வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன? – ரெலோவின் பிரதித்தலைவர் பிரசன்னா

இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனாய் இருக்கும் சீனா தமிழர்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்? வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன? என தமிழ் ஈழ  விடுதலை (ரெலோ) இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு கிழக்கில் சினாவின் பிரவேசம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்ட ஒரு நாடாக இருப்பது இந்தியா. பிராந்திய வல்லரசாகத் திகழும் இந்தியாவின் அனுசரணையுடன் தான் தமிழர்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கப்பெற முடியும் என்பதும் அரசியலாளர்களின் ஏகோபித்த கருத்துமாகும். அவ்வாறிருக்கையில் நம்மவர்கள் சிலர் சீனாவினை நாட வேண்டும் என்று கதைப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகும்.

அகிம்சை ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் உரிமைக்கான போராட்டம், ஆயுத ரீதியில் அதியுச்சம் பெற்று தற்போது ஒரு ஜனநாயக ரீPதியிலான முன்னெடுப்புகiளை மேற்கொண்டு செல்கின்றது. இத்தகு நேரத்தில் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் ஒரு நாட்டினையே நாம் அனுசரணையாகக் கொள்ள வேண்டும். சர்வதேச விழுமியங்களை மதித்து செயற்படும் நாடுகளுடனான எமது உறவே எமது மக்களுக்கான நேர்மையான தீர்வுக்கு வழிவகுக்கும். அதை விடுத்து சீனாவிடம் செல்வதென்பது முட்டாள் தனமான செயற்பாடாகவே இருக்கும்.

நாட்டிற்கு கடன் என்ற பெயரில் நிதியினைக் கொடுத்து நாட்டின் வளங்களைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் சினாவின் ஆதிக்கம் தற்போது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களிலும் வேறூன்ற ஆரம்பித்துள்ளது. இது தமிழர்களின் உரிமை தொடர்பான செயற்பாடுகளுக்குப் பாதகமாகவே அமையும். இதனை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் தீர்வு என்ற ஒன்று பெற வேண்டுமானால் அது இந்தியாவினூடாகவேதான் அமையும். சீனாவுடன் பேச வேண்டும் என்று இந்தியாவின் எதிர்ப்பினைப் பெறுவதென்பது எமது மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். வடக்கு கிழக்கின் மேல் திடீரென சீனாவிற்குக் கரிசனை வரக் காரணம் என்ன?

எமது ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் முறைமையானது தமிழர்களின் அபிலாசைகளுக்கான ஆரம்பப் புள்ளியாக இருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும். இதிலிருந்து அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நாங்கள் முன்நகர வேண்டும். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மாத்திரமே வழிவகுக்கும்.

இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனாய் இருக்கும் சீனா தமிழர்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்? எந்த நம்பிக்கையில் சீனாவுடன் தொடர்பினை எற்படுத்த முடியும்? போன்ற நிலைமைகளையெல்லாம் ஆராயாமல் கருத்திடக் கூடாது.

தாகத்தில் இருப்பவனுக்கு தூரத்தில் இருக்கும் கங்கையை விட பக்கத்தில் இருக்கும் குட்டையே மேலானது என்பார்கள். எனவே உரிமையை இழந்து தவிக்கும் மக்களின் உரிமையைப் பெற பக்கத்து தேசத்தை விடுத்து எங்கோ இருக்கும் சீனாவோடு கதைப்பதென்பது வேலிக்குள் இருப்பதை எடுத்து விட்ட கதையாகப் போய்விடும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்திய பிரதமருக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது 29ஆம் திகதி கைச்சாத்திடப் படலாம் சுரேந்திரன்

இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் தயாரித்த கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் கொழும்பில் தலைவர்கள் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கைகள் அடங்கிய இறுதி செய்யப்பட்ட வரைபை சீர்செய்யும் நோக்கத்திற்காக கூடினர்.
அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வரைபும் பரிசீலிக்கப்பட்டது. இரண்டு வரைபுகளுக்கு இடையிலும் பெரிய வித்தியாசங்கள் காணப்படாமையினால் தமிழரசுக்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபில் உள்ள விடயங்களையும் சேர்த்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டது.

அன்று மாலைவரை நடந்த கலந்துரையாடலில் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்திற்கான வரைபை இறுதி செய்தனர். இணக்கம் காணப்பட்ட விடயங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட வரைபு மறுநாள் தலைவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சீர் செய்வதற்காக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து தலைவர்களுடைய வழிகாட்டுதலோடும் வரைவு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 29-12-2021, அனைத்து தலைவர்களின் வசதிக்கேற்ப கொழும்பில் இக்கடிதத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இவ்விடயத்தை செவ்வனே நிறைவேற்றி தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு தம் மக்களை மீட்க விட்டுக்கொடுப்போடும், அர்ப்பணிப்போடும் ஒருமித்து செயலாற்ற அனைத்து தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

மட்டக்களப்பு கடலில் ஒரு வாரத்திற்கும் மேலாக தரித்து நிற்கும் கப்பல்

மட்டக்களப்பு கடற்பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் கப்பல் தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஒரு வாரத்திற்கும் மேலாக தரித்து நிற்கும் கப்பல் கடலில் இருந்து மணல் அள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு கப்பலில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். அரசு அதிகாரிகளை சீருடை அணிந்தவர்கள் ஆயுதங்களுடன் திருப்பி அனுப்பினர். யார் பதில்களை வழங்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தனது டுவிற்றர் பதிவில் கேள்வியெழுப்பியிருந்தார்.

எனினும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து பங்களதேஷிற்கு பயணித்த கப்பலில் ஏற்பட்ட எரிபொருள் குறைவு காரணமாகவே, குறித்த கப்பல் மட்டக்களப்பை அண்மித்த கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பலுக்கு தேவையான எரிபொருள், திருகோணமலையிலுள்ள எரிபொருள் விநியோகிக்கும் கப்பலொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த கப்பல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிள்ளையார் ஆலயத்தில் குடியேறிய புத்தர்!! தமிழர் பகுதியில் திடீர் பதற்றம்

திருகோணமலை – மூதூர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று இனந்தெரியாதவர்களினால் வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால், இன்று குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை தோன்றியுள்ளது.

இந்து ஆலயத்தில் இனந்தெரியாத விசமிகளால் நேற்று முன்தினம் இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் பிரதேச இந்துக் குருமார்களால் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் வைக்கப்பட்ட அச் சிலையானது மூதூர் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

எனினும் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மூதூர் பிரதேச இந்துக் குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது மூதூர் கொட்டியாராம விகாராதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்தபோது சற்று பதற்ற நிலையும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயமானது பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களானாலும், திருகோணமலை – மட்டக்களப்பு வீதியூடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்களாலும் வழிபாடு செய்யப்படுகின்ற ஆலயமென்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்விடத்தில் தொடர்ந்தும் இந்துக் குருமார்களும் ,பொதுமக்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதும் குறித்த புத்தர் சிலையானது யாரால் வைக்கப்பட்டதென்று தெரியாது. இது தொடர்பாக விசாணைகளை மேற்கொள்ளவுள்ளோம் என மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பின் ஊடக முன்னோடி ஜோசப் பரராசசிங்கம் – ஒரு வரலாற்று பதிவு!!

‘ஜோசப் அண்ணன்’ என நாம் அன்போடு அழைக்கும் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனிதஉரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல தளங்களில் கால் பதித்த ஜோசப் அவர்கள் பயணித்த காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த காலம் அவர் ஊடகவியலாளராக செயற்பட்ட காலம் தான்.

1980களிலிருந்து 1990வரையான காலத்தில் அவரோடு ஒரு ஊடகவியலாளராக மிக நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

ஜோசப் அவர்கள் 1960களிலிருந்து செய்தியாளராக பணியாற்ற தொடங்கினார்.

குணசேனா பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தினபதி சிந்தாமணி சண் போன்ற பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக அவர் பணியாற்றி வந்தார்.

தினபதி பத்திரிகையில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு அப்பத்திரிகை நிறுவனத்தாலும் ஆசிரிய பீடத்தாலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக செயற்படும் தனித்துவத்தை ஜோசப் அவர்கள் கொண்டிருந்தார்கள்.

1980களில் நான் மட்டக்களப்பில் ஊடகவியலாளராக பணியாற்ற ஆரம்பித்த காலம். அக்காலத்தில் பி.ஜோசப், எஸ் நாகராசா, வீ.சு.கதிர்காமத்தம்பி, ஆர். உதயகுமார், ஆர்.நித்தியானந்தன், செழியன் பேரின்பநாயகம் மற்றும் நான் உட்பட விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச்சொற்பமான செய்தியாளர்களே மட்டக்களப்பு நகரில் இருந்தனர்.

தனித்துவமாக ஒவ்வொருவரும் செயற்பட்டாலும் ஒற்றுமையாக செயற்பட்டோம்.

1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த வேளையில் செய்தியாளர்களுக்கு என ஒரு சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கரு உதயமானது.

அக்காலத்தில் கொழும்பில் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் என்ற ஒரு சங்கம் தான் இருந்தது. அவர்கள் பிராந்திய செய்தியாளர்களின் நலன்களில் அக்கறை பட்டது கிடையாது. பிராந்திய செய்தியாளர்களை தமது சங்கத்தில் இணைத்து கொண்டதும் கிடையாது.

இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள செய்தியாளர்களை இணைத்து கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 1982ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முதலாவது தலைவராக ஜோசப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக செல்லையா நாகராசா தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களில் இருந்த செய்தியாளர்கள் இதில் இணைக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் செய்தியாளர்களுக்கு என உருவாக்கப்பட்ட முதலாவது சங்கம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தான். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 2004ஆம் ஆண்டு வரை சமூக அரசியல் ஊடகத்துறை என பல மட்டங்களில் சிறப்பாக செயற்பட்டதை கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அறிவார்கள். ஊடகத்துறையில் மட்டுமன்றி சமூக அரசியல் துறைகளிலும் சிறப்பாக செயற்படுவதற்கு அத்திவாரம் இட்டு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயற்பட்டவர் ஜோசப் அவர்களாகும்.

1980களின் பின் படையினரின் நெருக்குவாரங்களும் கைதுகளும் மனித உரிமை மீறல்களும் அதிகரித்து வந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பேசுவதற்கு கைது செய்யப்பட்டவர்களை மீட்பதற்கு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாரும் இல்லாத அனாதரவான நிலையிலேயே மட்டக்களப்பு மக்கள் காணப்பட்டனர்.

1983ஆம் ஆண்டின் பின்னர் 6வது திருத்த சட்டத்தை ஏற்று சத்தியபிரமாணம் செய்யாததால் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்திருந்தனர். அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான தேவநாயகம், இராசதுரை போன்றவர்களே பதவியில் இருந்தனர். ஆனால் அரச தரப்பு அமைச்சர்களாக இருந்த காரணத்தினாலோ என்னவோ கைது செய்யப்படும் இளைஞர்கள் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்கள் பற்றியோ அவர்கள் வாய் திறப்பதில்லை.

அவ்வேளையில் ஊடகவியலாளராக இருந்த ஜோசப் அவர்கள் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதிலும் மனித உரிமை மீறல் சம்பவங்களை திரட்டி சர்வதேச மன்னிப்பு சபை போன்ற சர்வதேச அமைப்புகளினது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

ஊடகவியலாளர் என்ற ரீதியில் பொலிஸ் உயர் மட்டங்களுடன் இருந்த நட்பை பயன்படுத்தி சில இளைஞர்களை அவர் விடுவித்திருந்தார்.

1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பை பெரும் அழிவுக்கு உட்படுத்திய சூறாவளி வீசியது. அந்த சூறாவளியின் பின்னர் பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு நிவாரணப்பணிகள் நடைபெற்றன. அந்த புனரமைப்பு நிவாரணப்பணிகளில் ஊழல் மோசடிகளும் பெருமளவு இடம்பெற்றது.

ஆளும் அரசியல்வாதிகளின் பக்க பலத்துடன் உயர் அதிகாரிகள் சிலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர். சில கிராமங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கணக்கு காட்டி பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டன. நிவாரணத்திற்கென வந்த பால்மா மற்றும் உலர் உணவு பொருட்களை மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு விற்று நிவாரணப்பொருட்களை ஏப்பம் விட்டனர்.

இந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் துல்லியமான தரவுகளுடன் ‘சூறாவளி பூராயம்’ என்ற தலைப்பில் ஜோசப் அவர்கள் தொடர்கட்டுரை ஒன்றை சிந்தாமணியில் எழுதினார்.

புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை ஒரு சிறந்த உதாரணமாகும்.

இன்றைய இளம் ஊடகவியலாளர்கள் புலனாய்வு செய்தி திரட்டல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அக்கட்டுரை தொடரை தேடி வாசிக்க வேண்டும்.

‘சூறாவளி பூராயம்’ என்ற கட்டுரை வெளிவந்த போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் மோசடி நடந்திருக்கிறது என்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.

ஆனாலும் என்ன ஊழல் மோசடி செய்தவர்கள் ஆளும் கட்சி அமைச்சர்களின் செல்வாக்கினால் தப்பித்து கொண்டனர்.

அதேபோல மட்டக்களப்பு சிறை உடைப்பின் போதும் அவரின் செய்தி தேடலையும் தமிழ் மக்களின் நலன் என்ற நிலையில் நின்று சில செய்திகளை வெளியிடாமல் இரகசியம் காத்ததையும் கண்டு வியந்திருக்கிறேன்.

அவ்வேளையில் இளம் ஊடகவியலாளராக இருந்த எனக்கும் நித்தியானந்தனுக்கும் ஆசான் என்ற நிலையில் இருந்து அவர் வழிகாட்டியிருந்தார்.

1990ல் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரையான காலப்பகுதியில் ஊடகவியலாளராக மனித உரிமை செயற்பட்டாளராக பணியாற்றிய காலமே ஜோசப் அவர்களின் பொற்காலம் என நான் கருதுகிறேன்.

இதற்கு அவரின் மொழிப்புலமையும் துணிச்சலும் தமிழ் பற்றுமே காரணம் என்பேன்.

2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து செல்வதாக அறிவித்த காலப்பகுதியில் தான் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை அழைத்த கருணா பிரிந்து செயற்பட இருக்கும் தன்னுடன் தான் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் விடுதலைப்புலிகளின் தலைமையுடன் தொடர்பை வைக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஏனைய வேட்பாளர்கள் அச்சத்தின் காரணமாக தவிர்க்க முடியாத சூழலில் அதற்கு சம்மதித்தனர்.

ஜோசப் பரராசசிங்கம் மட்டும் கருணாவின் கோரிக்கையை அல்லது உத்தரவை ஏற்க மறுத்து விட்டார்.

‘வடகிழக்கு தமிழர் தாயக கோட்பாட்டை கைவிட முடியாது. அதற்காக போராடும் தலைமையையே நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என கூறியதுடன் கருணாவின் உத்தரவை ஏற்க மறுத்து விட்டார்.

இறக்கும் வரை கொள்கையிலும் தமிழ் பற்றிலும் உறுதியாக இருந்த ஒரு உயர்ந்த மனிதராக ஜோசப் அவர்களை பார்க்கிறேன்.

என் 40 வருட ஊடக பயணத்தில் எனக்கு வழிகாட்டிகளாக இருந்தவர்களில் மிக பிரதானமானவராக ஜோசப் அவர்களையே பார்க்கிறேன்.

உங்களைப்போன்ற ஆளுமையும் துணிச்சலும் எந்த சலுகைகளுக்கும் விலைபோகாத ஊடகவியலாளர் சமூகம் ஒன்று மட்டக்களப்பில் உருவாகும் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.

( இரா.துரைரத்தினம், ஊடகவியலாளர் )

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல்

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது ஆண்டு  நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது.

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது ஆண்டு  நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வுக்கு முன்பாக அன்னாரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் சார்ள்ஸ் மண்டபம் வரையில் கைகளிலும் கழுத்திலும் கறுப்பு பட்டியணிந்து ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட புனித மரியால் பேராலயம் வரையில் வருகைதந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச்சூடு விளக்க மறியல் உத்தரவு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

அதே நேரம் திருக்கோவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை  எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கறைபற்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் நிலையத்தில் சமார் 30 பொலிசார் கடமையாற்றிவருகின்றனர். இந்த நிலையில் இங்கு கடமையாற்றிவரும் மொன்ராகலை மாவட்ட சியம்பலாண்டுவ அத்திமலை பொலிஸ் பிரிவில் வசித்துவரும் பொலிஸ் சாஜன் குமார என்பவர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான தெயகமவிடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கான அனுமதியை அவர் வழங்கவில்லை.

இந்த நிலையில் வீடு செல்ல லீவு வழங்காததையடுத்து சாஜனான குமார கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் சம்பவதினம் இரவு இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வு முடிந்து அங்கிருந்து சென்றனர்.

அதனையடுத்து இரவு சுமார் 11 மணியை நெருங்கி கொண்டிருந்தபோது குறித்த சாஜன் பொலிஸ் நிலைய முன்பகுதி வாசலில் கடமையில் இருந்த ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கியை பலவந்தமாக பறித்தெடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாகி பிரயோகம் செய்தார். பின்னர் அதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காரியாலய கட்டிடபகுதியை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது அங்கு கடமையில் இருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து வீதி சோதனை நடவடிக்கையினை பார்ப்பதற்காக அவரது சாரதியுடன் ஜீப்வண்டியில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி ஜீப்வண்டியில் உள்நுழைந்த போது ஜீப் வண்டியை நோக்கி துப்பாகிதாரியான பொலிஸ் சாஜன் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்து சாரதி உயிரிழந்ததையடுத்து ஜீவ்வண்டி அருகில் இருந்த கட்டிடத்தில் மோதிநின்றது .

இதனையடுத்து அங்கு இருந்த பொலிசார் தமது உயிரை காப்பாற்ற அங்கிருந்து சின்னா பின்னமாக தப்பி ஓடி கட்டிடங்களில் கதவுகளை பூட்டி மறைந்து கொண்டனர். இதன் பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவந்த பெலிஸ் சாஜன் அங்கிருந்த இன்னுமொரு துப்பாக்கியையும் எடுத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

துப்பாக்கி வேட்டுசத்தம் அடங்கியதையடுத்து மறைந்திருந்த பொலிசார் வெளியேறிபோது தம்மோடு கடமையாற்றிவந்த 3 பொலிசார் துப்பாக்கி சூட்டுகாயத்துடன் உயிரிழந்து இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்ததையடுத்து அதிர்ச்சியடைந்ததுடன் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அனைவரையும் அருகில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களான சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய டி.எம்.துசார கேமந்த புஸ்பகுமார, கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த 30 வயதுடைய அழகரெட்ணம் நவீனன், பிபிலையைச் சேர்ந்த 30 வயதுடைய பிரபுத்த என்பவர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனu;. இதில படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கலந்தர் லெப்பை முகமட் காதா உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அங்கிருந்து மோட்டர்சைக்கிளில் தப்பி ஓடிய பொலிஸ் சாஜன் மொன்ராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியுடன் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.

குறித்த சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பொலிசார் அம்பாறை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளர்.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Posted in Uncategorized

இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகும் -பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

கடந்த 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்.

இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில்,

“இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது போனாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிவிக்க முடியும். இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கண்டல் மரங்கள் அடர்ந்திருந்த கப்புஹென்வல கிராமத்தில் கடற்கோளால் இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருந்தது. ஆனால், அதே மாவட்டத்தில் கண்டல்கள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் ஆழிப்பேரலை ஆறாயிரம் உயிர்களை வாரிச் சென்றுள்ளது. கடல் அலைகளின் சீற்றத்தை 90 விழுக்காடு குறைத்துவிடும் வல்லமை கண்டற் காடுகளுக்கு உண்டு. ஆனால், கடற்கோள் “இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்று உலகு அதிரப் போதித்த பின்பும் பட்டும் திருந்தாத பாவிகளாக இயற்கையை நாம் தொடர்ந்தும் சூறையாடி வருகிறோம்.

கடலோரக் கண்டற்காடுகளை நாம் மென்மேலும் கபளீகரம் செய்துவருகிறோம். கடற்கரையோர மணல் மலைகள் தினம் தினம் கொள்ளை போகின்றன. சுண்ணக் கற்பாறைகள் அகல பாதாளத்துக்குத் தோண்டப்படுகின்றன. கடலருகே இறாற் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. கடலக முருகைக் கற்பாறைகள் அழிக்கப் படுகின்றன. இழுவைப் படகுகள் கடலடி வளங்களை இடையறாது துவம்சம் செய்து வருகின்றன. இப்படி, தலைமுறை தலைமுறையாக வளமூட்ட வேண்டிய கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் தொடர்ந்தும் சூறையாடி வருகின்றோம். இவற்றுக்கும் மேலாக நாம் வளியில் குவித்துக்கொண்டிருக்கும் கரிக்காற்று பூமியைச் சூடுபடுத்துவதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.

மிகப்பெரும் மனிதப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எதுவுமே நடவாதது போல உறங்கிக் கிடக்கும் கடல் இன்னொரு முறை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. இன்னுமொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் அது ஏற்படுத்தும் அழிவு முன்பைவிட பன்மடங்கானோரைப் பலியெடுக்கும் பேரழிவாகவே அமையும். எனவே, கடற்கோளின் படிப்பினைகளை ஏற்று இயற்கையோடு இசைவுற வாழ்ந்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம். இதுவே கடற்கோளில் மாண்ட நம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் தீ பந்த போராட்டம்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரனின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குறித்த தீ பந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

திருக்கோவில், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சார்ஜன்ட் தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், T-56ரக இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவைகளுடன் அவர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized