சுமந்திரனைக் காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா? – ரெலோ

கப்பல் கட்டியவனையும் அதற்காக தன்னுயிர் நீத்தவனையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முனையும் உங்களை காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரச்சார செயலாளர் சொக்கன் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய இனத்தின் தாயக விடுதலையை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியான சர்வதேச உள்ளக பொறிமுறையை வென்றெடுப்பதற்கும் தமிழ் தேசிய மக்களின் பேராதரவுடன் கட்டி வளர்த்தெடுக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதன் உருவாக்கம் பற்றி தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அது தான் உண்மையும் கூட. தாங்கள் வவுனியாவில் ஆற்றிய உரையில் “தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி அளிக்கும்”என்று கூறினீர்கள்.  அந்த அதிரடியான நிகழ்ச்சித் திட்டத்தை ரெலோ மீது சுமத்தினால் உங்கள் கட்சிக்குள் இருந்து ஏற்படும் பூகம்பத்திற்கு என்ன முடிவு?

சுமத்திரன் ஐயா நீங்கள் புத்திசாலிதான். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமிழ் ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய முதன்முதல் தாய் இயக்கம்.  தமிழ் ஈழ விடுதலை இயக்கம். தங்கத்துரை, குட்டிமணி, தம்பி பிரபாகரன் கூட இவ்வமைப்பின் வழித்தோன்றலே. தேசிய தளத்திலேயே அன்றுதொட்டு இன்றுவரை ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் பெருமைக்குரிய உரிமை கொண்டாடக் கூடிய ஒரு இயக்கம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
தமிழ் தேசிய விடுதலை மீது தீர்க்கதரிசன மிக்க செயற்பாடுகள் பட்டறிவு கொண்டு நெறிப்படுத்தி நிற்கும். தமிழ் தேசிய சிந்தனை உங்கள் சந்தையில் விலை போகாததால் நீங்கள் சிந்திய சீறிய ரெலோவின் மகிழ்ச்சியான செய்தி உங்களை தரம் உயர்த்தும் என்று, நப்பாசையை தூக்கி எறிந்து தமிழ் மக்கள் மத்தியில் உங்கள் மீது உள்ள வெறுப்புணர்ச்சியை மெருகூட்டும்.  உங்களின் அநாகரிகமான வெளிபாடுகளுக்கு நாகரீகமாக பதில் அளிப்பது சிறந்தது.

எமது அமைப்பு கட்டுக்கோப்புடன் இருந்து முடிவுகளை எடுப்பதால் தலை இருக்க வால் ஆடுவதில்லை. கொள்கை ரீதியில் தாய் இயக்கமான ரெலோ தமிழ் இனத்தின் விடுதலை இயக்கமான ரெலோ தமிழ் தேசிய அரசியலில் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையையும் காட்டி தப்பிக்கும் விலாங்கு அல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆரம்பிக்க அந்த ஆரம்பப் புள்ளியை உருவாக்க ஆயுதப் போராட்ட அமைப்புக்களை ஒருங்கிணைக்க நாம் பட்ட துன்பங்களையும் அங்கு ஏற்பட்ட வேதனை வலிகளை அந்நேரம் அப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தான் தெரியும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நோக்கமும் தியாகமும் பணியும் பணிவும் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு என்றும் தொடரும்.

சுமந்திரனால் வெளியிடப்பட்ட வெட்கக்கேடான வார்த்தைகளை வேதனையுடன் பரிசீலிக்க வேண்டியது தமிழ் இனத்தின் எதிர்கால விடிவுக்கு மட்டுமே.

விடுதலை நோக்கம் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயங்கரவாத அமைப்பாக உலகில் சித்தரிக்கப்பட்ட புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்டு பேராதரவுடன் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் ஜனநாயகக் குரல் தமிழ் தேசிய கூட்டமைப்பு,  ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் ஆணிவேராக மாறியது.

ஐயா சுமந்திரன் அவர்களே 2010ஆம் ஆண்டு நீங்களும் வேதனையும் வலியும் இன்றி தேசிய பட்டியல் மூலம் அந்தக் கப்பலில் பயணிக்க தொடங்கி விட்டீர்கள். இது உங்களுக்கு கிடைத்த முகவரி. கப்பல் கட்டியவனையும் அதற்காக தன்னுயிர் நீத்தவனையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முனையும் உங்களை காப்பாற்றி காக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் துணை நிற்க முடியுமா?

இந்தக் கப்பலில் நீங்கள் ஏறியபின் தமிழ் தேசிய ஒற்றுமை தனம் எவ்வளவு தூரம் சிதறடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்வீர்களா?

தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பம் முதல் இன்றுவரை அகரம் போல் விளங்கும் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆரம்ப கல் என்பதை மறந்து விடாதீர்கள்.
ரெலோ தனது பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்லும்.

இறுதியாக சிங்களப் பெரும்பான்மை மூலம்தான் தனது வெற்றி உறுதியானது என்றும் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பொருளாதார பிரச்சினை மட்டுமே உண்டு என்றும் அது தீர்க்க முடியும் என கூறிய ஜனாதிபதி 2/3 பெரும்பான்மை பலத்துடன் மூன்று வருடங்கள் இருந்தபோதும் தமிழ் தரப்புடன் பேச விரும்பவில்லை.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தமிழ் தேசிய இனத்தின் குரல் இலங்கை பாராளுமன்றத்தில் உலகளாவிய ரீதியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் முன் நகர்வுகள் கிடப்பில் கிடப்பதை எண்ணிக் கூடப் பார்க்காத ஜனாதிபதியினை ஆதரித்த பெரும்பான்மை மக்களே தற்சமயம் வீதியில் இறங்கி போராடுகிறார்கள். அவரின் அரசியல் பலமும் பலவீனமடைந்து வரும் நிலையில் தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பலிலிருந்து சர்வதேசத்தையும் புலம்பெயர் தமிழர்களையும் ஈர்க்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச அழைத்த தமிழ் தரப்பு களால் முன்வைக்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தியத்தை இல்லாதொழிப்பதும் குறிக்கோளாக வைத்த அரசின் செயற்பாட்டை அரசின் வெளிப்பாடற்ற அழைப்பையும் தமிழீழ விடுதலை இயக்கம் ஜனாதிபதியை சந்திப்பது சாலச் சிறந்ததல்ல என்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வலியுறுத்தியமை தங்களின் வவுனியா கூட்டத்தின் வெளிபாடாகும்.

தலைவர் பிரபாகரனுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அஸ்திவாரம் இட்ட தமிழ்தேசிய பரப்பில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட என்றும் தயாராக இருக்கின்றது. அதற்கான வழிகளை உங்கள் பேச்சும் செயல்பாடும் தெளிவுபடுத்தும் மகிழ்ச்சியான செய்திக்கு காத்து நிற்கின்றேன்.

பிரதமர் மஹிந்தவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகினர் !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ஒருமித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Share

Posted in Uncategorized

சுதந்திர சதுக்கத்திற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயற்சித்த போதிலும் பாதுகாப்புப் படையினர் அதற்கு அனுமதிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஒன்றுகூடிய அவர்கள் இன்று காலை 11 மணியளவில் நெலும் பொக்குண திரையரங்கிற்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு பேரணியாகச் சென்றனர்.

எனினும், அவர்கள் சுதந்திர சதுக்கத்தை அடைந்ததும், அதற்கு முன் இருந்த பாதை முற்றாக மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி.யினர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்தனர்.

இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (3) முற்பகல் 11 மணியளவில் மஹரகம நகரில் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கே.டி. லால்காந்த, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுனில் ஹந்துன்நெத்தி, வசந்த சமரசிங்க, கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, லக்ஷ்மன் நிபுணராசாச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

பேராதெனிய பல்கலைகழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல்!

பேராதெனிய பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கண்டிக்கு பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸாரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கண்ணீர்ப்புகைத் தாக்குதலைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று(03) மாலை 3.30 மணிக்கு நீக்கப்படும் – தொழில்நுட்ப அமைச்சு

தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்கள் இன்று மாலை மீண்டும் வழமைக்கு திரும்பும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 3.30 முதல் மணி முதல் இவ்வாறு வழமைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் முகப்புத்தகம், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஊரடங்கு அறிவிப்பு – மக்களின் அவலநிலை!

நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (02) மாலை 6 மணி தொடக்கம் நாளை (04) திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் அதிக அளவு மக்கள் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் வழமை போன்று எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

6 மணியை கடந்த நிலையிலும் மன்னார் நகர் பகுதியில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்கி வந்த நிலையில்,நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்களின் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

Posted in Uncategorized

“நாட்டை சீரழிக்காதீர்கள் ” அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்தில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

“நாட்டை சீரழிக்காதீர்கள் ” எனத் தெரிவித்து கோட்டாபய அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்ட சர்வதேசத்திலுள்ள சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள இலங்கையர்களாலும் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தற்போதைய நிலையை கண்டித்து அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண், சிட்னி, பிரிஸ்பேர்ன் மற்றும் பேர்த் போன்ற நகரங்களில் கூடிய சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

சிங்கள மக்களின் கோபம் அரசாங்கத்தை அசைக்குமா? நிலாந்தன்.

அரசியலில், அரசியல் பொருளாதாரம்தான் உண்டு.இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் அரசியல்தான். பொருளாதாரத்தை சரியாக முகாமை செய்யத் தவறியமை மட்டும் காரணமல்ல. அது ஒரு உப காரணம்தான். இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியை அரசியல் நீக்கம் செய்து ஒரு பகுதி பொருளாதாரவிமர்சகர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலில் இருந்து பிரித்துப் பேசி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவு இப்பொழுது எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தனிய பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்பட்டவை அல்ல.இப்பொருளாதார நெருக்கடியை அதன் அரசியலை நீக்கிப் பேசுவது என்பதே ஓர் அரசியல்தான்.
இந்த அடிப்படையில் பார்த்தால் நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை அதன் அரசியல் பரிமாணத்திலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.அதற்கு நிரந்தரத் தீர்வை அரசியல் ரீதியாகத்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த அடிப்படையில்தான்,அரசாங்கம் தேர்தல் காலங்களிலும், தேர்தல் வெற்றிகளுக்கு பின்னரும் நாட்டின் மக்களுக்கு வாக்குறுதி அளித்த எல்லாவற்ரிலிருந்தும் பின்வாங்கி வருகிறது.இந்த தலைகீழ் மாற்றங்களின் தொடக்கம் பசில் ராஜபக்சவை நிதி அமைச்சராக நியமித்தமைதான். அரசுத்தலைவர் கோட்டாபய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு முன்னும் பின்னும் தன்னை மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் பணியாத ஒருவராகவே காட்டிக் கொண்டார். இந்தியாவுடன் செய்துகொண்ட கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கான உடன்படிக்கையில் இருந்து பின்வாங்கினார். தன்னை தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்ற ஒருவர் என்றும் சிங்கள பௌத்தர்களின் தலைவன் என்றும் கூறிக் கொண்டார்.

ஆனால் வைரஸ் அவரைப் பணிய வைத்திருக்கிறது. வைரசின் விளைவாக மேலும் சரிந்த பொருளாதாரம் அவரைப் பணிய வைத்திருக்கிறது. இந்தப் பணிவின் தொடக்கம் பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சராக நியமிப்பது என்று முடிவெடுத்ததுதான். அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளை நிராகரித்த ஓர் அரசாங்கம் அமெரிக்காவின் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவரை நிதியமைச்சராக நியமித்ததன்மூலம் அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் மாற்றத்தின் முதல் சமிக்கையைக் காட்டியது. அதிலிருந்து தொடங்கி பசில் ராஜபக்ச வெளியுறவு அணுகுமுறைகளில் உத்தி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார்.ஜி எல் பீரிஸ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.மஹிந்த சமரசிங்க அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொடவின் நியமனம் துரிதமாக்கப்பட்டது. இவ்வாறாக வெளியுறவு அணுகுமுறை.மாற்றத்தை பிரதிபலிக்கும் நியமனங்கள் வேகமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

அதோடு ஐநாவை நோக்கி அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியது. பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது ,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தொகுதிக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு வடிவிலான ஒரு பொறி முறைக்கு தயாராக காணப்பட்டமை, ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்புக்களை அவற்றின் நலிந்த நிலையிலும் தொடர்ந்து பேணியமை. அக்கட்டமைப்புகளுக்கு அதிகரித்த நிதியை ஒதுக்கியமை, யாப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவை நியமித்தன்மை,இந்தியாவுடன் புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டமை போன்ற பல விடயங்களிலும் அரசாங்கம் வெளியுறவு உத்திகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக கிடைத்த வெளியாதரவுகளின் தொகுக்கப்பட்ட வெற்றிதான் வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். சில அரச பிரமுகர்கள் கூறுவது போல படையினரின் கையில் வைரசுக்கு எதிரான போர் கொடுக்கப்பட்டதால் கிடைத்த வெற்றி அது அல்ல. மாறாக வெளியுறவுப் பரப் ப்பில் அரசாங்கம் சுதாகரிக்கத் தொடங்கியதன் விளைவாக வெளிநாடுகள் வழங்கிய உதவிகளின் திரட்டப்பட்ட விளைவே வைரசுக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும்.

இவ்வாறாக வைரஸை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்திய அரசாங்கம் வைரஸின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளிலிருந்து தப்ப முடியவில்லை. வெளியுறவு அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பசில் ராஜபக்ச வெளிநாட்டு உதவிகளை நாட்டுக்குள் கொண்டு வந்தார்.எனினும் பொருளாதார நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை.

இலங்கைத் தீவின் பொருளாதாரம் மிகவும் சிறியது.பேரரசுகள் கை கொடுத்தால் அதை இலகுவாக நிமிர்த்தலாம். ஆனாலும் கடந்த சில மாதங்களாக பேரரசுகள் செய்த பெரும் உதவிகளால் இலங்கைத் தீவுக்கு மூச்சுவிடும் அவகாசம்தான் கிடைத்திருக்கிறதே தவிர,பொருளாதாரம் நிமிரவில்லை.இதனால் பசில் ராஜபக்சவே அதிகம் விமர்சிக்கப்படுகிறார். அவரை பதவிக்கு கொண்டு வந்த பொழுது அவர் பல தலைகளைக் கொண்ட மந்திரவாதி போல கட்டப்பட்டார். அவர் ஒரு மந்திரவாதி அல்ல என்று எனது கட்டுரைகளில் ஏற்கனவே நான் எழுதி இருக்கிறேன். எந்தப் பெரிய மந்திரவாதி வந்தாலும் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை நினைத்த மாத்திரத்தில் நிமிர்த்த முடியாது.பஸில் மட்டுமல்ல போதிசத்துவரே நிதியமைச்சராக நியமிக்கப்பட்டாலும் பொருளாதார விடயங்களில் மந்திர மாயங்களைச் செய்ய முடியாது.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தோல்விகள் யாவும் பசில் ராஜபக்ச என்ற தனிமனிதனின் தோல்விகளாக ஒரு பகுதி சிங்கள விமர்சகர்களால் காட்டப்படுகின்றன. ஆனால் இது பசில் ராஜபக்சவின் அல்லது அவரது சகோதரர்களின் தனிப்பட்ட தோல்வியல்ல.அவை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அரசியல் தோல்விகளிலிருந்து தொடங்குகின்றன. அதைவிட ஆழமான பொருளில் சொன்னால் தோல்விகள் யாவும் இனவாதத்திலிருந்து தொடங்குகின்றன.
இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது.ஆனால் பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் முடிவுகளில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உள்ளடங்கும்.அதனால்தான் அரசாங்கம் கூட்டமைப்போடு பேச முன் வந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்கிறது.

அது காலத்தால் பிந்திய ஞானம். தவிர அரசாங்கத்தால் தன்னுடைய முன்னைய பிரகடனங்கள் இருந்து முற்றிலுமாக பின்வாங்கி தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வை கொடுக்க முடியாது. அதுபோலவே புலம்பெயர்ந்த தமிழர்கள் மனதிலும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காக புலம் பெயர்ந்தார்களோ அக்காரணம் நீக்கப்படாத ஓர் அரசியல் சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்குள் முதலீடு செய்யத் துணிய மாட்டார்கள்.

ஆனால்,சிங்கள மக்கள் தமது பொறுமையை இழந்து விட்டார்கள். எந்த ஒரு இரும்பு மனிதர் தமக்குத் தேவை என்று கூறி அமோகமான வெற்றியை கொடுத்து அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தார்களோ, அவரை வீட்டுக்கு போ என்று கேட்டு அவருடைய தனிப்பட்ட வாசஸ்தலத்தை முற்றுகையிடும் ஒரு நிலை. இலங்கைத்தீவின் இதற்கு முன்னிருந்த எந்த ஒரு ஜனாதிபதிக்கும் இப்படி ஒரு நெருக்கடி வந்ததில்லை. இதற்கு முன்னிருந்த எந்த ஒரு அரசியல் தலைவரின் தனிப்பட்ட வாசஸ்தலம் இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களால் இவ்வாறு முற்றுகையிடப்பட்டதுமில்லை.

வெல்லக்கடினமான ஒரு யுத்தத்தை வென்று கொடுத்ததற்காக தாம் தலையில் வைத்துக் கொண்டாடிய ஒரு வெற்றி வீரரை “வீட்டுக்கு போ” என்று சிங்கள மக்கள் கேட்கும் ஒரு நிலைமை. ஆனால் அவ்வளவு இலகுவாக அவர் வீட்டுக்குப் போகக் கூடியவர் அல்ல. அவரை அவ்வாறு வீட்டுக்கு அனுப்ப இப்போது எந்த எதிர்க்கட்சியாலும் முடியாது.
மனோ கணேசனின் வார்த்தைகளில் சொன்னால் அரசாங்கம் எப்பொழுதோ தோற்றுவிட்டது. ஆனால் அந்தத் தோல்வியை தம்முடையதாக சுவீகரித்துக் கொள்ள எதிர்க்கட்சிகளால் முடியாதிருக்கிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவு..மூன்று இனத்தவர்களின் வாக்குகளை கவர தேவையான ஒரு ஜனவசியம் மிக்க தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் இல்லை.அதுதான் ராஜபக்சக்களின் பலம்.

இது ஆட்சி மாற்றத்தை விரும்பும் வெளித் தரப்புகளுக்கும் விளங்குகிறது. ராஜபக்சக்களை இலகுவாக வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பது அவர்களுக்குத் தெரிகிறது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு பதிலாக ஆளை மாற்றி அதன் மூலம் நமக்கு அனுகூலமான ஓர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று சில நாடுகள் யோசிப்பதாக தகவல்கள் உண்டு. அந்த ஆள் பசில் ராஜபக்ச என்றுதான் பொதுவாக வெளிநாடுகள் நம்புவதாகவும் தகவல் உண்டு.

கடந்த வாரம் இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பின்னணியில் பசில்தான் இருந்தார்.அவருடைய உழைப்பின் விளைவாகத்தான் அந்த உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன.அந்த உடன்படிக்கை களின்மூலம் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அச்சங்களை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணித்திருக்கிறது. இந்தியா இனப்பிரச்சினையை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கையாள முடியாதபடிக்கு பசில் ராஜபக்ச இந்தியாவை திருப்திப்படுத்தியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஐநாவின் விடையத்திலும் அமெரிக்காவின் விடையத்திலும் அவர் அவ்வாறுதான் காய்களை நகர்த்தி வருகிறார். இவற்றின் தொகுக்கப்பட்ட விளைவாக வெளியுறவுப் பரப்பில் நாட்டை நோக்கி வந்த அழுத்தங்களை அவர் பெருமளவுக்கு குறைத்திருக்கிறார். ஆனால் நாட்டுக்குள் நிலைமைகள் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிகளை அடைந்துவிட்டன.
பசில் ராஜபக்சே முன்னெடுக்கும் ஆகிய அணுகுமுறைகளில் பொருளாதார விளைவுகளை நாடு அனுபவிப்பதற்கு காலம் எடுக்கும்.பொருளாதார மாற்றங்கள் மாயாஜாலக் கதைகளில் வருவது போல திடீரென்று நடக்கக் கூடியவை அல்ல. பொருளாதாரத்துக்கு அதற்கான விதிகள் உண்டு. அரசியல் பொருளாதாரம் அதன்படிதான் மாற்றங்களை அடையும். மந்திரத்தால் மாங்காய் பிடுங்க முடியாது. ஆனால் அதற்கிடையில் சிங்கள மக்களை சாந்தப்படுத்த ராஜபக்சக்களிடம் எதுவும் இல்லை. யுத்த வெற்றிதான் அவர்களுடைய பலம். அதுதான் அவர்களுடைய அரசியல் முதலீடு. யுத்த வெற்றி எனப்படுவது 2009க்குப் பிந்திய சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் அப்டேட் செய்யப்பட்ட ஒரு வடிவம்தான்.

பண்டாரநாயக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்து தேர்தல் வெற்றிக்காக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் உள்நாட்டு மூலகங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தை அதன் முதற்கட்ட உச்சத்துக்குக் கொண்டு போனார். ராஜபக்ச குடும்பம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை அதன் இரண்டாம்கட்ட உச்சத்துக்கு கொண்டு போனார்கள். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் இப்பொழுது அந்த வெற்றி நாயகர்களை வீட்டுக்கு போ என்று கேட்கிறது. இது கார்ல் மார்க்ஸின் கூற்று ஒன்றை ஞாபகப்படுத்துகிறது. “வரலாற்றில் சில சம்பவங்கள் இரண்டு தடவை நடக்கின்றன. முதல் தடவை அது அவலச்சுவை நாடகமாக முடியும். இரண்டாவது தடவை அது நகைச்சுவை நாடகமாக முடியும்”.

அவசரகால நிலை குறித்து விசேட கூட்டம் !

நாட்டில் பொதுமக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது .
மேலும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமையின் பின்னணியில் உள்ள காரணம் மற்றும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் விடயம் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Posted in Uncategorized