மன்னாரில் அவுஸ்ரேலியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு மற்றும் மணல் ஆய்வு நடவடிக்கைகளை இடை நிறுத்த தீர்மானம்

ஐந்து வருடங்களுக்கு மேலாக மாவட்ட ரீதியாக அனுமதி பெற்றுக் கொள்ளப்படாது ஆய்வு என்ற ரீதியில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கனிய மண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் சக்தி திட்டத்தின் விரிவுபடுத்தலை உடனடியாக நிறுத்துவததென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்துக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மன்னார் நகர் பிரதேச செயலாளர் ம.பிரதீப் நெறிப்படுத்தலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில், மன்னார் மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் ஐந்து வருடங்களுக்கு மேலாக கனிய மண் ஆய்வு என்ற போர்வையில் பேசாலைஇ நடுக்குடாஇ கட்டுக்காரன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் நிலத்தின் ஆழத்திற்கு துளையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற ஆய்வு மற்றும் அகழ்வை உடனடியாக நிறுத்திவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே நேரம்இ மன்னாரில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தையும் நிறுத்துவதற்கு அபிவிருத்தி குழுவால் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன்வி,னோ நோகராதலிங்கம், நகர பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவி நிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

13-எதிர்ப்பு – சீனாவிற்கான அழைப்பா?

-யதீந்திரா

அண்மையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இது பல கேள்விகளை முன்வைத்திருந்தது. ஏனெனில் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் வழக்கத்திற்கு மாறான ஒன்று. இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்கள் தொடர்பில் வடக்கு மீனவர்கள் மத்தியில் அதிருப்திகள் காணப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் இடம்பெற்றிருந்தது. கவனத்தை ஈர்க்கும் வகையில் கடலில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன் பின்னர்தான் சீனத் தூதுவர், யாழ் மீனவர்களை நோக்கி உணவுப் பொதிகளோடு வந்திருந்தார். இருபது மில்லியன்கள் நிதியையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக வழங்கியிருந்தார். யாழ். தீவகப் பகுதிகளில் சீனாவின் நிதியாதரவுடன் கலப்பு மின்-உற்பத்தி திட்டமொன்று இடம்பெறவுள்ளதாக முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் இந்தியா அதிருப்தியடைந்துள்ளதான செய்திகளும் வெளியாகியிருந்தன. பின்னர் இந்த திட்டம் கிடப்பிற்கு சென்றது. தாம் அந்த திட்டத்தை கைவிடவில்லையென்று, யாழ்;ப்பாண விஜயத்தின் போது, சீனத் தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

யாழ்பாண விஜயத்தின் போது – வடக்கு தமிழர்களின் கலாசார குறியீடாக நோக்கப்படும், நல்லூர் கோவிலில் சீனத் தூதுவர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். யாழ்ப்பாண கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேஸ்டியுடன் சீன அதிகாரிகள் காட்சியளித்தனர். தமிழ் மக்களுடன் உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது? ஏனெனில் சீனா தமிழ் மக்களின் அரசியல் விவகாரத்தை ஒரு உள்நாட்டு விவகாரமாக நோக்குகின்றது. தாம் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் வெளிவிவகாரக் கொள்கையை கொண்டிருக்கவில்லை – என்பதே சீனாவின் ஒரு வரிப்பதிலாகும். அவ்வாறு கூறும் சீனாவோ – மறுபுறமாக, ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. உண்மையிலேயே நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிடாக் கொள்கையை சீனா கொண்டிருந்தால் – தர்க்கரீதியில் தமிழர் விவகாரத்தில் ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை என்னும் நடுநிலை அணுகுமுறையைத்தான் சீனா கைக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் சீனா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்பு கூறலை வலியுறுத்தும் பிரேரணைகளின் போது, சீனா எப்போதும் இலங்கையின் பக்கமாகவே இருக்கின்றது. தமிழ் மக்கள் பொறுப்பு கூறலையும் நீதியையும் எதிர்பார்த்திருக்கின்ற போது – சீனாவின் கொள்கை நடுநிலை என்றால், எந்தவொரு பக்கத்திலும் சீனா தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆனால் சீனா அவ்வாறு செயற்படவில்லை. இந்த அடிப்படையில் சீனாவின் தலையிடாக் கொள்கை கேள்விக்குள்ளாகின்றது. ஒரு வகையில் மேற்குலகின் மனித உரிமைகள்சார் தலையீட்டை எதிர்கொள்வதற்கான ஒரு பதில் தந்திரோபாயமாகவே, தலையிடாக் கொள்கையை சீனா கைக்கொண்டுவருகின்றது. தர்க்கரீதியில் சீனா, தலையிடாக் கொள்கை என்னும் பெயரில், நாடுகளில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான தலையீடுகளையே செய்கின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மனித உரிமைகள் சார்ந்து தலையீடுகளை செய்கின்ற போது, அதற்கு எதிராக நிற்பதன் மூலம்- குறித்த நாடுகளின் அதிகாரத்தில், செல்வாக்குச் செலுத்தும் மக்களின் ஆதரவை சீனா சம்பாதித்துக் கொள்கின்றது. பின்னர் அதனையே தனது விரிவாக்கலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றது.

சீனா இன்று வலுவாக காலூன்றியிருக்கும் நாடுகள் அனைத்திலும் இதனை நாம் காணலாம். ஆபிரிக்க நாடுகள் – அதிகம் மனித உரிமை சார்ந்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. அங்கு சீனா தனது செல்வாக்கை அதிகளவில் பெருக்கியிருக்கின்றது. எனவே சீனா ஒரு இடத்தை அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை தெரிவு செய்யும் போது, அங்குள்ள பிரச்சினைகளை எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்றே திட்டமிடும். இந்த இடத்தில் ஒருவர் எதிர்வாதம் புரியலாம். ஏனைய நாடுகளும் அவ்வாறுதானே செய்கின்றன. பலம்பொருந்திய நாடுகள் தங்களுடைய நலன்களை நிறுத்துப் பார்த்துத்தானே எந்தவொரு தலையீட்டையும் செய்யும். நிச்சமாக – அதில் என்னிடம் மாற்று கருத்தில்லை.

ஆனால் இந்;தியா, அமெரிக்கா மற்றும் இன்னும் பல மேற்கு நாடுகளும், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் கரிசனைகளை காண்பிக்கின்றன. தமிழ் மக்கள் சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான ஒரு அரசியல் தீர்வே, தமது கொள்கை நிலைப்பாடென்று இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. அமெரிக்கா மனித உரிமைகள் என்னுமடிப்படையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற உரிமை மீறலுக்கான பொறுப்பு கூறலை வலியுறுத்துகின்றது. எனவே அவர்களின் தலையீடு தமிழ் மக்களுக்கு சாதகமானது. ஆனால் சீனாவோ, சர்வதேச அரங்குகளில் இலங்கையை காப்பாற்றிக் கொண்டு, இலங்கை அரசுக்கு எதிராக எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காமலேயே, தமிழ் மக்களை நோக்கி வருகின்றது.

இந்த அடிப்படையில்தான், இந்திய – ஈழ மீனர்களின் பிரச்சினையை பயன்படுத்தி வடக்கில் காலூன்றுவதற்கான பரிசோதனை முயற்சியில் சீனா ஒரு முறை சுழியோடிப் பார்த்தது. வடக்கில் இந்தியாவிற்கு எதிரான போக்குகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ – அங்கெல்லாம் காலூன்றலாம் என்பதற்கான ஒத்திகையாவே வடக்கை நோக்கி சீனா வந்தது.

மீனவர் பிரச்சினையை முன்வைத்து வடக்கை அளவிட்ட சீனாவிற்கு பிறிதொரு அழைப்பும் தற்போது விடுக்கப்படுகின்றது. 13வது திருத்தச்சட்டத்தை எதிர்த்தல் என்னுமடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்படுகின்றது. நிச்சயம் இதனையும் சீனா பயன்படுத்திக் கொள்ளும். தமிழ் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான கோரிக்கையென்பது, தற்போதிருக்கின்ற மாகாண சபையை வலுவுள்ள ஒன்றாக மாற்றுதற்கான கோரிக்கையாகும். இப்போதுதிருக்கின்ற ஒன்றை மேலும் பலப்படுத்த வேண்டுமென்னும் கோரிக்கையானது – எப்படி தமிழ் மக்களுக்கு எதிரான ஒன்றாக இருக்க முடியும். இந்தக் கோரிக்கையை எதிர்த்தே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசி மக்கள் முன்னணி) நல்லூர் கோவிலடியில் குறிப்பிட்டளவான மக்களை திரட்டி, எதிர்பை வெளியிட்டிருக்கின்றது. சீனத் தூதுவர் எந்த கோவிலுக்கு முன்னால் நின்று இந்தியாவிற்கு செய்தி சொன்னாரோ – அந்த இடத்திலிருந்துதான் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற 13வது திருத்தச்சட்டத்தை கொழுத்தவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி சூழுரைத்திருக்கின்றது.

இந்திய பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதிலிருந்து, குறித்த கட்சிகளின் தலைவர்களை இந்திய முகவர்களென்றும், அடிமைகளென்றும் பொது வெளிகளில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். எனவே இவர்களது எதிர்ப்பு அடிப்படையில் 13 தொடர்பானதல்ல மாறாக, இந்தியாவோடு நிற்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டிற்கு எதிரானது, அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிரானது. இதன் மூலம் தாங்கள் இந்தியாவோடு இல்லையென்பதையும் இவர்கள் கூற முற்படுகின்றனர். அடிப்படையில் இந்தியாவிற்கு எதிரான மனோநிலையை யாழ் மக்கள் மீது விதைப்பதுதான் இதன் பின்னாலுள்ள உண்மையான இலக்கு. வடக்கிலிருந்து இந்தியாவை எதிர்ப்பது அடிப்படையில் யாருக்கான செய்தி? யாருக்கான அழைப்பு?

தர்க்க ரீதியில் 13வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பது என்பதே தவறானது. அத்துடன், அது ஒரு அரசியல் நேர்மையற்ற செயலாகும். ஏனெனில், 2012இல் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதன் மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பு 13ஜை (மாகாண சபையை) தீண்டுவதில்லை என்னும் விரதத்திற்கு முற்றுபுள்ளியிட்டது. அதன் பின்னர் 2013இல் வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டது. மக்கள் இரண்டு தேர்தல்களிலும் ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர். எனவே, 13வது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டுவிட்டு, 13வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என்று கூறமுடியுமா? இப்போது 13ஜை எதிர்க்கப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் கஜன் பொன்னம்பலமும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறுகின்றார். இது எவ்வாறான அரசியல் நேர்மை? அங்கு ஒன்றுமில்லை என்பதை நிரூபிப்பதற்காகவே தாம் போட்டியிடவுள்ளதாக கூறுகின்றார்? ஒரிடத்தில் ஒன்றுமில்லை என்பது திட்டவட்டமாக தெரிந்து விட்டால் – அதனை நிரூபிப்பதற்காக அங்கு ஏன் செல்ல வேண்டும்? கஜன் பொன்னம்பலத்தின் வாதம் தர்க்கரீதியில் பொருளற்றது. எனவே இங்கு பிரச்சினை 13வது திருத்தச்சட்டம் இல்லை. விடயம் அதனைவிடவும் பாரதூரமானது.

ஒரு புறம் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அணியினர் பௌத்த அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவர முடியுமென்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படியானதொரு யாப்பை கொண்டுவர வேண்டுமென்றால் 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கின்ற மாகாண சபையை இல்லாமலாக்க வேண்டும். ஆனால் 13 விடயத்தில் இந்தியா தலையீடு செய்தால் அது புதிய நெருக்கடியை தோற்றுவிக்கும். ஆனால் தமிழர்களும் 13இல் ஒன்றுமில்லை – அது தேவையற்ற ஒன்று – என்று கூறினால், அதன் பின்னர் சிங்கள கடும்போக்கு பௌத்த தேசியவாதிகளின் பணி சுலபமாகும். ஒரு வேளை, கஜன் பொன்னம்பலம் அணியினர் இதனை அறியாமலும் இருக்கலாம். 13ஜை இல்லாமலாக்க வேண்டும் அல்லது, பலவீனப்படுத்த வேண்டுமென்று, சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு பின்னாலும் இந்திய எதிர்;ப்புத்தான் மறைமுகமாக தொழிற்படுகின்றது. ஏனெனில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா எல்லாக் காலத்திலும் தமிழரின் பெயரால் இலங்கையில் தலையீடு செய்வதற்கான வாய்ப்பை கொண்டிருக்கின்றது.

13வது திருத்தச்சட்டத்திலுள்ள போதாமைகளை தமிழ் பரப்பில் உரையாடுவது என்பது வேறு, அதனை வீதிகளில் நின்று எதிர்ப்பதென்பது வேறு. வீதிகளில் நின்று 13வது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதாக கோசமிடுவதும் – அதனை பாதுகாக்க வேண்டுமென்று கூறுபவர்களை இந்திய முகவர்கள், இந்திய அடிமைகள் என்றும் கோசமிடுவதானது – அடிப்படையில் இந்தியாவிற்கான எதிர்ப்பை வடக்கில் அடையாளப்படுத்துவதும், மக்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பை பரவல்படுத்துவதும் நோக்கத்தையுமே கொண்டதாகும். இவ்வாறான இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளையே, மறுபுறமாக, சீனா தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. 13 எதிர்ப்பின் மூலம், சீனாவிற்கு வடக்கில் பிறிதொரு கதவு திறந்துவிடப்பட்டிருக்கின்றது. இனி அவர்கள் அதனை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்.

யுத்தத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு வழங்க பணமில்லை! அரசாங்கம் அறிவிப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கத்திடம் பணமில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்து குறித்து, நிலைமாற்று கால நீதிப் பொறிமுறையை எதிர்பார்த்து கடந்த ஒரு தசாப்தகாலமாக வீதிகளிலும் சர்வதேச அரங்குகளிலும் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

வடக்கில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ்ற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதித் தலைவருமான அங்கஜன் ராமநாதன் மற்றும் வடபகுதியில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ்,

அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது எனவும் அபிவிருத்தியின் ஒரு பங்காளியாக இணைந்து செயற்படுமாறு அரச சார்பற்ற நிறுவனங்களை கோரியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் குறித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஜெனீவா அமர்வு தொடர்பான நிலைப்பாடு என்னவென்றால், கடந்த சில மாதங்களாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள எண்ணில் அடங்கா முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து உள்நோக்கத்துடன் அல்லாமல் புறநிலையில் இருந்து சர்வதேச சமூக சமூகம் பார்வையை செலுத்த வேண்டும். இவை பல வருடங்களாக மீதமாக உள்ள பிரச்சினைகள்.

அதனை நாம் உருவாக்கவில்லை. தற்போதுள்ள நிலைமைகளை மதீப்பீடு செய்யும் போது முன்னோக்கு மற்றும் சமநிலை காணப்பட வேண்டும். உலகில் இருக்கும் மிகவும் பிரச்சினைக்குரிய நாடாக இலங்கை இருக்கவில்லை.

பிரச்சினைகள் காணப்படும் இடங்களை பாருங்கள். நேரம், வளம், சக்தியை இதற்கு பயன்படுத்துவதில் அர்த்தம் இருக்கின்றதா? உலகில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகள், உயிர்காப்பு தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன என்பதை மறந்துவிட வேண்டாம்.

கோவிட் தொற்றுக்கு எதிராக போராடும் அரைவாசி நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளே இல்லை. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வாய்மொழி மூல அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கும், எழுத்துமூலம் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கும், விசேட பொறிமுறைகளுக்கும் பல மில்லியன் கணக்கான டொலர் பணத்தை செலவிடுவதில் அர்த்தம் இருக்கின்றதா ?

சூழ்நிலை மற்றும் பதில் நடவடிக்கை என்ற இரண்டு விடயங்கள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. களத்தில் உள்நாட்டு பொறிமுறையானது செயற்றிறன்மிக்கதாக காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டிற்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணகத்திற்கான அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்குகள், ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, உயர் நீதிமன்ற நீதியரசரின் கீழான ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு என பல்வேறு பொறிமுறைகள் காணப்படுகின்றன. இந்த அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து சுப்பர்மடத்தில் போராட்டம்

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.
அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள்  அதிகரித்தே செல்கின்றன. மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும் தொடர்ச்சியாக பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தோம். பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தோம். இது எதற்குமே பயனில்லை.
மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தவோ அவர்களை தடுத்து நிறுத்தவோ எவரும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை.
அத்துமீறி எமது எல்லைக்குள் நுழையும் மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டியடிக்க எம்மால் முடியும். ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்திலையே நாம் பொறுமை காக்கிறோம்.
அத்துமீறும் மீனவர்களை , அவர்களின் படகுகளுடன் சிறைப்பிடித்து எமது கரைக்கு கொண்டு வரவும் எம்மால் முடியும்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேவேளை , எமது பிரச்சனைகள் தொடர்பில் இந்தியா கரிசனை கொள்ளாவிடின் நாம் சீனாவின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்.
கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாவிடின் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதே சிறந்தது என தெரிவித்தனர்.

ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகளைச் சந்தித்த அரசியல் தலைவர்கள்

இரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்காட வதிவிடப் பிரதிநிதி இன்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நாவலர் வீதியில் உள்ள இல.386இல் அமைந்துள்ள யு.என் மாவட்ட அலுவலகத்தில் சந்தித்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்ற இச் சந்திப்பில் த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி நாடாளுன்ற உறுப்பினர்களுடன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராயா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

Posted in Uncategorized

இலங்கை அரசுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை வெகு விரைவில்!

எமக்கு இருந்த ஆகக்குறைந்த அதிகாரமான மாகாண சபை முறைமையும் எங்களிடமிருந்து பறிபோகின்ற அபாய சூழ்நிலையில் இந்த அரசியல் யாப்பு உத்தேச வரைபு நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என டெலோ அமைப்பினுடைய சர்வதேச பொறுப்பாளரும்,ஊடக பேச்சாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் பல்வேறுபட்ட தரப்பிற்குள் எதிர்பார்ப்பிற்குள் இருக்கக்கூடிய புதிய அரசியல் யாப்பு வருகின்ற மாதம் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தென்னிலங்கை ஊடகங்கள் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக உங்களால் ஏதாவது அறியமுடிந்துள்ளதா என ஊடறுப்பு நிகழ்ச்சியில் கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த மாத முற்பகுதியில் அல்லது நடுப்பகுதியில் இந்த உத்தேச அரசியல் யாப்பு விறைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச் சிங்கள ஊடகங்களினுடைய பத்திரிகைகளிலே கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முக்கிய விடயமாக மாகாணசபை முறைமை முற்று முழுதாக ஒழிக்கப்பட்டு கவர்னர் ஆட்சி முறையும் ஒழிக்கப்பட்டு மாவட்ட சபைகள் மாத்திரமே அதுவும் ஒரு மாவட்ட சபை ஒருங்கிணைப்பு தலைவருடைய மேற்பார்வையின் கீழ் இயங்கும் என்ற நிலைப்பாட்டில் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இது அரசியல் யாப்பு நிபுணர் குழு அந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒரு ஆபத்தான கட்டத்திலே தமிழகத்தை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

இறுதியிலே எமக்கு இருந்த ஆகக்குறைந்த அதிகாரமான மாகாணசபை முறைமையும் எங்களிடமிருந்து பறிபோகின்ற அபாய சூழ்நிலையில் இந்த அரசியலை யாப்பு உத்தேச வரைவு நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வெற்றுக்கோச அரசியலை கடந்து தந்திரோபாய அரசியலே காலத்தின் தேவை: சபா குகதாஸ்

நிதானமான தந்திரோபாய அரசியலே தற்போதைய உலக நீரோட்டத்தில் நகர்வுகளுக்கு ஏற்ப ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமானசபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் வரலாற்றில் உணர்ச்சி அரசியல் என்பது தற்போதைய சூழலில் அவசியமற்றது. காரணம், கடந்தகால தமிழர் அரசியல் உணர்ச்சிவச பேச்சுக்களாலும் கோசங்களாலும் கட்டி எழுப்பப்பட்டத்தை மிதவாத அரசியலும் விடுதலைப் போராட்ட அரசியலும் வரலாறாய் பதிவு செய்துள்ளன.

அவற்றின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நிதானமான தந்திரோபாய அரசியலே தற்போதைய உலக நீரோட்டத்தில் நகர்வுகளுக்கு ஏற்ப ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது. கோசங்களும் உணர்ச்சிவச பேச்சுக்களும் தனிப்பட்ட கட்சி நலன்களுக்கும் தனிமனித அடையாளங்களுக்கும் பயன்படுமே தவிர இனத்தின் அபிலாசைகளை வென்றிட தந்திரோபாய வழிகாட்டுதல்களுக்குத் தடையாகவே அமையும்.

மாறாக இனவாத பூதத்தை வளர்க்கவும் பௌத்த சிங்கள பேரினவாதம் விரிவடைவதற்கான தீனியாகவும் தமிழ் இனத்தை பெரும் தேசியவாதம் தொடர்ந்து அழிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் வாழ்விட பூகோள அமைவிற்குப் பிராந்திய வல்லரசின் அரசியலைத் தாண்டி பூகோள அரசியல் எதனையும் பெற்றுத் தர மாட்டாது.

இது 1833 ஆண்டிலிருந்து இன்றுவரை வரலாறு சொல்லும் உண்மை விடுதலைப் போராட்ட இயக்கம் ஆயுத பலத்துடன் இருந்த போதும் பிராந்திய சக்தியை எடுத்தெறிந்து விமர்சித்தது இல்லை.

மாறாக எந்தவித பலம் அற்ற குறைந்த மக்கள் ஆதரவைக் கொண்ட ஒரு கட்சித் தரப்பு எல்லை தாண்டி விமர்சித்தல் தந்திரோபாய நகர்வுகளுக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.

ஆகவே பூகோள அரசியல் கடந்த காலத்தில் தமிழர் தரப்பைப் பயன்படுத்தி தங்களின் நலன்களைப் பூர்த்தி செய்ததுடன், தமிழர்களின் அபிலாசைகளை வெல்வதற்கான வழிகளையும் இல்லாது செய்தன. உதாரணமாக ஆரம்பத்தில் தமிழர்களை விட எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டார நாயக்க சமஷ்டி தொடர்பாக முதலில் தீவிரமாகப் பேசினார்.

குறிப்பாகக் கண்டி, கரையோரம், வடக்கு, கிழக்கு என மூன்று அலகுகளாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனப் பிரசாரம் செய்தார். ஆனால் அப்போது இருந்த பிரித்தானிய ஆளுநர் டொனமூர் இந்தியாவை இலகுவாகக் கையாள்வதற்காகக் கண்டி மற்றும் கரையோரச் சிங்களவர்களை ஒன்றாக இணைத்து அவர்களிடமே ஆளும் அதிகாரங்களை வழங்கினார். வேறு பல உதாரணங்களையும் கூற முடியும்.

ஆகவே ஈழத் தமிழர்கள் பிராந்திய அரசியலை தந்திரோபாயமாக கையாள தவறினால் எதிர்காலத்தில் ஆபிரிக்கா கண்டத்தில் பல தேசிய இனங்கள் ஆக்கிரமிப்பில் கரைந்து சென்றது போல ஈழத்திலும் அவ்வாறான அவலம் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

13வது திருத்த சட்டம் யாருக்கு தேவை? ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.

இவ் காணோளியை என்னால் சகல தமிழ் அரசியல்வாதிகளிற்கும், தெற்கின் சில அரசியல் பிரமுகர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விடயத்தை இரு வருடங்களிற்கு முன், ஓர் செவ்வியில் – ஈழத்தமிழரிடையே காணப்படும் தேர்தல்வாதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படியான சுகபாவனைகள், பழக்க வழக்கங்கள், செயற்திட்டங்களை கொண்டவர்கள் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

இவ் அடிப்படையில், இன்று ஈழத்தமிழரிடையே, மிகவும் கடுமையாகவும் என்றுமில்லாதவாறு இடம்பெறும் பேச்சு பொருள் – 13வது திருத்த சட்டம். இது பற்றி யாவரும் நன்றாக அறிந்து அனுபவப்பட்டுள்ள காரணத்தினால், இதனது சரித்திரத்திற்குள் செல்வதை தவிர்த்து கொண்டாலும், சரித்திரத்தை மேலோட்டமாக தட்டி செல்ல வேண்டிய தேவையுள்ளது.

இலங்கைதீவின் 13வது திருத்த சட்டம் என்பது 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்தியா ஒப்பத்தந்தின் அடிப்படையில், 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி மாகணங்களிற்கான உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இவ் 13வது திருத்த சட்டம். ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களிற்கு முன் சிறிலங்காவின் அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஓர் திருத்த சட்டம். ஆனால் இதில் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை நாம் அனுபவரீதியாக கண்டுள்ளோம்.
ஈழத்தமிழரிடையே இது ஓர் புகம்பம் எனலாம். காரணங்கள் பல. ஒன்று இவ் திருத்த சட்டம் தமிழீழ மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக திருப்திப்படுத்துவதாக காணப்படவில்லை. அடுத்து, அவ்வேளையில் ஆயுத போராட்டத்தை அர்பணிப்புடன் முன்னின்று நடாத்திய தமிழீழ விடுதலை புலிகள், தம்மால் தொடர்ந்து போராடி, 13வது திருத்த சட்டத்திற்கு மேலான வெளிவாரியான சுயநிர்ணய உரிமையான, தனி நாட்டை, அதாவது தமிழீழத்தை அமைக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையிருந்தது. அதை காலப்போக்கில், தமிழீழ விடுதலை புலிகள் நிருபித்தும் காண்டினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1987ம் ஆண்டில் இந்திய சமாதானபடையுடனான யுத்தம் ஆரம்பமாகும் வரை, இந்தியாவுடன் நாம் ஓர் எதிர்பு அரசியலை, அதாவது வெளிப்படையான ஓர் அரசியல் பகைமையை கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவுடனான அரசியல் பகமை

இந்தியாவுடனான எமது உண்மையான வலுவான அரசியல் பகமை என்பது, இந்திய சமாதான படையுடனான சமரின் வேளையில் உருவாகியது என்பதற்கு மேலாக, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்தை தொடர்ந்தே ஆரம்பமாகியது என்பதையும் யாரும் இங்கு மறுக்க முடியாது. இதை வேறு வார்த்தையில் கூறுவதனால், தமிழ்நாட்டு மக்களோ, இந்தியாவின் மற்றைய மாநிலத்தின் மக்களோ, இந்திய சமாதான படையுடனான சமரின் வேளையில் தமிழீழ விடுதலை புலிகளை, ஓர் விடுதலை இயக்மாகவே பார்த்தனர் என்பதும், பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்தை தொடர்ந்தே, அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்திய ஆய்வாளரின் கருத்து காணப்படுகிறது.

பல நெருகடிகள், இடைவெளிகள், அழிவுகளை தொடர்ந்து, சிங்கள பௌத்த அரசினது 13வது திருத்த சட்டம் மீதான வெறுப்பின் மத்தியில், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்கள், 13வது திருத்த சட்டம் பற்றி உரையாட விவாதிக்க கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது எதற்காக? ஏன்? என்ற விடயங்களை நாம் முதலில் ஆராய வேண்டும்.

எதற்காக என்ற வினாவிற்கான விடை என்னவெனில் – இன்று எம்மிடம் தமிழீழ விடுதலை புலிகள் காலத்திலிருந்த நடைமுறை அரசோ, ஆயுதபலமோ, பாரீய நிலப்பரப்போ இல்லாதது மட்டுமல்லாது, நம்மிடையே ஐக்கியம் என்பது அறவே கிடையாது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதேவேளை, அன்று போல் அல்லாது இன்று பல அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளதுடன், மக்கள் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள், கடந்த பன்னிரன்டு வருடங்களாள தள்ளப்பட்டு, அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் அதாவது இருப்பிட வசதியின்றி, உண்ண உணவின்றி, நாளாந்தம் பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒருவரும் மறுக்க முடியாது.

சமநிலை பேரம் பேசும் நிலை இல்லை

இவற்றை மிக சுருக்கமாக கூறுவதனால், தமிழீழ விடுதலை புலிகள் காலத்தை போன்று, சிங்கள பௌத்த அரசுடன் சமநிலையில் பேரம் பேசும் நிலையில், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலை இல்லை என்பதையும் எவரும் மறுக்க முடியாது.

இவ் அடிப்படையில், அன்று தமிழீழ விடுதலை புலிகளினால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தை, நாம் ஏன் இன்று தூசி தட்டி திரும்பி பார்க்க வேண்டும் என்ற விவாதம் அறவோடு நிராகரிக்கபப்படுகிறது என்பதை நியாயவாதிகள் ஏற்று கொள்வார்கள்.

இன்றைய ஜனதிபதி பதவி ஏற்று இரு வருடங்களிற்கு மேலாகியும், இன்று வரை வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு ஓர் அரசியல் பிரச்சனை உண்டு, இதற்கு தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனையே இல்லாத நிலையில், நாங்கள் யாவரும் 13வது திருத்த சட்டத்தை ஏற்பதா, இல்லையா என்ற விவாதங்களை மேற்கொண்டு, மேலும் மேலும் எம்மிடையே பகமைகளை அதிகரித்து கொள்கிறோம் என்பதையும் நியாயவாதிகள் ஏற்று கொள்வார்கள்.

இப்படியாக சிங்கள பௌத்த அரசினதும், அதனது ஜனதிபதியின் நிலை காணப்படும் பொழுது, ராஜதந்திரம் தெரிந்தவர்கள், சர்வதேசத்தின் அரவணைப்புடன், ஏற்கனவே சிங்கள பௌத்த அரசினால், சிறிலங்காவின் அரசியல் யாப்பில் ஏற்று கொள்ளப்பட்ட 13வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறை படுத்துங்களென கேட்பதில் என்ன தவறு உண்டு?

இவ் 13வது திருத்த சட்டத்திற்கு மூல கர்த்தவாகவுள்ள இந்தியா மூலமாகவே, இதை நடைமுறை செய்யுங்களென சிறிலங்காவிற்கு எம்மால் அளுத்தம் கொடுக்க முடியும். இந்தியாவுடன் இணைந்து, சர்வதேச சமூதாயமும், ஐ.நா.மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட சகல தீர்மானங்களும், இதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வேறு அரசியல் தீர்வை…

இந்த 13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்துங்கள் என கேட்பதன் மூலம், தொடர்ந்து நாம் வேறு ஓர் அரசியல் தீர்வை கேட்கவோ, கோராவோ முடியாதென்று – எந்த பல்கலைகழகத்தினால், எந்த சட்ட கல்லுரியினால், எந்த புத்திஜீவியினால் கூறப்பட்டுள்ளது? இன்று, ஸ்கோட்லாந்து மட்டுமல்லாது, உலகில் உள்ளக சுயநிர்ண உரிமையை அனுபவித்து வரும் பல நாட்டின் தேசிய மக்கள், பிரிவினையை முன் வைக்க முடியாத நிலை உலகில் காணப்படவில்லையே.

சில வருடங்களிற்கு முன், சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஓர் ஊடகவியலாளர் எனக்கு கூறிய ஓர் கதை இங்கு நினைவிற்கு வருகிறது. அதாவது, “சில காலம் சென்ற பின்னர் உங்களிற்கு பட்டு வேட்டி சால்வை தருகிறோம், அது வரை நீங்கள் நிர்வாணமாக இருங்கள்”, என்பது போல் தான், இவ் 13வது திருத்த சட்டத்திற்கு எதிரான அரசியல் குசும்புகள் காணப்படுகின்றன.

சமஸ்டி என்ற மாயை, வடக்கு கிழக்கு வாழ் மக்களை பொறுத்த வரையில் 1957ம் ஆண்டு முதல் ஓர் கற்பனை பொருள். சிங்கள பௌத்த அரசிடம் நாம் இதை பெற்று கொள்வது என்பது, ‘கல்லில் நார் உரிப்பதற்கு’ சமன். இச் சொற்பதம், தமிழ் வாக்களர்களை கவருவதற்காக, தமிழ் தேர்தல்வாதிகளினால் பாவிக்கபடுகின்றதே தவிர, இதை நாம் சிங்கள பௌத்த அரசிடமிருந்த பெற்று கொள்வது என்பது பகற் கனவு.

சமஸ்டி ஓர் குசும்பு

இவ்வேளையில் இங்கு சில தேர்தல்வாதிகளின் கபட நிலைகளை காண்பிக்க விரும்புகிறேன்.

சிறிசேன-ரணில் அரசு, தமிழர் தேசிய கூட்டமைபின் (த.தே.கூ.) ஆதரவை நம்பி இருந்த காலத்தில், மூன்றில் இரண்டு பாரளுமன்ற பெரும்பான்மை அற்ற நிலையிலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கவும், சமஸ்டியை பெற்று கொள்வதாக த.தே.கூ.பின் முக்கிய புள்ளியான, சட்டத்தரணியும் பாரளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் நம்பினர் என்றால் இதுவும் ஓர் குசும்பாகவே இருக்க முடியும்.

அன்று த.தே.கூ.பும், சுமந்திரனும் சிறிசேன-ரணில் அரசிடம், முதலில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமூல் படுத்துங்கள் என்ற நிபந்தனையை முன் வைத்திருந்தால், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் நிலை வேறாக மாறியிருக்கும்.

அத்துடன் அன்று நீதிமன்றம் மூலம், வடக்கு கிழக்கு இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட வேளையில், அவ்வேளையில் சுமதந்திரனிடம், இதற்கான மீள் மனுவை செய்யுங்களென முன் வைக்கப்பட்ட வேளையில், சுமந்திரன் அதை செய்யாது காலம் கடத்திவிட்டு, இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கதைப்பது புரியாத புதிராகவுள்ளது.

இதேவேளை ஒற்றை ஆட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வை பெற்று கொள்வோமென கொக்கரிக்கும் கூட்டமும், கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. காரணம், அரசியல் உரிமைகளை சரியாக வரையறைக்கப்படாதா 13வது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு முன் வராத சிங்கள பௌத்த அரசுக்களிடமிருந்து, ஒற்றையாட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வு என்பது, எப்படி? எப்பொழுது? என்று? சாத்வீகமாக முடியும்? இது பற்றி அலட்டி கொள்பவர்கள், அப்பாவி வாக்களருக்கு மக்களிற்கு – உடனடியாக எப்படி, என்று, எப்பொழுது ஒற்றை ஆட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வு என்ற விளக்கத்தை கொடுக்க முன்வர வேண்டும்.

யாதார்தம் என்னவெனில், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகளில் பெருபான்மையினர், தமது கருத்துகள் செயற்பாடுகள் யாவற்றையும், எதிர்வரும் தேர்தல்களையும் அதன் வாக்கு வங்கிகளையும் இலக்கு வைத்தே செயற்படுகிறார்கள் என்பதே உண்மை.

இல்லையேல், இன்றைய சிறிலங்காவின் யாதார்தம் உண்மைகளை தூக்கி ஏறிந்து அலட்சியம் பண்ணி விட்டு – ஒருவர் சமஸ்டி, மற்றையவர் ஒற்றையாட்சிக்கு வெளியில் தீர்வு என புசத்துவது, எவ்வளவு தூரம் வடக்கு கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது வெளிப்படையாகிறது.

 

யாதார்த்த நிலை என்ன?

இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் யாதார்த்த நிலை என்ன என்பதை, இவ் வீரவசனங்களை கொட்டி தள்ளும் அரசியல் ஞானிகள் உணர்ந்துள்ளார்களா என்பது கேள்வி கூறியாகவுள்ளது. வடக்கு கிழக்கில் தினமும் வெற்றிகரமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள், சைவ கோயில்கள் கிறிஸ்தவர்களின் இருப்பிடங்கள், நிலங்களின் நிலை என்ன எப்பதை இவ் வாக்கு வங்கியை நோக்கி வேலை திட்டங்களை மேற்கொள்ளும் தேர்தல்வாதிகள் சிந்திப்பதுண்டா?
தமிழீனத்தின் ஒற்றுமை, பிராந்திய ஒற்றுமை, தோழமை போன்றவற்றை அறவே கணக்கில் கொள்ளாத அரசியல்வாதிகள் – ஒற்றையாட்சிக்கு வெளியில் தீர்வு……13வது திருத்த சட்டம் வேண்டாமென கூறுவது யாவும், இவர்கள் உண்மையில் மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளா என்ற சந்தேகம் எழுகிறது.

ஊதாரணத்திற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் அரசியல் கட்சிக்கு, கிழக்கு மாகணத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட வாக்குகளையும் கணக்கில் கொண்டு, விகிதாசார முறைக்கு அமைய, கடந்த தேர்தலில் மேலாதிகமாக ஓர் ஆசனம் வழங்கப்பட்டது. அவ்வேளையில், அவ் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை, கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட யாருக்கும் கொடுப்பதற்கு முன்வராது, சுயநலத்தின் அடிப்படையில், ஓய்வுதியத்தை மனதில் கொண்டு, யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்ட ஒருவருக்கு வழங்கியது – தமிழ் தேசியம், இன, பிராந்தியா ஒற்றுமையா? இவர்கள் தான், ஒரு நாடு இரு தேசம், ஒற்றையாட்சிக்கு வெளியில், இணைந்த வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை பெற்று தருவார்களென மக்கள் எதிர்பார்க்கிறார்களா? இவர்கள் இதை, யாரிடமிருந்து? யாரின் துணையுடன் பெற்று கொடுப்பார்கள்?
தற்போதைய வடக்கு கிழக்கு வாழ் தேர்தல்வாதிகளின் போக்கு என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் எதிர்காலத்தை பாதாள குழியில் தள்ளுவதற்கான வழி வகைகளேயே தவிர, வேறு ஒன்றுமில்லை. அதாவது, வடக்கு கிழக்கை, முற்று முழுதாக சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், சிங்கள குடியேற்றத்தை நோக்கி நகர்த்துகிறார்கள் என்பதே உண்மை.
இத் தேர்தல்வாதிகள், வடக்கு கிழக்கில் வாழும் – விதவைகள், முன்னாள் போராளிகள், ஊணமுற்றோர், அரசியல் கைதிகள் போன்றோரின் நாளந்த பிரச்சனைகள் சார்ச்சைகளில் அக்கறை கொள்ளவில்லை.

புலிகள் மாகாணசபையை நிராகரித்தார்களா?

தழிழீழ விடுதலை புலிகள் மாகாணசபையை நிராகரித்தர்களா இல்லையா என்பதற்கான பதில் தழிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகரும் தேசத்தின்குரல் மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி. அடல் பாலசிங்கத்தினால் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலம் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட “The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) என்ற புத்தகத்தில் பதில் உள்ளது.
மாகாணசபை பற்றிய தகவல்களை அறிய விரும்பியோர் “The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) ஆங்கில வெளியீட்டின் “LTTE Stragegy and premadasa’s agenda” 256-258 என்ற பக்கங்களை படிக்கவும்.
இதே இடத்தில் ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னணி (PFLT)| என்ற அரசியல் கட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 1989 ஆம் ஆண்டு பதிவு செய்தார்கள் என்பதையும், நாம் நினைவுபடுத்திகொள்ள வேண்டும்.
இவற்றை அறிந்தும் அறியாதவர்களாக, தற்பொழுது காணப்படும் ஓர் சிறிய வெற்றிடத்தை பாவித்து, தமது குறுகிய சிந்தனை எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்து, இது தான் தமிழீழ மக்களது அரசியல் சித்தாந்தம் என பறைசாற்றுவது நிட்சயம் எமது இனத்திற்கு அடிக்கும் சாவு மணியே.

சிறீலங்கா அரசு 6 ஆவது திருத்தச்சட்டத்தை வாபாஸ்பெற வேண்டுமென்பதை தழிழீழ விடுதலை புலிகள் தமது நிபந்தனையாக முன்வைத்தார்களென்பதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால் இதே 6வது திருத்த சட்டத்திற்கு கீழ் பாரளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்தவர்கள் தான், மக்களிற்கு ஒற்றையாட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வும், ஒரு நாடும் இரு தேசமும் பெற்று தரப்பபோகிறார்களா? நெஞ்சிலும் நாவிலும் உண்மை இருக்க வேண்டும்.

சிங்கள பௌத்த அரசு, 13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்த முடியாதுவென கங்கணம் கட்டி நிற்கிறது. இதேவேளை ஈழத்தழிழர்களில் சிலர் அக்குரோசமாக, 13வது திருத்த சட்டத்தை நடைமுறை செய்யுமாறு வலியுறுத்தியவர்களை கண்டிக்கிறார்கள். இவ்விடயத்தில் சிங்கள பௌத்த அரசிற்கும் 13வது திருத்த சட்டத்தை எதிர்க்கும் தமிழரிடையே மாபெரும் ஒருமைபாட்டை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இது திட்டமிட்ட அணுகுமுறையா என பலர் சந்தேகிக்கிறார்கள்.

புலம்பெயர் தேசம்

புலம்பெயர் தேசத்தில், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பலனோர் புதியவர்கள். அவர்கள் ஆயுத போராட்ட காலத்தில், பார்வையாளராக காணப்பட்டவர்கள். இதில் பலர் உணர்ச்சிவச அரசியல் செய்கிறார்கள், சிலர் நாட்டில் உள்ள தேர்தல்வாதிகளை திருப்திப்படுத்தும் செயல்களை மேற்கொள்கிறார்கள். வேறு சிலர், வெளிநாட்டு புலனாய்வினரை திருப்திபடுத்துவதற்காக, அரசியல் செயற்பாடு என்ற பெயரில், புலம் பெயர் வாழ் மக்களின் ஐக்கியத்தை கூறுபோட்டு, தகவல் சேர்க்கிறார்கள். இன்னும் சிலர் எவ்வளவு தூரம் நாட்டில் உள்ள எமது உடன் பிறப்புகளிற்கு நாசம் செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள். சிலர் பொழுது போக்காக அரசியல் செய்கிறார்கள்.

இலங்கைதீவின் 13வது திருத்த சட்டம் பற்றிய முழு விளக்கமும் தெரியாத புலம்பெயர் வாழ் தமிழர் சிலர், தாமும் 13வது திருத்த சட்டத்திற்கு எதிரானவர் என்பதை காண்பிப்பதற்காக கூறும் விளக்கம் மிகவும் வியப்பானாது.
அவர்கள் கூறுவதாவது, மேற்குலகில் எந்த நாட்டிலும் 13வது இலக்கத்தை யாரும் விரும்புவதில்லையாம், ஏற்பதில்லையாம். இவர் கூறிய விளக்கம் எண்கணித சாஸ்திரம் பற்றியது. ஆகையால் ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்களும் இவ் 13ஐ ஏற்க கூடாதாம்.

மிக சுருகமாக கூறுவதனால், இதே 13வது சட்டம் மூலமாகவே அமெரிக்காவில் 1865ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி ‘அடிமை தனத்திற்கு ஏதிரான சட்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இப்படியாக பல அனுபவமற்ற ஆய்வற்ற கருத்துக்கள், இவ் நாட்களில் 13வது திருத்த சட்டம் பற்றி வலம் வருகிறது.

யாதார்தம் என்னவெனில், நன்றாக திட்டமிட்டு வடக்கு கிழக்கில் களம் இறங்கியுள்ள சீனர்களிற்கு எதிராக நாம் யாவரும் இணைந்து ஊர்வலங்கள், ஆர்பட்டங்கள், விழிப்பு போராட்டங்கள் செய்ய வேண்டி இவ்வேளையில், எம்மில் சிலர், 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பது மிகவும் வியப்பாகவுள்ளது. இவ் நகர்வு நிட்சயம் எமது இனத்தின் தற்கொலைக்கு ஒப்பானது.

யாவருக்கும் இறுதியாக ஒன்றை மட்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்ததை தொடர்ந்து, அவ்வேளையில் ஜனதிபதியாக விளங்கிய மகிந்த ராஜபச்சா, “வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு, அரசியல் தீர்வாக பஞ்சாயத்து முறையே மிக சிறந்த தீர்வு”என கூறியிருந்தார். ஆகையால், சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திந்து செயற்பட தவறும் பட்சத்தில், நாம் இறுதியில் பஞ்சாயத்து முறையை ஏற்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.
நாம் எமது லச்சியத்தை அடைவதற்கு, மாற்றுவழிகளை பின்பற்றலாமென எமது முன்னோடிகள் கூறியுள்ளார்கள். இதேவேளை, நமது லட்சியத்திற்காக தமது அர்பணிப்புகளை செய்தோருடை கனவு பலிக்க வேண்டுமாயின், மாற்று வழி மூலம் லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை நாம் கையாள வேண்டும் என்பது உலக அனுபவம்.

ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்
27 ஜனவரி 2022

ஒரு கடிதத்தால் வந்த ஒற்றுமை? Elanadu Editorial

ஆறு கட்சிகள் இணைந்து ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு அரிய நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது. ஆறு பிரதான கட்சிகள் அண்மையில் இந்தியாவை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தன. ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்ற கட்சிகள் பலவும் ஒரு குடையின் கீழ் இணைந்திருக்கின்றன. யுத்தம் நிறைவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். மக்கள் இதனையே விரும்பியிருந்தனர். மக்கள் தமிழ் தேசிய கட்சிகளிடம் அடிப்படையில் ஒற்றுமையே எதிர்பார்க்கின்றனர்.

கட்சிகள் ஒற்றுமையாக நிற்கும் போது, அதனை இருகரம் கூப்பி வரவேற்கின்றனர். ஒற்றுமை சீர்குலையும் போது, அவர்களும் சிதறிப் போகின்றனர். ஒரு மக்கள் கூட்டம் நம்பிக்கையிழக்கின்ற போது, அவ்வாறான உடைவுகளே ஏற்படும். தமிழ் தேசிய கட்சிகள் தொடர்பில் ஏற்பட்ட அவநம்பிக்கைகளே கடந்த பொதுத் தேர்தலின் போது, மக்கள் சிதறிப் போவதற்கான பிரதான காரணமாக இருந்தது. இதனையே அரச ஆதரவு தமிழ் கட்சிகளும் சிங்கள தேசிய கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டன. ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். கடந்த பொதுத் தேர்தலின் போதும் அதுதான் நடந்தது. தமிழ் தேசிய ஊர் இரண்டு பட்டது. மக்களும் உடைந்து போனார்கள். அதனை தென்னிலங்கை அறுவடை செய்துகொண்டது. இனியும் உடைபட்டால் அது தென்னிலங்கைக்கே பயன்படும். தென்னிலங்கை எப்போதுமே, வென்று கொண்டிருக்க வேண்டுமென்று நினைப்போர், நிச்சயம் ஒற்றுமையை சீர்குலைப்பவர்களாகவே இருப்பர்.

ஆறு கட்சிகளின் கோரிக்கை எவ்வாறான அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தும்? ஏற்படுத்துமா? – என்னும் கேள்விகளுக்கு அப்பால், ஆறு கட்சிகள் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டிருக்கின்றன. எதிர்காலத்திலும் சில விடயங்களில் ஒன்றுபட்டு செயற்பட எத்தனிக்கின்றன. இன்றைய காலத்தில் இது அவசியமான ஒன்று. பொதுவாகவே தமிழ் சூழலில் ஒரு கட்சி அல்லது ஒரு அணி ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது, அதனை திட்டமிட்டு எதிர்க்கும் ஒரு தரப்பும் இருக்கும். அதுவரை அமைதியாக இருப்பவர்கள் திடிரென்று தேசிய உத்வேகம் பெற்றுவிடுவர். பின்னர் – துரோகிகள், முகவர்கள், ஒட்டுக் குழுக்கள், கூலிப்படைகள் என்னும் கற்கள் தாராளமாகவே மற்றவர்கள் மீது வீசப்படும். உண்மையில் மக்கள் ஏமாந்து போனவர்கள் என்னும் எண்ணத்தில்தான் இவ்வாறான கற்கள் வீசப்படுகின்றன. இதிலுள்ள வேடிக்கையான விடயம் என்னவென்றால் – இவ்வாறு கூறுபவர்கள் அனைவருமே முன்னர் பல்வேறு இடங்களில் – பல்வேறு சந்தர்பங்களில் இணைந்து செயற்பட்டவர்கள். இன்று மற்றவர்கள் மீது கற்களை வீசும் அனைவருமே தமிழ் மக்கள் பேரவையில் ஒன்றாக இருந்தவர்கள். ஒரு மாற்றுத் தலைமையை நோக்கி செயற்படுவதற்காக தங்களுக்குள் அவ்வப்போது, சிரித்துப் பேசியவர்கள். அப்போது, இந்த வசைச் சொற்களுக்கு என்ன நடந்தது?

உண்மையில் துரோகி, முகவர், ஒட்டுக்குழு, கூலிப்படை இவ்வாறான சொற்களுக்கு தமிழ் அரசியலில் எவ்விதமான பெறுமதியும் இல்லை. தமிழ் மக்கள் மந்த புத்தியுள்ளவர்கள் என்னும் எண்ணத்தில்தான் இவ்வாறான சொற்களை சிலர் மக்கள் மத்தியில் விதைக்க முற்படுகின்றனர். இது ஒரு ஆபத்தான போக்கு. இதனை மக்கள் கண்டிக்காவிட்டால், சிவில் சமூகங்கள் தட்டிக் கேட்காவிட்டால் – ஒரு வேளை இவ்வாறான கற்கள் மக்களை நோக்கியும் வீசப்படலாம். ஒரு கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவருமே துரோகிகள், முகவர்கள், விலைபோனவர்கள் என்றும் சிலர் வாதிடும் சூழல் உருவாகலாம். இது ஒரு ஆபத்தான பாசிச போக்காக இது உருவெடுக்கலாம். இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் விழிப்பாக இருப்பதை தவிர இப்போதைக்கு வேறு எந்தவொரு வழியும் இல்லை. மக்கள் தங்கள் விழிப்பை இழக்கும் போதே – மக்கள் இலகுவாக ஏமாற்றப்படுகின்றனர். மக்களை ஏமாற்றுவதற்கு துணை போபவர்கள் எவ்வாறான கொள்கைகளை உச்சரித்துக் கொண்டாலும் கூட, இறுதியில் அப்பாவி மக்களின் நம்பிக்கைகள் சுரண்டப்படுகின்றன என்பது மட்டும்தான் உண்மை.

Posted in Uncategorized

நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை -BBC Tamil

இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கை காரணமாக, சுமார் 35 வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் பாரிய போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமல்படுத்தத் தலையீடு செய்யுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இலங்கையில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதமொன்றை கடந்த 18ஆம் தேதி அனுப்பியிருந்தன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழை நிர்வாக மொழியாக்கவும், ஒன்பது மாகாணங்களிலும் மாகாண சபை அமைக்கவும் 13வது திருத்தம் வழிவகை செய்கிறது.

இப்போது இந்தத் திருத்தத்தை அமலாக்க தமிழ் கட்சிகளுக்குள்ளேயே எதிப்பு கிளம்பியுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் கோபால் பாக்லேயின் ஊடாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய ஏழு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த கடிதத்தை, நரேந்திர மோதிக்கு அனுப்பியிருந்தனர்.

இப்போது எதிர்ப்பு ஏன்?

இந்த நிலையில், 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு கோரி, இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை நிராகரிப்பது மற்றும் 13வது திருத்தம் வேண்டாம் ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

13வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, மக்களை தெளிவுப்படுத்துவது மற்றும் பேரணியின் ஊடாக மக்களை தெளிவுப்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் பாரிய போராட்ட பேரணி நடத்தப்பட்டு, மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மக்கள் சந்திப்பில் பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஒற்றையாட்சிக்குள் 13வது திருத்தத்தை அமல்படுத்தக்கூடாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறுகின்றது.

70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தாம் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, அந்த அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை இவர்கள் தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தமானது, இனப் பிரச்னைக்கான தீர்வு இல்லை என கூறப்பட்டு இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியவர்கள் சொல்வதென்ன?

13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வட மாகாண சபையை மீண்டும் கொண்டு வரவே தாம் முயற்சித்து வருவதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

13வது திருத்தச் சட்டமானது, தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது என்பதனை தாமும் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பில் தற்போதுள்ள சட்டத்தை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே தாம் கோரியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றால், தாம் அந்த சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து விட்டோம் என்ற வகையிலான மாயையை உருவாக்கும் நோக்கிலேயே இந்த பேரணி முன்னெடுக்கப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் என்றால் என்ன?

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி இந்த 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த உடன்படிக்கை அப்போது கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி, நாட்டில் மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில், இந்த 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த மாகாண சபை முறையின் ஊடாக, காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் மாகாண சபை வசமாகின்றன. எனினும், மத்திய அரசாங்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரங்களை வழங்காதிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகம், நாட்டின் ஏனைய பகுதிகளில் கலந்து காணப்படுகின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர்.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழுக்கும், ஏனைய மாகாணங்களில் நிர்வாக மொழியாக சிங்களத்துக்கு முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

இதேவேளை, இந்த திருத்தச் சட்டத்தின் ஊடாக, இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபைகளாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால், வடக்கு கிழக்கு இணைப்பு சட்டமானது, சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் 2007ம் ஆண்டு தீர்ப்பு வழங்கி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிந்து உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை அரசின் நிலை என்ன?

தமிழர் பிரச்னை தீர்வுக்கு இலங்கை – இந்திய உடன்படிக்கையில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டமே, சிறந்த ஆரம்பமாக இருக்கும் என ஆளும் தரப்பிலுள்ள தமிழ் அரசியல்வாதியான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு, பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து, நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

13வது திருத்தத்தை அமல்படுத்துவது தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில், சர்வதேச நாடுகள் நேரடியாக தலையிட வேண்டியதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளக பொறிமுறையின் ஊடாகவே, உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னைகளை கொண்டு வந்து, அதனூடாக தீர்வை காண முயற்சிக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் கூறுகின்றார்.