சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியக் குழு – நெருக்கடியில் அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக் குழுவினர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள சந்தர்ப்பத்தில் பிரதான பத்திரிகைகளின் ஆசிரியர்களை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருக்கும் சம்பவத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தென்னிலைங்கையின் பிரபல சட்டத்தரணியான லால் விஜேநாயக்க, பயங்கரவாத தடைச் சட்டமும் சர்வதேச தரத்திற்கு மாற்றுவதை அரசாங்கம் இழுத்தடிப்பதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தை பாதுகாத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நாட்டின் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது.

எனினும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் இந்த சலுகை நிறுத்தப்பட்டதோடு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் பல வாக்குறுதிகளை அளித்து மீளப்பெற்றுக்கொடுத்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த வாக்குறுதிகளில் உள்ள நிலையில் அவற்றை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றும்படி தெரிவிக்கப்பட்டதோடு அவற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கே விசேட குழு விஜயம் செய்துள்ளது.

பயங்கரவாத் தடைச் சட்டம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது. எனினும் போர்க்காலத்திலிருந்து இந்த சட்டம் எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்றது. உலகம் ஏற்றுக்கொண்ட ரீதியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் வகையிலான வரைபு தயாரிக்கப்பட்ட போதிலும் அது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு தற்சமயம் இலங்கையில் இருக்கின்ற நிலையில்தான் இரண்டு பிரதான சிங்களப்பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இப்படியான சம்பவங்கள் பாரிய தாக்கத்தை செலுத்தும். எனவே சலுகையை தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற சம்பவங்கள் மீள்நிகழாமைக்கான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், பயங்ககரவாதத் தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றன தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு – யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு

இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார்.

பொலநறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும்.

வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இந்த பாரம்பரிய பிரதேசமானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது.

இந்த பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன.

மக்கள் வாழாத இந்த கிராமங்கள் சிலவற்றின் ஒதுக்குப்புறங்களில் கைவிடப்பட்ட வயல் நிலங்கள், காடுகள், சிறு மலைகள், ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் என்பன காணப்படுகின்றன.

இந்த ஆதாரங்கள் இக்கிராமங்களுக்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று மரபு இருப்பதை உறுதி செய்வதாக உள்ளன. இந்த உண்மையை இக்கிரமங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற இந்து, பௌத்த ஆலயங்கள், ஆலய எச்சங்கள் மேலும் உறுதி செய்கின்றன.

தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?
அவ்வாறான வரலாற்றுப் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றே தற்காலத்திலும் வழிபாட்டிலிருந்து வரும் தம்பன்கடுவையில் உள்ள சித்திரவேலாயுதர் கோயிலாகும்.

வரலாற்றுக் கதைகளில் இருந்து…
இந்த ஆலயம் தோன்றிய காலத்தை துல்லியமாகக் கணிக்கக் கூடிய நம்பகரமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் இந்த பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளின் மூலம், இந்த ஆலயம், முன்பொரு காலத்தில் ஆகம மரபு சாராத கிராமிய ஆலயமாக இருந்துள்ளதாக தெரிய வருகிறது.

வேல் சின்னத்தை கொண்டிருந்த இந்த ஆலயம், காலப்போக்கில் ஆகம மரபில் கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக வளர்ந்துள்ளதை உறுதிப்படுத்த முடிவதாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கூறுகிறார்.

அண்மை காலங்களில் இந்த ஆலய கட்டமைப்பில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகப் பெரிய ஆலயமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மீள் உருவாக்கப் பணிகளின் போது கிடைத்த பழைய ஆலயத்தின் கட்டடப்பாகங்களும், சில வழிபாட்டுச் சின்னங்களும் புதிய ஆலயத்தில் வைத்துக் கட்டப்படாது அவை ஆலயத்தின் ஒரு பகுதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் ஒன்றே பழைய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டயத்துடன் கூடிய அலங்காரத் தூணாகும்.

மன்னம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களை தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வரும் இப்பிரதேசத்திற்குரிய வரலாற்று ஆர்வலர் நகுலேஸ்வரன் பிரவின் என்பவர், இவ்வாலயத்தில் காணப்படும் செப்பு பட்டயத்தின் புகைப்படப் பிரதியொன்றை ஊடகவியலாளரும், அரசியல்வாதியுமான உமாச்சந்திரா பிரகாஷின் ஊடாக தனக்கு அனுப்பி வைத்ததாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

இந்த செப்பு பட்டயம் ஏறத்தாழ ஐந்தடி நீளமான தூணில் பொருத்தப்பட்டுள்ளது. தூணின் தொடக்கத்திலும், முடிவிலும் அரைவட்ட தாமரை வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் தூணின் நடுப்பகுதில் முழுவடிவத்தில் வடிவமைக்கப்பட்ட தாமரை புடைப்புச் சிற்பத்திற்கு வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் சாசனங்கள் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

‘உலகின் முதல் கோயில்’: மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள்
சாசனம் அக்கால மொழிவழக்கில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“(1) திருமுருக்கர் ஆலியம் ஆரு (2) முக சுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கப்படி (4) பலபேர் செத்து யா (5) சக தற்மம்” என முடிகின்றது. தெலுங்கு வரிவடிவத்திலும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்ட சாசனத்தைப் படிப்பதற்கு அம்மொழியில் புலமையுடைய அறிஞர்களான பேராசிரியர் வை. சுப்பராயலு, பேராசிரியர் பொ. இரகுபதி, கலாநிதி சு.இராஜகோபால் ஆகியோருக்கு சாசனத்தின் புகைப்படங்களை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அனுப்பி வைத்துள்ளார்.

அவர்கள் மூவரும் தமிழ்ச் சாசனத்தில் சொல்லப்பட்ட செய்தியையே பெரும்பாலும் அக்கால மொழிநடைக்கு ஏற்ப தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

அதன் வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “(1) திருமுருகா ஆலயம் ஆரு (2) முகசுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கலப்படி (4) பலபேர் சேர்த்து யா (5). சக தற்மம்” என முடிகின்றது.

இரு மொழிச் சாசனங்களும் சொல்லும் செய்தி தம்பன் கடுவையில் உள்ள சித்திர வேலாயுத கோயில் கற்பக்கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்திற்கு வெங்கலப் படியை அமைப்பதற்கு பலரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் இரந்து (யாகசம் செய்து) பெற்றதை தானமாக வழங்கியது பற்றிக் கூறுகின்றன.

18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
பேராசிரியர் இரகுபதி தமிழில் உள்ள சாசனத்தின் தொடக்க நிலை வரிவடிவங்களில் புள்ளியிடாமலும், தொடர்ந்து வரும் வரிவடிவங்களில் புள்ளியிடப்பட்டும் சாசனம் எழுதப்பட்டிருப்பதால் இச்சாசனம் எழுதப்பட்ட காலம் 18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.

இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு தேசத்துக் கோயில்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் சில பொறிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அவை பெரும்பாலும் தமிழில் எழுதப்பட்டவை. ஆனால் தம்பன்கடவை சித்திரவேலாயுதர் ஆலயத்து செப்புபட்டயத்தில் தமிழோடு தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளமை புதிய வரலாற்றுச் செய்தியாகக் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியாக நோக்கப்படவேண்டியவை.

15ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு தேசம் பெரும்பாலும் கண்டி அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிராந்தியமாகவே இருந்துள்ளது.

இவ்வரசின் ஆதிக்கம் அநுராதபுரம், பொலநறுவை இராசதானியின் எல்லை வரை பரந்திருந்தது. கண்டியின் கடைசி சிங்கள மன்னன் ஸ்ரீவீரபராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் அவ்வரசில் ஆட்சி புரிந்த ஸ்ரீவிஜயராஜசிங்கன் (1739- 1747), கீர்த்தி ஸ்ரீஇராஜசிங்கன் (1747-1782), ராஜாதிராஜசிங்கன் 1782-1798), ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் (1798- 1815) ஆகியோர் தமிழக மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களின் ஆட்சி மொழி தமிழக இருப்பினும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்பவர்களில் தாய் மொழி தெலுங்காகவும் இருந்துள்ளது.

இதனால் இவ்வரச அதிகாரிகளின் பங்களிப்பால் தம்பன்கடவை சித்தியவேலாயுதர் ஆலயத்து வெண்கலப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கும் இடமுண்டு. ஆனால் ஆலயத்தில் உள்ள செப்பு பட்டயம் அவ்வாலய வெண்கலப் படியானது பலர் ஒன்று கூடி பல இடங்களுக்கு சென்று மக்களிடம் இரந்து (யாசகம் பெற்று) பெற்ற நிதி உதவியைக் கொண்டே வெண்கலப் படி அமைக்கப்பட்டதாகக் கூறுவதால் இப்பணியைக் கண்டி ஆட்சியாளர்களுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் ஆனால் இலங்கையில் கண்டி இராசதானிக்கு முன்னரே தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

சிறப்பாக யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த படைப்பிரிவுகளில் சுதேச தமிழ்ப்படை வீரர்களுடன் பிறநாட்டுப் படைவீரர்களும் இணைந்து பணியாற்றியமைக்குப் பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

அவர்களுள் தென்னிந்திய கன்னட, தெலுங்குப் படைவீரர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனர். இவ்வரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இப்படை வீரர்களில் ஒரு பிரிவினர் தமிழ் பேசும் மக்களாக இங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

இவர்களில் சிலர் தமிழர்களுடன் இணைந்து வட இலங்கையில் உள்ள ஆலயங்கள் சிலவற்றில் பண்டாரம் என்ற பெயரில் அவ்வாலயங்களை மேற்பார்வை செய்பவர்களாகவும், பூசகர்களாகவும், மாலைகட்டுபவர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களை கோயில் பண்டாரம் என்ற பெயரில் தனியொரு சமூகமாகவும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் வழிவந்தவர்கள் தற்காலத்தில் மொழியால் தமிழ்ச் சமூகங்களுடன் இரண்டறக் கலந்திருந்தாலும் பண்பாட்டால் சில தனித்துவமான அம்சங்களுடன் யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இது கிழக்கிலங்கைக்கும் பொருந்தும்.

கிழக்கிலங்கையில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களின் தோற்றப் பின்னணிகள், மக்களின் சமய நம்பிக்கைகள், சடங்குகள், கிரிகை முறைகள், வழிபாட்டு மரபுகள் என்பவை சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவை. இங்கு தோன்றிய பாசுபத சமயத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு.

இவ்வாலயங்களில் நீண்ட காலமாக பிராமணர்கள் அல்லாதவர்களே பூஜைசெய்து வந்துள்ளனர். இதற்கு கோணேஸ்வரர் கல்வெட்டே சிறந்த ஆதாரமாகக் காணப்படுகின்றது. மேலும் இங்கிருக்கும் ஆலயங்களை நிர்வகிப்பவர்கள், மேற்பார்வை செய்பவர்கள் பொதுவாக வண்ணக்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இம்மரபு 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றி வளர்ந்ததை அண்மையில் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனமும் உறுதிப்படுத்துகின்றது.

இந்நிலையில் மட்டகளப்பு பூர்வசரித்திரம் என்ற மூல நூலில் இங்குள்ள ஆலயங்களில் பணி செய்த சமூகங்களில் ஒன்றாக பண்டாரத்தையும் குறிப்பிடுகின்றது. அப்பண்டாரங்களில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதை உறுதிபடுத்த மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் இப்பிரதேசத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சில சமூகங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதற்கு சில ஆதாரங்கள் காணப்படுகின்றன.

மட்டகளப்பு தேசத்து வாய்மொழி வரலாற்றுக் கதைகள் அப்பிரதேசத்தில் தோன்றிய புராதன ஆலயங்கள் சிலவற்றை அங்கு வாழ்ந்து வரும் வேடர் அல்லது பழங்குடி மக்களுடன் தொடர்புடுத்திக் கூறுகின்றன. நீண்டகாலமாக ஏனைய சமூகங்களில் இருந்து விலகி காடுகளிலும், மலைகளிலும், இயற்கையான குகைகளிலும் வாழ்ந்த இம்மக்களில் ஒரு பிரிவினர் அண்மைக்காலத்தில் நடைபெற்ற யுத்தங்களுக்கு அஞ்சி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்த போது ஏனைய மக்கள் தொடர்ந்தும் தமது பூர்வீக இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்கள் இங்குள்ள இம்மக்களின் தனித்துவமான வாழ்வியல் அம்சங்கள் பற்றி அண்மையில் விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் கா.குகபாலன் அம்மக்களின் பேச்சு மொழியில் உள்ள பல சொற்களைப் புரிந்து கொள்வதற்காக அம்மொழியைப் பதிவு செய்து தமிழக அறிஞர்களான பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர் விஜயவேணுகோபால் ஆகியோருக்கு அனுப்ப வைத்தார். அம்மொழிப் பதிவை விரிவாக ஆராய்ந்த இரு அறிஞர்களும் அம்மொழியில் பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்களே காணப்படுவதாக அடையாளப்படுத்தியிருந்தமை இவ்விடத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இப்பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் மட்டக்களப்பின் வாகரை போன்ற இடங்களில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையிலான குழு களவாய்வு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அம்மக்கள் சிறு குடிசைகளிலும், குகைளிலும் வாழ்ந்து வருவதைக் காணமுடிந்தது.

இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மன்னம்பிட்டி தம்பன்கடுவையில் பண்டைய குடியிருப்புகள், வயல் நிலங்கள் இருந்த இடங்கள் அண்மைக்காலங்களில் கைவிடப்பட்டு அவ்விடங்களின் ஒருபகுதி காடுகள், மலைகள், குகைகள் என்பவற்றைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது.

அத்துடன் அங்குள்ள குகைகளில் செயற்கையான சில மாற்றங்களைச் செய்து அண்மைக்காலம் வரை பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அச்சமூகத்தினரைச் சார்ந்த சில குடும்பங்கள் தற்காலத்திலும் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது.

இதனால் அவர்களின் தாய் மொழி தெலுங்காக இருந்திருக்கலாம். இவ்வரலாற்றுப் பின்னணியில் இங்கிருக்கும் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் காணப்படும் தெலுங்கு மொழிச் சாசனத்தை இங்கு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடமுண்டு.

இருப்பினும் இக்கருத்தை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

Thanks – https://www.bbc.com/tamil

அழைத்தது மனித உரிமை ஆணைக்குழு! ஓடி ஒளிந்த “லொகான் ரத்வத்த”

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து முழந்தாளிட வைத்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்காக அழைந்திருந்தது. இவரை நேற்றைய தினம் விசாரணைக்காக அழைத்திருந்தது.

எனினும் அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என தெரியவருகிறது.

வேறொரு தினத்தில் தனக்கு அனுமதி அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகள் முன்னாள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த லொகான் ரதவத்த அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம் அரசியலில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தயிருந்தது.

அதன் பின்னர் அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க சிறைச்சாலைகள புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் பதவியினை விலகியிருநதார்.

இத்தாலிக்கு பயணமாகியிருந்த சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு திரும்பியதும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம் சஜித் கோரிக்கை

ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த விடயம் குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நீதியமைச்சரினை சந்தித்து பேசியது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும்,  நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் சலுகை குறித்து சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது, குறிப்பிட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர்கள் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் எந்த ரயில்களும் இயக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்குவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், வழமை போல மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால், வடமாகாண உள்ளூராட்சி   ஆணையாளருக்கு இன்று  (29) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று  (28), கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ரிட்   மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை இன்று (29) ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழாமினர் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இன்று (29) நடைபெற்ற நிலையிலேயே,  இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாகக் கருத்திடக் கூடாது – டெலோ செயலாளர் நாயகம் ஜனா

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த கிழக்கிலங்கை செங்தியாளர் சங்கம் முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்  தலைவர்  பிரபாகரன்  கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஒரு பாதுகாப்புப் படையினரின் அறணை முற்றுமுழுதாக அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு அதனை முதலாவதாக  காணொளியாகப் படைத்தது. 1984ம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு.

ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்து வருகிறது..

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று.

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சை கேட்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் 1685வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இங்கு இருக்கும்போது, ​​அவர்கள் தமிழர்களின் பேச்சைக் கேட்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்படட குழந்தைகள் உட்பட, அரசியல் தீர்வு மட்டுமே தீவின் முழுப் பிரச்சினையையும் தீர்க்கும் என்று நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து சொல்ல விரும்புகிறோம்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சை கேட்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தக்கூடாது, ஆனால் அரசியல் தீர்வு போன்ற பெரிய படத்தை பார்க்கவும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு ஒரு பகுதியாக இருந்ததை நாங்கள் அறிவோம், இது இலங்கையில் சிங்களவர்கான ஒரு உதவி.
போரின் போது, ​​இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது, ஐரோப்பிய ஒன்றியம் என்பது இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களின் ஒரு பகுதியாகும்.
சிங்கள இராணுவம், காவல்துறை மற்றும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஒரு அரசியல் தீர்வு தேவை.
பொழுது சாயுதே, நாம் இன்னும் 2 ஆண்டுகள் காத்திருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும். வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி இலங்கை அரசின் வேகம் கூடிக்கொன்று போகிறது .
இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளை நாங்கள் நம்பவில்லை. அவர்கள் குரல் எழுப்ப பயப்படுவதாகத் தெரிகிறது, மேலும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
சம்பந்தனுக்கு கொழும்பில் மாளிகை எப்படி கிடைத்தது என்று ஒவ்வொரு தமிழர்களும் கேட்கிறார்கள். இந்த மாளிகை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினது. இந்த மாளிகை சம்பந்தனை அமைதிப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  கொடுக்கப்பட்ட லஞ்சம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள்.
ஐரோப்பியர்கள் உள்ளூர் தமிழர்களின் கிராமத்திற்குச் சென்று, போரில் பாதிக்கப்பட்டவர்களுடன், குறிப்பாக காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களுடன், தமிழர்களின் துன்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் பேசுவது, குறிப்பாக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தமிழர்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள்.
ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது உட்பட ஐரோப்பிய ஒன்றியம் சரியானதைச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.