இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! ரெலோமதுசூதன்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது, இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை

கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான். அதற்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை

இதற்கமைய, நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ வின் நல்லூர் தொகுதி அமைப்பாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான  அ.மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்! ரெலோ விந்தன் கோரிக்கை

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டு விமான போக்குவரத்து சேவைகள் சுமுகமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டியும் அரசியல் காரணங்களாலும் அது இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் இதனுடாக போக்குவரத்தை தொடங்குவது என்பது வரவேற்க்ககூடிய விடயம். அத்துடன்
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராமேஸ்வரம் தலைமன்னாரிடையே படகுப் போக்குவரத்து சேவை இடம்பெற்றதுடன் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது.

ஆகவே இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை ஆரம்பித்தால் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம்
உயர்வடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. வெறுமனே வந்த விமான போக்குவரத்து அமைச்சர் புதிதாக தானே இந்த விமான சேவையை ஆரம்பிப்பது போல சித்தரிக்ககூடாது என்றார்.

மேலும் தெரிவிக்கையில்
வடக்கு கிழக்கு மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனால் தற்போது தென்னிலங்கை மக்கள் ராஜபக்ஷ குடும்ப அரசாங்கத்தை நிராகரித்த போதும் கரத்த களரி நிலை ஏற்பட்டபோதும் அரசாங்கம் தனது பதவியை விட்டு விலகாமல் உள்ளது. ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு – கூட்டமைப்பினரை பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நூற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும்.

கடந்த 9ஆம் திகதி குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.

இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர் என குற்றம் சுமத்திய அவர், அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை – தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள், உலக அகதிகள் தினம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு.

உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை – நீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பின் பல ஏற்பாடுகளிற்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் இந்த பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றுள்ள தமிழர்களை அகதிகளாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகக் கருதி அடைத்து வைத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை – குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதே தமிழர் வாழ்வியல் மரபு என தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட தமிழக அரசு உறுதியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகள் முகாம் என்ற பெயரை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என மாற்றம் செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதாக சஜித், அநுர அறிவிப்பு

மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத்தில் அறிவித்தனர்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில்,

இந்நாட்டின் துன்பப்படும் மக்களின் அபிலாஷைகளையோ அல்லது இந்நாட்டின் பாரதூரமான வீழ்ச்சியைத் தடுக்கவோ, அல்லது இந்நாட்டை கட்டியெழுப்பவே எந்த திட்டமும் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (21) காலை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வரிசையில் நிற்கும் மக்கள் படும் துன்பகளை புரிந்து கொள்ளாத, பால் மா இன்றி தவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் துயரங்களை புரிந்து கொள்ளாத, திருடுவதற்கும் சுரண்டுவதற்கும் கை தூக்கும் பாராளுமன்றம் வெறும் கதையாடல் கடை மாத்திரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது.

இந்நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி 5 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது – அரசியல் கைதியின் தயாரின் அஞ்சலியில் நிரோஷ்

தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு நீதிகேட்டு போராடும் தாய்மார் நீதி கிட்டாமலேயே படிப்படியாக மரணித்துப்போகும் அவலம் தொடர்கின்றது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி. மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைகின்றது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அரசியல் கைதி பார்த்திபனின் தயாரின் இறுதிச் சடங்கு நேற்று திருநெல்வேலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அங்கு அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும் என்றும் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக ஆட்சியாளர்களுக்கு அளிக்கப்படும் கால அவகாசம் பொறுப்புச் சொல்லுதலில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கான உத்தியாகவே அமைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், போருக்குப் பின் 13 ஆண்டுகளாகியும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படவில்லை.
கடந்த 26 ஆண்டுகளாக பிள்ளையை அரசியல் கைதியாக பிரிந்து அந்தப் பிள்ளையின் விடுதலைக்காகப் போராடிய தாய் இன்று மரணித்துள்ளார்.

அதுபோன்று கடந்த வராம் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் சகாதேவன் நிலக்சனின் தாயாரும் மரணமடைந்தார்.

இதுபோன்று 2000 நாட்களை அண்மித்து நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய் தந்தையரும் நீதி கிட்டாமலேயே போராட்டக்கொட்டில்களிலேயே மடிந்து போகும் அபாயத்தினை காண்கின்றோம்.

இந்த நிலைமை மோசமடைகின்றது. இந்தத் தாயின் மகன் பயங்கரவாதத் தடைச் சட்டம் காரணமாக 26 ஆண்டுகளாக சிறையில் நீதியின்றி விடுதலைக்காக ஏங்குகின்றார்.

அவர் தண்டிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மனித உரிமைகளை நசுக்கும் காட்டுமிராண்டித்தனமான சட்டம் என உலகமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான அநீதியான சட்டங்கள் வாயிலாகவே அப்பாவிகள், அல்லது சிறு குற்றங்களுடன் தொடர்புபட்ட தமிழ் இளையோர் சிறைகளில் தசாப்தக்கணக்கில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

தசாப்சக்கணக்கில் நீதி கிட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் இருந்து விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தாய்மார்களே நீக்காக விட்டுக்கொடுப்பின்றி போராடுகின்றனர். அவர்களே அரசுக்கு எதிரான சாட்சியமாகவும் காணப்படுகின்றனர். தசாப்சக்கணக்கில் நீதி கி;ட்டாது தாய்மார் மாண்டு போவது அரசாங்கத்தினை பொறுப்புக்கூறலில் விடுவிக்கும் நிலைமையாகவே அமையும் என்பதை சர்வதேசம் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சீன ஜனாதிபதியிடம் இருந்து விசேட தகவல்

சீன ஜனாதிபதி Xi Jinping அனுப்பிய விசேட தகவலை இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிக்கைகு சென்று அவர் அதனை கையளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ள பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பில் சீன தூதுவர் இதன்போது ஜனாதிபதியிடம் தௌிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized