ஈரானுக்கு ‘தேயிலை’ கொடுத்து கடனடைக்க முஸ்தீபு

ஈரானிடம் எண்ணை பெற்ற கடன் 250 மில்லியன் டொலரை இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்து அடைப்பதற்கு அரசு முயன்று வருகிறது.

மாதாந்தம் 55 மில்லியன் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்து குறித்த கடனை முடிக்கவுள்ளதாக அமைச்சது ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார்.

2022ம் வருடம் அரசாங்கம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளார்.

பிரதமருடன் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

நாளை வௌ்ளிக்கிழமை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பிரதமர் ஈடுபடவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை திருமலை, திருப்பதி தேவசம் போர்ட் முன்னெடுத்துள்ளது.

Posted in Uncategorized

25 மாதங்களில் விவசாய அமைச்சிற்கு 5 ஆவது செயலாளர் நியமனம்

விவசாயத்துறை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

D.M.L.D. பண்டாரநாயக்க, விவசாய அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர் கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்தாவது செயலாளராவார்.

இதனிடையே, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி மூலம் மாத்திரமே அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

உண்மையை உரைத்தமையே தாம் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தாம் வினவிய போது, அவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்ததாக சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக ஷானி அபேசேகர மனுத்தாக்கல்

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய செயற்படத் தவறியதன் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணையாளர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்மானித்து அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஏனைய பிரதிவாதிகளாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையின் தலைவர் நிஸங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழு தமக்கு விடுத்த அழைப்பை ஆட்சேபித்து ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்தாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, நிஸங்க சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில், தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்ததாக ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நீதிமன்றத்தில் வாக்குறுதியளித்திருந்த நிலையில், பிரதிவாதிகள் பரிந்துரைகளை முன்வைத்ததன் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ளதாக அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் நீதிமன்ற அவதூறு செய்துள்ளதாக தீர்மானித்து, அரசியலமைப்பின் 105 – 3ஆம் சரத்திற்கு அமைய அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்துமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளை குற்றவாளிகளாக தீர்மானித்து தண்டனை வழங்குமாறும் ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது இலங்கைக்கு பேராபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்துள்ளார்.

யார் எவ்வாறான யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது மிக ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார பிரச்சினையை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நாட்டுக்கு முதலீடுகளோ சுற்றுலா பயணிகள் வருகையோ இடம்பெறாமல் விடலாம்.

அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதற்குச் சென்றால் அவர்கள் கண்டிப்பாக வட்டி வீதத்தை அதிகரிப்பதாகவும் நாணயத்தின் பெறுமதியை குறைக்க இடமளிக்குமாறும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யுமாறும் ஓய்வூதியக் கொடுப்பனவை குறைக்குமாறும் கூற வாய்ப்புண்டு.

அதுமட்டுமன்றி பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டி வரும். நாட்டின் நெருக்கடி நிலைமையைச் சிறந்த முகாமைத்துவம் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ். மாணவன் கொலை: சகோதரனால் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தற்கொலை என மூடிமறைக்க முற்பட்ட சகோதரனின் கொலைச் சம்பவத்தை வெளிக்கொண்டுவர  முனைவதன் காரணமாக, இனந்தெரியாத நபர்களினால் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொடர்பில், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் சகோதரனால், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று (21) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், 17.11.2020 அன்று, அவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு, தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை பொலிஸார் தற்கொலை என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் அவரது சகோதரன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் பணிப்புக்கமைய, யாழில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த விசாரணைக் குழு, இவ்வாண்டு, மார்ச் மாதம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், உறவினர்களால் இக்கொலை தொடர்பில் சந்தேகநபர்களும், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதாவது, அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு, கதவு திறந்தவர்கள் ஊடாகவே மேற்படி மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவந்தது.

ஆனால், அதற்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு சமூக ஊடகத்தில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததுடன், அவர்களின் ஊரிலும் பலருக்கு மாணவன் இறந்தமை தொடர்பான தகவல் தெரிந்திருந்தது.

இது தொடர்பான தகவல்களை விசாரணை குழுவுக்கு வழங்கியும் தற்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் சில இல்லை எனவும் மீண்டும் தகவல் தருமாறும் விசாரணைக் குழுவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) விசாரணை பிரிவுக்கு சென்று தாங்கள் வழங்கிய தகவல்கள் எவ்வாறு தவறவிடப்பட்டது என பொலிஸாருடன் முரண்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் பின்தொடர்ந்ததன் காரணமாக அவரது சகோதரன் தனது வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதுவும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவரது சகோதரன் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று முன்தினம், (21) மாலை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Posted in Uncategorized

“நடக்க கூடாது” என விரும்பியவர்களை தோல்வியுற செய்த நிகழ்வு – மனோ கணேசன்

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. “நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு குறித்து தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரவந பதிவில்,

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.

“நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு.

தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், இரண்டு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

முதலாவது, பாரத பிரதமருக்கான கடிதம். இரண்டாவது, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியல்.

நேற்றைய ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே.

ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை. ஆவணங்கள் இன்னமும் நகல் கட்டத்திலேயே இருக்கின்றன. இவை இன்னமும் திருத்தப்பட இடம் உண்டு.

இறுதி வடிவங்கள் தேவையான நேரங்களை எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்டதும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவார்கள்.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கெளரவமாக, சமத்துவமாக, வாழ வழி தேடும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.

அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவு, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன். இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய இந்த கட்டத்தின் உண்மை செய்திகளை பறிமாறுகிறேன். எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்.

Posted in Uncategorized

17 புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!

புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, ஹங்கேரியா, மொரிடானியா, தூனிசியா, ஆர்ஜென்டினா, டொமினிக் குடியரசு, ஸ்பெயின் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் சியெரா லியோன், ருவாண்டா, பொஸ்ட்வானா, மோல்டா, கயானா குடியரசு மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் புதிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிய நியமனங்களைப்  பெற்றுள்ளனர்.

1.சியெரா லியோன் உயர்ஸ்தானிகராக எர்னஸ்ட் மைம்பா (Ernest Mbaimba)

2.ஜோர்தான் தூதுவராக மொஹமட் எல்-கைட்  (Mohamed El- Kayed)

3.கொரியா ஜனநாயக மக்கள் குடியரசின் தூதுவராக சோய் ஹுய் சோல்  (Choe Hui Chol)

4.ருவாண்டாவின் உயர்ஸ்தானிகராக திருமதி முகங்கிரா ஜாக்குலின் (Mukangira Jacqueline)

5.பொஸ்ட்வானாவின் உயர்ஸ்தானிகராக கில்பர்ட் ஷிமேன் மெங்கோல் (Gilbert Shimane Mangole)

6.மோல்டாவின் உயர்ஸ்தானிகராக ரூபன் கௌசி (Reuben Gauci)

7.ஹங்கேரியாவின் தூதுவராக அண்ட்ரெஸ் லஸ்லோ கைரலி (Andras Laszlo Kiraly)

8.மொரிடானியாவின் தூதுவராக மொஹமட் அஹ்மத் ராரா (Mohamed Ahmed Rara)

9.தூனிசியாவின் தூதுவராக திருமதி ஹயத் தல்பி பிலேல் (Hayet Talbi Bilel)

10.ஆர்ஜென்டினாவின் தூதுவராக ஹியூகோ ஜேவியர் கோபி (Hugo Javier Gobbi)

11.கயானா குடியரசின் உயர்ஸ்தானிகராக சர்ரண்டாஸ் பெர்சாட் (Charrandass Persaud)

12.எகிப்தின் தூதுவராக மகெட் மொஸ்லே நஃபீ (Maged Mosleh Nafei)

13.டொமினிகா குடியரசின் தூதுவராக டேவிட் இம்மானுவேல் பக் (David Emmanuel Puig)

14.நைஜீரியாவின் உயர்ஸ்தானிகராக அகமத் சுலே (Ahmed Sule)

15.இந்தோனேசியாவின் தூதுவராக திருமதி டேவி கஸ்டினா டோபிங் (Dewi Gustina Tobing)

16.ஸ்பெயினின் தூதுவராக ஜோஸ் மரியா டொமிங்குஸ் (Jose Maria Dominguez)

17.ஸ்லோவேனியாவின் தூதுவராக திருமதி மாதேஜா கோஷ் (Mateja Ghosh)

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் பிரதம ஒருங்கணைப்பு அதிகாரி துஷார ரொட்ரிகோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இழந்தது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை இழந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரு தடவைகள் தோல்வியடைந்தது. இதனையடுத்து, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

தமிழ் கூட்டமைப்பு சார்பில் சோ.சத்தியேந்திரனும் சுதந்திரக் கட்சியின் த.பார்தீபனும் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இருவரும் தலா 12 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

சபையின் 26 உறுப்பினர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் பிரசன்னமாகவில்லை.

13 ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தில் தமிழ் பேசும் தரப்பு இணக்க நிலை ஏற்பட்டுள்ளது

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று கொழும்பில் சந்தித்து கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில் தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆவண வடிவம் தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டல் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழ்ப் பேசும் தரப்புக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்ததுடன், 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணமொன்றை சகல தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க தீர்மானத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அழைக்கப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை சிறப்பம்சம்.

புளாட் சார்பில் சித்தார்த்தன் தமக்குப் பதிலாக ஆர்.ராகவனை அனுப்பியிருந்தார். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தமது சார்பில் அமீர் அலியை அனுப்பியிருந்தார்,சி.வி விக்னேஸ்வரன்,பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

கூட்டத்துக்கு தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார்.

தமிழரசு தரப்பினால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் வயதில் மூத்த தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து தொடர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் இரண்டு ஆவணங்களையும் ஒன்றிணைத்து புதிய நகல் வடிவத்தை தயாரிப்பதில் நேற்று மாலை முழுவதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர்.

மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, குருசாமி சுரேந்திரன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மாவை,ஜனா,சுமந்திரன், ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணி அளவில் நகல் வடிவதற்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது. தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு விடயங்களையும், அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து, புதிய நகல் ஆவண வடிவம் தயாரிக்கப்பட்டது.

ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அதனை அவர் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பார். அவையும் அவற்றை ஆராய்ந்து சம்மதித்த பின்னர், அது பகிரங்கப்படுத்தப் படுவதோடு, இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தை இறுதிப்படுத்தி அதில் சகல தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கவுள்ளதாக இந்த செயற்பாடுகளின் ஏற்பாட்டாளரான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செம்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Posted in Uncategorized