கச்சதீவை இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள் -ரெலோ

கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மன வருத்தம் தருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு மைத்திரி அவசர கடிதம்

21 ஆவது திருத்த சட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல யோசனைகளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் இந்த திருத்தத்தில் உள்ளடக்குமாறு அவர் முன்வைத்துள்ளார்.

21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான கலந்துரையாடலும் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சீன தூதுவர் அம்பாறை விஜயம் ; 2500 உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு !

சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கிவ் ஜென்கொங் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார் . அவரை அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் வரவேற்று கலந்துரையாடினார்.

அங்கு ,அம்பாரை மாவட்டத்திற்கு சமகால இடர் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சீன நாட்டு உதவியாக 2500 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொன்றும் 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் 2500 பொதிகள் வழங்கப்பட்டன .

இதில் ,அடையாளமாக 100 பயனாளிகளுக்கு சீன தூதுவரும் அவரது பாரியாரும் அதனை வழங்கி வைத்தார்கள். இந்த சந்திப்பில் ,கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு தொடரும் என்றும் எமது முதற் கட்ட உதவி இது. எதிர்காலத்தில் இன்னும் பல உதவிகளை நாட்டுக்கு செய்ய இருக்கிறோம்” என்று சீன தூதுவர் அங்கு கூறியிருந்தார்.

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் சீன தூதுவருக்கு நன்றி தெரிவித்து “மேலும் இந்த உதவிகளை அம்பாரை மாவட்டத்திற்கு வழங்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவாரத்துக்குள் 21 இன் இறுதி வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் : வட,கிழக்கு அரசியல் கட்சிகளை பங்கேற்குமாறு நீதி அமைச்சர் அழைப்பு

ஒருவாரகால இடைவெளியில் 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகளும் பங்கேற்று தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்டத்திற்கான வரைவினை தயாரித்தவரான அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயெ அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்மொழியப்பட்டுள்ள 21ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்து அனைத்துக்கட்சிகளினதும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடத்தப்பட்டது. அந்தகூட்டத்தில் வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையானவை பங்கேற்கவில்லை.

இதனால், இறுதித் தீர்மானம் இன்றி குறித்த கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பிறிதொரு கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, பெரும்பாலும் வரைவு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை அனுமதிக்காக குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பவுள்ளது என்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பெறப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோரின் தலைமையில் இந்த விநியோக நிகழ்ச்சி இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மீனவர்கள், ஊர்காவற்றுறை மீனவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் நயினாதீவு மீனவர்களுக்கு இந்த மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது.

Posted in Uncategorized

என்னையும், குடும்பத்தையும் இந்தியாவுக்கு அழைத்து பாதுகாப்பு தருக – மோடியிடம் இலங்கை கோரிக்கை

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில், தான் திருப்தி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மே 9 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஆளும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 75 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளும் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கோட்டாகோகம போராட்டத்திற்கு 50 நாட்கள் பூர்த்தி: ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

கோட்டாகோகம போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 50 நாட்களாகின்றன.

கட்சி சார்பற்ற மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் வல்லுநர்கள் உள்ளிட்ட குழுவினர் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என கோரி தொடர்ச்சியாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்வேறு தரப்பினரின் பங்குபற்றுதலுடன், கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து கோட்டாகோகம போராட்டக்களம் நோக்கிய பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலிருந்து மற்றுமொரு எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் ஆரம்பமானது

கோட்டகோகம போராட்டத்தின் 50 ஆவது நாள் நிறைவை முன்னிட்டு உலக வர்த்தக மையத்திற்கருகிலுள்ள லோட்டஸ் வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் மும்மொழிகளிலும் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், மஹிந்த மற்றும் தேஷபந்து உள்ளிட்ட மே 9 தாக்குதலின் சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று காலை காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள போராட்டக்களத்தில் மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், நகரின் மத்தியில் போராட்டம் வலுப்பெற்றது.

கண்டி, மாத்தளையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மே 9 தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டா – ரணிலின் கூட்டு சதியைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளிலும் குருநாகல் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது .

இதனைத் தவிர திகன, எம்பிலிப்பிட்டிய, பொலன்னறுவை , வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Posted in Uncategorized

தமிழக நன்கொடை உதவித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, 857 குடும்பங்களுக்கு அரிசியும் மற்றும் 3, 964 குடும்பங்களுக்கு பால்மா பைக்கட்டுக்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் “அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவிடமிருந்து வடக்கு மாகாண மக்களுக்கான அட்சய பாத்திர உதவிகள்” எனும் தொனிப்பொருளில் அமைந்த குறித்த நன்கொடை உதவித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விநியோகிக்கும் பணி (27) மாலை 3.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ். இந்திய துணைத்தூதுவர் ஜெ. ராகேஷ் நடராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உதவித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இதன் முதற்கட்டமாக இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு மற்றும் செல்வபுரம் கிராம சேவகர் பிரிவுகளைச சேர்ந்த முப்பது பேருக்கான உதவி வழங்கி வைக்கப்பட்டது.

துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகங்களைத் தொடர்ந்து ஏனையவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும்.குறித்த நன்கொடை உதவித்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோகிராம் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு பத்து கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில் மிகுதி வழங்கப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் நிறையுடைய பால்மா பைக்கட்டுக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் அல்லது 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இதில் ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் இருந்தால் ஒரு பால்மா பை மட்டும் வழங்கப்படும்.

21 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை ; ஐ.ம.ச. சுட்டிக்காட்டு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

21ஆவது திருத்தத்தை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சகல கட்சிகளின் யோசனைகளையும் பெற்று அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்த்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்,இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல்,சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் ஸ்தாபிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஏதேனும் சூட்சமம் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குதல் அல்லது இரத்து செய்யல் விவகாரத்தில் பொதுஜன அபிப்ராயத்தை கோருவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகார விவகாரத்தை இருகட்டமாக செயற்படுத்த வேண்டும்.பொதுசன அபிப்ராயத்தை கோருவதும் சாதகமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலான விவகாரம் தற்போது உயர்நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அவ்விடயம் குறித்து எவ்வித நிலைப்பாட்டையும், அடுத்தக்கட்ட நகர்வுனையும் தற்போது முன்னெடுக்க முடியாது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அமைச்சு பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தல், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பிரதான யோசனைகளுக்கு சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றத்தில் சகல தரப்பினரது யோசனைகளையும் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.புதிய அரசியலமைப்பு உருவாக்க பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது.

இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

சகல கட்சிகளினதும் யோசனைகளை பெற்று எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்து விரைவாக நிறைவேற்றிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறிதொரு கூட்டத்தை நடத்தி அரசியலமைப்பு வரைபு யோசனை பெறலை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் தமது யோசனைகளை நீதியமைச்சரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இந்தியா – ஜப்பான் இணைந்து இலங்கைக்கு உதவ தீர்மானம்

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது

டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை அரசினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும் ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது.

மேலும் இந்தியா ஏற்கெவே இலங்கைக்கு 2.4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், 1.5 பில்லியன் டொலர் உதவியை இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் தற்போது இணைந்து இலங்கைக்கு உதவி வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.