கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

முனையம் 1,320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும், முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் நாளை ஆரம்பிக்கப்படும் குறித்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முழுமையடையும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் தற்போது சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கள் வங்கியை கருப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை மீறியமையால் இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது.

கடன் பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு மக்கள் வங்கி அறிவித்திருந்தது.அத்தோடு இன்றைய தினத்திற்குள் குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி நேற்று குறிப்பிட்டிருந்தது.

சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில், தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.இந்த நிலையிலேயே நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என சீனா கோரியிருந்தது.

எனினும் அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி பின்வாங்கியிருந்தது.இதன் காரணமாக மக்கள் வங்கியை கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள்

நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருவதை இந்த விஜயங்கள் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ , துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு , இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின்  இராஜாங்க அமைச்சர் லார்ட்  அஹ்மத் மற்றும் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங்  ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பிரித்தானிய பாராளுமன்றில் தைப்பொங்கல் விழா – 2022

கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பண்டிகைகளுடன் பாராளுமன்றத்துடன் பொங்கலைக் கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகம் உங்களை நட்புடன் அழைக்கிறது.
இலண்டன் சட்டசபையால் (London Assembly) தை பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தியதை கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகத்தால் இந்த விழா ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
தைப் பொங்கல் என்பது தமிழ் சமூகத்தின் பூர்வீக அறுவடைத் திருநாளாகும், இது பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 02 டிசம்பர் 2021 அன்று London Assembly இனால் ஜனவரி மாதத்தினை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனை கொண்டாடுவதற்கும் மற்றும் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கும், இவ்வருடம் Westminister இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம் உங்களை பிரித்தானிய தமிழ் சமூகம் அழைத்து நிற்கின்றது.
இடம்: Central Hall Westminster, Storey’s Gate, London, SW1H 9NH
திகதி: 17.01.2022
நேரம்: மாலை 6.00 மணி – மாலை 8.00 மணி
அனுமதி: இலவசம் – முற்பதிவு அவசியம்
முன்பதிவுகளிற்கு: https://www.eventbrite.com/e/pongal-in-westminster-2022-tickets-241748094057 இவ்விணைப்பினை அழுத்தி அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
தொலைபேசி இலக்கங்கள்:
07912253418
07737684104
Posted in Uncategorized

அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு – ரெலோவின் இளைஞர் அணித்தலைவர் சபா குகதாஸ்

ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில் ஒரு ஐனநாயகத் தேர்தலை எதிர் கொள்ள முடியாது தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சமே ஒத்திவைப்புக்குகான பிரதான காரணம் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள அவர்,

கொரோனா அச்சத்தின் மத்தியில் பாராளுமன்ற தேர்தலை நடாத்திய ஐனாதிபதி தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு கொரோனா அச்ச நிலை ஓரளவு சாதாரண நிலையை அடைந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடையும் நிலையில் அதன் ஆயுட் காலத்தை நீடிக்கும் வர்த்தமானியை வெளியிட்டார் என்றால் அவர்களால் தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.

வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க விட்ட சாதனையின் அறுவடையை இனி வரும் தேர்தலில் பெற வேண்டி வரும் என்ற தெளிவு ஆட்சியாளர்களுக்கு புரியும் அந்தப் புரிதலின் முடிவு தேர்தல் ஒத்திவைப்பு.

2024 ஆண்டு வரை தேர்தல் ஒன்றை எதிர் கொள்ள தற்போதைய ஆட்சியாளர்களினால் முடியாத நிலைமை உருவாகி விட்டது என பல தரப்பும் கூறி வருகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறுவது போல மாகாணசபை மற்றும் உள்ளூராட்ச்சி மன்றங்களின் தேர்தல்கள் நடாத்தப்படாது ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை சர்வசன வாக்கெடுப்பு மூலம் தற்போதைய அரசாங்கம் கால நீடிப்பு செய்ய முயற்சிக்கலாம் என கூறுகின்றனர்.
அன்று ஐெ ஆர் செய்த மாதிரி இன்றைய ஐீ ஆர் செய்வதற்கான வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அவற்றின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

41 நகர சபைகள், 24 மாநகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ஜனாதிபதி

10 அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் திருத்தியமைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதிய 2187/27 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி,

பொருளாதாரக் கொள்கை மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியம், புத்தசாசன நிதியம் மற்றும் மத்திய கலாசார நிதிச் சட்டம் ஆகியவை புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுவாழ்வுக்கான இராஜாங்க அமைச்சு அகற்றப்பட்டு, அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் சிறப்பு செயல்பாடுகளும் நீதி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளன.

கல்விச் சீர்திருத்தங்கள் திறந்த  பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த தேசியக் கல்வி ஆணைக்குழு மற்றும் தேசியக் கல்வி ஆணையச் சட்டம் (எண். 1991) ஆகியவை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சின் விசேட முன்னுரிமைகளின் கீழ் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை இலங்கை முதலீட்டுச் சபை உள்ளடக்கியுள்ளது.

1980 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் (ஒருங்கிணைத்தல்) சட்டம் கைத்தொழில் அமைச்சின் நிறுவன மற்றும் சட்டக் கட்டமைப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  இராஜாங்க அமைச்சின்  கீழ் இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவை பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

இலங்கையின் மிகப் பழமையான கோட்டைகளில் ஒன்றாகக்கருதப்படும், மட்டக்களப்பு கோட்டையின் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு கோட்டையினை அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் ஆராயும் வகையிலேயே இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது குறித்த கோட்டையின் புனரமைப்பு பணிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது 2019ம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவரும் கோட்டை புனரமைப்பு பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த கோட்டையினை சுற்றுலாத்தளமாக மாற்றும் வகையிலான செயற்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

டச்சுக் கோட்டை கட்டுவதற்கான ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 400 ஆண்டு நிறைவினை முன்னிட்டு, திறன் உள்ளடங்கிய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் S4IG நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட நூல் மற்றும் மட்டக்களப்பு டச்சுக் கோட்டையின் அபிவிருத்தி எனும் நூலும் அவுஸ்திரேலிய உயரிஸ்தானிகர் டேவிட் ஹெலியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், S4IG நிறுவனத்தின் முகாமையாளர், S4IG நிறுவனத்தின் பிரதி குழுத் தலைவர் கமலநாதன் ஜெயதாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பயணத்திட்டங்கள் பலவற்றுக்கு உதவி வழங்குவதற்கு அவுஸ்ரேலிய தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று திங்கட்கிழமைகாலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது.இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் அரசாங்கம்! – எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் நிலைமைக்குத் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார்.

விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர் மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும். எதையும் செய்வதற்கு முன்னும் மக்கள் வாழ வேண்டும் என்பதை நான் அரசாங்கத்திற்கு கூற விரும்புகிறேன்.

மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் வழங்குவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.எரிபொருளை இழந்தால் நாட்டின் தொழில் அமைப்பும் சமூக அமைப்பும் சீரழியும்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், டொலர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு திறன் இல்லை, இனங்கள், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை பரப்பி அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவதுதான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயலாகும்.

அரசாங்கம் அவ்வாறு செயற்படும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு மூச்சைக் கொண்டு வந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மறுபுறம், தகவல் தொழில்நுட்ப புரட்சி திட்டம் திட்டத்தை பாடசாலை கட்டமைப்புக்கு கொண்டு வந்து நவீன கல்வி, கணினி கல்வியறிவு, தகவல் தொடர்பு கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் அதேவேளையில், நல்ல சுகாதாரத் திட்டங்களையும், நல்ல கல்வித் திட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். இதுதான் அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் உள்ள வித்தியாசம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized