காணி ஆக்கிரமிப்புகளை உடன் நிறுத்த ஜனாதிபதி இராணுவம்,திணைக்களங்களுக்கு உத்தரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி ஆக்கிரமிப்பு – சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போது திணைக்களங்களின் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்த நிலையிலேயே அவர்களுக்கு இந்தக் கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.

காணிகள் ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள், வனவளத் திணைக்களம் என்பன காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதுடன் சுவீகரித்தும் வருகின்றன. இவை உடனயாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், இந்த மாகாணங்களில் ஒவ்வொரு திணைக்களங்களும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு விடயங்களை கையாள்வது என்பது தொடர்பில் ஒரு பொறிமுறை அமைத்து அது தொடர்பில் பேசி முடி வெடுத்தே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் கட்சிகள் ஜனாதிபதியை வலியுறுத்தின.

தொல்லியல்துறை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர். அத்துடன், இது விடயத்தில் ஜனாதி பதியின் உத்தரவுகள்கூட பின்பற்றப்படுவதில்லை என்று சுமந்திரன் எம். பி. சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாலும் தொல்லியல் திணைக்களத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால் இந்தத் திணைக்களத்தை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கலாம் என்று சித்தார்த்தன் எம். பி. இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் 20 இடங்களில் தாங்கள் தவறாக நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறினார்.

இதன்போது, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தி இது தொடர்பில் தீர்வுகளை எட்டலாம். தீர்வு காண முடியாத விவகாரங்களை அடுத்த சந்திப்பில் பேசலாம் எனவும் ஜனாதிபதி யோசனை கூறினார்.

பயங்கரவாத சட்டம் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது. அதனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழ் கட்சிகள் வலியுறுத்தினர். எனினும், பயங்கரவாத தடை சட்டம் தேவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். இதனால், டக்ளஸூக்கு எதிரான நிலைப்பாட்டை சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் வெளிப்படுத்த அது கடும் விவாதத்தை கிளப்பியது.

அரசியல் கைதிகளாக தற்போது சிறைகளில் 30 பேர் இருக்கின்றனர். இவர்களில் 14 பேரின் வழக்குகள் நிறைவடைந்து விட்டன. இதில், பாதிக்கப்பட்ட இரு தரப்பினர் மன்னிப்பு அளிக்க முன்வரவில்லை. இதனால் இருவரை விடுதலை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. மகேஸ்வரன் மற்றும் சரத் பொன்சேகா தரப்பினரே இதுவரை சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், 12 பேரை விடுதலை செய்ய முடியும். 16 பேர் தொடர்பான வழக்குகள் நடைபெறுகின்றன. இதனால், அவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க முடியாது. எனினும், அவர்களை பிணையில் விடுவிப்பது குறித்து ஆராயப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது. முகநூலில் பதிவிட்டவர்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளை முடிவுறுத்துமாறும் இதன்போது தமிழ் தரப்பினர் கோரியிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் ஆணைக்குழுவை நியமித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.

1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராய வேண்டும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். இது தொடர்பிலும் சுமந்திரனுக்கும் டக்ளஸூக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதில், தலையிட்ட ஜனாதிபதி 2000 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய குழு நியமிக்கலாம். தேவை ஏற்படின் மற்றொரு குழு 1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி ஆராயலாம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தின் பிரதிநிதி, இதுவரை 20 முறைப்பாடுகளை தமது பணிமனையால் ஆராயப்பட்டது என்றும் இராணுவம், தனிநபர்கள், சில அரசியல் கட்சிகள் பற்றியும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின் பின்னரே இந்த விடயத்தை செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சில் தென்னாபிரிக்க மாதிரியான நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சர்வதேச அங்கீகாரம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் நாளை (இன்று) பேசுவோம் என்று ஜனாதிபதி கூறினார். இதன்போது, இந்த வகையான முடிவற்ற சந்திப்புகளால் எந்த பலனும் இல்லை என்று சம்பந்தன் சுட்டிக் காட்டினார்.

நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. பேச அழைத்தோம் – வந்தீர்கள் – பேசுவோம் – முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த பேச்சில் தமிழ் கட்சிகள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், இரா. சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், த. கலையரசன், இ. சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோருடன் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதன் எம். பியும் பங்கேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்), கு. திலீபன் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

Posted in Uncategorized

பிக்குகளிடம் பணம் வாங்கி தொல்லியல் ஆய்வு செய்ய முடியாது: ரணில் கண்டிப்பு!

தொல்லியல் இடமொன்று அடையாளம் காணப்பட்டால் அங்கு வீடு கட்டவோ, விகாரை கட்டவோ அனுமதியில்லை. நீங்கள் தனியார் துறையல்ல. பிக்குகளிடமோ வேறு எவரிடமோ பணம் பெற்று தொல்லியல் ஆய்வை செய்ய முடியாது. சிங்கள நாகரிகம் பிறந்த இடங்களில் கூட இன்னும் பணிகளை செய்யவில்லை என தொல்லியல் திணைக்களத்தின் பலவீனங்களை சுட்டிக்காட்டியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தொல்லியல் திணைக்களத்துடனான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம் 2000 ஏக்கர் காணியை மீட்க சென்று இருந்தது. இறுதியில் 200 ஏக்கர் மட்டுமே மிஞ்சியது. அவற்றில் 100 ஏக்கர் அளவிலேயே தேவைப்பட்டது. நாம் எவ்வாறு அந்த பணிகளை செய்வது ஒரு வருடத்தில் நாம் முன்னெடுக்கப் போகும் வேலை திட்டம் தொடர்பிலான திட்டமிடுதல் உள்ளதா இல்லையா? என்றார்.

இதற்கு பதிலளித்த தொல்லியல் திணைக்களத்தினர், எம்மிடத்தில் உள்ளது. பிரச்சினை என்னவென்றால் கடந்த 30 வருடங்களாக நாங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்றவில்லை. அதனால் வடக்கு கிழக்கில் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம். அதனாலேயே அப்பகுதிகளில் அதிகம் பணிகளை முன்னெடுப்பதை போன்று விளங்கியது. அதற்கான பணம் நமக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. ஏனைய நிதி உதவி வழங்கும் நிறுவனங்களின் ஊடாகவே கிடைத்தது. சில நேரங்களில் பிக்குகள் வழங்குவர் என்றனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “அவ்வாறு செய்ய முடியாதல்லவா. மற்றவர்களிடம் பணத்தைப் பெற்று தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது. எவராவது யாழ்ப்பாணத்தில் இதனை செய்யுங்கள், கொழும்பில் இதை செய்யுங்கள் என்று கூறினால் அதனை நாம் செய்ய முடியாது அல்லவா. இதற்காக பட்ஜெட் ஊடாக கிடைக்கும் பணம் மற்றும் இ ஆர் டி மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். வேறு எங்கிருந்தும் செய்ய முடியாது. நீங்கள் தனியார் துறையல்ல.

வடக்கை விடுங்கள். அனுராதபுரம் மகாவிகாரையில் நான் கூறியவற்றை இன்றுவரையில் செய்யவில்லை. அடுத்ததாக திம்புலாகலவில் செய்யுங்கள். மகா விகாரையிலிருந்து திம்புலாகலைக்கு சென்றதன் பின்பே தாய்லாந்து சென்றனர். மாகலவில் இன்னும் செய்யவில்லை. சிங்கள நாகரிகம் ஆரம்பித்த மல்வத்து வளாகத்தில் இன்னும் பணிகளை செய்யவில்லை.

தொல்லியல் திணைக்களத்தின் அனைத்து திட்டங்களையும் அரசாங்கத்திடம் சமர்ப்பியுங்கள். நாம் அனுமதிப்போம்.

அத்தோடு இடம் ஒன்றை கண்டுபிடித்தால் அங்கு வீடு கட்டவோ விகாரை கட்டவோ எவருக்கு அனுமதி இல்லை. அது அரசாங்க சொத்தாகும்.

வடக்கில் உள்ளவர்களையும் நான் அறிவுறுத்தியுள்ளேன். அவர்கள் அது பற்றி பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வதாயின் பிரச்சனைகள் இல்லை அல்லவா. அவர்கள் பார்த்துக் கொள்ள தவறினால் நாம் போலீசாரை அனுப்பி அந்த பணிகளை செய்வோம். அரசாங்கத்தினால் அதனை கண்காணிக்க முடியும். மாகாண சபைகளுடன் இணைந்து பணிகளை செய்வதாக கூறுவோம். எவரேனும் அவற்றை உடைக்க வந்தால் இராணுவத்தையும் போலீசாரையும் அனுப்பி பாதுகாப்போம். பிக்குகளாலும் அதனை பாதுகாக்க முடியாது என்றார்.

பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் – இலங்கை மத்திய வங்கி

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

பொருளாதாரத்தின் நிலை, சவால்கள் மற்றும் முன்னோக்கு மத்திய வங்கியின் 2022 வருடாந்த அறிக்கை என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊகங்கள் இருந்தாலும், நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய வங்கி எப்போதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஒருவித உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் இருந்தாலும், பொதுமக்களின் வைப்புத்தொகையைப் பாதுகாப்பது மற்றும் வங்கி அமைப்பின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி விகிதங்கள், குறிப்பாக சந்தை வட்டி விகிதங்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்க புள்ளிகளுக்குக் குறையும் என்றும், குறிப்பாக முழுமையான கடன் மறுசீரமைப்பு செயல்முறை அறிவிக்கப்பட்டவுடன் வட்டி விகிதங்களும் வேகமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் விடுதலை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் நேற்று கைது செய்தனர். தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் கடந்த மார்ச் 26ஆம் திகதி உடைத்தெறியப்பட்டன. அங்கு கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நீதிமன்ற அனுமதியுடன் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மீள் பிரதிஷ்டையின் போது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை ஆலய பூசாரியை யும் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்

இவர்கள் இருவரும் நேற்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும், இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்குக்கு முரணாக அமையும் என்று நீதிவான் சுட்டிக் காட்டி அவர்களை விடுதலை செய்தார். எனினும், ஆலயத்தில் கட்டுமானங்களையோ அல்லது மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன், பூசை வழிபாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அனுமதித்தார்.

இதேநேரம், ஆலயத்தின் இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டத்தரணி தி. திருவருள் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

Posted in Uncategorized

“வெடுக்குநாறி எங்கள் சொத்து” வவுனியாவில் நேற்று போராட்டம்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கைதை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

வவுனியா மருத்துவமனை சுற்று வட்ட வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று மாலை இந்தப் போராட் டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “தமிழர்களின் தொன்மையை அழிக்காதே”, “வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி”, “நீதியில்லா நாட்டில் நீதிமன்றம் எதற்கு”, “கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்”, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஓர் அங்கமான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினமும் (10.05.2023) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , கிளிநொச்சி கந்த சுவாமி ஆலய முன்றலில் இன்றைய தினமும் (10-05-2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் முன்னதாக வர்த்தகர்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் பிடியரிசி பெற்றுக் குறித்த ஆலய முன்றலில் கஞ்சி காய்ச்சப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பு கஞ்சி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (10.05.2023) முன்னெடுத்துள்ளனனர்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சியினை நினைவுப்படுத்த வேண்டியதேவை குறித்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மக்களுக்குக் கஞ்சி வழங்கிய ஒருவர் சாட்சியமாக வழங்கியுள்ளதை நினைவு படுத்தியுள்ளார்.

பயங்கரவாத சட்டமூலத்தை வாபஸ் பெற்றாலே ஜீ,எஸ்.பி. வரி சலுகையை மீண்டும் பெறலாம் – ஹர்ஷ டி சில்வா

மக்களின் ஜனநாயக உரிமை மீறல், மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. சலுகை கிடைக்கப்போவதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

ஐரோப்பிய ஒன்றியத்தால் நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி, சலுகை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள நாங்கள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதன் பிறகு எந்த நாடுகளுக்கு இதனை வழங்குவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும். தற்போது ஆசியாவில் இலங்கை. பாகிஸ்தான் உட்பட 4 நாடுகளுக்கே இந்த ஜீ.எஸ்.பி சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

ஜீ.எஸ்.பி. சலுகையைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்திடம் 27 இணக்கப்பாடுகள் இருக்கின்றன. அதனை அந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.

அந்த இணக்கப்பாடுகளில் பிரதான விடயமாக இருப்பது, மனித உரிமை, தொழிலாளர் உரிமை, நல்லாட்சி மற்றும் சூழலை பாதுகாப்பது தொடர்பானதாகும். அதில் பிரதானமாக இருப்பது தேர்தல் உரிமையாகும்.

தேர்தல் நடத்தாமல் இருப்பது மக்களின் வாக்குரிமையை மீறும் பாரிய விடயமாகக் கருதப்படுகிறது. அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அடுத்த விடயம்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம். அதனால் அரசாங்கம் எந்தத் தீர்மானத்தை மேற்கொண்டாலும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. சலுகை மீண்டும் கிடைக்கப்போவதில்லை.

ஏனெனில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பல, மக்களுக்கு அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுகின்றன.

மக்களின் உள்ளத்தில் இருக்கும் விடயங்களை வீதிக்கிறங்கி அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறானதொரு செயலை பயங்கரவாத செயல் எனத் தெரிவித்து, அவர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவு பிரப்பிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிப்பதில்லை.

அதனால் ஜீ,எஸ்.பி. சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் உடனடியாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஓமான் முதலீட்டாளர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது தனது தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லப்போகிறார் எனத் தெரியவருகிறது.

இவ்வாறு இருக்கையில் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவார்களா? இந்த தொழிற்சாலை மூடப்பட்டால் 500 இறகும் மேற்பட்டவர்களுக்கு தொழில் இழந்துவிடும் அபாயம் இருக்கிறது. என்றாலும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதனால் இந்த நாட்டின் சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் ஜனநாயக உரிமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. கட்டளையாளர் போல் நாட்டை நிர்வகிக்க நடவடிக்கை எடுத்தால் ஜீ.எஸ்.பி. சலுகை எமக்கு கிடைக்கப்பாவேதில்லை.

2010 இலும் எமது ஜீ.எஸ்.பி. சலுகையை இல்லாமலாக்கிக்கொண்டது இந்த அரசாங்கமாகும். ஜீ.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனால் 630 மில்லியன் டொலர் நட்டம் ஏற்படும் என்றும் எமது வறுமை நிலை மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதனால் அரசாங்கம் ஜீ.எஸ்.பி சலுகையை பாதுகாத்துக்கொண்டு செயற்பட வேண்டும். – என்றார்.

பெளத்த சின்னங்கள் மீது சிவலிங்கங்கள்; சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு – சரத் வீரசேகர

நாட்டில் உண்மையில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் ஆராய வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம், விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு, பொறுமையை சோதிக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்  அட்மிரல் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதற்கு வரலாற்று ரீதியில் பல சான்றுகள் உள்ளன. பௌத்த தொல்பொருள் சின்னங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. ஆகவே பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கையில் வாழும் அனைவருக்கும் உண்டு.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் பௌத்த மதத்துக்கும், பௌத்த புராதன தனித்துவத்துக்கும் எதிராக திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள். பௌத்த மதத்தை அழிக்கிறார்கள். சிங்களவர்கள் பிற மதங்களை அழிக்கவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த சின்னங்களை  பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் திட்டமிட்டு அழிக்கிறார்கள்.

பௌத்த மத வழிபாடுகளுக்கு பல்வேறு வழிகளில் தடையேற்படுத்துகிறார்கள். வெடுக்குநாறி பகுதியில் பௌத்த புராதான சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் உட்பட விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் கொழும்பில்  இந்துக்கள் மத வழிபாடுகளில்  ஈடுபட்டார்கள், தேர் இழுத்தார்கள், சிங்கள பௌத்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆகவே சிங்களவர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த பொறுமையை தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் சோதிக்க கூடாது.

தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என்பதை ஜனாதிபதி ஆராய வேண்டும். இல்லாத பிரச்சினைகளை தோற்றுவித்து அதனை இனப்பிரச்சினை என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஆகவே பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதிய ஒத்துழைப்பினை வழங்குமாறு கனேடிய அதிகாரியிடம் ஜெஹான் பெரேரா கோரிக்கை

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற கட்டமைப்புக்கள் எதிர்வருங்காலங்களில் சிறப்பாக செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியிடம் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி ஜெஹான் பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (08) கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தற்சமயம் கனேடிய அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்றன என்று அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைன் ஜெஹான் பெரேராவிடம் கேட்டறிந்துகொண்டார்.

அதற்குப் பதிலளித்த கலாநிதி ஜெஹான் பெரேரா தற்போது இலங்கையில் இயங்கிவரும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன பற்றி எடுத்துரைத்ததுடன், அந்த அலுவலகங்கள் தற்போது உரியவாறு முழுமையாக இயங்காத போதிலும், அவை உண்மையைக் கண்டறிவதை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட சிறந்த கட்டமைப்புக்கள் என்று சுட்டிக்காட்டினார். எனவே எதிர்வருங்காலத்தில் அக்கட்டமைப்புக்கள் சிறப்பானமுறையில் இயங்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால், அவற்றுக்கு ஆதரவளிக்குமாறும் அவசியமான உதவிகளை வழங்குமாறும் ஜெஹான் பெரேரா நவீதா ஹுஸைனிடம் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று இலங்கையைப் பொறுத்தமட்டில் மொழிசார் கற்கைநெறிகளுக்கும், பயிற்சி வழங்கலுக்கும் கனேடிய அரசாங்கம் முன்னுரிமையளித்துவரும் நிலையில், அதற்கு அப்பால் அதிகாரப்பகிர்வு குறித்தும் அவதானம் செலுத்துமாறு கனேடியப் பிரதிநிதியிடம் கலாநிதி ஜெஹான் பெரேரா வேண்டுகோள்விடுத்தார்.

மேலும் மாகாணசபைகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறும், அதற்கு அவசியமான கட்டமைப்புக்களை நிறுவுமாறும் அவர் கனேடிய பூகோள விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி நவீதா ஹுஸைனிடம் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது