மக்களுக்கு புதிய வரிச்சுமை! வெளிவரும் பண்டோரா ஆவணங்கள் பற்றிய தகவல்கள்

பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “பிரபஞ்சம்”வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக மற்றுமொரு பேருந்து, காலி சித்தார்த்த தேசியப் பாடசாலைக்கு சஜித் பிரேமதாஸவால் நேற்று(14.10.2022) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“அரசாங்கம் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையில் உள்ளது.

மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரியாக இது மாறியுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்குள்ள ஒரே வழி, வரி அதிகரிப்பு மாத்திரமல்ல. பண்டோரா ஆவணங்கள் மூலம் பெயரிடப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் டொலர்களையும் நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

திருகோணமலை தொடர்பில் ரணில் திட்டவட்ட அறிவிப்பு

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என்றும், இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில்இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பல இடங்களையும் ஜனாதிபதி ஒர்ஸ் ஹில்லில் இருந்தபடி அவதானித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் விமான நிலையம் இருந்தாலும் அங்கே பெரிய விமானங்களை தரையிறக்க முடியாது.

எனவே, ஹிங்குரக்கொடை அல்லது வவுனியாவை சர்வதேச விமான நிலைய தலமாக உருவாக்குவதற்கான நிலைமை ஏற்படும்.

திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாம் முழுமையான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் உள்ளது.

வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் திருகோணமலை அமைந்துள்ளது. அதேபோன்று வடமத்திய மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அநுராதபுரம் மற்றும் பொலனறுவையின் பெரும் பகுதி இப்பிரதேசத்துக்கே சொந்தமாகின்றது.

இந்த கூட்டு வேலைத்திட்டத்தை 5 வருடங்களில் செய்ய முடியாது. இதனை 20 – 25 வருடங்களில் செய்யலாம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்ற 10 வருடங்கள் தேவைப்பட்டன.

எனவே, இதன் பணிகள் குறித்து கலந்தாலோசித்தப் பின்னர் அமைச்சரவையின் தீர்மானத்துடன் இந்த செயல் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவுள்ளோம்”என கூறியுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

ஞானசார தேரருக்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்த வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜராகததை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மைத்திரிக்கு எதிரான வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைநகர்த்தல் மனுவை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து 100 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் மாத முற்பகுதியில், யாழ்ப்பாண மாநகர சபை உடுவில் பிரதேச சபை மானிப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்த 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு கொழும்பில் முக்கிய இடங்களான ஜனாதிபதி செயலகம், தாமரை கோபுரம், தாமரை தடாகம் நாடாளுமன்றம் மற்றும் ஏனைய கொழும்பின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதோடு கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும் வடக்கு தெற்கிற்கான உறவுபாலத்தினை மேம்படுத்துவதற்காக வேலை திட்டம் கொழும்பு மாநகர முதல்வரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது – எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதியை போல பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார்.இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் 12 ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பை சிறந்தது என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பசுமை பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் ஆனால் அவரது பணி மிகவும் கடினமானது அதற்காக அவரை எவரும் பாராட்டப்போவதில்லை ஏனென்றால் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளே ஒரேவழி எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் அதிக வரிகள் தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம், குறுகிய காலத்தில் வலிகள் காணப்படும்,ஆனால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமானவையாக உள்ளன என இலங்கையின் சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக்சொல்ஹெய்ம் ஐஎஎனஎஸ ற்க்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பசுமை அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எலெக்ரிக் மொபிலிட்டி மரநடுகை பசுமை விவசாயம் சுற்றுசூழலிற்கு உகந்த சுற்றுலா ஆகியவை வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பிற்கான பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவை வெற்றிபெறும் கொள்கைகள் இவை சுற்றுசூழலிற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் சிறந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்ற அடிப்படையில் நான் அவர் தனது பணியாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை கவருவதற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுவேன் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா இந்தியா ஐரோப்பா மற்றும் ஏனைய உலகநாடுகளி;ல் இருந்து சிறந்த சுற்றுச்சுழல் செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் இலங்கை இருப்பிற்கே அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் ஆம் என பதிலளித்துள்ளார்.இலங்கையின் வறண்ட பகுதி தொடர்ந்தும் உலர்வலயமாகவும் ஈரமான பகுதி ஈரமாகவும் காணப்படும் நாங்கள் மிக மோசமான காலநிலையையும் மண்சரிவையும் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவர் தவிசாளர் நிரோஷ் கனடா பயணம்

புலம்பெயர் தேசத்தில் வெளிவரும் கனடா உதயன் பத்திகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் விடுமுறையில் கனடா சென்றுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் உள்ள கெனடி மாநாட்டு; நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் சர்வதேச விருது வழங்கும் விழா மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ் விருது வழங ;கும் விழாவில் விருது பெறுவதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கனடா சென்றுள்ளார்.

இன்று 13 ஆம் திகதி கனடா சென்றடைந்த அவரை கனடா உதயன் பத்திரிகையின் சிரேஷ்ட பிரதம ஆசிரியர் ஆர்.என் லோகேந்திரலிங்கம், பேராசியர் வே. சுங்கரநாராயணன் உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்றனர். இந் நிகழ்வினைத் தொடர்ந்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியுள்ள அவர் கனடாவில் உள்ள முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை – பரிஸ் கிளப்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் (Paris Club) தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், G20 பொதுத் திட்டத்தின் கீழ் சலுகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அந்த கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக கடந்த மாதம் இந்திய மற்றும் சீன அதிகாரிகளுடன் ‘பரிஸ் கிளப்’ யோசனைகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை பரிஸ் கிளப் (Paris Club) உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களை பகடைக்காயாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க சீனா முயலக்கூடாது..!! சீனா மீது சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும்.

பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்பொருள் பாவனையை தடுக்க முடியாதுள்ளது. எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சிக்கிறது. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்றார்.

மேலும், எங்களை சீனா பகடைக்காயாக்க முயற்சிக்க வேண்டாம். குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்ககூடாது .
சீனத் தூதரகத்திடம் பெற்ற உதவி தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து வேடிக்கையானது என்றார்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவின் 2 ஆவது கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல மு‍டிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அவர் பொது அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயத்துறையில் எடுத்த தீர்மானம் பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்ததாகவும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை எனவும் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை. 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நாவலப்பிட்டி நகரில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.