வாக்கெடுப்பில் தோற்றாலும் போர்க் குற்ற விசாரணைகள் என்றே பேச்சுக்கே இடமில்லை – சரத் வீரசேகர

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர் வலியுறுத்தினாலும் போர்க் குற்ற விசாரணையை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை குறித்து இந்தியா தற்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பொய்யான அறிக்கை என குறிப்பிட்ட சரத் வீரசேகர, இந்த அறிக்கையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாநகர சபையால் வாகனங்களை பராமரிக்க முடியாதா? ரெலோ எம்.பி ஜனா கேள்வி

ஒரு மனிதன் மனிதாபிமான ரீதியாக இலவச அமரர் ஊர்தி சேவையினை செய்துவருகின்றபோது அந்த வாகனத்தினை பாதுகாக்க முடியாத மாநகரசபை எதற்கு என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது. அத்துடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் கடந்த நான்கு வருடங்ளாக ஜி.கே.ஃபவுன்டேசன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்திவருகின்றேன். உண்மையில் ஏழை மக்கள் இறந்த தங்கள் உறவுகளின் உடல்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கான உதவியே அதுவாகும். இதுவரை 1200 உடல்களை நாங்கள் ஏற்றிக்கொண்டு கொடுத்திருக்கின்றோம்.

கட்சி பேதமின்றி அனைவருக்கும் உதவும் வகையில்தான் ஜி.கே.ஃபவுன்டேசன் இலவச அமரர் ஊர்தி சேவை இந்த மாவட்டத்தில் நடந்து வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றினால் இறந்த ஒருவரது உடல் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்த காரணத்தினால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மரணித்த மற்றைய நோயாளிகளின் உடல்கள் செங்கலடி, ஆரையம்பதி போன்ற மற்றைய வைத்தியசாலைகளில் தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அந்த உடல்களைக்கூட எங்களது ஜி.கே.ஃபவுன்டேசன் இலவச அமரர் ஊர்தி தான் ஏற்றிக்கொடுத்தது.

அந்த ஊர்தியினை நான் சிறிது காலம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் தான் நான் தரித்து வைத்திருந்தேன். ஏனென்றால் இந்த வாகனத்திற்கும் அறக்கட்டளைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற தனியார் அமரர் ஊர்தி சேவை மேற்கொள்வோரால் எதிர்ப்பு இருக்கின்றது.

ஆகவே எனது வாகனத்தை வீதியில் தரித்து நிற்கச் செய்ய முடியாது. இந்த சேவையை நான் வேறு எவரது உதவியுமின்றி எனது தனிப்பட்ட நிதியிலிருந்துதான் செய்து வருகின்றேன். எனது உழைப்பின் ஒரு பகுதியை இதற்காக செலவு செய்கின்றேன். மீண்டும் இன்னுமொரு வாகனத்தை கொள்வனவு செய்து இதற்காக முதலிடும் நிலையில் நான் இல்லை.

அந்த அடிப்படையில் இரவு வேளையில் பாதுகாப்பிற்காக பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலம் தரித்து நிற்கச் செய்திருந்தேன். அதற்குப் பின்னர் அங்கு தரிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் மாநகரசபையில் அனுமதி கேட்டு பிரேரணை ஒன்று சமர்ப்பித்து 38 உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த வாகனத்தை அங்கு தரித்து நிற்கச் செய்யலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி எனக்கு பிரதியும் தரப்பட்டுள்ளது.

இப்போது எனது வாகனம் வீதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் மாநகரசபை ஆணையாளருக்கும் மாநகரசபைக்கும் இடையில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட ஏதோவொரு பிரச்சினையாகும். மாநகரசபையின் 38 உறுப்பினர்களும் ஏகமனதாக அந்த வாகனத்தை இரவு வேளைகளில் மாத்திரம் அங்கே தரிக்கச் செய்வதற்கு அனுமதியை கொடுத்திருந்தும் ஆணையாளர் அந்த வாகனத்தை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றார்.

வெளியில் வீதியிலே நிற்கின்ற அந்த வாகனத்தை எவராவது தீப்பற்றவைத்தார்களானால் பாதிக்கப்படப்போவது ஏழை மக்களே ஆவர். எனக்கு இந்தப்பிரச்சினைக்கு இன்று ஒரு தீர்வு தராவிட்டால் இந்த சேவையை இன்றுடன் நான் நிறுத்தவுள்ளேன்.

மிகவும் கஷ்டப்பட்ட பிரதேச சபைகளான வாகரை,வவுனதீவு,போரதீவு போன்ற பிரதேச சபைகளே வண்டிகளை வைத்து இந்த வேலைகளை செய்து வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுகெலும்பாகவும் வருமானமுள்ளதுமான மாநகரசபையானது ஒரு வண்டியை வைத்து அமரர் ஊர்தி சேவையினை செய்ய முடியும்.

ஒரு மனிதன் மனிதாபிமான ரீதியாக இந்த இலவச அமரர் ஊர்தி சேவையினை செய்துவருகின்றபோது அந்த வாகனத்தினை பாதுகாக்க உங்களால் முடியாதா? அப்படியானதொரு மாநாகரசபை எதற்கு? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மாநகர ஆணையாளருடன் பேசி நல்ல தீர்மானத்தினை வழங்குவதாகவும் குறித்த சேவையினை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் இதன்போது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் பதிலளித்துள்ளார்.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஆரம்பம்: இந்திய பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக்ககட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும்.

கட்சியின் தலைவராக வர்த்தகர் வி.முத்துசாமியும், செயலாளராக ஊடகவியலாளர் எம்.இந்திரஜித்தும் மற்றும் நிதிச்செயலாளராக வர்த்தகத் துறையை சேர்ந்த வீ.திலான் ஆகியோர் செயற்படுவார்கள்.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி, ஆங்கிலத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும் சிங்களத்தில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும். தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகூடியதாக உள்ளது.

எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. 0எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும். எனவே அனைத்து சமூகத்தவர்களும் இந்தக் கட்சியில் இணைந்து செயற்படுவார்கள். இலங்கை பாரதிய ஜனதாக்கட்சியின் முக்கிய பணிகளாக தமிழ் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி அதற்கூடாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் 10ஆண்டு திட்டத்தை முன்னெடுத்தல்.

இதற்காக தமிழ் பேசும் கல்வி சமூகத்தின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை கோருகிறோம். தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சுய வருமான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு உந்துதலை வழங்குதல்.

இதற்கான ஆலோசனைகளை தமிழ் பேசும் சமூகத்தின் பொருளியல் மற்றும் வர்த்தகத்துறையினரிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம். தமிழ் பேசும் மக்களின் விளையாட்டுத்துறை மற்றும் அழிந்துப்போகும் கலாசார விழுமியங்களை பாதுகாத்தல்.

இந்த விடயத்தில் தமிழர் மத்தியில் செயற்படும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க முடியாது – இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகவும், மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாகவும் செயற்பட கூடாது என்று இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக அபிவிருத்தி செய்வது குறித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் நாளை துறைமுக அதிகாரச சபை தலைவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பான திட்டத்தில் இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு முனைய அபிவிருத்தி குறித்து அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கருத்து பொய்யானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தற்போது அதிக அக்கறை கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயற்படுவதை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் அதானி நிறுவனத்துடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை பலப்படுத்த மேற்கு முனையத்தை தாரைவார்க்க முயற்சிக்கிறார்கள்.

மேற்கு முனைய விவகாரத்தில் அதானி நிறுவனம் இந்திய அரசாங்கத்தை தவிர்த்து நேரடியாக இலங்கையுடன் தொடர்பு கொள்வது அதிருப்தியளிக்கும் செயற்பாடாகும்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக தனித்து அபிவிருத்தி செய்ய முடியுமாயின் ஏன் மேற்கு முனையத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாது?

கொழும்பு துறைமுகத்தின் ஏதாவதொரு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் தனிப்பட்ட முயற்சியை ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் முன்னெடுக்கிநார்கள்.

இது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகி, மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாக செயற்பட முடியாது.

மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தொழிற்சங்க போராட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம்.மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபையினால் தேசிய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்ய முடியும்.

இவ்விடயம் குறித்து நாளை துறைமுக அதிகார சபை தலைவருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அமெரிக்காவில் வெளிவந்த கட்டுரையை கண்டித்துள்ள இலங்கை

அமெரிக்காவின் வோஷிங்டன் போஸ்டில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கட்டுரையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தமது தந்தையான சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி கோட்டாப ராஜபக்சவின் அரசாங்கத்தை லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்த கருத்தை மையமாக வைத்தே இந்தக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையை தனிப்பட்ட முறையில் படிக்கவில்லை, எனினும் இந்த கட்டுரையானது, இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

அத்துடன் இலங்கையை அழிக்க பலர் உள்ளனர் என்று கொலம்பகே தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் குழுக்கள் உட்பட்ட பலர் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இராணுவத்தை மாத்திரம் தண்டித்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய இரு தரப்பினரில் , இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையோடு , மக்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் ஐ.நா. ஆணையாளரும் இலங்கை ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கமும் நடைமுறைக்கு சாத்தியப்படாத வகையிலேயே செயற்படுகின்றனர்.

நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்த இராணுவத்தை தண்டிப்பதை , மதிப்பிற்குரிய மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்காக சர்வதேசத்திற்கு பல உதாரணங்களை காண்பிக்க முடியும். ஆணையாளரின் தரப்பு இந்த யதார்த்தத்தைக் கூட உணராதவர்களாக உள்ளனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் சேவையிலிருந்து நீக்குமாறு ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் விடுதலை புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது.

எனவே யுத்தத்தில் பங்குபற்றி இரு தரப்புக்களில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுப்பது நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது ஆணையாளரின் அறிக்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது தெளிவாகிறது.

2009 இற்கு பிறகு இலங்கையில் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 12 000 பேர் விடுதலை செய்யப்பட்டு தற்போது அவர்களும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களால் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நாடு என்ற ரீதியில் மன்னிப்பு வழங்கியுள்ளோம். உண்மையான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நாம் இதே வழியிலேயே பயணிக்க வேண்டும்.

கடந்த காலத்தை மறந்து எதிர் காலத்தை பற்றி சிந்தித்து செயற்படுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஸ்திரப்படுத்த முடியும். தற்போதும் சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் , விடுதலைப்புலிகள் தொடர்பிலும் இதே முறைமையையே பின்பற்ற வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணையாளரும் எவ்வித முயற்சிகளையும் எடுப்பதாக தெரியவில்லை. ஆணையாளின் நடைமுறைக்கு சாத்தியமற்ற இந்த அறிக்கையை நிராகரிப்பதோடு , போலி சூழ்ச்சிகள் சமூகமயப்படுத்தி மனித உரிமைகளை மீறும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் பாரதூரமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்- சம்பிக்க

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளும் எமது யோசனைகளும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை மீண்டுமொருமுறை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை அதில் வெற்றியடையுமா? அல்லது தோல்வியடையுமா? என்பது குறித்து இப்போது உறுதியாகக் கூறமுடியாது. எனினும் இதனைத் தொடர்ந்து எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாத்திரம் தெளிவாக தெரிகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின் போது, இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையிலேயே தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.முன்னரும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதில் நாம் தோல்வியடைந்தோம்.

அதனைத்தொடர்ந்து ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக அதனை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. மீண்டும் அதேபோன்றதொரு நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியதுடன், அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால், மீண்டும் அத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுமா என்ற கேள்வி இருப்பதுடன் அது நாட்டு மக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் நடக்கும் என கூறியது யார் என்பதை தேடுகின்றோம்

ஜூன் மாகாண சபை தேர்தல் நடக்கும் என கூறியது யார் என்பதை தேடுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும் அது குறித்து வௌியாகும் செய்திகளில் உண்மை இல்லை

ஜுன் மாதம் மாகாண சபை தேர்தல் என்ற செய்தியை பத்திரிகையிலேயே நாம் பார்த்தோம். அப்படி ஒரு தேர்தல் எமக்கு தெரிந்து நடக்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா

சீனா இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் நிதி, கடன் வசதி திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளது.

Posted in Uncategorized

3 ஆவது நாளாக தொடரும் இரணை தீவு மக்களின் போராட்டம்

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணை தீவு பிரதான இறங்கு துறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்களுக்கு இரணைதீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படவில்லை என இரணை தீவு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.