இலங்கையுடனான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்: சீன தூதரகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதன் பின்னரான கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டு வந்துள்ளன. தற்போதும் பல்வேறு சவால்கள் காணப்படும் நிலையில், அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தப்படும் என்று சீனத்தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1921 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி உதயமானது. ஆரம்பத்தில் சுமார் 50 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அந்தக் கட்சி கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 91 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி உலகின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் பெருமளவில் பங்களிப்புச்செய்யக்கூடிய நாடாக சீனா சிறந்த முறையில் வழிநடத்திச் செல்கின்றது.

கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் துணைநின்று செயற்பட்டு வந்துள்ளன. தற்போது பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையே மேலும் வலுப்படுத்தப்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைத்திருப்பும் சீன – இலங்கை நட்புறவும் நெடுங்காலத்திற்குத் தொடரவேண்டும் என்று சீனத்தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வருடப்பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஸென்ஹொங் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ‘பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த சீனாவில் 1921 ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம்பெற்றது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் உருவாக்கமானது மிகவும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு கடந்த 72 ஆண்டுகளாக சீனாவை ஆட்சிசெய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியானது ஆரம்பத்தில் 50 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்து, இப்போது 91 மில்லியன் உறுப்பினர்களுடன் விரிவடைந்திருக்கிறது’ என்று சீனத்தூதுவர் விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் வறுமையிலிருந்தும் பின்னடைவிலிருந்தும் சீனா முழுமையாக மீட்சி பெற்றிருக்கிறது. அதுமாத்திரமன்றி வலுவான தேசியத்துவத்துடன் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக்கொண்ட நாடாகவும் எழுச்சியடைந்திருக்கிறது என்றும் குய் ஸென்ஹொங் தெரிவித்துள்ளார். கடந்த 100 வருடகாலத்தில் சீன கம்யூனிஸட் கட்சியானது இலங்கை உள்ளிட்ட மேலும் பலநாடுகளில் உள்ள அரசியல்கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிவந்திருக்கின்றது. அதேவேளை சமாதானத்தையும் அபிவிருத்தியையும் விரும்பும் சர்வதேச நாடுகளுக்கு சீன கம்யூனிஸட் கட்சி சிறந்த வழிகாட்டலை வழங்கியிருக்கின்றது. உலகளாவிய நிலைமைகள் எவ்வாறு மாற்றமடைந்தாலும், சீனாவானது எப்போதும் வரலாற்றையும் மக்களையும் முன்னிறுத்தி சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறது. பூகோள அமைதியை நிலைநாட்டுகின்ற, உலகளாவிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்கின்ற நாடாகவே சீனா இருந்திருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வருடப்பூர்த்தியை முன்னிட்டு 132 பக்கங்களைக்கொண்ட விசேட பத்திரிகை இணைப்பொன்று சீனத்தூதரகத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் சீனர்களின் ஆதிக்கம் இந்தியாவை பாதிக்கும் -ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,

கேள்வி:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதன் பின்புலம் என்னவாக இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

பதில் :கடந்த பொசன் விடுமுறையின் போது ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதிலே தமிழ் அரசியற் கைதிகள் பதினாறு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த அரசியற் கைதிகள் விடுதலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இலங்கைக்கு மேற்குலக நாடுகளில் இருந்து பலவிதமான அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது. காரணம் இலங்கை அரசு சீனாவை முற்றுமுழுதாக நம்பி சீனாவின் வழித்தடத்தில், சீனாவின் ஒரு மாகாணம் போன்று செயற்படுவது. மேற்குலக நாடுகளுக்கோ, இந்தியாவிற்கோ விரும்பத்தகாத செயலாகவே பார்க்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அமெரிக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிரான, தமிழ் மக்களுக்கு சாதகமான வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்மொழியப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாக ஐரோப்பிய பாராளுமன்றத்திலே இலங்கையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை 628 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கின்றது. பங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கடந்த 22ம் திகதி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது உண்மையிலேயே சம்மந்தம் இல்லாத அமைச்சரினால் சொல்லப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் சொல்ல வேண்டியதை இளைஞர் விளையாட்டு அமைச்சர் அறிக்கையாக விட்டிருந்தார்.

இதற்கிடையில்தான் கடந்த 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு அது பிற்போடப்பட்டது. 22ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக அமைச்சர் பேசுகின்றார். 24ம் திகதி அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெறுகின்றது என்றால் இரண்டு நாட்களுக்குள் அந்த அரசியற் கைதிகளின் விபரங்கள், யார் யார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் சேகரித்திருக்க முடியுமா?

கடந்த காலங்களிலே ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத் தடைச்சட்த்தீன் கீழ் சமூகவளைத்தளங்களில் பதவிடடார்கள், முள்ளவாய்க்காலில் விளக்கேற்றினார்கள் என்பதற்காகக் கைது செய்யபப்பட்டவர்களைத் தவிர நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக 93 பேர் சிறைக்கைதிகளாக இருக்கும் போது அதில் 16 பேரைத் தெரிவு செய்திருக்க முடியாது என்பது எனது கருத்து.

இவ்வாறு விடுதலை செய்யப்படும் அரசியற் கைதிகளின் தெரிவு 16ம் திகதி கூட்டமைப்பின் சந்திப்பிற்கு முன்னமே இடம்பெற்றிருக்க வேண்டும். பெயரளவிலே 22அம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை விட்டு 24ம் திகதி அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும்.

எனவேதான் 16ம் திகதி ஜனாதிபதி கூட்டமைப்பினைச் சந்தித்த பின்னர் இந்தக் கைதிகளின் விடுதலை நடைபெற்றிருந்தால் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையின் நிமித்தம், கூட்டமைப்பின் அழுத்தத்தின் காரணமாக இந்தக் கைதிகள் விடுதலையானார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படும். அதனால் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியாகச் செல்வாக்கு உயரலாம் என்ற காரணத்தினால் தான் கூட்டமைப்புடனான சந்திப்பினைப் பிற்போட்டு அரசியற் கைதிகளில் விடுதலையின் பின்னர் ஒரு திகதி வழங்க ஜனாதிபதி முற்பட்டிருக்கின்றார் என்று கருதுகின்றேன்.

கேள்வி :திஸ்ஸமகராம வாவி துப்பரவுப் பணியில் ஈடுபடும் சீனர்கள் சீன இராணுவ உடைக்கு ஒப்பான உடையணித்திருந்தமை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் தங்களின் நிலைப்பாடு?

பதில் :தற்போது பேசுபொருளாக இந்த நாட்டிலே இருப்பதும், இந்த நாட்டைப் படுகுழிக்குள் தள்ளுவதுமான ஒரு வேலைத்திட்டமாகத்தான் சீனர்களின் வருகையும் அதையொட்டி பல பிரதேசங்களில் அவர்களது வேலைத்திட்டங்களும் இடம்பெறுகின்றன. திஸ்ஸவாவி தற்போது தூர்வாரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வேலைத்திட்டத்திலே சீனர்கள் பங்குபெறுகின்றார்கள் சீன இராணுவத்தின் உடையை ஒட்டிய சீருடைகள் அவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக பல ஊடகங்களில் பல பிரமுகர்களும் அறிக்கை விட்டிருக்கின்றார்கள்.

நேரடியாக நாங்களும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. பாதுகாப்புச் செயலாளரும் சீனத் துதரகத்துடன் இது தொடர்பில் பேசியிருப்பதாகவும், அவர்கள் இரணுவத்தினர் இல்லை, இராணுவத்தின் உடையை ஒத்த உடையை அணித்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பாதுகாப்புச் செயலாளர் இனிமேல் அந்தச் சீருடை அணியக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்.

இதிலிருந்து ஒன்று புலப்படுகின்றது. அவர்கள் ஏதொவொரு வகையிலான சீருடையை அணிந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சீன இராணுவத்தினராகவும் இருக்கலாம் எனவும் எண்ணத் தோணுகின்றது.

இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் மூத்த குடிகளான தமிழ்க் குடிகள் வடக்கு கிழக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கும் போது யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்கள் மாநகரசபை எல்லைக்குள் வாகன போக்குவரத்து காவல் நிமித்தம் புலிகளின் சீருடையுடன் ஒத்த சீருடையினை அறிமுகப்படுத்தினார் என்பதற்காக மேயராக இருந்தும் அவர் கைது செய்யப்பட்டார். அதுபோல் அந்த ஊழியர்களும் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிவரை விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

ஆனால் நமது நாட்டில் சீன இராணுவ சீருடைக்கு ஒப்பான சீருடை அணிந்திருந்தவர்களுக்கோ அல்லது அவர்கள் வேலை செய்யும் அந்த வேலைத்தளத்தின் மேலதிகாரிகளுக்கோ எந்தவித விசாரணையும் இல்லை, கேள்வியும் இல்லை. இந்த நாட்டில் சட்டங்கள் எவ்வாறெல்லாம் அமுல்ப்படுத்தப்படுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது சீனர்களுக்கு எந்தளவிற்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதற்கும் மேலாக தெற்கிலே அம்பாந்தோட்டையிலே தொடங்கி திஸ்ஸமகாராம வாவியிலே தூர்வாரி கொழும்பு துறைமுக நகரத்தை முற்றுழுதாகக் கொடுத்து, கொழும்பில் இருக்கும் தொண்மை வாய்ந்த கட்டிடங்கள், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையாகக் கட்டப்பட்ட கட்டிடம் போன்றனவற்றை ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் போது வடக்கு கிழக்கிலே வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையையும் கூட சீனர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கிளிநொச்சி கௌதாரிமுனையிலே சீனர்களினால் கடலட்டை பண்ணையொன்று நடாத்தப்படுகின்றது. அதனை நேரில் சென்று எமது அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் பார்த்திருக்கின்றார்கள். மேலும் வடபகுதி கடல்களிலே கடலட்டை பண்ணைகள் நிறுவ இருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்கு கொடுக்கும் ஒரு நிலைமை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது இந்த நாட்டை ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

நிச்சயமாக வடக்கு கிழக்கிலே சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடம்கொடுக்கின்றது என்றால் அது நேரடியாக இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் நேரடியாக இந்தியாவின் பகையையும் சம்பாதிக்க கூடிய ஒரு நிலையைத் தான் இந்த அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கேள்வி :வடக்கில் சீனாவின் ஆதிக்கம் மிகக் கூடுதலாக இருக்கின்றது. இது தொடர்பில் இந்தியா மௌனமாக இருக்கின்றது. இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :இந்தியா இதுவரைக்கும் நேரடியாக இலங்கையுடன் மோதவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இல்லையென்று நான் நினைக்கின்றேன். இலங்கையின் மூத்த இராஜதந்திரியான கயான் ஜயதிலக, இலங்கையில் சீனர்களின் ஆதிக்கத்தை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இதற்காக இந்தியா ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

எனது பார்வையில் அமெரிக்க காங்கிரஸில் கொண்டு வரப்பட்ட பிரேரணையாக இருந்தாலும் சரி ஐரோப்பிய பாராளுமன்றத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான பிரேரணையாக இருந்தாலும் சரி அவை இந்தியாவின் பின்புலத்தில்தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக இலங்கைக்கு அவ்வப்போது சில செய்திகளையும் இந்தியா சொல்லிக் கொண்டிருக்கின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் எரிந்து கொண்டிருந்த நேரம் இந்தியாவிடம் உதவி கேட்டிருந்தார்கள். அந்தக் கப்பல் எரியத் தொடங்கி ஐந்து நாட்களின் பின்புதான் இந்தியா உதவிக்கு வந்தது. ஒன்றரை நாட்களுக்குள் அந்தத் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுடன் இலங்கை உண்மையான நட்பைப் பேணியிருந்தால் இந்தக் கடல்வளம் இந்தளவிற்கு அழிந்திருக்காது. அதனை இந்தியா செயல்முறையிலே காட்டியிருக்கின்றது.

ஏனெனில் ஒருமுறை கிழக்குக் கடற்பரைப்பில் சங்கமன்கண்டிக்கு மேலே ஒரு கப்பல் தீப்பற்றி எரிந்த போது இந்தியாவிடயம் உதவி கேட்க உடனடியாக இந்தியா வந்து அந்தத் தீப்பரவலைக் கட்டுப்பாட்டிருற்குள் கொண்டு வந்து கடல்வளத்தைப் பாதுகாத்தது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்குதவாது என்பது இதைதத்தான்.

இலங்கை சீனர்களை நம்பியிருக்கும் போது எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது இந்தியா பார்த்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகலாம். ஏனெனில் 1971ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியானது இந்தியாவினால்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவின் உதவியில்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையினால் தோற்கடித்திருக்கவும் முடியாது.

இவற்றையெல்லாம் மறந்துதான் இன்று இலங்கை அரசு இந்தியாவிற்கு எதிராக சீனாவை இந்த நாட்டுக்குள் உள்வாங்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று சொல்ல முடிhது உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. சிலவேளைகளில் அது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாகக் கூட இருக்கலாம்.

கேள்வி :இந்தியத் தூதுவருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த போது சீன ஆக்கிரிப்பு தொடர்பில் ஏதும் பேச்சுகள் இடம்பெற்றதா?

பதில்:வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தப் பேச்சுக்ள் நடைபெற்றதாக நான் அறியவில்லை. இந்திய தூதுவருடன் நடைபெற்ற பேச்சுகளில் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும், இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் அதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக, ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் போன்ற விடயங்கள் தான் பேசப்பட்டன.

கேள்வி :வடக்கு கிழக்கில் உள்ள வளங்களை அரசாங்கம் சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு ஏதும் முறைப்பாடுகள் செய்துள்ளதா?

பதில் :இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்ய வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் வளங்கள் சூரையாடப்பட்டு, தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் அவை தொடர்பில் நாங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வருவோம். பேச வேண்டிய இடங்களில் பேசுவோம்.இந்த விடயத்தில் எங்களையும் விட இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

கேள்வி :சேதனப் பசளைத் திட்டம் தெடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :சேதனப்பசளைத் திட்டமென்பது என்னைப் பொருத்தவரையில் வரவேற்கத்தக்கது. ஏனெனில் நஞ்சற்ற உணவுகளுக்குப் போக வேண்டிய தேவை இருக்கின்றது. வெளிநாடுகளிலும் இந்த விடயங்கள் கையாளப்படுகின்றன. சேதனப்பசளை முறைமைக்கு நாங்கள் மாற வேண்டும். ஆனால் அந்த சேதனப்பசளை பூரணமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அத்துடன், சரியான வழிகாட்டலின் மூலமாக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆனால், திடீரென இரசாயணப் பசளை இறக்குமதியை நிறுத்தியமையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் போகத்திற்கு இரசாயணப் பசளை கிடைக்கும் என்று அரசாங்கம் கூறினாலும் அதனைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் இரண்டு, மூன்று மடங்கு விலையில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சேதனப்பசளை முறைமைக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்டு இந்த அரசாங்கம் இரசாயணப் பசளையை நிறுத்தியிருக்கலாம். அதற்குரிய தன்னிறைவு அடையாமல் இரசாயணப் பசளையை நிறுத்தியமையானது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அது மாத்திரமல்லாமல் பல பொருட்களின் இறக்குமதியைக் கூட இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படாத, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குரிய பொருட்களின் இறக்குமதிகள் நிறுத்தியமையால் மக்கள் அதிகம் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முன்னெச்சரிக்கை இல்லாமல், எமது மக்களை வளப்டுத்தாமல், சேதனப்பசளை முறைமைக்கு மாற்றாமல் தன்னிச்சையாக இந்த இரசாயணப் பசளையை நிறுத்தியது ஒரு முட்டாள்தனமான செயல். அதனைப் படிப்படியாகச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் மக்கள் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள்.

மக்களை படுகுழியில் தள்ளுகின்ற வேலையைத் தான் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாகச் செய்கின்றது. கொவிட் பாதிப்பு ஒருபக்கம், எரிபொருள் விலையேற்றம் ஒருபுறம், பசளையற்ற விசாயிகளின் பாதிப்பு ஒருபக்கம், மீனவர்களின் பிரச்சினை ஒருபுறம் என மக்களை துன்புறுத்திக் கொண்டு வருகின்றது.

கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டை வளப்படுத்துவதற்காக, தன்னை ஒரு அரசனாகச் சித்தரித்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வந்த பிதாமகராகக் கூறிக் கொண்டு இந்த ஆட்சியைக் கைப்பற்றியவர். இன்று அத்தனை மக்களின் சாபக்கேட்டுக்கும் உள்ளான ஒரு மனிதராக மாறியிருக்கின்றார்.

Posted in Uncategorized

தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு வரவேற்பு!

தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியினை வரவேற்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான குமாராசாமி மதுசுதன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒன்றுபடுத்தல்கள், பத்துக் கட்சிக் கூட்டு என இடம்பெற்றாலும் அவை பின்னர் பிசுபிசுத்து போயின. தற்போது கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அந்த முயற்சியினைக் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆரம்பகால விடுதலை இயக்கம் மற்றும் கூட்டமைப்பு உருவாக்கம் முதல் அதில் இன்று வரை ஒற்றுமையாகப் பயணிக்கும் ஒரே இயக்கமாக அது அமைவதால் அந்த ஒற்றுமை முயற்சி பெரிதும் வெற்றியளிக்க கூடியது.

மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது தமிழர் நலன்களுக்காக இன்றியமையாதது.

இந்த ஒற்றுமை முயற்சிகள் தள்ளிப் போனாலும் இறுதியில் தமிழர்களின் நலனுக்காக வெற்றியளிக்க வாழ்த்துகிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார் .

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறு கட்சிகள் கலந்துரையாடல்

தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் சிறிய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் கொழும்பில் (30-6-21) நடைபெற்றுள்ளது.

15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் குறித்த கட்சிகளின் தலைவர்களும் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

பசில் ராஜபக்ச விவகாரம் காரணமாக அரசாங்கத்திற்குள் குழப்பநிலை

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக அரசாங்கத்திற்குள் பாரிய குழப்ப நிலையும் பிளவும் ஏற்பட்டுள்ளது என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

பசில் ராஜபக்சவின் இரட்டை பிரஜாவுரிமையை காரணம் காட்டி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் பசில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதை எதிர்த்துள்ளன.

இவர்கள் இது குறித்த தங்கள் அதிருப்தியை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் வெளியிட்டுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தில் அவருக்காக உருவாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியே இம்முறையும் பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவிற்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற அறிக்கைகள் முதலில் வெளியான போதிலும் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது பிரதமரே தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் நிதியமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற சில நிறுவனங்களை பசில் ராஜபக்சவிற்கான அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான திட்;டம் காணப்படுகின்றது.

இதேவேளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாக பசில் ராஜபக்சவிற்கு அமைச்சர் பதவியை வழங்குவது தாமதமாகலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்காவுக்கு சீன அதிபர் மறைமுக எச்சரிக்கை

பிற நாடுகளை சீனா ஒருபோதும் ஒடுக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.

சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்புப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

பெய்ஜிங் நகரின் தியானென்மன் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் பேர் முன்னிலையில் ஷி ஜின்பிங் உரையாற்றினார். கூடியிருந்தவர்களின் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை.

யாரும் சீனாவை அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜின்பிங் தனது உரையின்போது கூறினார்.

தங்களது வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டுவிழாவை ஒட்டி பெய்ஜிங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

1921-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு 72 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

Source:பிபிசி தமிழ்

Posted in Uncategorized

கொவிட் பாதிப்புக்கு அரசின் பயணக்கட்டுப்பாடு எனும் நகைகச்சுவை நாடகமே காரணம்- பா.உ.ஜனா

இந்த அரசின் பயணக் கட்டுப்பாடு என்று ஒரு நகைச்சுவையான நாடகமே மூன்றாவது அலையில் நாட்டின் நிலைமை மோசமடைவதற்குக் காரணம். கொவிட் தொற்றினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை மீண்டும் மீண்டும் சுமைகளைக் கொடுத்து இந்த அரசு துன்பப்படுத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றினால் இந்த நாட்டின் நிலைமை வரவர இன்னும் மோசமாகிக் கொண்டு செல்கின்றது. கொவிட் தொற்று ஒழிப்புக்கான அமைச்சர் ஒரு கருத்தையும், கொவிட் ஒழிப்பு செயலணிக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி வேறொரு விதமான அறிக்கையும், சுகாதார அமைச்சர் இன்னுமொரு விதமான அறிக்கையையும் விடுகின்றனர். நாட்டு மக்கள் தற்போது மிகவும் குழப்பமான நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

கொவிட் முதலாவது, இரண்டாவது அலை இலங்கையிலே ஏற்பட்ட போது அரசாங்கம் கன்னியமாக நடந்து ஊரடங்குகளை அழுல்ப்படுத்தி கொவிட் பரவலை ஓரவிற்குக் கட்டுப்படுத்தியது. ஆனால் இந்த மூன்றாவது அலையிலே பயணக் கட்டுப்பாடு என்று ஒரு நகைச்சுவையான நாடகமே இடம்பெற்றது. பயணக் கட்டுப்பாடு பெயரளவிலேயே இருக்கின்றதே தவிர மக்களது நடமாட்டம், வாகனப் போக்குவரத்து போன்றன சர்வசாதாரணமாகவே இருந்தது.

உண்மையிலேயே ஆடைத் தொழிற்சாலைகள் கிராமப்புற பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த மூன்றாவது அலையில் கொவிட் தொற்றினை கிராமப் புறங்களுக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த ஆடைத் தொழிற்சாலைகளுக்குத் தான் கிடைத்திருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே வாகரைப் பிரதேசம் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகமான தொற்றாளர்கள் அங்கு இனங்காணப்பட்டார்கள். அதற்குக் காரணம் பார்த்தால் அந்தப் பிரதேசத்தில் இருந்து தம்பலகாமம், கந்தளாய் போன்ற ஆடைத் தொழிற்சாலைக்குச் சென்று வருவபவர்களினால் தான் அங்கு தொற்று கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த அரசு கொவிட் தொற்றை ஒழிப்பதற்கான முக்கிய காரணியான தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி இதனை ஒழிக்க வேண்டும். தற்போது ஐரோப்பிய, அரேபிய நாடுகள் கூட இலங்கையை கொவிட் சிவப்பு வலயத்திற்குள் உட்படுத்தியிருக்கின்றார்கள். அதனால் தங்களது மேற்படிப்புகள், தெழில்வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள், விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர்கள் மீண்டும் அந்த நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசு தன் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தி மக்களை இந்தத் தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இதற்கும் மேலாக இந்தத் தொற்றில் அதிகம் பாதிப்புக்குள்ளான கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீன்பிடியாளர்கள், சிறு வியாபாரிகள் அரசின் எரிபொருள் விலையேற்றத்தினால் மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பசில் ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்காவில் இருந்த நேரம்தான் இங்கு எரிபொருள் விலையேற்றப்பட்டதாகவும், அவர் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலையேற்றம் நடைபெற்றிருககாது என்றும் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களே கூறிக்கொள்வதை நாங்கள் அவதானிக்கின்றோம். அப்படியானால் இந்த நாடடின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கிய பசில் ராஜபக்ஷ அவர்களா இப்படியான முடிவுகளை எடுப்பவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வெகு விரைவில் வரவிருப்பதாகவும், அதன் பின் எரிபொருட்கள் விலை குறையும் எனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் தற்போது நாட்டு மக்கள் கொவிட் தொற்றினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் இந்த அரசு மக்களைத் துன்பப்படுத்தக் கூடாது. எரிபொருள் விலையேறத்திற்கு மேலாக எரிவாயு விலையேற்றம் வரவிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும். மக்களைத் தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்டாக் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த உயர்ஸ்தானிகர் முதலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு காணொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் விவசாயம் கல்வி கடற்றொழில் போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் தூதருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

‘ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க சட்டப்பூர்வ தீர்வு’அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

தமிழகத்தில் வசிக்கும் அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கு சட்டப் பூர்வ தீர்வு காணப்படும் என்றார் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான்.

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டிலுள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களின் வசதிகள், அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 108 ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுமட்டுமின்றி காவல்துறையில் பதிவு செய்துவிட்டு, முகாம்களைவிட்டு வெளியே வசிக்கும் நிலையில் 13,553 குடும்பங்கள் உள்ளன.

துமிந்தவின் விடுதலைக்காகத்தான் ஏனைய கைதிகளின் விடுதலைகள் இடம்பெற்றதா? ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா

பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு, அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அரசியற் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு என்னும் அடிப்படையில் பதினாறு தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விடயம் உண்மையில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஏனைய அரசியற் கைதிகளையும் விரைவில் விடுவிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசு முன்வர வேண்டும்.

அரசியற் கைதிகளின் விடுதலை மற்றும் சாதாரண கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து கொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் துமிந்த சில்வா அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதானது துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா என எண்ணத் தோணுகின்றது. துமிந்தவின் விடுதலை தொடர்பில் தமிழர் தரப்பில் இருந்து கேள்விகள் வந்து விடக் கூடாது என்பதற்காக எமது அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெற்றதா? என்கின்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகின்றது.

என்ன நடக்கின்றது இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று வார்த்தையில் மாத்திரம் சொல்லிக் கொண்டு பேரினவாதத்திற்கு ஒரு சட்டமும் ஏனைய சமூகத்திற்கு ஒரு சட்டமும் என்ற விதத்தில் சட்டப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா வெறும் ஐந்தே ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். தண்டனைக் கைதியாக இருந்த ஞானசார தேரரும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். அதே போல ஒரு இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞனும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இதே நாட்டில் தான் ரகுபதி சர்மா எனப்படும் சைவ மதகுரு ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு இன்றைக்கும் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சுதாகரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். அத்தோடுஇ இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் அவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். இவர்களை போல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சிறையில் இன்னும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன்இ சமூக வளைதளங்களில் பதிவுகள் இட்டதன் அடிப்படையில் மட்டும் இளைஞர்கள் உட்பட 80 இற்கும் அதிகமானவர்கள் அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான இளையவர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

ஆகவே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் காரணங்கள் இன்றி தடுத்து வைத்து இருப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் சகலரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியும் அடிமைப்படுத்தியும் வைத்திருப்பதற்கே திட்டங்களை வகுக்கின்றன. மதகுரு என்ற ரீதியில் ஞானசாரதேரருக்கு சட்டம் வளைய முடியுமாக இருந்தால் ஏன் ரகுபதி சர்மாவிற்கும் இதே அடிப்படையில் சட்டம் பிரயோகிக்கப்பட முடியாது? ஆளாளுக்கு ஒவ்வொரு விதமதாகச் சட்டத்தினைப் பிரயோகிப்பதையே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் ஜனாதிபதி உட்படுத்துகின்றாரா?

எனவே பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாதஇ பயங்கரவாத சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized