப்பில் இருப்பது அவசியமாகும். இதை நீக்கிவிட்டாலோ அல்லது பலவீனமாக்கினாலோ தமிழர் இருப்பே இந்த நாட்டில் கேள்விக்குறியாகிவிடும்.
இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாகாணசபையின் அடித்தளமாக இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதே இதற்கு ஒரே வழி என்ற வகையில் பேரினவாத தென்னிலங்கை சிங்கள அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக எமது தமிழ் இனத்திலேயே தேசியவாதிகள் என்ற போர்வையோடு இயங்கும் அரச கைக்கூலிகள் 13 எதிர்ப்பு என்று ஒரு போராட்டத்தை அரசின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சாதகமாக செயற்படுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

தமது அரசியல் கொள்கைக்கான எந்தப் பாதையையும் வகுக்க முடியாதவர்கள் இதுவரையும் எந்த நகர்வையும் மேற்கொள்ளாதவர்கள் தமிழர்கள் ஒருமித்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை விமர்சிப்பதையே அரசியலாக கொண்டுள்ளார்கள்.

ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அதன் கீழுள்ள பிரதேச சபைகளில் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள். ஒற்றை ஆட்சியை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து பாராளுமன்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டவர்கள். எதிர்க்கிறோம் என கூறும் 13-இல் உள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருபவர்கள் . இரட்டைவேடம் போடும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையோ விடிவையோ பெற்றுத்தர முடியாது. தமது அரசியல் கையாலாகாத நிலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்பதால் வெற்று கோசங்களின் மூலம் எம்மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள். போராட்டத்துக்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள் உயிரிழந்த போராளிகளையும் மக்களையும் தமது ஈனச் செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த புனித ஆத்மாக்களின் தியாகங்களை தமது சுயலாப அரசியலுக்காக விலைபேசுகிறார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி போராட வேண்டிய தேசியவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே ஒரு போராட்டத்தை தாயக பூமியில் நடத்துவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஏற்கனவே அரசின் முகவர்கள் பலர் சிறு குழுக்களாக நின்று தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதே பாதையில் தேசியவாதிகள் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழின எதிர்ப்பு என்னும் அரசின் நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு அரசின் கனவுகளை நிறைவேற்றும் இந்த கைக்கூலிகளை நிராகரித்து தமிழரின் ஒற்றுமையை பேரினவாத அரசுக்கும் சர்வதேசத்துக்கு தெரிவிக்குமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம்! இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு திட்டம்

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு இந்தியாவின் அரச நிறுவனமான என். ரி. பி. சி. எனப்படும் நஷனல் தெர்மல் பவர் கோப்ரேஷன் லிமிற்றெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

என். ரி. பி. சி. நிறுவனம் இந்தியாவில் 60 ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்ஸை விடஅதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் சக்தி கட்டமைப் பொன்றை ஏற்படுத்துவது பெரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை விவகாரத்தை கையாள இந்தியா விசேட பிரதிநிதியாக கர்தீப் சிங் பூரி?

இலங்கை விவகாரத்தை கையாள இந்தியா விசேட பிரதிநிதியாக கர்தீப் சிங் பூரி நியமிக்கப்படலாம் எனத்  தெரிவிக்கப்படுகின்றது.

பூரி 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் திறைவேற்றப்பட்டபோது இலங்கைக்கான தூதுவராக இருந்த கே.என்.டிக்சிற்றிற்கு உதவியாக இருந்தவர். தற்போது இந்தியாவில் உள்ள அதிகாரிகளில் இலங்கை விடயத்தை முழுமையாகத் தெரிந்த சிலரில் இவரும் ஓருவர். மூத்த  இராஜதந்திரியுமாவார்.

தற்போது இந்திய மத்திய அரசில் ப.ஜ.க அரசின்  அமைச்சில் பெற்றோலிய, எரிவாயு  நகர கட்டமைப்பு,  அமைச்சராகவும் தற்போது செயல்படுகின்றார்.

இதேநேரம் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதுமலையில் இருந்து உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.01) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “ நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.

உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில். கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு நிகழ்வுகள்ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனஃ

இதன்போது உயிர் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்திய உயர் ஸ்தானிகர் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் பால் பாக்லே இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர் ஸ்தானிகரால், இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விசேட காணொளி செய்தி ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சபையோர் மத்தியில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 10 இந்திய மாணவர்கள் கல்வி கற்றுவரும் இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளிலும் இந்நாளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொள்ளவுள்ளார். அந்நிகழ்வுகளின்போது புத்த பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் விசேட பிரார்த்தனைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நண்பர்களுக்காக மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 73வது குடியரசு தின நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ்வை முன்னிட்டு இன்று முதல் 2022 பெப்ரவரி 4ஆம் திகதி வரையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

பாரிய கலாசார நிகழ்வு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாளி வளாகத்தில் இரவீந்திரநாத் தாகூரின் சிலையினை திறந்து வைத்தல், வர்த்தக ஊக்குவிப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இத்தருணத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயமும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை; பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ள நிலையில் தடை குறித்து பிரித்தானியாவும் பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற் கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் நேற்று அமெரிக்காவின் பயணத் தடை குறித்து பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரியுள்ளார்.

இந்த தடைகளின் தாக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு செய்தீர்கள் என பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளரிடம் அவர் வினவியுள்ளார்.

கடந்த ஆண்டு பெப்ரவரியில், போர்க்குற்றங்களை மேற்கோளிட்டு ஜெனரல் சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை எதிர்த்து முதலமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது அல்ல என கூறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு அடித்துக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சுகாஷ் மற்றும் காண்டீபன் ஆகியோருக்கிடையில் இந்தப் போட்டி நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வு கிடையாது அதில் நாம் வெளிப்படையாகவே இருக்கிறோம்.

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளினால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இருக்கிறோம்.

13 நாம் இந்தியாவிடம் கேட்பதற்கு காரணங்கள் இருக்கின்றது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் எமக்கு இருக்கின்ற குறைந்த பட்ச அதிகாரமாக 13வது திருத்தமே காணப்படுகிறது.

இதை இந்தியாவுக்கு நாம் வலியுறுத்தியுள்ளோம். இந்தியா இலங்கை அரசை எவ்வாறு கையாளப் போகின்றது என்பதைப் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும் போதே அறிந்து கொள்ளலாம்.

சிலர் 13வது திருத்தம் தமிழ் மக்களுக்கு தேவை அல்ல என போராட்டம் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன் 13வது திருத்தச் சட்டம் வேண்டாம் என கூறுகின்றவர்கள் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவது எதற்கு?

அதுமட்டுமல்லாது அவர்களின் கட்சிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற போட்டி மேலோங்கி இருக்கின்ற நிலையில் இவர்களின் நோக்கம் என்ன.

வடக்கு மாகாண சபையை கைப்பற்ற 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யப் போகிறார்களா அல்லது மாகாணசபையினால் வழங்கப்படுகின்ற சுகபோகங்களை அனுபவிக்க போகிறார்களா ?என்பதை பகிரங்கமாக கூற வேண்டும்.

முன்னணியினர் 13ஆம் திருத்தம் தேவையில்லை அதை அமுல்படுத்துமாறு கூறுபவர்களை எதிர்க்க வேண்டும் என வீதிகளில் கூறுவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு ஏற்படுத்தப் போகிறோம் என்பதை மக்களுக்கு கூற வேண்டும்.

சீனா ஆதிக்கம் வடக்கில் மேல் ஆகியுள்ள நிலையில்13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதுவதை உறுதி செய்யவேண்டிய தேவை இந்தியாவுக்கே அதிகம் உள்ளது .

தமிழ் மக்களின் காணிகளை அரசாங்கம் பறித்து வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் அவற்றையும் சாதிக்க முடியவில்லை.

13 இன் மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு மாகாண சபை ஒன்று நடைமுறையில் இருக்கும் போதே ஓரளவேனும் கட்டுப்படுத்தலாம்.

ஆகவே 13 வேண்டாம் என மக்களை குழப்புவதை விடுத்து சமஷ்டியை எவ்வாறு பெறலாம் என்பதை கூறுங்கள் நாமும் இணைந்து பயணிக்க தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு! – நீதி அமைச்சர் உறுதி

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் விவகாரத்துக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் கைதிகள் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண அரசு தயாராக இருக்கின்றது.” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று தொடக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் நீதிக்கான அணுகல் சேவை வேலைத்திட்டம் தொடர்பில் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைக்கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக்கைதிகள் பாதுகாக்கப்படப்போவதில்லை. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறுகின்ற காரணத்துக்காக ஒட்டுமொத்த சிறைச்சாலை கட்டமைப்பையும் தவறாகச் சித்தரிக்கவும் முடியாது.

சகல நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மாறாக இலங்கையில் மாத்திரம் இவை இடம்பெறுவதாகக் கூறவும் முடியாது. எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசு தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராயும் விதமாக ஜனாதிபதியால் நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்” – என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.01) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “ நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.