மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன – ஜனா

வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டம் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவினுள் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வாகரைப் பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வாகரைப் பிரதேசத்தில் இருந்து தோணிதாண்டமடு என்கின்ற பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படப் போவதாகக் தகவல்கள் வந்தன. அந்த வகையில் இன்றைய தினம் வாகரைப் பிரதேச செயலாளரைச் சந்தித்து இது விடயமாக கலந்துரையாடி விபரங்களைப் பெற்றுக் கொண்டேன். எல்லை நிர்ணய சபையினால் வாகரைப் பிரதேசத்தில் நாங்கள் பாரியதொரு பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அதாவது வாகரைப் பிரதேசத்தில் இருந்து மூன்று பகுதியால் பிரதேசங்கள் பிரித்து எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக தோணிதாண்டமடு தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களுடன் சேர்த்து வெலிகந்தை பிரதேசத்துடன் சேர்க்கப்பட இருப்பதாகவும், அதே போன்று ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகப் பிரிவுடன் புணானை கிழக்கு, கிருமிச்சை, காயான்கேணி, வட்டவான் உள்ளிட்ட சில பிரதேசங்கள் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளும், மறுபக்கம் வடக்கிலே வெருகல் இரட்டை ஆற்றை ஒட்டிய பிரதேசம் வெருகல் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிகின்றேன்.

மூன்று பக்கத்தினால் வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கான அழுத்தங்களைக் கொடுத்து ஒரு பகுதியையாவது முழுமையாகக் கைப்பற்றக் கூடிய முயற்சியாகவே நான் இதனைக் கருதுகின்றேன். அது ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்துடன் காயான்கேணி, வட்டவான், புணானை கிழக்கு, கிருமிச்சை போன்ற பாரியதொரு நிலப்பரப்பினை இணைத்து ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தினை வெலிகந்தை வரை விஸ்தரிப்பதற்கான செயற்பாடாகவே இதனைக் கருதுகின்றேன்.

அந்த வகையில் தமிழ்ப் பிரதேசம் என்பதற்கும் அப்பால் காலாகாலமாக வாகரைப் பிரதேச செயலக நிருவத்திற்குட்பட்டு வாழும் மக்களும், நிலங்களும் வாகரைப் பிரதேச செயலகத்துடன் இருந்தவாறே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைந்திருக்கின்றார்கள். ஒருவர் கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர் தற்போதும் அப்பதவியை எதிர்பாத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றையவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தவர். தமிழ் மக்களுக்காகப் போரடிய போராட்ட இயக்கத்தில் இருந்தவர் தற்போது இந்த அரசின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக இருக்கின்றார்.

இவர்கள் இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் இந்தப் பிரதேசத்திலே இந்த மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர். அவர் இந்த விடயத்திலே இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களைப் பொருத்த மட்டில் நாங்கள் இவ்விடயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம்.

என்னைப் பொருத்த மட்டிலே இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கின்றது. ஓட்டமாவடி மத்தி என்கின்ற பிரதேச செயலகப் பிரிவு நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகமல்ல என நான் அறிகின்றேன். குறைந்த கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளுடன் ஒரு பிரதேச செயலகம் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. 7 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தை ஓட்டமாவடி மேற்குப் பிரதேச செயலகத்துடன் இணைத்துவிட்டால் அவர்களுக்கான காணிப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு வரும் என்பதே என்னுடைய எண்ணப்பாடு.

எனவே நாங்கள் நான்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் அவர்களுக்கு நாங்கள் என்றுமே பக்க துணையாக இருப்போம். வாகரைப் பிரதேசம் பிரிக்கப்படக் கூடாது. வாகரைப் பிரதேசம் சீரழிந்து போகக் கூடாது. அது இருந்த மாதிரியே அந்தப் பிரதேச செயலகத்தில் உள்ள மக்களும் அந்த நிலங்களும் அந்தப் பிரதேச செயலகத்தின் கீழேயே இருப்பதற்கு நாங்கள் அனைவருமாக ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், COVID தொற்று காரணமாக அதன் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரையில் சேவைகளை முன்னெடுக்க சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

வழமை போன்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எரிபொருளை விநியோகம் செய்வதாக அறிவித்தது Lanka IOC!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டோக்கன் பெற்ற போதிலும், மறு அறிவித்தல் வரும் வரை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் இருப்பு கிடைத்தவுடன், டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு அதன் இருப்பு குறித்து தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதன் எரிபொருள் நிலையங்கள் ‘டோக்கன் முறை’ மூலம் செயற்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கப்பெற்றதும், எரிபொருளைப் பெற விரும்பும் வாடிக்கையாளரை இராணுவம் தொலைபேசியில் அழைத்து பேசுவார்கள் எனவும், டோக்கன் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இதனை செய்ய, வாடிக்கையாளர் முதலில் டோக்கனைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சுமந்திரன், சாணக்கியன், கப்பல் கருணா, பிள்ளையான், அமலுக்கு கல்முனையிலிருந்து கட்டப்பன் எழுதும் பகிரங்க மடல்! -kalmunainet.com

சுமந்திரன், சாணக்கியன், கப்பல் கருணா, பிள்ளையான், அமலுக்கு கல்முனையிலிருந்து கட்டப்பன் எழுதும் பகிரங்க மடல்!

அன்புள்ள சட்டச் சக்கரவர்த்தி சுமந்திரன், சாணக்கியன் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

கல்முனையான் நான் இங்கு நலமில்லை. வீதியோர வரிசைகளிலேயே எங்கள் காலம் கடக்கிறது. ஆனாலும், உங்களுக்கு உணவு தொடக்கம் அனைத்துமே மானியம் என்பதால் நீங்கள் நலமாகவே இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.

ஆண்டுகள் பல உருண்டோடியும் கல்முனையில் என் சமூகம் படும் நெருக்குவாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்கள் பிரதேச செயலகத்தின் 33 ஆண்டுகால வரலாற்றுப் பயணம் இன்னும் தொடர்கிறது.
நாடே ஒருவேளை உணவுக்கு என்ன செய்வதென்று சிந்திக்கும் இந்த நேரத்திலும் கல்முனையில் தமிழருக்கு எதிராக முஸ்லிம் இனவாதிகளால் கேவலமாக சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

நல்லாட்சி காலத்தில், சட்டம்பி என பெயர்பெற்ற நீங்கள் நிழல் அமைச்சராக இருந்தது என் கண்முன்னே நிழலாடுகிறது. அதனால் என் சமூகம் கண்ட நன்மைதான் என்னவென எண்ணிப் பார்க்கிறேன்.

நீங்க கடிதத்தோடு உண்ணாவிரத மேடை வந்ததும் எங்களை கடுப்பாக்கிய காரணத்தால் அதுக்காக பெற்ற வரவேற்பும் பழைய கதையானாலும் அதை அன்று ஏற்காத பலரும் இன்று ஏற்கின்றனர்.
அச்சுப் புத்தகம் ஏற இருந்த கல்முனை பிரதேச செயலக நிர்வாக அலகு இறுதி நேரத்தில் நீங்கள் ஹக்கீமுக்கு வழங்கிய தகவலால் தடுக்கப்பட்டது எங்களுக்கு தெரிந்த இரகசியம்தான். தொப்பியுடன் உங்கள் விசுவாசம் சொல்ல முடியாதளவு உள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் மேய்ப்பர் வழி வந்தத்தாலோ தெரியவில்லை எங்களை நன்றாகவே மேய்க்கிறீர்கள்.

கோட்டாவை இலங்கை மக்கள். புறக்கணித்து விட்டார்கள்,கோட்டாவை விமர்சிப்பதாலோ ரணிலை வசை பாடுவதாலோ என் சமூகத்திற்கு நீங்கள் பெற நினைக்கும் நன்மை என்ன? உங்களின் பால்ய நண்பர்கள் கோட்டாவுடனும், ரணிலுடனும் கொண்ட காதல் இன்னும் மாறவில்லை. இருபதுக்கும் உயர்த்தி இருபத்தொன்றுக்கும் உயர்த்துவர். நீங்கள் நாங்கள் சட்டம்பி என கொக்கரிக்கக் கொக்கரிக்க எங்கள் சமூகம் முட்டை போட்டதுதான் மிச்சமானது.

அண்மையில் “கோட்டா கோ” வுக்கு கல்முனைக்கு வந்தபோதும் தொப்பியணிந்து சகனில் மதிய உணவை பகிந்தவேளை கல்முனை தமிழர்களின் எந்த விடயங்களும் நிறைவேறாதென தாங்கள் உத்தரவாதம் வழங்கியதாக காத்து வாக்கிலே என் காதுக்கும் வந்தது. உங்கள் செயலை நீங்கள் கடிதத்துடன் வந்தபோதே கண்ணூடாகக் கண்டுவிட்டோம்.

நீங்கள்தான் அப்படியென்றால் மொழிச் சக்கரவர்த்தி சாணக்கியனும் தன்னை பாராளுமன்றம் அனுப்பிய சமூகம் சோத்துக்கும் கஞ்சிக்கும் மாரடிக்கையில் ஏற்கனவே பஞ்சு மெத்தையில் கிடப்பவர்களுக்கு பிரியாணி போடும் கதையாக தமிழினத்தையே மலினப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழர் உரிமைகளையும், பாரம்பரியங்களையும் காக்கவேண்டுமென பட்டிருப்பு தொகுதியில் இருந்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட சாணக்கியன் அங்கே ஜனாசா எரிப்புக்கும் ஹலால் உணவுக்குமாக தனது மும்மொழித் திறமையில் முழக்கமிடுகிறார். அரபு சமூகத்தை காக்கவும் கட்டியெழுப்பவும் பாராளுமன்றத்தில் அவர்களில் பலர் இருக்கையில் நீங்கள் அரச விரோத போக்கை வெளிப்படுத்தி தமிழர்கள் மீது அரச குரோதத்தை தூண்டுகிறீர்கள். ஆனால் அவர்கள் அம்சடக்கிகளாக இருந்து அனைத்தையும் சாதிக்கின்றனர். இதனால் என் இனமும் தேசமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நீங்கள் உணர்வீர்களா?

நீங்கள் இருவருமாக இணைந்து உங்களுடைய அதீத திறமைகளை உங்கள் சார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவதை விடவும் நீங்களே அறியாமல் அச்சமூகத்தை படுகுழியிலிட்டு கொழுத்தவற்கொப்பான செயற்பாடுகளையே செய்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?

சுமந்திரன், சாணக்கியன் நீங்கள் உங்கள் வல்லமையை எனது இனத்திற்கு தேசத்திற்கு ஆதரவாக பயன்படுத்ததாவிட்டாலும் பரவாயில்லை, எதிராக பயன்படுத்த வேண்டாம். எனது இனத்திற்கு யார் துரோகம் செய்கின்றனரோ அவர்களுடன் கைகோர்த்து என் இனத்தை கேவலப்படுத்தாதீர்கள்.

நீங்கள் இருவரும் இற்றைக்கு பிற்பட்ட குறைந்தது 40 வருட வரலாற்றையாவது புரட்டிப்பார்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் கைகோர்க்கும் முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களாலும், ஆயுதம் தரித்த அந்த இன ஊர்காவற்படை என்ற பெயரில் இயங்கிய அரச பயங்கரவாதத்தாலும் எம் இனம் நசுக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் படிக்க வேண்டும்.

அம்பாரையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வரலாற்றுப் படுகொலைகள், பூர்விக தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்ட, கபளீகரம் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற விதங்களை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனெனில், எங்கள் வலிகளுக்கும் உங்களுக்கும் வெகு தூரம். என் இனத்தின் வரலாறும் வடுக்களும் அறியாத நீங்கள் எங்கும் என் இனம் பற்றி பேசும் அருகதை அற்றவர்கள்.

சாணக்கியன் அவர்களே உங்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையேயான உறவு உங்கள் பாட்டன் காலத்து உறவு என்பதை நானறிவேன். அம்பாரை மாவட்டத்திற்கு துரோகம் இழைத்த முதல் அரசியல்வாதி உங்கள் பாட்டனார் இராசமாணிக்கம் என்பதை அம்பாரை மாவட்ட தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.

காரியப்பருடன் ஒப்பந்தம் செய்து தனித் தமிழ்க் கிராமமான துறைநீலாவணையை பட்டிருப்பு தொகுதியுடன் இணைத்ததன் மூலம் கல்முனையிலும், அம்பாரையிலும் தமிழர் பரம்பலை மட்டுப்படுத்த துணைபோனவர் உங்கள் பாட்டனார். அந்த வழி வந்த உங்களிடம் எவ்வாறு எனது சமூகம் தனக்கு சார்பான சாணக்கியத்தை எதிர்பார்க்க முடியும். ஆனாலும் உங்கள் பாட்டனாரால் பயனடைந்த சமூகம் இன்று உங்களையும் பயன்படுத்துகிறது.

காட்டிக் கொடுத்து, விற்றுப் பிழைத்தவர்கள் பரம்பரையில் வரலாற்றில் மாறுதல்கள் ஏற்படுமா? இனிமேல் கல்முனை விடயத்தில் உங்கள் நாடகம் வேண்டாம். தமிழ் தேசியம் என்கின்ற ஒற்றை வார்த்தையில் எங்களது நியாயமான அபிலாசைகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது போதும். நாங்கள் தலை நிமிர வேண்டும். நாங்கள் தொப்பி அணியத் தயாரில்லை. விபூதியும், உரித்திராட்க்ஷமும், சிலுவையும் எங்களுக்கு போதும்.

சுமந்திரன் கட்சி தலைவர் கனவிலும் சாணக்கியன் முதலமைச்சர் கனவிலும் மிதக்கின்றபோது தமிழர் கனவுகள் மெய்படுவதெப்படி என்பதை என் இனம் உணரைகின்றபோது நீங்கள் தமிழர் அரசியலில் இருந்து துடைத்தெறியப்படவீர்கள் என்பது திண்ணம்.

ஒரு காலம் இருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் துடைப்பத்தின் பெயர் இடப்பட்டாலும் வெற்றி நிச்சயம் என்பார்கள். இது அம்பரைக்கும் பொருந்தியது. ஆனால் இன்று நிலைமை வேறு. தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு எதிராக வேட்பாளர் பட்டியலில் துடைப்பம் பெயரிடப்பட்டாலும் அவர் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் விரக்தியின் வெளிப்பாடே கடந்த பொதுத் தேர்தல் முடிவு. கருநாகம் கனவு காணக்கூடாது அது அவருக்கான வாக்கு என அந்த சூழ்நிலையில் ஒரு துன்புத்தடிக்கும் மக்கள் வாக்களிக்க தயாராக இருந்தனர்

இதையே இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் உணர்த்தியது. கப்பலேறி அம்பாரை வந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா தழிழ் தேசியக் கூட்டமைப்பை விடவும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். இது ஒருபோதும் கருணாவுக்கு அம்பாரையில் வழங்கப்பட்ட அங்கீகாரமல்ல என்பதை மீண்டும் கூறுகின்றேன்.கருணா கையிலெடுத்த முஸ்லிம் விரோத பிரச்சாரமும், வடக்கு பிரதேச செயலக விவகாரமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்பால் இருந்த வெறுப்பும் தமிழர்களின் நாளத்தில் உதிரத்தின் ஓட்டத்தை வேகப்படித்தியதால் வந்த விளைவு. இருந்தாலும் துரோகி என்ற நிலையில் இருந்து கருணா மீட்சி பெற அவர்பெற்ற முப்பதாயிரம் வாக்குகளை பயன்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் அம்பாரையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்து தனது கடமை முடிந்தென வெளியேறிவுடன் அவர் பழைய நிலையிலிருந்தும் கீழே சென்றார்.

கருணாவுக்கு மட்டுமல்ல கல்முனை தமிழர்கள் வரலாற்றில் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், சதாசிவம் வியாளேந்திரன் போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனியான இடமுண்டு.

கறுப்புச்சட்டை காவலர்களுடன் ஒரு காலத்தில் கல்முனையை சுற்றி வலம்வந்தவர்தான் இந்த வியாளேந்திரன். ஆ உ என்றதும் உண்ணாவிரதம், கிளம்பிவிடும் அவர் வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரத மேடையிலும் பிரசன்னமானதை நாங்கள் மறக்கவில்லை. எல்லாப் பசப்பு வார்த்தைகளும் அந்த கதிரைக்காகத்தான் என கல்முனையானுக்கு கச்சிதமாக உறைக்க வைத்த பெருமைக்குரியவர்.

பிள்ளையான் என்றால் சும்மாவா. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர். பக்கத்து மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ் கிராமம் ஒன்றின் மக்கள் படும்பாடு அவருக்கு தெரியவில்லை. இதில் வருகின்ற தேர்தல்களில் அம்பாறையில் குதிக்க எண்ணம்வேற இருக்காம். பிள்ளையானையும் கூட்டிற்று பிரதேச செயலகப் பக்கம் வந்ததுகள் சில இன்னும் பிதற்றலோடதான் திரியிதுகள் என்று அறியக்குள்ள ஆக்களப் பிடிச்சி நச்செண்டு உமிழத்தான் எண்ணம்.

இப்படி எமது கல்முனை மண்ணை வைத்து, பிரதேச செயலக விவகாரத்தை வைத்து அரசியல் செய்த, செய்கின்ற வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையிலுமுள்ள அரசியல் வாதிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

ஆனாலும் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எள்ளளவும் தீரவும் இல்லை ; தீர்க்க முயற்சிக்கப்படவுமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

என் இனத்திற்கு பயன்படாத உங்கள் அரசியல் எமக்கு வேண்டாம். சொந்தக் காலில் எமது பிரதேசத்தில் என் இனம் தலைநிமிரும். எதிர்வரும் நாட்களில் களத்தில் சந்திப்போம்.

Posted in Uncategorized

சொந்த செலவில் குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை திறக்கும் தம்மிக்க

யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு – குடியகல்வு அலுவலகமொன்றை தனது தனிப்பட்ட செலவில் திறந்து வைக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (27) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு – குடியகல்வு அலுவலகங்களைத் திறக்குமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜூலை10 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம்!

இன்று (27) நள்ளிரவு முதல் ஜூலை 10 வரை அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதற்காக மாத்திரம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துறைமுகங்கள், சுகாதாரத் துறை, அத்தியாவசிய உணவு விநியோகம், மற்றும் விவசாயப் பொருட்களின் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் பெற்றோலை விநியோகிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அநேகமாக இடைநிறுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை குறுந் தூர பொதுப் போக்குவரத்தை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் ஊடாக வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொது போக்குவரத்து அதிகளவில் தேவைப்படாத கிராமப் புற பாடசாலைகளை நடாத்திச் செல்ல முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்காக பொறிமுறையானது ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

புலம்பெயர் உறவுகள் முதலீடு – அவர்களுக்கும், முதலிடும் பணத்திற்கும் பாதுகாப்பு மாகாணசபைகளுக்கான நிதி அதிகாரமே – ஜனா

எமது புலம்பெயர் உறவுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வருவார்களாயின் அவர்களுக்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கும் மேலாக அவர்கள் முதலிடும் பணத்திற்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அந்தவிதமான நிலைமை இங்கு உருவாக்கப்பட வேண்டும். மாகாணசபைகளுக்கான நிதி அதிகாரங்களே அதற்கான ஒரே வழி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற உதவும் உறவுகள் அமைப்பின் 13வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009க்குப் பின்னர் அழிக்கப்பட்ட நமது பிரதேசங்கள் தற்போது படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்றது. ஆனால் நமது மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. புலம்பெயர் தேசத்திலே எமது மக்கள் பலர் பெரிய செல்வந்தர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் நினைத்தால் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் இருக்கும் எமது மக்களின் வறுமையை ஒழிக்கலாம். நலிவுற்ற எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தலாம். ஆனால், அவர்களுக்கு மனம் இருந்தாலும் அதற்கான களம் இல்லாமல் இருக்கின்றது.

தற்போது இந்த நாடு பெருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் புலம்பெயர் தேசத்திலே வாழும் எமது தமிழ் மக்களை இங்கு முதலீடுகளை மேற்காள்ளுமாறு இலங்கையின் ஆட்சியாளர்கள் அழைக்கின்றார்கள். இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியினால் கொழும்பிலே காலி முகத்திடல் தொடக்கம் காலி வரை போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இன்றைய இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது ஒரு சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும். அரசாங்கத்திற்கு அந்தக் காரணம் தெரிந்திருந்தும் அந்த அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் புலம்பெயர் தமிழர்கள் டொலர் கொண்டுவர வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் செல்வதற்கு அடிப்படைக் காரணமே இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாந்த தரப் பிரஜைகளாகக் கணிக்கப்பட்டது தான். இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்களம் மட்டும் சட்டம், தரப்படுத்தல் போன்றவற்றினால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். தமிழர்களின் அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. நாங்கள் எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்தினோம். தமிழர்களின் போராட்டத்தின் யாதார்த்தத்தை உணர விரும்பாத மாறி மாறி வந்த பேரினவாத அரசாங்கங்கள் அந்தப் போரினை உக்கிரப்படுத்துவதற்காக யுத்தக் கருவிகள், போர் விமானங்கள், யுத்தக் கப்பல்கள் என்பவற்றுக்காக பலவாறாகச் செலவிட்டார்கள்.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் காலத்திலே ஊழல் நிறைந்திருந்தது உண்மைதான். ஆனால் அதற்கும் மேலாக பொருளாதாரத்தின் இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் போருக்காகச் செலவழித்த பணம் தான் என்பதை இவர்கள் எற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

எமது புலம்பெயர் உறவுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அதற்கும் மேலாக அவர்கள் முதலிடும் பணத்திற்கு இங்கு பாதுகாப்பு வேண்டும். அந்தவிதமான நிலைமை இங்கு உருவாக்கப்பட வேண்டும்.

இன்று 21வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர எத்தணிக்கின்றார்கள். இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள சரத்துகளே இங்கு முழுமையாக அழுலாக்கப்படவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னும் மாகாணசபைகளுக்கு வங்கப்படாமல் குறித்த அரசியலமைப்பையே இந்த அரசாங்கங்கள் மீறியுள்ளன. இவ்வாறான நிலைமையில் எமது புலம்பெயர் உறவுகள் எந்த நம்பிக்கையில் முதலீகளைக் கொண்டு வருவாhர்கள்.

21வது திருத்தச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டத்தில் உள்வாங்கப்பட்ட சரத்துக்கள் பூரணப்படுத்தப்படுவதோடு, மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதை இன்று நாங்கள் வலியுறுத்துகின்றோம். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கேட்க வேண்டும். தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கேட்க வேண்டும். மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்கள் இருக்குமாக இருந்தால் புலம்பெயர் உறவுகள் அந்த அந்த மாகாண அரசுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஏனெனில் புலம்பெயர் தேசங்களிலே தமிழர்கள் மாத்திரம் செல்வந்தர்களாக இல்லை. சிங்கள மக்களும் அங்குள்ளார்கள். அவர்களும் அவரவர் மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த நாட்டிற்கு டொலர்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைவே இருக்கின்றன.

அரசும் அரசை எதிர்த்து இன்று போராடும் போராட்டக்காரர்களும் இன்றைய இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன என்பதைத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அதனைத் தீர்ப்பதற்காக முதலாவதாகப் பாடுபட வேண்டும். அதன் மூலம் தான் இந்த நாட்டில் தற்போதைய இடைக்கால பொருளாதார மீட்சிக்கு அப்பால் ஒரு நிரந்தரமான அமைதியை, பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்ப முடியும்.

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது சரத் வீரசேகர அவர்கள் குறுந்தூர் மலையிலே விகாரை அமைத்தல் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மிகவும் ஆவேசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவர்களது பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். சிங்களவர்களது பொறுமைக்கு எல்லையுண்டு என்று தெரிவித்திருக்கின்றார். கொழும்பிலே அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் இன்று கொழும்பு வீதியிலே நடமாட முடியாமல் இருக்கின்றார். சிங்கள மக்களின் பொறுமை தொடர்பில இவர் கருத்துரைக்கின்றார்.

பௌத்த அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் விகாரைகள் அமைவதுதான் எங்களுக்குப் பிரச்சனை. இலங்கையிலே எத்தனை இடங்களில் இந்து அடையாளங்கள் இருக்கின்றன. அநுராதபுரம், பொலநறுவை போன்ற இடங்களிலே எத்தனையோ இந்து மன்னர்கள் வாழ்ந்த அடையாளங்கள், எச்சங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் இந்துக் கோயில்கள் கட்டப்படுகின்றனவா? இல்லை. அவைகள் மரபுரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அவ்வாறு பௌத்த அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? இந்த நாட்டிலே குறிப்பாக வடக்கு கிழக்கிலே எங்கு எங்கு உயர்ந்த மலைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் அமைப்பதற்கு முற்படுகின்றீர்கள். புத்தர் அவ்வாறு சொல்லவில்லை. புத்தர் புனிதமான மனிதர். அவரது மதத்தை சார்ந்த நீங்கள் மிகவும் அடாவடித்தனங்களைச் செய்கின்றீர்கள் என்பதே எங்களது நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.இந்தச் சேவையானது இலங்கையர்களுக்கு எரிபொருள், உரம், பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறைக்கும் தமிழகத்திலுள்ள துறைமுகங்களான காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவும் – சஜித் பிரேமதாச

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரசாரத்தை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம்.சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்குமாறு உங்கள் அனைவருக்கும் நாங்கள் சவால் விடுகிறோம். வாக்கெடுப்புக்கு உடனடியாக வாய்ப்பு கொடுங்கள்.

அப்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த அணி எது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். புதிய ஆணையில் நாட்டை ஆளுமாறு மக்களைக் கேட்பதே எங்களின் பணி. நாட்டை பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்?

யதீந்திரா
ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன பெரமுனவிற்குள் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆசன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அதிகாரங்கள் போய் சேர்வதை உறுதிப்படுத்துவதற்கான 21வது திருத்தச்சட்டமானது, தொடர்ந்தும் இழுபறிநிலையிலேயே இருக்கின்றது. இந்த நிலையில் ஒரு தேர்தல் இடம்பெற்றால் மட்டும்தான் இவை அனைத்திற்கும் ஒரு முடிவு கிடைக்கும். இந்த அடிப்படையில் சிந்தித்தால், சம்பந்தன் கூறுவது போன்று, ஒரு ஆட்சி மாற்றம் அவசியம்தான். ஆனால், ஒரு வேளை, சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை கருத்தில் கொண்டுதான், பேசுகின்றார் என்றால், ஆட்சி மாற்றம் தொடர்பில் கேள்விகளுண்டு. ஏனெனில் 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவில்லை. புதிய அரசியல் யாப்பு ஒன்றிற்கான கற்பனையுடன் காலம் விரயம் செய்யப்பட்டது.

முன்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் நன்மைகளை தராதபோது, இனிவரப் போகும் ஆட்சிமாற்றமொன்றின் மூலம் எவ்வாறு தமிழ் மக்கள் நன்மைகளை பெறமுடியும்? இந்தக் கேள்விக்கான பதிலை கட்டுரையின் பின்பகுதியில் நீங்கள் காணலாம். முதலில் ஆட்சி மாற்றங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம். இலங்கைத் தீவில் ஏற்படும் எந்தவொரு பிரதான அரசியல் மாற்றங்களும், தமிழ் மக்களை முன்வைத்து ஏற்படுவதில்லை. ஆகக் குறைந்தது தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை ஒரு விடயமாகக் கூட இருப்பதில்லை. அது ஒரு போதும் நிகழவும் மாட்டாது. தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் எவையுமே, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுவதும் இல்லை. அவ்வாறு பேசினால் தங்களின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமென்றே அவர்கள் கருதுகின்றனர். அவ்வாறாயின் மாற்றங்கள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன? அனைத்துமே தென்னிலங்கை அதிகார மையத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகளின் காரணமாகவே நிகழ்கின்றன. இந்த மாற்றங்களே ஆட்சி மாற்றத்தை உந்தித் தள்ளுகின்றது. இவ்வாறுதான் 2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

தற்போது மீண்டுமொரு ஆட்சி மாற்றம் தொடர்பில் சிந்திக்கப்படுவதும் இந்த அடிப்படையில்தான். மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆதிக்கத்தின் மீதான அச்சத்தினடிப்படையில்தான், 2015 ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி உருவாக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவை மகிந்த முகாமிலிருந்து உடைத்தெடுப்பதற்கான வாய்ப்பான சூழல் அங்கிருந்தது. ராஜபக்ச குடும்ப அரசியல் ஆதிக்கத்தின் மீதேற்பட்ட அதிருப்திகளின் விழைவாகவே, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினர், மகிந்தவிற்கு எதிராக அணிதிரண்டனர். ராஜபக்ச முகாமின் உடைவைப் பயன்படுத்தியே, ராஜபக்சவை வீழ்த்துவதற்கான வியூகம் வகுக்கப்பட்டது. இந்த கூட்டணிக்கான மேலதிக ஆதரவாகவே தமிழ் மக்களின் வாக்குகள் பயன்பட்டன. இதன் காரணமாகவே, ஆட்சி மாற்றத்தின் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு ஒரு விடயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து அந்த ஆட்சி மாற்றம் நிகழவில்லை. 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இடம்பெற்ற விடயங்களிலிருந்தே, நீங்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். நல்லிணக்கம், அரசியல் தீர்வு தொடர்பில் ஆடம்பரமாக விவாதிக்கப்பட்டாலும் கூட, இறுதியில் ரணில்-மைத்திரி அதிகார மோதலைத் தொடர்ந்து, அனைத்து முயற்சிகளும் பூச்சிய நிலைக்கு சென்றது.
இப்போது ஆட்சி மாற்றத்தை எவ்வாறு கையாளுவதென்னும் கேள்விக்கு வருவோம். இந்தக் கட்டுரையாளர் மேலே குறிப்பிட்டவாறு ஆட்சி மாற்றத்தை விளங்கிக் கொண்டால், ஆட்சி மாற்றத்தில் தமிழர்கள் ஒரு போதுமே பிரதான விடயமாக இருக்கமாட்டார்கள் என்பதை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் இருக்காது. இந்த அடிப்படையிலிருந்துதான், எனவே, ஆட்சி மாற்றங்களை எவ்வாறு உச்சளவில் பயன்படுத்திக் கொள்ளலாமென்று, தமிழ் தலைமைகள்தான் சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட அரசியல் சூழலில் எதனை முன்னிறுத்த வேண்டும் என்பதை தமிழ் தலைமைகளே சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் குறிப்பிட்ட சூழலில் எடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்களை இலக்கு வைத்து செயற்பட வேண்டும்.

அவ்வாறானதொரு தூரநோக்குமிக்க பார்வை சம்பந்தனிடம் இருந்திருந்தால், 2015இல் ஏற்பட்ட ஆட்சி;மாற்றத்தை தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும் ஆனால் சம்பந்தனது தவறான அரசியல் அணுகுமுறைகளால், கிடைத்த அருமையானதொரு வாய்ப்பு கைநழுவியது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலொன்று தெரிந்த சந்தர்பத்தில், இந்தக் கட்டுரையாளர் சம்பந்தனிடம் சில விடயங்களை வலியுறுத்தியிருந்தார். அதாவது, இந்த ஆட்சி மாற்றம் அதிக காலத்திற்கு நீடிக்காது ஏனெனில், இரண்டு முற்றிலும் மாறுபட்ட அரசியல் கருத்தியல், வெளிவிவகார பாரம்பரியம் கொண்ட கட்சிகளான ஜக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினரும், இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆட்சி மாற்றமானது, நிச்சயம், உள்முரண்பாடுகளுக்குள் சிக்கும், எனவே சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பெறக் கூடிய விடயங்களை பெற முயற்சிப்பதே சரியானதென்று இந்தக் கட்டுரையாளர் சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தார். ஆனால் சம்பந்தன் எதனையும் உள்வாங்கிக் கொள்ளவில்லை.

புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டுவரமுடியுமென்று நம்பி செயற்பட்டதுதான், சம்பந்தன் மேற்கொண்ட மோசமான தவறாகும். இந்தத் தவறிலிருந்துதான் அனைத்து தவறுகளும் நிகழ்ந்தன. உண்மையில் அப்படியானதொரு அரசியல் யாப்பை கொண்டுவருவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் புதிய அரசியல்யாப்பு என்னும் பெயரில், காலம் வீணடிக்கப்பட்டது. இதற்கு பதிலாக, இருக்கின்ற அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாகாண சபை நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். இதனை, நான் உட்பட, சிலர் பரிந்துரைத்திருந்த போதும், சம்பந்தன் அவர்களை பொருட்படுத்தவில்லை. அதே வேளை, கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதாக வெளியிலிருந்து சுட்டிக்காட்டியவர்களும், வரமுடியாத புதிய அரசியல் யாப்பிற்குள் எவற்றையெல்லாம் உள்ளடக்க வேண்டுமென்றே விவாதம் புரிந்தனர். புதிய அரசியல் யாப்பின் மூலம் கூட்டமைப்பு ஒரு பாரிய சதியில் ஈடுபடுவதாக கதைகள் புனைந்தனர். ஆனால் இறுதியில் அனைத்து கதைகளும் பெறுமதியற்றுப் போயின. உண்மையில் கூட்டமைப்பு சதி செய்யவில்லை, மாறாக, கற்பனையில் காலத்தை விரயம் செய்தது. ஏனையவர்கள் கூட்டமைப்பின் கற்பனை பற்றி, கற்பனை செய்தனர். புதிய அரசியல் யாப்பு தொடர்பான உரையாடல்கள் அனைத்தும், இறுதியில், கற்பனை தொடர்பான கற்பனைகளுடன் முடிவுற்றது. எப்போதெல்லாம் யதார்த்தம் புறம்தள்ளப்படுகின்றதோ – அப்போதெல்லாம் வெறும் கற்பனைகளிலேயே காலம் கரையும்.

மீண்டும் தென்னிலங்கையின் அரசியல் மோசமாக குழம்பியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான், ஆட்சி மாற்றமொன்றின் தேவை உணரப்படுகின்றது. நிச்சயம் அதுதான் நிகழவும் போகின்றது. ராஜபக்சக்கள் வீழ்சியுற்றிருக்கின்ற சூழலில், புதியதொரு தலைமைக்கான பலப்பரிட்சையிலேயே தென்னிலங்கையின் அரசியல் நிலைகொண்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுன, வீழ்ச்சியடைந்திருக்கின்ற அதே வேளை, எதிரணிக்குள்ளும் பிளவுகள் காணப்படுகின்றன. ஒப்பீட்டடிப்படையில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி அளவில் பெரிய எதிரணியாக இருந்த போதிலும் கூட, சஜித் பிரேமதாசவினால் தனித்து அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. எனவே ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வலுவானதொரு கூட்டணி தேவை. அதே வேளை, ரணில் தற்போதைய நெருக்கடி நிலையை கையாளும் பொறுப்பை ஏற்றிருப்பதால், ஜக்கிய தேசியக் கட்சியை மீளவும் ஒழுங்கமைப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. ஜக்கிய தேசியக் கட்சி தலைமையில் வலுவானதொரு கூட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்களையும் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. ஆனால் வரப்போகும் ஆட்சி மாற்றத்தின் போது, தமிழ் மக்களின் வாக்குகள் பிரதானமாக தேவைப்படுமென்றும் கூறிவிட முடியாது. ஏனெனில் தென்னிலங்கையின் கட்சிகளுக்கிடையில், பலமானதொரு மோதல்நிலை இருக்கின்ற போதுதான், தமிழ் மக்களின் வாக்குகள் மேலதிகமாக தேவைப்படும். அவ்வாறானதொரு போட்டிநிலை இல்லாவிட்டால், ஆட்சி மாற்றத்தில் தமிழ் மக்கள் பிரதான பங்கை வகிக்க முடியாமலும் போகலாம். எது எவ்வாறிருப்பினும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்தையும், பயன்படுத்திக் கொள்வது, தமிழ் தலைமைகளின் ஆளுமையில்தான் தங்கியிருக்கின்றது.