ஊடக பிரதானிகளிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்தார்.

நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ஊடக உரிமையாளர்களிடம் தெரிவித்தார். இந்த மாத இறுதிக்குள் ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக அவர் விளக்கினார்.

நிலுவையில் உள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கினார். உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 3 வேளை உணவு வழங்க முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவசமாக உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நிலைமையின் உண்மையான படத்தை முன்வைக்க அரசாங்கத்திற்கு உதவுமாறு ஊடக உரிமையாளர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். தேவையான போது ஊடகங்கள் அரசாங்கத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அதேவேளை பொறுப்பான அறிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் முன்முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் காரணமாக அதன் விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் விளக்கினார். எவ்வாறாயினும், நிதி மற்றும் பெளதீக உதவிகளை வழங்குவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். சமூக நலனோம்பலுக்காக 200 பில்லியன் நிதி திரட்டப்படுகிறது எனவும் பிரதமர் தெரிவித்தார் .

ஜப்பானின் நம்பிக்கையை மீட்பதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். உணவு மற்றும் மருத்துவப் பொருட்களில் உதவி செய்வதில் நாடுகள் முன்னேறி வருவதாகவும், எனினும், எந்த நாடும் எரிபொருளை இலவசமாக வழங்க முன்வராது என்றும் பிரதமர் கூறினார்.

இந்த வரவிருக்கும் மாதங்களில் நாட்டுக்கு உதவ ஊடக நிறுவனங்களின் ஆதரவில் தான் தங்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கல்வி அமைச்சு சென்ற மாணவர்கள் கண்ணீர் புகையடித்து விரட்டியடிப்பு!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால் கல்வி அமைச்சுக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் கல்வி அமைச்சுக்கு முன்னால் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியதுடன், உள்ளே சென்று அதிகாரிகளை சந்திக்கவும் முயற்சித்தனர்.

இவ்வேளையில் அவர்களை பிரதான நுழைவாயிலில் மறைத்த பொலிஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர்.

இலங்கை உரப் பிரச்சினைக்கு தீர்வு – இந்தியாவுடன் ஒப்பந்தம்

நிதியமைச்சின் செயலாளர் எம்.சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடன் வரியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

65,000 மெட்ரிக் டொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கத்திடம் கடன் வசதியை அரசாங்கம் கோரியது.

இது சிறுபோக பருவத்தில் யூரியா உர தேவையின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து யூரியா உரம் கொள்முதல் செய்வதற்கு 55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வரியை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.

உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.இ. கோபால் பாக்லே தலைமையில் இடம்பெற்றது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முன்னுரிமை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்த கடன் வசதி எதிர்வரும் சிறுபோக பருவத்தில் யூரியா கிடைப்பதை உறுதி செய்ய உதவும்.

Posted in Uncategorized

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் 1, 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே மாதத்தில் 1, 920 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது. இதன் பகுதிகளில் ஒன்றான வெளிநாட்டு நாணய இருப்புக்கள், ஏப்ரல் மாதத்தில் 1, 602 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன் மே மாதத்தில் 1, 805 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஏனைய உறுப்பு பகுதிகளான சிறப்பு வரைதல் உரிமைகள் 115 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 21 மில்லியன் அமெரிக்க டொலராக சரிவடைந்துள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பு 28 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது . இரண்டு மாதங்களுக்கு இடையில் 29 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு விகிதம் மே 13 முதல் இந்த வாரம் வரையில் அதிகரித்துள்ளதை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம், டொலர்களை மாறியதில் இருந்து பெறப்பட்ட வருமானம், திறந்த கணக்குகள் மீதான கட்டுப்பாட்டு வழிகாட்டுதல் மூலம் பெறப்பட்ட வருமானம் மூலமம் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மேலதிகமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வருமானங்கள் இன்னும் தேவைப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

புதிதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
இலங்கை முதலீட்டுச் சபை
இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனம்
ஆட்பதிவு திணைக்களம்,
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு
தரநிலை நிறுவனம்
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம்
கொழும்பு தாமரை கோபுரம்

Posted in Uncategorized

இலங்கையில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைவான அல்லது மலிவான உணவை உண்கின்றனர் -ஐ.நா. சபை

இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் மாதாந்த அறிக்கையில் இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலிவு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதாகவும், இது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு போகங்களிலும் நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20% அதிகரித்துள்ளதாகவும், வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6% அதிகரித்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்த இறுமாப்பில் எடுத்த முடிவுகளால் இன்று மக்களே அல்லற்படுகின்றனர் – ஜனா

தனக்கு அறுபத்தொன்பது இலட்சம் மக்களின் வாக்கு கிடைத்தது என்ற இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையே நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையான விவசாயம் அதள பாதாளத்துக்குள் வீழ்ந்ததன் ஒரே காரணமாகும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் இன்று அல்லற்படுவது நம் நாட்டு மக்களே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய குடும்பத்திற்கு இன்று உணவு கிடைக்குமா என்றே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழும்பஸ்தரும் சிந்திக்கின்ற நிலைமை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தவறான தீர்மானங்களால் உருவாகியிருக்கின்ற இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இன்றைய நிலையில் அவசியமாகும்.

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகமுடியாது. தனக்கு 5 வருடங்களுக்கு மக்கள் ஆணை வழங்கியதாக ஜனாதிபதி கோட்டபாய தெரிவிக்கிறார். கால வரையறையை அவர் எந்தவகையில் நிர்ணயிக்கிறார் என்பது தெரியவில்லை. மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்தவரை வேண்டாமென்று சொல்லும் மக்களிடம் அவர் கூறும் பதில் இதுதானா? அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வெளியேறுமாறு இளைஞர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இப்படியான ஒரு கருத்தை ஜனாதிபதியால் எவ்வாறு கூறமுடிகிறது?

நாட்டில் நடைபெற்ற யுத்தம், அதனால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குள் நாடு இருக்கையில் உலகளவில் ஏற்பட்ட கொவிட் தொற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரீட்சையாகும். அந்தப் பரீட்சையில் அவர் தோல்வியடைந்தார். அதனால் ஏற்படுத்தப்பட்ட விலை அதிகரிப்பும், கட்டுப்பாட்டு விலை அகற்றலும் நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு. இந்த விலை அதிகரிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது அடிப்படை வாழ்வாதாரத்துக்காக அன்றாடம் சிரமப்படும் அடிமட்ட மக்களாகும்.

விவசாயம் நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையாகும். அது இன்று அதள பாதாளத்துக்குள் வீழ்ந்து விட்டது. அதற்குக் காரணம் ஜனாதிபதி தனக்கு கிடைத்த 69 இலட்சம் மக்களின் வாக்கு காரணமாக ஏற்பட்ட இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையாகும். ஒரு கொள்கைளை நடைமுறைப்படுத்த முனையும் போது அது தொடர்பில் நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற சூழலை அறிந்து கொள்ளவேண்டும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் அல்லற்படுவது நாட்டு மக்களே.

கடந்த வருடத்தில் உரம் இன்மையால் நாட்டில் அரிசி விலை அதிகரித்துவிட்டது. அது தவிரவும் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன. இப்போது தொடங்கியிருக்கின்ற வேளாண்மைச் செய்கையாயினும் விளைச்சலைத் தரவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்க வேண்டிய நிலையிலேயே விவசாயிகள் இருக்கின்றனர்.

காரணம் இம்முறையேனும் நேர காலத்துக்கு இரசாயன உரம் கிடைக்குமா என்பதிலேயே மக்கள் தங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் விவசாய அமைச்சர் இந்திய உதவித்திட்டத்திலே அறுபத்தையாயிரம் மெக்றித் தொன் உரம் ஒரு மாதத்துக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார். நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.

உரத்தினை மானிய அடிப்படையில் நீங்கள் வழங்காவிட்டாலும், சாதாரண விலையிலாவது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நாற்பது, நாற்பத்தையாயிரம் ரூபாவுக்கு ஒரு அந்தர் யூரியாவை எடுத்து சிறு விவசாயிகள், வேளாண்மை செய்வோர், மரக்கறி செய்வோர், மலையகத் தொழிலாளர்கள் எப்படி அவர்களது விவசாயத்தை முன்னெடுப்பது?

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்கின்றோம். உள்ளுர் உற்பத்தியை விளைவிக்கக் கூடிய அளவிற்கு இரசாயன உரமின்றி எப்படி அந்த விளைச்சல் உருவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று நாங்கள் எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், வரிசையில் நின்று கொண்டிருக்கின்றோம். ஓரளவுக்கு எரிபொருளும், எரிவாயுவும் கிடைக்கின்றது. ஆனாலும் வரிசைகள் மாத்திரம் குறையவில்லை. பெற்றோலுக்கும், டீசலுக்கும் மக்கள் பெரும் ஏக்கத்தில் இருக்கின்றார்கள். எரிவாயு மேல்மாகாணத்தில் கொடுக்கப்படுகின்றது. மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மண்ணெண்ணை கூட தட்டுப்பாடாக இருக்கின்றது.

இன்று மண்ணெண்ணை இல்லாமல் சிறு விவசாயிகள் மரக்கறித் தோட்டம் செய்பவர்கள் தங்களது நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்க முடியாமல் இருக்கின்றார்கள். கடலுக்குச் செல்பவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமலிருக்கின்றார்கள். இன்று நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் இருக்கின்ற நிலையில், கட்டுப்பாடற்ற விலைகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிறு வியாபாரிகள் கூட நினைத்தபடி பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில், அரசாங்க உத்தியோகத்தர்கள், மாதாந்த வருமானம் பெறுபவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள்.

இவ்வாறான நேரத்தில் கமம் செய்பவர்கள், கடலுக்குச் செல்பவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் தங்களது தொழிலைக் கூட செய்ய முடியாமலிருக்கின்றார்கள். எனவே பெற்றோலிய அமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களுக்கு மண்ணெண்ணையையாவது கொடுக்க வேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோளாக இருக்கின்றது. எரிவாயுவைப் பெறமுடியாவிட்டால் மண்ணெண்ணையிலாவது தங்களது அடுப்புக்கள் எரியவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடற்ற விலையைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் முதலாளிகள் முதல் சிறுவியாபாரிகள் வரை தாங்கள் நினைத்தபடி விலைகளைத் தீர்மானிக்கின்றார்கள். இதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கையின் 1.7 மில்லியன்மக்களை காப்பாற்றுவதற்கு 47 மில்லியன் டொலர் அவசரமாக தேவை – ஐநா வேண்டுகோள்

இலங்கைக்கு 47 மில்லியன் டொலர் உயிர்காக்கும் உதவி தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கான கூட்டு மனிதாபிமான முன்னுரிமை திட்டமொன்றை ஐநாவும் அரசசார்பற்ற அமைப்புகளும் இன்று வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் ஐநா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்படப்போகின்ற 1.7 மில்லியன் பேருக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கு 47.2 மில்லியன் டொலர் தேவை என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய நெருக்கடி காரணமாக எழுந்துள்ள அவசர தேவைகளைபூர்த்தி செய்வதற்கு ஐக்கியநாடுகளின் உதவியுடனான பல்துறை சர்வதேச உதவி தேவை என இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை தொடர்ந்தே ஐநா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள மனிதாபிமான அபிவிருத்தி சகாக்கள் 5.7 மில்லியன் மக்களிற்கு உடனடி உயிர்காக்கும் உதவி தேவைப்படுகின்றது என மதிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் உணவுப்பாதுகாப்பிற்கு பல விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனநாங்கள் தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் பல குடும்பங்களால் அடிப்படை உணவு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் என இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் மனிதாபிமான நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்கு அவசரநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அபிவிருத்தி மற்றும் சமூக பொருளாதார விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மிகவும் வலுவானதாக காணப்பட்ட இலங்கையின் சுகாதார துறை நெருக்கடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் வாழ்வாதாரம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுஇமோசமாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அதிக தாக்கத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிற்கான தனது ஆதரவை சர்வதேச சமூகம் வெளிப்படுத்தவேண்டிய தருணம் இது என ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரநிதி தெரிவித்துள்ளார்.

ஐநாஇ மற்றும் மனிதாபிமான சகாக்கள்இ உதவி வழங்கும் சமூகத்தினர் தனியார் துறையினர் இதனிநபர்கள் இலங்கையில் நெருக்கடியால் அதிகளவு பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் ஆண்களிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன் மூலம் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் உயர் நடுத்தர வருமான நாடாக காணப்பட்ட இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கி;ன்றது மே மாதம் பணவீக்கம் 57.4 வீதமாக காணப்பட்டது,அதேவேளை முக்கிய உணவு பொருட்கள் சமைப்பதற்கான எரிபொருள் போக்குவரத்து தொழில்துறை போள்றவற்றில் பரந்துபட்ட தட்டுப்பாடுகள் காணப்படுகின்றன,நாளாந்த மின்துண்டிப்பும் காணப்படுகின்றது.

உற்பத்தி;க்கான அடிப்படை உள்ளீடுகள் கிடைக்காமை,நாணயத்தின் 80 வீத தேய்மானம்,அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை,மற்றும் நாடு அதன் கடன்களை செலுத்த தவறியமை காரணமாக பொருளாதாரம் கடும் மந்தநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

உணவு நெருக்கடி குறிப்பாக உணவுப்பாதுகாப்பு விவசாயம் வாழ்வாதாரம் சுகாதார சேவைகளை பெறுதல் ஆகியவற்றை பாதித்துள்ளது. இறுதி அறுவடையில் உணவு உற்பத்தி கடந்த வருடத்தை விட 40 முதல் 50 வீதம் குறைவாக காணப்பட்டது,தற்போதைய விவசாயபருவகாலம் ஆபத்தில் சிக்குண்டுள்ளது,விதைகள் உரங்கள் எரிபொருள் கடன் தட்டுப்பாடே இதற்கு காரணம்.

இலங்கையின் 22 மில்லியன் சனத்தொகையில் ஐந்து மில்லியன் மக்கள் உணவு உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

சமீபத்தைய ஆய்வுகள் 86 வீதமான வீடுகள் உணவுண்பதை குறைப்பது போன்றவற்றை பின்பற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க உதவத் தயார் – சீனா

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து உதவுவதில் சீனா தீவிரமான பங்கை வகிக்க தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீட்டு பங்காளிகளின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் அதன் உள்நாட்டு சந்தையின் நிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் இலங்கைக்கு சீனா அழைப்பு விடுக்கிறது என அவர் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை நோக்கி சீனா தனது மூலோபாய கவனத்தை மாற்றுவதாகத் தெரிகிறது. நிதி சிக்கலில் உள்ள தெற்காசிய நாடுகள் பெய்ஜிங்கில் இருந்து அதே கவனத்தைப் பெறவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஜாவோ, ஒரு நல்ல அண்டை நாடு என்ற வகையில், சீனா இலங்கை மக்களுக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.9 மில்லியன் டாலர்) மனிதாபிமான உதவி உட்பட பல நிவாரணங்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

தெற்காசிய நாடுகளுடனும் நல்ல அண்டை நாடுகளுடனும் நல்லுறவை வளர்ப்பதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியின் நேர்மறையான போக்கைப் பேணவும் மக்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன.

13 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, இலங்கை மின்சார திருத்த சட்டமூலத்தில், 10 மெகாவாட்டிற்கும் அதிக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது விலைமனு கோரப்பட வேண்டும் என எதிர்கட்சி முன்வைத்த கோரிக்கை, குழுநிலை விவாதத்தின் போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் அளிக்கப்பட்டமையால், குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இந்நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் போது, எவ்வித திருத்தங்களும் இன்றி நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் மூன்று தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதன்போது பெரும்பான்மை வாக்குகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வழங்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பாரியளவிலான மின் உற்பத்தி திட்டங்களுக்கான அனுமதி, போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவுள்ளதாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் காரணமாக மின்சக்தி சட்டத்தின் திருத்தம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மின்சார பொறியியலாளர்கள் பணி பகிஷ்கரிப்பொன்றையும் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் நிறைவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து குழுநிலை சந்தர்ப்பத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சட்டமூலத்திற்கான திருத்தங்களை முன்வைத்தார்.

இதன் பிரகாரம், எதிர்க்கட்சியினர் முன்வைத்த திருத்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

எதிர்க்கட்சியின் திருத்தம் 58 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது, திருத்தத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 115 வாக்குகளும் கிடைத்தன.

தமது திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், அது தொடர்பிலான சரத்து மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, சட்டமூலத்தின் குறித்த சரத்திற்கு ஆதரவாக 116 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 46 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டன.

இதற்கமைய, இலங்கை மின்சக்தி திருத்த சட்டமூலம் திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பூநகரியிலும் மன்னாரிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் போட்டித்தன்மையுடன் கூடிய விலைமனு கோரல் நடைமுறையின்றி இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறைந்தபட்ச செலவீனங்கள் தொடர்பிலான கொள்கையை மீறும் வகையில், இந்த திட்டங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதால், பல்வேறு சிக்கல்கள் உருவாவதாக அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.