கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது இலங்கை மீனவர்கள் அதிருப்தி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கை இன்று இலங்கை மக்கள் மத்தியில் பாரிய மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தற்போது இலங்கை மீனவ சமூகத்திற்கு மத்தியில் பாரிய மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நிவாரண உதவிகளை செய்வதை போல காண்பித்து, தமது உரிமையை பறித்தெடுக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை – இந்திய மக்களின் தொப்புள் கொடி உறவை அறுக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

நன்றி- பிபிசி

“சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை”-பிரதமர் ரணில்

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவி புரிய நாடுகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றவுடன் பெரும் நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருவார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள். எரிபொருள் எரிவாயு, உரபிரச்னைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்திற்கு 50 நாள்: இன்று கொழும்பில் பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றன.

இதனையொட்டி இன்றைய தினம் கொழும்பில் பேரணியை நடத்துவதற்கு அரச எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் திட்டமிட்டவாறு இன்று பிற்பகல் பேரணியை நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – ஞானசார தேரர் !

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பொருட்களின் சவால்கள்-இலங்கைக்கு WHO முழு ஒத்துழைப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங், (Dr.Alaka Singh) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை நேற்று முன்தினம் (25)  சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

இதன் போதே இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் அகதி குடும்பத்தினரை விடுவித்த அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்

அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய ஆட்சி காலக்கட்டத்தில் பல்வேறு இன்னல்களையும் பல ஆண்டுக்கால தடுப்புக் காவலையும் எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இவர்கள் முன்பு வாழ்ந்த பிலோயலா பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோயலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வன்முறைகள் தொடர்பில் ஆராய முன்னாள் படைத் தளபதிகள் தலைமையில் குழு!

மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடக்கம் மே 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வரையில் ஆராய முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் ஏயார் மார்ஷலாக செயற்பட்ட ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை முதல் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா

இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக செயற்பட்டு வந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார்.

அத்துடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி தமது பொறுப்பிலிருந்து விலகவுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதம அதிகாரியான ஜெனரல் விக்கும் லியனகே, ஜூன் 01ஆம் திகதி முதல் 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு – பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள நிவாரணம் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததது.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், 21ஆவது திருத்த சட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தேச வரைவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.