சிறைச்சாலையினுள் சேபால் அமரசிங்க தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (08)  கொழும்பு விளக்கமறியல்சாலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு  விளக்கமறியல் சிறைச்சாலையில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள  சேபால் அமரசிங்க,  சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளால்   தாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவரை  தாக்கியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஸ்ரீ தலதா மாளிகையை  அவமதித்த சம்பவம் தொடர்பில் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்

வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வாழ்க்கை செலவுப் படியை அதிகரித்தல், வங்கிகளில் அதிகரித்த வட்டியை நிறுத்துதல் , முறையற்ற நியமனத்தை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவைத்தின் பாலைவனத்தில் பணிபுரிந்த 6 இலங்கையர்கள் அந்நாட்டு இராணுவத்தின் உதவியுடன் மீட்பு

குவைத் நாட்டின் ஈரான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பாலைவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 6 இலங்கை இளைஞர்கள் மீட்கப்பட்டு இன்று நாடு திரும்பினர்.

குறித்த இளைஞர்கள் 6 பேரும் கடுமையாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, தாக்கப்பட்டு உணவும் சம்பளமும் வழங்கப்படாத நிலையிலேயே பெரும் முயற்சியில் மீட்கப்பட்டு இன்று (09) காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் வசிப்பவர்களாவர். இவர்கள் கிண்ணியாவில் உள்ள சட்டவிரோதமான தரகர் ஊடாக குவைத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த இலங்கையர்கள் குவைத்தில் ஷேக் ஒருவரால் நடத்தப்படும் பண்ணையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இந்த இலங்கையர்கள் இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது நிலைமை குறித்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களை மீட்பதற்காக குவைத்தின் உயர் பாதுகாப்பு பிரிவின் மேஜர் ஜெனரல் ஒருவரின் உதவியுடன் சிறப்பு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இவர்கள் மீட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடன் பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு ஐ.எம்.ஈவ் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை – ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார் என மோர்னிங் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதிஉதவியை வழங்குவதற்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதிக்காக இலங்கை அரசாங்கம் உடனடியாக பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பது குறித்து என சர்வதேச நாணயநிதியம் ஆராய்கின்றது ஆனால் படிப்படியாக அதனை செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி இராணுவத்தில் உள்ளவர்களை வீட்டுக்கு செல்லுங்கள் என தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை வேறு துறைகளிற்கு தொழில்துறைகளிற்கு மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு இதனால் ஏனைய துறைகளில் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அவர்களை வேறு தொழில்துறைக்கு மாற்றினால் அந்த தொழில்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய வேலையை இராணுவம் கைப்பற்றிவிட்டது என முறைப்பாடு செய்வார்கள் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அரசகட்டிடங்களை நிர்மானிக்கும் பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளமுடியும்ஆனால் கட்டுமான துறைக்கு அரசாங்கத்தின் ஒப்பந்தம் எதுவும் கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் விதித்துள்ள பல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம் சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது அது பெரிய பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லசந்த கொல்லப்பட்டு 14 வருடங்களாக கைது செய்யப்படாத குற்றவாளிகள்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  ஜனவரி 8 ஆம் திகதியுடன் 14 வருடங்கள் நிறைவடையும் நிலையில், பொரளை கனத்தையில் அவரை நினைவு கூரும் விஷேட அஞ்சலி வைபவம் இடம்பெற்றது.

லசந்தவின் கல்லறைக்கு அருகே இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வானது லசந்த குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (08)காலை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த அஞ்சலி  நிகழ்வில், லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க, அவரது மகள் ரைஸா உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க  உட்பட பல உள் நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் பங்கேறிருந்தனர்.

இதன்போது முதலில் லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அங்கு லசந்தவின் சகோதரரான லால் விக்ரமதுங்க கருத்து வெளியிட்டார்.

லால் விக்ரமதுங்க கருத்து தெரிவிக்கையில்,

அத்துடன் லசந்தவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க தனது ட்விட்டரில் தந்தையின் நினைவு நாள் குறித்து கருத்து பதிவு செய்துள்ளார். அதில்,

14 வருடங்களாக நியாயம் கிடைக்காவிட்டாலும், லசந்தவின் கொலைக்கு எதிராக நீதி கிடைக்கும் வரை போராடப் போவதாக அதில் அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  ‘ கடந்த மக்கள் போராட்டத்தின் போது உங்கள் ஆத்மாவினை உணர்ந்தேன். அவை அனைத்தையும் காண நீங்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி செல்லும் போது அடையாளம் தெரியாதோரால் கொல்லப்பட்டார்.

முதலில் அவர் சுட்டுக்கொல்லப்ப்ட்டதாகவே பிரேத பரிசோதனை அறிக்கையும் வழங்கப்பட்டிருந்த நிலையில்,  2015 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற சி.ஐ.டி. விசாரணைகளை அடுத்து 2016 இல் அவரது சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது  லசந்த  கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தி கொல்லப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்டது.  மிருக வேட்டைக்கு பயன்படுத்தும் ஒருவகை ஆயுதத்தால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி.யினர் சந்தேகிக்கின்றனர்.

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளைகளை தப்பிக்க வைக்க அவர் கொலை செய்யப்பட்டது முதல் கடந்த 2015 வரை கல்கிசை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரால்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை  சி.ஐ.டி.யினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  லசந்த விவகாரத்தில் சாட்சியாளரான  லசந்தவின் சாரதியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சார்ஜன்ட் மேஜர் உதலாகம என்பவரும், லசந்தவின் குறிப்புப் புத்தகம் உள்ளிட்ட சாட்சிகளை அழித்து  புதிய சாட்சிகளை நிர்மாணித்தமை தொடர்பில் அப்போது கல்கிசை பொலிஸ்  குற்றவியல் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால,  மேல் மாகாணத்தின் தெற்கு முன்னாள் பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தற்போது பிணையில் உள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படு கொலை செய்யப்பட்டு  14 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அவரை கொலை செய்தது அப்போது மருதானையில் இயங்கிய திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாம் புலனாய்வாளர்கள் என்பதற்கான சாட்சிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2015 முதல் சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ். திசேராவின் கீழ் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான சிறப்புக் குழு முன்னெடுக்கும் விசாரணைகளிலேயே இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரையிலான விசாரணைகளின் படியும், லசந்தவின் சகோதரர், மனைவி மற்றும் மகளின் வாக்கு மூலங்களின் பிரகாரமும் குறித்த படுகொலைக்கு மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க அம்பலப்படுத்தியமையே காரணம் என தெரியவந்துள்ளது.

அதன்படி, கொலை இடம்பெற்றுள்ள விதம் அதன் பின்னர் விசாரணை என்ற பெயரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் சான்றுகளை அழித்திருக்கும் விதமும், அனுராதபுரம் அதி விஷேட பாதுகாப்பு வலயத்தில் இரு தமிழ் இளைஞர்களை கொலை செய்துவிட்டு அவர்களது மோட்டார் சைக்கிளை கொழும்புக்கு கடத்தி வந்து லசந்தவின் கொலையை புலிகளுடன் தொடர்படுத்த எடுத்துள்ள முயற்சியும் இக்கொலையின் பின்னணியில் மிகப் பெரும் சக்தி ஒன்று இருந்துள்ளமை புலப்படுத்துவதாக சி.ஐ.டி. தெரிவிக்கின்றது.

லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில்  சாட்சியாளர் ஒருவரை  கடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் கொலை குறித்த சான்றுகளை அழித்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்த  விசாரணைகளை சி.ஐ.டி. நிறைவு செய்துள்ளது.

எனினும் பிரதான சம்பவமான, சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த குற்றவாளிகளைக் கண்டறியும் விசாரணைகள் தொடர்கின்றன.

இது தொடர்பில் சி.ஐ.டி.யின் விசாரணையாளர்கள், கல்கிசை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ள நிலையில்,  நிறைவு செய்யப்பட்டுள்ள லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியாளர் ஒருவரை  கடத்தியமை, அச்சுறுத்தியமை மற்றும் கொலை குறித்த சான்றுகளை அழித்தமை உள்ளிட்ட விடயங்கள் குறித்த  விசாரணைகளின் கோவைகள் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் எவருக்கு எதிராகவும் இதுவரை குற்றப்பத்திரிகை முன் வைக்கப்படவில்லை.

இந்த கொலை குறித்து விசாரணை செய்த, பிரதான விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா, அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  விசாரணைகளை நெறிப்படுத்திய, விசாரணையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா விகாரையில் சனிக்கிழமை (7) இரவு மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர், ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரருடன் கலந்துரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான வெளிநாட்டு தூதுவர்கள் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்படுகிறார்கள்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மதத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பமானது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு பல்வேறு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்புக்களின் கருத்துகளுக்கு கவனம் செலுத்தாமல், நாட்டின் நடைமுறையில் உள்ள உண்மைத்தன்மைகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் செயற்படுவது வரவேற்கத்தக்கது.

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு நட்பு நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என ஜெய ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி ஈதலவென்வாவே நாகதிலக தேரர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது.

இரு நாட்டு மக்கள் பல்வேறு விடயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள். பௌத்த மத கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளின் நல்லுறவு பலம் பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா குறுகிய காலத்துக்குள் 4 பில்லியன் டொலரை மனிதாபிமான அடிப்படையில் வழங்கியுள்ளது.

விசேடமாக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மேலதிகமாக எரிபொருள் கொள்வனவுக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், உணவு, மருந்து மற்றும் உரம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக 1 பில்லியன் டொலர் அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஒத்துழைப்பை இந்தியா வழங்கும். இலங்கையின் அபிவிருத்தி மேம்பாட்டுக்கும் தொடர்ந்து ஒத்துழைப்போம் என்றார்

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா பயணமாகும் ஜனாதிபதி

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12, 13ஆம் திகதிகளில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

அண்டைய நாடுகளின் தலைவர்களை தவிர, ஆபிரிக்கா அங்கோலா, கானா, நைஜீரியா, மொசாம்பிக், செனகல், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அமைச்சர்கள் அமர்வுகள் நிதி, சுற்றுச்சூழல், வெளியுறவு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வர்த்தக நிலைகளில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு நடைபெறவுள்ளது.

நான்கு அமர்வுகள் ஜனவரி 12ஆம் திகதியும், ஆறு அமர்வுகள் ஜனவரி 13ஆம் திகதியும் நடைபெறும். மொத்தத்தில் இந்த மாநாட்டுக்காக 120 நாடுகளுக்கு டில்லி, அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹவ – ஓமந்தை ரயில் பாதைபுனரமைப்பு பணிகள் இந்திய உயர்ஸ்தானிகரால் ஆரம்பித்து வைப்பு

வடக்கு புகையிரத பாதையின் மஹவ – ஓமந்தை வரையான பாதையை புனரமைக்கும் பணிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மதவாச்சி புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக , அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரூ. 33 பில்லியன் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் கடனுதவியின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனமான சர்வதேச ஐஆர்சீஓஎன் இந்த ரயில்வே புனரமைப்புத் திட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கின்றது.

போலி தலதாமாளிகை இடித்தழிப்பு

குருநாகல், பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் எண் கோண மண்டபத்தை இடித்து அழிக்கும் பணிகள், ஞாயிற்றுக்கிழமை (08) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த போலி தலதா மாளிகை தொடர்பாக பௌத்த உயர்பீடம் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஒப்பமிட்ட கடிதம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டது.

உலகளாவிய பௌத்தர்களை ஏமாற்றி, பெறுமதியான பொருட்களையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு ஜனக சேனாதிபதி என்ற ஒருவரால் போலியான தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் தலதா மாளிகை தொடர்பில் சமூக ஊடகங்களில் சேபால் அமரசிங்க என்பவரால் வெளியிடப்பட்ட கருத்து பௌத்தர்களை காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்ததையடுத்து,  சேபால அமரசிங்க, சீ.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சனிக்கிழமையன்று (07) குறித்த இடத்துக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, இன்னும் 2 வாரங்களில் இந்த இடத்துக்கு மீண்டும் வரும்போது கட்டடம் இடிக்கப்படாவிட்டால் அதனை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே மேர்வின் சில்வாவின் உத்தரவுக்கு அமைய ஜனக சேனாதிபதியினால் கட்டடத்தை இடித்து அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையால் மீண்டும் கொரேனாவைத் தாங்க முடியாது

தற்போது பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையால், கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கினால், அதன் தாக்கத்தை தாங்க முடியாது என்று  அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவிலும் ஏனைய சில நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு வருகைதருவோர் குறித்து, கவனம் செலுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதற்கு கொரோனா தொழில்நுட்பக் குழு ஒன்று கூட வேண்டும் என்று சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சாமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனாவின் புதிய மாறுபாடு எதுவும் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட வில்லை என்றும் கொரோனா அறிகுறிகள் மாறவில்லை என்றும் ஐடிஎச் வைத்தியசாலையின் வைத்திய ஆலோசகர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டினார்.

எனினும், சாத்தியமான நோய்த் தொற்றைத் தடுக்க உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வைத்தியர் குறிப்பிட்டார்