நாம் வாய் திறந்தால் நாடு பற்றியெரியும் – விமல்

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியுமென எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே  பசில் அவ்வாறு கூறினார் என்றார்.

பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்  திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

அடுத்தவாரம் முதல் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.12 மணி நேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை. நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஏனைய அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்!

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும்.

எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில், ஜனாதிபதி அல்ல பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் நபரே பலம் மிக்கவராகக் கருதப்படுவார்

அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இது மிகவும் கடினமான விடயம் . அதனை மேற்கொள்ள மக்களின் பேராதரவு கட்டாயம் தேவை என உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிடமிருந்து கடன் கிடைப்பதால், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடன் வசதிகளுடாக கிடைக்கும் சலுகைகள் முடிவடைந்த பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு 113 பேர் ஒன்றிணைந்த பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியும் எனவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலை CLF வளாகத்தில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக

இதேவேளை, கட்சியின் நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் 150 போராட்டங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தபோராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்ற நேற்று பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது.

இந்நெருக்கடியான தருணத்தில் இந்தியா தனது சகோதரத்துவக் கரத்தை இலங்கைக்கு நீட்டியதற்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுவரை இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவு மற்றும் அது எந்தளவிற்கு பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியில் பரவியுள்ளது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான உதவிகளை மக்கள் மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்; ரணில்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,

சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எமது ஆட்சியிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன. எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைப்புகளும் தடைபட்டியலில் இணைக்கப்பட்டன. அவைமீதான தடையை நீக்குமாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை நியாயமானது.

எமது ஆட்சியில் வேலை வாய்ப்பு இருந்தது, வருமானம் இருந்தது, உண்பதற்கு உணவு இருந்தது, ஆனால் தேசிய வாதம் பற்றி கதைத்தனர், நாட்டை மீட்போம் என சூளுரைத்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி கதைத்தனர். இறுதியில் தற்போது என்ன நடந்துள்ளது? இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா?

எனவே, இவ்வாறான அரசியலை விட்டுவிடுவோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம். தேரர்களும் இதனை வலியுறுத்துகின்றனர்.

புலிகளின் கதை முடிந்துவிட்டது. அவர்களால் மீண்டெழமுடியாது. புலம்பெயர் அமைப்புகளிடம் தற்போது நிதி இல்லை, தனி நபர்களிடம்தான் பண பலம் உள்ளது. புலம்பெயர் அமைப்புகளின் முதலீடு வந்தால் நல்லதுதான். குறிப்பாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால் புலம்பெயர் தமிழர்களை விடவும் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும். ஐரோப்பிய அரசுகள்கூட முதலீடுகளை மேற்கொள்ளும்.

அதேவேளை, எமது ஆட்சியில் புதிய அரசமைப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 7 மாகாண முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என யோசனை முன்வைத்தனர்.

இவர்கள் அனைவரும் சிங்களவர்கள், தீவிரவாதிகள் கிடையாது. அதேபோல முதல்வர்கள் ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்தவர்களும் அல்லர். இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றது. இது பற்றி கலந்துரையாடலாம் எனவும் கூறியது. சுசில் பிரேம ஜயந்த தலைமையில் இது தொடர்பில் ஆவணம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணம் குறித்து கலந்துரையாடி தீர்வை முன்வைக்கலாம் என்றார்.

பேராதனை போதனா வைத்தியசாலை விவகாரம் – அவதானம் செலுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளவிருந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், தாம் மிகுந்த வருத்தமடைந்ததாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்தியா உதவக்கூடிய வழிகள் குறித்து ஆராயுமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இந்திய வௌிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திகதியிடப்பட்டிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

விநியோகஸ்தர்களின் தாமதம் காரணமாகவே சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தொன்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இது குறித்து ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பேராதனை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் குறித்த மருந்து மிகக்குறைந்தளவே கையிருப்பிலுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 248 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 16 அத்தியாவசிய மருந்துகளுக்கான கடன் கடிதங்களை துரிதமாக வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றா நோய்கள், இருதய நோய்கள் உள்ளடங்கலாக பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 16 வகையான மருந்துகளும் இதில் அடங்குகின்றன.

இதேவேளை, தேவையான மருந்துகள் வழங்கப்படுமென மருந்து விநியோக பிரிவினால் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக பேராதனை போதனா வைத்தியாலை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அரசின் பங்காளிகட்சிகள் சற்று முன்னர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளும் இந்த ஆண்டு தனித்தனியாக மே தினத்தை நடத்த தீர்மானித்துள்ளன.

இன்று (29) சற்று நேரத்திற்கு முன்னர் 11 கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மே தினம் குறித்துக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

நிலாந்தன்

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும்.

ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பிச் செல்லும் வழி, அல்லது அரசாங்கம் தனது தோல்விக்கு எதிர்க் கட்சிகளையும் கூட்டுப் பங்காளிகள் ஆக்கும் அல்லது கூட்டுப் பொறுப்பாக்கும் ஒரு தந்திரம், அல்லது காலத்தை கடத்தும் ஓர் உத்தி. அதாவது எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பி காலத்தை கடத்தும் ஓர் உத்தி எனலாம்.

குறிப்பாக,இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து கடந்த பல தசாப்தங்களாக வட்டமேசை மாநாட்டில் இருந்து தொடங்கி இன்று வரையிலான எல்லா சர்வகட்சி மாநாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் தந்திரமான உள்நோக்கம் கொண்டவை என்பது தெரியவரும். இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணைக் கொமிஷன்கள் போலவே சர்வகட்சி மாநாடுகளும் தீர்க்க விரும்பாத ஒரு பிரச்சினைக்காக கூட்டப்படும் மாநாடுகள்தான்.

தமிழ் அரசியலில் முதலில் வட்டமேசை மாநாடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஜி. ஜி. பொன்னம்பலம் என்று கூறப்படுகிறது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் எல்லா கட்சிகளும் ஒரு வட்ட மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்பொழுது அவருடைய அரசியல் எதிரிகளாக காணப்பட்ட தமிழரசுக் கட்சி அப்படி என்றால் சதுரமேசை மாநாட்டைக் கூட்டலாம் என்று அவரை கிண்டல் செய்தார்கள். ஆனால் வட்டமேசை மாநாடுகள், அல்லது சதுர மேசை மாநாடுகள், நல்லது சர்வகட்சி மாநாடுகள் போன்றன தமிழ் மக்களைப் பொறுத்தவரை தோல்வியுற்ற அரசியல் நடைமுறைகள்தான்.

இவ்வாறான தோல்விகரமானதொரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்தே கடந்த புதன்கிழமை நடந்த சர்வகட்சி மாநாட்டையும் பார்க்க வேண்டும்.நேற்று முன்தினம் நடந்த கூட்டமைப்புடனான சந்திப்பும் அத்தகையதா?

நாட்டை இப்பொழுது ஆள்வது மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை வென்றெடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் ஆகும். நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும்விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் ஓர் அரசனுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிறைவேற்று அதிகாரமும் அவரை வெற்றி பெற்ற ஒரு நிர்வாகியாக நிரூபிக்க தவறி விட்டன. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் சிங்கள மக்கள் இப்பொழுது “கோட்டா வீட்டுக்குப் போ” என்று கேட்கும் ஒரு நிலைமை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை கூட்டி இருக்கிறது. சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஜனாதிபதியைப் பொறுத்தவரை கீழிறங்கி வருவதுதான். ஆனால் அவர் இதய சுத்தியோடு இறங்கி வருகிறாரா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். அல்லது அவர் தனது தோல்வியை எல்லா கட்சிகளுக்கும் உரியதாக மாற்றப் பார்க்கிறாரா என்றும் கேட்கலாம்.

தமிழ் கட்சிகளில் தமிழரசுக்கட்சியும் பிள்ளையானின் கட்சியும் ஈபிடிபியும் புளட்டும் மட்டும் அதில் பங்குபற்றின. ஏனைய கட்சிகள் பங்குபற்றவில்லை. தென்னிலங்கை மையக் கட்சிகளில் மிகச்சில கட்சிகள்தான் பங்குபற்றின.

அந்த மாநாடு ரணிலின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோரை ரணில் புத்திசாலித்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ரணில் தனது ஆளுமையை காட்டியிருக்கிறார்.

ரணில் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புக்கு தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஒன்று அரசாங்கத்துக்கு. மற்றது சாஜித்துக்கு.அப்படித்தான் சஜித்தும் அவரும் தனது பலத்தை ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும் காட்ட வேண்டி இருக்கிறது, அதேசமயம் ரணிலுக்கு எதிராகவும் காட்ட வேண்டியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் இல்லை. சில மாதங்களுக்கு முன் மனோ கணேசன் கூறியது போல அரசாங்கம் எப்பொழுதோ தோற்று விட்டது. ஆனால் அந்த தோல்வியை தங்களுடையதாக சுவீகரித்துக் கொள்ளத் தேவையான ஐக்கியம் எதிர்க் கட்சிகள் மத்தியில் கிடையாது.

சர்வகட்சி மாநாடு ரணிலின் ஆளுமையை நிரூபித்திருக்கலாம். ஆனால் அதற்காக அவரை அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா? அல்லது சஜித்தும் எதிர்க்கட்சிகளும் தயாரா? என்று பார்க்க வேண்டும்.

மூத்த அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல மேற்கத்திய நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள் வரும் பொழுது, எல்லாக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும். அப்போதுதான் நாட்டின் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். ஆனால் இலங்கை தீவில் அவ்வாறான செழிப்பான ஒரு பாரம்பரியம் இல்லை. ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கினால் இப்போதிருக்கும் நெருக்கடிகளை தற்காலிகமாக சமாளிக்கலாம்.ஆனால் அவ்வாறு ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிங்கள கட்சிகள் தயாரா ? ஏனெனில் அது எந்த தேசிய அரசாங்கம் என்பதே இங்குள்ள அடிப்படைக் கேள்வியாகும்.அது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசாங்கமா ? அல்லது இலங்கைத் தீவின் பல்லி த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் ஓரூ தேசிய அரசாங்கமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

தன்னைத் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவராக பிரகடனப்படுத்தும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு பல்லினத்தன்மைமிக்க ஒரு தேசிய அரசாங்கத்தை எப்படி உருவாக்குவார்? அவ்வாறு மூன்று இனங்களில் தேசிய இருப்பையும் நிராகரித்த காரணத்தால்தான் அவர் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்று கூறுகிறார்.அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக கூறுகிறார் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் covid-19 தான் என்று.

ஆனால்,இனப்பிரச்சினைதான் பொருளாதார பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை அது அழித்துவிட்டது. 2009 க்குப் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால் நாடு அதன் முதலீட்டு கவர்ச்சியை கட்டியெழுப்ப முடியவில்லை. இவ்வாறு இனப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே நொந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த அதிர்ச்சியை பெருந்தொற்று நோய் கொடுத்தது. அதாவது இனப்போர் காரணமாக ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டு வெடிப்பும் covid-19உம் கோட்டாபய அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமும் மேலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின என்பதே சரி.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்பது அதன் மூலப் பிரச்சினையில் இருந்தே தொடங்க வேண்டும்.உடனடிக்கு வேண்டுமென்றால் சரிந்து விழும் வாழைக்கு முட்டுக் கொடுப்பது போல எதையாவது செய்யலாம். அதைத்தான் இப்போது செய்ய எத்தனிக்கிறார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

அண்மையில் உலகின் மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் பின்லாந்து மீண்டும் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. படைத்துறை ரீதியாக வளம் குறைந்த பின்லாந்து ரஷ்யப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் வாழ்கிறது.கடந்த நூற்றாண்டிலிருந்து பேரரசுகளுக்கிடையிலான போட்டிக்குள் அது எப்பொழுதும் கெட்டித்தனம்டினமாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுத்தது வருகிறது. உக்ரைனைப் போலவோ அல்லது ஜோர்ஜியாவைப் போலவோ பேரரசுகளின் இழு விசைகளுக்குள் பக்கம் சாயாமல் நிதானமாக முடிவுகளை எடுத்தது. தமது நாடு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறக் கூடாது என்று சிந்தித்து பின்லாந்து மக்கள் பொருத்தமான முடிவுகளை எடுத்தார்கள்.

உலகின் மிகச்சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாக பின்லாந்து கணிக்கப்படுகிறது. அதை அந்நாடு தனது வெளியுறவுக் கொள்கையில் அழகாக, தீர்க்கதரிசனமாக பிரதிபலிக்கிறது. இலங்கையும் இலவசக் கல்விக்கு பெயர் பெற்றது.ஆனால் இலங்கைத்தீவின் இலவச கல்வியானது இனப்பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டது. இலங்கைத்தீவின் இலவசக் கல்வியானது ஒருபுறம் வறிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை வழங்கியது. அதேசமயம் அது இனப்படுகொலையை தீர்க்க தவறியிருக்கிறது. இப்போதிருக்கும் அரசாங்கம் வியத்மக எனப்படும் தொழில்சார் திறன் மிக்க நிபுணர்களைக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாத்தால் வழி நடத்தப்படுவது என்று கருதப்படுகிறது. இப்போதிருக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அந்த சிந்தனைக் குழாத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் இந்த புத்திசாலிகள் எல்லாம் நாட்டை எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்?