இலங்கை குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தை

கடன் வழங்கும் முக்கிய நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய பாரிஸ் கிளப் உடன் இலங்கை குறித்து பிரிட்டன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என வெளிநாடு பொதுநலவாயம் பாராளுமன்ற விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு வாழ்வாதாரம் உட்பட இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அமைதியான ஜனநாயக அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் மாதம் உலக வங்கி 600மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறிகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகவங்கிக்கு நிதி வழங்கும் முக்கிய நாடு பிரிட்டன் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் நிதி நிலைமை குறித்து பிரிட்டன் சர்வதேச நிதி அமைப்புகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை பேண்தகுநிலைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் ஆழமானபேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்கள் நீடிக்கலாம்,இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெற்றுள்ளது இலங்கையின் யோசனைகள் எவையும் இதுவரை உறுப்புநாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்டவுடன் நாங்கள் அவற்றை ஆராய்வோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான நிதி உதவி குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன -இலங்iயின் கடன் குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

TL

 

’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

“இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது.” என்று தெரிவித்தார் மோதி.

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றுகையில்,

உணவு, எரிபொருள், மருந்து ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல இந்திய அமைப்புகளும் தனி நபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச அமைப்புகள் மத்தியில் இந்தியா உரக்க பேசியுள்ளது. ஜனநாயம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றதை என்னால் மறக்கமுடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமரும் நானே என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம்: தமிழக முதல்வர் தெரிவிப்பு

தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் இன்று கலந்துகொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை வௌியிட்டார்.

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்

பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

பயங்கரவாத தடைசட்ட திருத்தம் நீக்கப்படாது விடின் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்து-அருட்தந்தை மா.சத்திவேல்

“21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற போது பயங்கரவாத தடை சட்ட திருத்தம் நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது“ என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று 25.05.2022 விடுதலை செய்யப்பட்டுள்ளார். சித்திரவதையை தொடர்ந்து புரியாத மொழியில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே 21 வயதே நிரம்பிய சுந்தரலிங்கத்தின் 13 வருடங்களை சிறையில் கழிக்க வைத்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எத்தகைய வாழ்வு கொடுமைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதற்கு கேதீஸ்வரனின் வழக்கு தீர்ப்பு இன்னும் ஒரு உதாரணமாகும்.

இனவாத மற்றும் மத வாதமுகம் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டு பிணை இன்றி சிறையில் வாடும் இளைஞர்களின் இளமை, குடும்ப வாழ்வு, எதிர்காலம், சமூகப் பொறுப்பு அனைத்தும் பறிக்கப்பட்டு சிறையில் வாடுகின்றார்கள் என்பதைவிட உயிரோடு கொலை செய்யப்படுகிறார்கள் என்றே கூற வேண்டும். இத்தகைய சட்டத்தை உருவாக்கி கடந்த 43 ஆண்டு காலமாக பாதுகாத்து வரும் பேரினவாத ஆட்சியாளர்களே பயங்கரவாதிகள், ஜனநாயக கொலையாளிகள்.ஏனெனில் தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான அரசியல் போராட்டத்தை அளிக்கவே இச் சட்டத்தை அன்று கொண்டுவந்தனர்.

2019 ஆண்டு உயிர்ப்பு தின குண்டுத்தாக்குதல் கொலைக்கு காரணமானவர்கள் என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் சுதந்திரமாக சுகபோகம் அனுபவிக்க அப்பாவி முஸ்லிம்கள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். செல்வாக்கு உள்ளவர்கள் வெளியில் வந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல காலிமுகத்திடலில் தற்போது நடைபெற்றுவரும் ஜனநாயக ரீதியிலான இளைஞர்களின் போராட்டத்தை அழித்தொழிக்கவும் வன்முறையை கட்டவிழ்த்துவிடவும் மூல காரணமானவர்கள் இந்நாள் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர். இது தொடர்பில் விசாரணையை முன்னெக்க குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்தராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோரின் கடவுச்சீட்டுகளில் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தப் போதும் இன்று வரையில் அதனை கையளிக்காது சட்டத்தை அவமதிக்கும் இவர்களுக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படல் வேண்டும். இது சாத்தியமா?

அரசியல் யாப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாடப்படுகின்ற இக் காலகட்டத்தில் பயங்கரவாத தடை சட்டம் திருத்த நீக்கம் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட வேண்டும். இல்லையேல் தற்போதைய அரசியல் பொருளாதார கொந்தளிப்பான சூழ்நிலையில் கேதீஸ்வரன் போன்ற இளைஞர்களின் வாழ்வு பறிக்கப்படும் ஆபத்தே உள்ளது” என்றார்.

Posted in Uncategorized

நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரிக்க கோப் குழு பரிந்துரை!

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்காக விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

2018-2019 நிதியாண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் இலங்கை வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கோப் குழு நேற்று கூடியது.

இதன்போதே, இவ்வாறு தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன், வரையறுக்கப்பட்ட டப்ளியு.எம்.மெண்டிஸ் நிறுவனம் ஒரே சொத்தினை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் அடமானம் வைத்துள்ளதா? என்பது குறித்து கோப் குழு ஆராய்ந்து வருகிறது.

கடந்த ஐந்து வருடங்களாக அதிகளவு செலுத்தப்படாத கடன் நிலுவைகளைக் கொண்ட சில நிறுவனங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, ​​டபிள்யூ.எம்.மென்டிஸ் லிமிடெட் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் ஒரே மாதிரியான சொத்துக்களை அடகு வைத்து கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கை வங்கி அதிகாரிகளும், மக்கள் வங்கி அதிகாரிகளும் சந்தித்துக் கொண்ட போது, ​​அந்த நிறுவனம் இவ்வாறான மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிறுவனம் இந்த சொத்தை சுமார் 7 பில்லியன் ரூபாவுக்கு அடமானம் வைத்து கடனாக பெற்றுள்ளது.

கோப் குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி, சம்பவம் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் யோசனை!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்த சம்பள உயர்வை மேற்கொள்ள பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்படி சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும்  வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுத்துறையினருக்கான சம்பளம் கட்டம் கட்டமாக 20,000 ரூபாவால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் நாட்டின் பொருளாதார நிலைகள் குறித்து பிரதமர் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

பதவி விலகுகிறார் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா!

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 31 ஆம் திகதியுடன் அவர் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து ஜுன் முதலாம் திகதி அவர் கூட்டுப்படைகளின் பிரதானியாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை தற்போதைய கூட்டுப்படைகளின் தளபதியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே, ஜுன் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

”நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தேவை”

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் இன்று (26) நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம் (Nikkei) தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார்.
ஜப்பானின் நிக்கேய் (Nikkei) செய்தித்தாள் 1995 முதல் ஆண்டுதோறும் மாநாட்டை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டின் கருப்பொருள் ‘பிளவுபட்ட உலகில் ஆசியாவின் பங்கு மீள்அர்த்தப்படுத்தல்’ என்பதாகும்.
இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடாகும். தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை அதே ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 நோய்த் தொற்றினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தமை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பணம் அனுப்புவதில் ஏற்பட்ட வீழ்ச்சி, கடுமையான நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் அதிக கடன் சுமையுடன் இணைந்த ஏனைய நிகழ்வுகளினால் பணவீக்கம் ஏற்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பொருத்தமான வேலைத்திட்டத்திற்கான அணுகுமுறைக்கு இணங்க, எமது கடன் வழங்குனர்களுடன் கலந்தாலோசித்து, வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் அபிப்பிராயத்துடன், இலங்கை ஏப்ரல் மாதத்தில் “கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திவைத்தல்” தொடர்பான அறிவித்தலொன்றை விடுத்தது.
எவ்வாறாயினும், அத்தகைய தீர்வுகள் மூலம் செயற்படும்போது அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் இறக்குமதி போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு உடனடியாகத் தேவைப்படுவதாக ஜனாதிபதி  தெரிவித்தார்.
ஜப்பான் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளியாகும். ஜப்பானில் இருந்து நிதியுதவி வழங்குவது தொடர்பாக நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் விரைவில் முடிவடையும் என நம்பப்படுகிறது. பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து நட்பு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டார்.
இலங்கை எதிர்கொள்ளும் கடுமையான சிரமங்கள், கொவிட்-19 தொற்றுநோயின் நீண்டகால விளைவுகளின் முன்னறிவிப்பாகும். ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதலால் இது தீவிரமடைந்துள்ளது. பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இந்த இக்கட்டான காலங்களில் இவ்வாறான பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுவது அவசியமானது என ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில், உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரந்த சிக்கலை உலகம் சந்திக்கும். எதிர்கால உணவுப் பற்றாக்குறை மற்றும் அடுத்த சில மாதங்களில் உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு பல நாடுகளில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே, இந்த முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் உள்நாட்டு விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் வரவிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்வதில் நமது நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவது அவசியம். இந்த பிரச்சினைகளை வெற்றிகொள்வதை உறுதி செய்வதற்கு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி  இங்கு வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டு பிராந்திய பிரச்சினைகள் மற்றும் உலகில் ஆசியாவின் பங்கு பற்றிய இலவச ஆலோசனைகளை மாநாட்டில் முன்வைத்தார்கள்.

இலங்கைக்கு அமெரிக்கா உதவும்-பிரதமர் ரணிலிடம் சமந்தா பவர் தெரிவிப்பு

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் நிர்வாகி (US Agency for International Development, USAID) சமந்தா பவர் (Samantha Power) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தொலைபேசிமூலம் இடம்பெற்ற இந்த உரையாடலின்போது, இந்தமாதம் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மையின்போது கொல்லப்பட்ட காயமடைந்த இலங்கையர்கள் குறித்து சமந்தா பவர் அனுதாபத்தை வெளியிட்டார் என அந் முகவரமைப்பின் பேச்சாளர் ரெபேக்கா சலிவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கான ஆதரவை வெளியிட்ட அவர், இலங்கை நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமது முகவரமைப்பு உதவும் என தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய புறக்கணிக்கப்பட்ட சமூகங்கள் பொருளாதார அதிர்ச்சிகளை அனுபவிக்கும் அவர்களின் அவசரதேவைகளை நிவர்த்திசெய்வதற்கு இலங்கையில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பு தனது திட்டங்களை முன்னிறுத்துகின்றது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் தூண்டுதலற்ற உக்ரைன் மீதான யுத்தம் காரணமாக அதிகரிக்கும் எண்ணெய் உணவுப்பொருட்களின் விலைகளும் இந்த நிலையை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் சர்வதேச நாணயநிதியம் போன்ற இலங்கைக்கு உதவும் சமூகத்துடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்து பணியாற்றும் எனவும் சமந்தா பவர் பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா?

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றது. வழமையான கெடுபிடிகள் இல்லாமல் இம்முறை நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு காரணம் என்ன?

பதில்:
பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர் மேற்கு நாடுகளின் ஜனநாயக – லிபரல் பண்புகளினூடாக வந்தவர். தவிர அவர் மேற்கு நாடுகளுக்கு பதில் கூறவேண்டியவராகவும் காணப்படுகின்றார். அந்த அகையில் அவர் எப்போதும் தனது ஆட்சிக்காலத்தில் நினைவுகூருதலுக்கான வெளியை அனேகமாக அனுமதித்தே வந்திருக்கின்றார். தவிர – கோட்டா கோ கமவில் போராடிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை போராடலாம் என அனுமதித்ததன் மூலம் – இந்த நினைவுகூரலையும் அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால், இவ்வாறான நினைவுகூரல்களை ரணில் விக்கிரமசிங்க தடுப்பதில்லை.

கேள்வி:
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இருக்கின்ற போதிலும் கூட அவருக்கு மேலாக அதிகாரத்தைச் செலுத்தும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என இதனைக் கருதமுடியுமா?

பதில்:
அப்டிக் கருதமுடியாது. ஏனெனில் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்கு இருக்கும் வரையறைகளை மொட்டுக்கட்சி உணர்த்தியிருக்கின்றது. இது கோட்டாபயவும் சேர்ந்து எடுத்த முடிவு. ரணிலைத் தெரிவு செய்தது கோட்டாபயதான். ரணிலைத் தெரிவு செய்ததன் மூலம் கோட்டாபய தன்னைத் தற்காத்துக் கொண்டு விட்டார். குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார். குடும்பத்தினர் அச்சமின்றி நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் நாட்டு மக்களினதும், உலகத்தினதும் குவிமையமாக ரணில் இருக்கின்றார். கோட்டா கோ கமவில் கோட்டாபய வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அவர் இன்னும் போகவில்லை. இது அவருக்கு ஒரு வெற்றி. எதிர்காலத்தில் அவர் சிலசமயம் போகவேண்டிவரலாம். தான் போகாமல் ரணிலை அவர் தெரிவு செய்திருக்கின்றார். இதில் இருவரும் சேர்ந்துதான் இயங்க முடியும். ஏனெனில் எந்தெந்த விடயங்களில் உலக சமூகத்தின் கவனத்தைக் கவரலாம். எந்தெந்த விசயங்களில் மேற்கு நாடுகளுக்கு – இந்தியாவுக்கு சார்பாக நடந்துகொள்ளலாம். எந்தெந்த விடயங்களில் உள்நாட்டில் இருக்கக்கூடிய சமூகங்களின் அதிருப்தியை சம்பாதிக்காமல் செயற்படலாம் போன்ற விடயங்களில் கடந்த இரண்டு வருடத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் கோட்டாபய செயற்படலாம்.

கேள்வி:
கொழும்பிலும், கோட்டா கோ கம அரங்கிலும் முதல் முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. மூவின மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். சிங்கள மக்களும் தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள இது எந்த வகையிலாவது உதவுமா?

பதில்:
அது ஏதோ ஒருவகையில் உதவும்தான். குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே தயாரித்து பகிர்ந்தமை ஒரு நல்ல விசயம். இறுதிக்கட்டப்போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்கள் உணர்கின்றார்கள். பகிர்ந்துகொள்ள முற்படுகின்றார்கள் என்பதனை அது ஒரு குறியீடாகக் காட்டுகின்றது. அந்தவகையில் இந்த கஞ்சி அங்கு சமைத்து பரிமாறப்பட்டமையை நாம் வரவேற்க வேண்டும். அது நல்ல மாற்றம். இது முதலாவது.

இரண்டாவது, நினைவுகூர்தல். நினைவுகூர்தல் குறித்து அவர்கள் முகநூலில் போட்ட பதிவுகள் மற்றும் அது குறித்து வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் – மே 18 இல் கொல்லப்பட்ட எல்லோருக்குமான நினைவுகூர்தல் என்ற தொனி வருகின்றது. அவர்கள் அங்கு பேசும்போது தமிழ் மக்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால், இனப்படுகொலையை நினைவுகூர்தல் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் அங்கு காட்சிப்படுத்திய பனரில் மே 18 இல் கொல்லபட்டவர்கள் என்ற வாசகம்தான் உள்ளது. மே 18 இல் கொல்லப்பட்டவர்கள் என்று பார்த்தால் தமிழ் மக்கள், போராளிகள் மற்றது சிங்கள சிப்பாய்கள். எல்லோரையும் பொதுவாக நினைவுகூரும் ஒரு வாசகமாக அது காணப்படுகின்றது.

இதில் தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது. தமிழ் மக்கள் இதனை ஒரு இனப்படுகொலை நாளாக நினைவு கூருகின்றார்கள். இனப்படுகொலை நாளென்பது இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு எதிராக நீதியைக்கோரும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதி. இதனை சிங்கள மக்கள் இனப்படுகொலையாகப் பார்க்கின்றார்களா? போர்க்குற்றமாகப் பார்க்கின்றார்களா? அல்லது யுத்த வெற்றியாகப் பார்க்கின்றார்களா என்பது முக்கியமான கேள்வி. சிங்கள மக்களும், சிங்கள அரசாங்கமும் கடந்த 12 வருடங்களாக இதனை ஒரு யுத்த வெற்றியாத்தான் கொண்டாடி வந்துள்ளார்கள். அப்படியான நிலையில் இது ஒரு நினைவுகூரலாக அனுஸ்டிக்கப்பட்டமை ஒரு பெரிய மாற்றம்.

வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்திய சிங்கள மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது முக்கிய மாற்றம்தான். ஆனால், இனப்படுகொலை புரிந்தவர்களும், இனப்படுகொலைக்கு உள்ளானவர்களும் ஒன்றாக இருந்து நினைவுகூர முடியுமா என்ற கேள்வி உள்ளது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு நிலையில்தான் அது சாத்தியம். இல்லையெனில் – அது வெறும் சடங்காக மட்டும்தான் இருக்கும். ஆனால், இதனை ஒரு ஆரம்பமாகக் கருதலாம்.

கேள்வி:
இந்த நிலைமைகளை கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் உபாயங்கள் எவ்வாறுள்ளது?

பதில்:
தென்னிலங்கையில் உருவாகியுள்ள குழப்பங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே தெளிவானதொரு மூலோபாயம் இல்லை. குறிப்பாக 45 நாட்களாக இந்தப் போராட்டம் தொடர்கின்ற போதிலும், பொருத்தமான அணகுமுறை ஒன்று தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. முதலாவது இதனை ஒரு முக்கியமான விடயமாக அவர்கள் கருதவில்லை. கருதினாலும், அதனை அணுகவேண்டும் என்பதையிட்டோ எவ்வாறு அணுகலாம் என்பதையிட்டோ அவர்களிடம் கருத்துக்கள் எதுவும் இல்லை.

எம்மை நாம் ஒரு தேசமாகக் கருதி அதற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் பார்ப்போமாக இருந்தால், நான்கு பரப்புக்களை நாம் அடையாளம் காணலாம். முதலாவது – நாடாளுமன்றம். இரண்டாவது – கோட்டா கோ கம போன்றவற்றில் போராடும் ஒரு புதிய தலைமுறை. மூன்றாவது தரப்பு – மகாசங்கம். அது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. நான்காவது தரப்பு – இந்த அரசாங்கத்தை பிணை எடுக்க முற்படும் வெளித்தரப்புக்கள். இந்த நான்கு தரப்புக்களையும் தமிழ்த் தரப்புக்கள் தனித்தனியாக அணுகவேண்டும்.

@24Tamil News

இலங்கையை பாதுகாக்க முற்படும் வெளித்தரப்புக்களான சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றவற்றுடன் தமிழ்த் தரப்புக்கள் பேச வேண்டும். உதவியையும் தமிழ் மக்களுக்கான நீதியையும் பிரிக்க முடியாதவாறு பிணையுங்கள் எனக் கேட்கவேண்டும். அரசாங்கத்துக்கு உதவி செய்வதாயின் சில நிபந்தனைகளை முன்வைக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தீர்வுக்கான அடித்தளத்தை நாம் பலப்படுத்தலாம். இந்த நாடுகளின் மத்தியஸ்த்தத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் தணிந்த பின்னர் அரசியல் தீர்வுக்குச் செல்லும்போது அரசாங்கம் பின்வாங்காமல் இருப்பதை இந்த நாடுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். வரலாற்றைப் பார்த்தால் சிங்களத் தரப்பு பலவீனமாக இருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு வரும். பின்னர் பின்வாங்கிவிடும்.

இதனைவிட கோட்டா கோ கமவில் போராடுபவர்களுடன் நாம் உரையாட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய தலைமுறை. இந்த தலைமுறையினரிடம் ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றத்தை நாம் முழு சிங்கள தலைமுறை யினருக்குமான மாற்றமாகக் கொண்டுவர வேண்டும். சிங்கள மக்களுடைய கூட்டு உளவியல் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு வந்தால்தான் சமஸ்டி போன்ற ஒரு தீர்வுக்கு அவர்கள் வருவார்கள். இல்லையென்றால் சமஸ்டி என்றால் அதனை ஒரு தனிநாடாகப் பார்க்கும் நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். இதற்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுடன் நாம் உரையாட வேண்டும்.

பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும். அதனைவிட இங்கு தெரிவித்த மூன்று தரப்புக்களுடனும் அவர்கள் உரையாட வேண்டும். தமிழ் மக்களுடைய பேரம் அதிகமாகவுள்ள நேரம் இது. அதனால், தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.