முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொரோனா சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும்: நீதிமன்றம் தீர்ப்பு..!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை கொவிட் 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் மீதான ஒரு தெளிவான திருத்திய கட்டளை வழங்கப்படும் என மன்று தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீது இன்றையதினம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எஸ் .சரவணராஜா முன்பாக இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. இந்த வழக்கில் சிரேஸ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் நடராஜர் காண்டீபன் , கனகரத்தினம் சுகாஸ் ,சுதர்சன் எஸ் தனஞ்சயன் உட்பட முல்லைத்தீவு நீதிமன்றின் ஏனைய சட்டதரணிகளும் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இதன் பின்னர் நீதிமன்று ஏற்கனவே வெளியிட்ட கட்டளை மீதான திருத்திய வெளியீடை இன்று வெளியீடுவதாக கட்டளையில் தெரிவித்துள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார விதிகளை கடைபிடித்து மேற்கொள்ளலாம் எனவும் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டாத வண்ணம் மேற்கொள்ளவேண்டும் எனவும் நீதிமன்று கட்டளை ஆக்கியுள்ளது .

Posted in Uncategorized

துறைமுக நகர சட்டமூலம் குறித்த நீதிமன்ற தீர்மானத்தை பாராளுமன்றில் கையளிக்க நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், சபாநாயகரினால் எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா மேற்கொள்ள அனுமதி

நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக “Bio Bubble” முறைமையின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

Posted in Uncategorized

வவுனியா நைனாமடுப் பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல் பொருள் திணைக்களம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டிட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீட்டர் உயரமுள்ள தூண் ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட இராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய வவுனியா மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த பகுதி அண்மையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக குறித்த பகுதியின் கிராமசேவகருக்கோ,அல்லது கிராம மக்களிற்கோ எந்த தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை.

அங்கு பௌத்தவிகாரையுடன் தொடர்புடைய தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், குறித்த பகுதி வர்த்தமானி அறிவுப்புச்செய்யப்பட்டு, தொல்பொருள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் ஆக்கிரமிப்பை ஏற்ப்படுத்தியுள்ள தொல்பொருட் திணைக்களம் தமிழ்மக்களின் பூர்வீக பிரதேசமான நைனாமடுவில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பினை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

திருகோணமலையில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை(16) முற்பகல்-10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இந்த நிலையில் நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தத் தயங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 55 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 709 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 2,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் அரசு வழங்க வேண்டும் ரெலோ தலைவர் செல்வம்

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா வீதம் இந்த அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது முடக்கத்தால் பாதிக்கப்படும் அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்திவரும் மக்களுக்கு பத்தாயிரம் ரூபா இந்த அரசு வழங்க வேண்டும்.

கொரோனா தொற்று காரணமாக இந்த அரசு 3 நாள் பொது முடக்க பயணத் தடையை அறிவித்துள்ளது.

ஆனால் இந்த மூன்று நாட்களிலும் அன்றாடம் வேலை செய்து வாழ்க்கை நடத்திவரும் கடற் தொழிலாளர்கள் சிறு வியாபாரிகள் கூலித் தொழிலாளர்கள் என்று பெருவாரியான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களை அடையாளம் கண்டு இந்த மூன்று நாட்களுக்கும் 10,000 ரூபா வீதம் வழங்குவதற்கு இந்த அரசு முன் வர வேண்டும்.

அதேவேளை இந்த பொது முடக்க பயணத் தடை நீடிக்குமாக இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து விதமான மக்களும் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிடும் என்பதனை அரசு புரிந்து அதற்கேற்ற வகையில் விரைவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ரெலோவின் முக்கியஸ்தர்களான குகன் மற்றும் தாஸ் ஆகியோரின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான குகன் மற்றும் நிதிச் செயலாளர் தாஸ் அவர்களினதும் 22ம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த இவர்களை இந்நாளில் அஞ்சலிக்கிறோம்.

ரெலோ வவுனியா மாவட்ட முன்னாள் அமைப்பாளர் குகன் மற்றும் ரெலோ நிதிச்செயலாளர் தாஸ் ஆகியோரின் 22 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15/05/2021 மன்னாரில் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது அன்னாரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.

நாட்டின் கோவிட் சூழ்நிலை காரணமாக மாவட்ட செயலகங்களில் 15-05-2021 அன்று எளிமையான முறையில் இடம் பெற்றது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி: பொறுப்பாளர்களை சட்டத்தின் முன்நிறுத்துங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை

அண்மையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பொலிஸ் பாதுகாப்பிலிருந்த பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த ‘உரு ஜுவா’ என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் ‘கொஸ்கொட தாரக’ என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் அண்மையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சட்டத்திற்கு முரணாகத் தண்டனை வழங்கும் போக்கு அதிகரிக்கலாம் என்ற விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இச்சம்பவத்திற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் கடுமையான கண்டத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பொலிஸ் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை முறையாகக் கவனிப்பதுடன் அவர்களை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. எனினும் இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பது, அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதை மறுதலிப்பதாக அமைகின்றது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பசில் மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு சுவீனமடையவில்லை -நாமல்

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ஷ சுவீனமடையவில்லை.

தனிப்பட்ட காரணிகளுக்காகவே அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

மினுவாங்கொட வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் தற்காலிக சிகிச்சை நிலையத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தனிப்பட்ட காரணிகளுக்காகவே அமெரிக்கா சென்றுள்ளார் .

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைகளை பெறும் அளவிற்கு அவர் சுகயீனமாக காணப்படவில்லை.

கடந்த 11 ஆம் திகதி அவரை சந்தித்த போதும் அவர் நலமுடன் இருந்தார். அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து ஒரிரு வாரங்களில் அவர் நாடு திரும்புவார் என்றார்.