அரசாங்கமும் தோற்றுவிட்டது எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன நாடே தோற்றுவிட்டது?

-நிலாந்தன்.

தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது. தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பதுபோல மக்கள் தன்னியல்பாகவும் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் அரசாங்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்குவது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு.

இம்மக்கள் எழுச்சிகளில் ஒருபகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது. மக்கள் தாமாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.அவற்றுக்கு தலைமைத்துவம் உண்டு,வழிகாட்டல் உண்டு. ஒரு அரசியல் வழி வரைபடம் உண்டு. ஆனால் தன்னியல்பான போராட்டங்கள் அப்படியல்ல.அவற்றுக்கு தலைமைத்துவம் இல்லை.பொது சனங்களின் கோபம்தான் அந்த போராட்டங்களுக்கான உணர்ச்சிகரமான அடிப்படை. அப் போராட்டங்களில் கட்சிகளின் சின்னங்கள் இல்லை,கட்சிகளின் கோரிக்கைகளும் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பொதுவாக சிங்கக்கொடிகளோடு காணப்படுகிறார்கள்.இவர்களுக்கு தலைமைதாங்கி ஒன்று திரட்டும் மக்கள் இயக்கம் அரங்கில் இல்லை.அரங்கில் உள்ள கட்சிகளும் ஒற்றுமையாக இந்த மக்கள் எழுச்சி களுக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை.

இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளுக்கு இது போல ஒரு பொன்னான தருணம் கிடைக்கவில்லை. இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி அவற்றை அவற்றின் உச்சம் வரை கொண்டு போக எதிர்க்கட்சிகள் தயாரா?

கடந்த சில வார நிகழ்வுகளை உற்றுப்பார்த்தால், குறிப்பாக நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களை உற்றுப் பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு அவ்வாறு மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைத்து புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் இல்லை என்றே தெரிகிறது.

இதுபோன்ற மக்கள் எழுச்சிகளை சரியாக வழி நடத்தினால் அவை புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவ்வாறு வழி நடத்தாவிட்டால் அவை திசை திருப்பப்படும்.அல்லது காலகதியில் சோர்ந்து போய்விடும்.

வழிநடத்தப்படாத மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படுமாக இருந்தால் அவை விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை வன்முறையில் போய் முடியும். அது அரசாங்கத்துக்கு படைத்தரப்பை ஏவிவிடுவதற்குரிய வாய்ப்புக்களை வழங்கக் கூடும்.அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை கையாள்வதற்கு படைத்தரப்பை அனுப்பத் தயாரில்லை.சரத் பொன்சேகா கூறியதுபோல எட்டாம் வகுப்பு வரை படித்த சிப்பாய்களை அங்கே அனுப்பக்கூடாது என்று தீர்மானித்து அரசாங்கம் அதை செய்யவில்லை.சரத் பொன்சேகா கூறுவதற்கு முன்பே அரசாங்கம் அந்த முடிவை எடுத்து விட்டது.

ஏற்கெனவே இன முரண்பாட்டில் போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் படைத்தரப்பை ஒப்பீட்டளவில் அதிகம் பாதுகாத்தது இந்த அரசாங்கம்தான். போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஒருவர் மற்றவரை பாதுகாக்க வேண்டிய தேவை பரஸ்பரம் படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் அதைச் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் படைத்தரப்பை அதன் சொந்த மக்களோடு மோத விடத் தயங்குகிறது.அதன் மூலம் படைத்தரப்பின் பெயர் மேலும் கெடுவதை அரசாங்கம் விரும்பவில்லை.

தவிர இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளின்போது படைத் தரப்பை முன்னிறுத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரும்.ஏற்கனவே கொழும்பில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்ட முற்பட்ட ராணுவத்தின் பீல்ட் பைக் அணியைச் சேர்ந்த ஒரு சிப்பாய் போலீசாரால் தாக்கப்பட்டது விவகாரம் ஆக மாறியிருக்கிறது.

அதேசமயம் வழிநடத்தப்படாத எழுச்சிகளை அடக்க முற்படாமல் அவற்றை அவற்றின் போக்கிலேயே விட்டால், அவை ஒரு கட்டத்தில் தேங்கி நின்றுவிடும் அல்லது சோர்ந்து போய்விடும்.இதற்கு உலகளாவிய அனுபவங்கள் உண்டு.எனவே தன்னியல்பான மக்கள் எழுச்சிகளை எதிர்க்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன்மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக நீர்த்துப் போய்விடும்,சோர்ந்து போய்விடும் என்று அரசாங்கம் நம்பக் கூடும்.

இக்காரணங்களினால்தான் அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு படைத்தரப்பை அனுமதிக்கவில்லை.அனுமதிக்கப்பட்ட பொலிசாரும் பல சமயங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகிறார்கள்.

ஹோமகமவில் ஊரடங்கு வேளையிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய பொலிசார் அனுமதித்தார்கள். அதனால் ஹோமாகம பொலிஸுக்கு ‘ஜெயவேவா’ என்று மக்கள் கோஷமெழுப்பியுள்ளார்கள். குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தமது பக்க நியாயங்களை விளக்கிக் கூறிய பொழுது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கண்ணீர் விடுகிறார். கொழும்பில் பீல்ட் பைக் சிப்பாயை தாக்கியது ஒரு போலீஸ் அதிகாரி தான்.

எனவே இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளை படைத்தரப்பு, பொலீஸ் போன்றவற்றின்மூலம் அடக்குவதில் உள்ள வரையறைகளை அரசாங்கம் உணர்ந்து இருக்கிறது.மாறாக அவற்றை அடக்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன் மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக வேகம் தணிந்து சோர்ந்து போகக்கூடிய வாய்ப்புக்களையும் கவனத்தில் எடுத்து அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகம் அடக்க முற்படவில்லை.

இவ்வாறு அரசாங்கம் அடக்க தயங்கும் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கி மக்களின் கோபத்தை ஒரு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எதிர்க்கட்சிகள் மேற்படி மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைக்க முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தாங்களாக கூட்டங்களையும் எழுச்சிகளையும் ஒழுங்குபடுத்தி வருகின்றன.ஆனால் தன்னியல்பான மக்கள் எழுச்சிகள் பொறுத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பொதுவான வழி வரைபடம் இருப்பதாக தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளால் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதனை அரசாங்கம் நன்கு விளங்கி வைத்திருக்கிறது.மக்கள் எழுச்சிகளுக்கு தலைமை தாங்கத் தவறியது மட்டுமில்லை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான உறுப்பினர்களை திரட்டி ஒரு பெரும்பான்மையைக் காட்டுவதிலும் எதிர்க்கட்சிகள் இன்று வரையிலும் முன்னேறவில்லை. அரசாங்கம் அதை ஒரு சவாலாகவே எதிர்க்கட்சிகளின் நோக்கி முன்வைக்கின்றது. ஆனால் அரசாங்கம் கேட்கும் பெரும்பான்மையை காட்ட எதிர்க்கட்சிகளால் முடியாமல் இருக்கிறது அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம் எதிர்க் கட்சிகள் மத்தியில் எல்லாரையும் ஒன்றிணைக்கவல்ல, மூன்று இன ங்களின் வாக்குகளையும் கவரவல்ல ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவாகக் காணப்படுவது.

இரண்டாவது காரணம் எதிர்க்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயாரில்லை.அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்பதன்மூலம் தோல்வியின் பங்காளிகளாக மாறத் தயாரில்லை.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை யார் வந்தாலும் எடுத்த எடுப்பில் தீர்க்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கும் நன்கு தெரிகிறது. எனவே ஏற்கனவே தோற்றுவிட்ட அரசாங்கத்தை மேலும் மோசமாக தோல்வியுற வைப்பதன் மூலம் தமக்கு சாதகமான ஒரு நிலைமையை கனிய வைக்கலாம் என்று எதிர்கட்சிகள் கார்த்திருக்கின்றனவா?ஆனால் அரசாங்கம் எவ்வளவுதான் தோல்வியுற்றாலும் யாப்புக்குள் நின்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாமா?

மூன்றாவது காரணம் யாப்பு. இப்போதிருக்கும் நெருக்கடிகள் யாவும் ஒருவிதத்தில் யாப்பு நெருக்கடிகள்தான். யாப்புக்குள் நின்று இப்போதிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவது கடினம்.நாடாளுமன்றத்தை உரிய காலம் வரும்வரை கலைக்க முடியாது.நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை நெருக்கடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஒன்றில் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.அல்லது அவரை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளிடம் அதற்கு வேண்டிய பலம் உண்டா? இல்லையென்றால் இந்த ஜனாதிபதியின் கீழ்தான் ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக வேண்டியிருக்கும். அப்படி இடைக்கால ஏற்பாட்டுக்கு போனால் அதில் ஜனாதிபதியின் தோல்வியை புதிய இடைக்கால கட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த பிரச்சினைக்கு யாப்புக்குள் தீர்வு கிடையாது. யாப்புக்கு வெளியே சிந்திக்க வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.”நாங்கள் யாப்பு ரீதியிலான ஜனநாயகத்தை அதற்குரிய கட்டமைப்புக்களுக்கூடாக உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி முறைமையின் கீழ் இந்த ஜனாதிபதியின் கீழ் அதற்கான வழி எதுவும் முன்னாள் இல்லை” என்று சஜித் கூறுகிறார்.

மேற்கண்ட மூன்று காரணங்களின் அடிப்படையிலும் தொகுத்துப் பார்த்தால் இப்போதிருக்கும் நெருக்கடியை யாப்புக்குள் நின்று தீர்க்க முடியாது. ஆனால் யாப்புக்கு வெளியே போனால் தீர்வு உண்டு.அவ்வாறு வெளியே போகத் தேவையான துணிச்சலையும் பலத்தையும் மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைப்பதன்மூலம் பெறலாம்.ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இதுதான் பிரச்சினை.

ஏற்கனவே தோல்வியுற்ற ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப யாப்பு தடையாக இருக்கிறது. அந்தத் தடையை உடைத்துக்கொண்டு முன் செல்ல தேவையான பலத்தை மக்கள் எழுச்சிகள் வழங்குகின்றன.ஆனால் எதிர்க் கட்சிகளும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாராக இல்லை. இப்படிப்பார்த்தால்,இலங்கைதீவில் அரசாங்கம் தோற்றுவிட்டது. எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன. மொத்தத்தில் இலங்கைதீவே தோற்றுவிட்டது. இதில் 2009இல் ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றி எங்கே?

மனித உரிமைகளும் மதித்தல், பாதுகாத்தலையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. நிபுணர்கள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. நிபுணர்கள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது.அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டு கடன், ஊழல் மற்றும் கொரோனா நெருக்கடி ஆகியவற்றின் தாக்கம், நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

“இனவரம்பில்லாமல் உதவ வேண்டும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனோ கணேசன் வேண்டுகோள்

இனவரம்பில்லாமல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழக முதல்-அமைச்சரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்-அமைச்சரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம்” என்று அதில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து இடம்பெயர்

இலங்கை நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் பொருளாதார கஷ்டத்தின் நிமித்தம் வட பகுதி மக்கள் மன்னார் பாக்குநீர் வழியாக இந்தியாவுக்கு தங்கள் குடும்பங்களுடன் அகதிகளாக இடம்பெயரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்து.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 19 பேர் அதிகளாகச் சென்று தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்ற இவ்வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் படகு ஒன்றில் மன்னாரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) அதிகாலை தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு போய் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து மெரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 9 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழலில் தற்போது இலங்கை மன்னார் பகுதியில் இருந்து புறப்பட்ட மேலும் 10 பேர் மணல் தீடையில் இறங்கியுள்ளதாகவும்

ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) மட்டும் ஒரே நாளில் 19 இலங்கை அகதிகள் தலைமன்னார் பாக்குநீர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அகதிகளாகச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.தீடையில் நின்றவர்களை தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெவர் கிராப்ட் கப்பல் மூலம் 10 பேரை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அகதிகளாகச் சென்ற இவ் இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார் ஜனாதிபதி ! இன்றிரவு முக்கிய பேச்சு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள பாராளமன்ற உறுப்பினர்களை , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய, 41 எம்.பிக்களுக்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு 7 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறே கோரியுள்ளனர்.

இதேவேளை, விமல் வீரவங்ச உள்ளிட்டவர்கள், அதனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு காரணமான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தென்னிலங்கை மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று கொட்டும் மழையின் மத்தியிலும் தொடர்கிறது.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நேற்றைய நாள் கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களில் பெருமளவானவர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் அங்கேயே தரித்திருந்து போராடி வருவதாக கொழும்பும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களுக்கு பலர் உணவு, தேநீர் என்பவற்றை வழங்கி ஆதரவு தெரிவித்துவருவதாகவும் தெரியவந்துள்ளது.

இன்றைய தினமும் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கொந்தளிக்கும் சிங்கள மக்கள்: தமிழ்மக்களின் நிலைப்பாடு என்ன? – நிலாந்தன்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் எந்த அரசியல் இலக்கை முன்வைத்து அவ்வாறு ஒன்று சேர்ந்து போராடுவது என்பதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

சிங்கள மக்கள் போராடுவது ஒரு ஆட்சி மாற்றத்திற்காக.ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? 2015 இல் நடந்ததுதான் திரும்பவும் நடக்கும்.ஏனென்றால் ஆட்சி மாற்றம் எனப்படுவது,இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் அரசாங்கத்தைத்தான் மாற்றும். மாறாக அரசுக் கட்டமைப்பை மாற்றாது. தமிழ் மக்கள் கேட்பது அரசுக் கட்டமைப்பை மாற்ற வேண்டுமென்று.ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றி இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு சமஸ்டி கட்டமைப்பைத்தான் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்.தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் ஆட்சி மாற்றத்துக்கு உரியவை அல்ல.அவை அரசுக் கட்டமைப்பில் மாற்றத்தை கேட்பவை.

ஏற்கனவே 2015இல் ஒரு ஆட்சி மாற்றத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழ்மக்கள். அந்த ஆட்சிமாற்றத்தின் எதிர்மறை விளைவுதான் மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை நோக்கி ராஜபக்சக்கள் உழைக்கக் காரணம். தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை ஆட்சிமாற்றத்தின் அப்பாவிப் பங்காளிகளாக மாறி ஏமாற்றம் அடைய முடியாது.எனவே சிங்களமக்கள் இப்பொழுது தென்னிலங்கையில் நடத்தும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

தென்னிலங்கையில் நடக்கும் போராட்டங்கள் ஒரு பகுதி தன்னியல்பானவை. இன்னொரு பகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுவன. தென்னிலங்கையில் உள்ள நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வீதியில் இறங்கியிருக்கிறது.ஏனென்றால் மின்சாரம் இல்லை,எரிவாயு இல்லை, அத்தியாவசிய பொருட்கள் இல்லை.மின்சாரம் இல்லையென்றால் விசிறி இல்லை,குளிரூட்டி இல்லை.காலமோ கோடை.அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்படியிருப்பது? கிராமத்தில் கல்லை வைத்து விறகில் சமைக்கலாம்.ஆனால் அடுக்குமாடியில் என்ன செய்வது?பிரச்சினை நடுத்தர வர்க்கத்தை தாக்கிவிட்டது.அவர்கள் தெருவில் இறங்கினார்கள்.கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை உருவாக்கினார்கள்.அந்த கோஷத்துக்கு உயிர் கொடுத்தார்கள்.ஜனாதிபதியின் மாளிகையை முற்றுகையிட்டார்கள்.

சிங்கள மக்கள் முன்வைக்கும் கோஷங்களில் பெரும்பாலானவை ஆளும் அரசாங்கத்துக்கு எதிரானவைதான்.சிங்களபவுத்த அரசுக் கட்டமைப்புக் எதிரானவை அல்ல என்பதனை தமிழ்மக்கள் கவனிக்கவேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களில் மிகச்சிலரைத்தவிர பெரும்பாலானவர்கள் ஆட்சிமாற்றத்தைத்தான் கேட்கிறார்கள்.மிகச்சிலர்தான் தமிழ்மக்களுக்கு நீதி வேண்டும்,போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கிறார்கள்.அவர்கள் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையினர்.அவர்களால் பெரும்பான்மை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.ஆனால் தமிழ்மக்களின் உண்மையான நண்பர்கள் அவர்கள்தான். அவர்களை எப்பொழுதும் தமிழ் மக்கள் மதித்து நடக்க வேண்டும்.

அதேசமயம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பொறுத்தவரை தமிழ்மக்கள் தமது கோரிக்கைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு, இனப்படுகொலைக்கு நீதி போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் தமிழ்மக்கள் அவர்களோடு இணைந்து போராடலாம்.12 ஆண்டுகளுக்கு முன் யுத்த வெற்றியை பால்சோறு பொங்கி கொண்டாடிய ஒரு மக்கள் இப்பொழுது அதே யுத்த வெற்றி நாயகரை கீழ்தரமான வார்த்தைகளால் நிந்தித்து வீட்டுக்குப் போ என்று கேட்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கு பழி வாங்கியவருக்கு உண்டாகும் திருப்தியை கொடுக்கலாம். ஆனால் பிரச்சினை அதைவிட ஆழமானது.

கோட்டாபய ஒரு கருவிதான்.மஹிந்தவும் ஒரு கருவிதான். சிங்கள பௌத்த பெருந் தேசியவாத அரசின் கருவிகளே அவர்கள்.இன ஒடுக்குமுறையை அவர்கள் உச்சத்துக்குக் கொண்டு போனார்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.இன ஒடுக்குமுறையானது மகிந்தவுக்கும் முன்னரும் இருந்தது.தமிழ்மக்கள் போராட வேண்டியது இனஒடுக்குமுறைக்கு எதிராகத்தான். இனஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கும் அரசுக் கட்டமைப்பு எதிராகத்தான்.ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான போராட்டம் என்பது இன ஒடுக்குமுறைக்கு எதிரான பெரும் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அதுவே முழுப் போராட்டம் ஆக முடியாது. ஒரு குடும்பத்தை மட்டும் எதிராக பார்த்து அந்தக் குடும்பத்தை அகற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்புவது ஆட்சி மாற்றத்தில்தான் முடியும். இதுதான் 2015 ஆம் ஆண்டு நடந்தது.

எனவே தமிழ் மக்கள் இப்பொழுது மிகத் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டம் முற்போக்கானதே. அதே சமயம் சிங்கள மக்களோடு இணைந்து போராட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். கோட்டாவை ஆட்சியில் இருந்து அகற்றத் துடிக்கும் எந்த ஒரு எதிர்க்கட்சியும் சமஸ்டியை ஏற்றுக்கொள்ளவில்லை.13ஆவது திருத்தத்தை தாண்டிப் போகத் தயாராகவும் இல்லை.இப்படிப்பட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை கேட்கவும் முடியாது, ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க வும் முடியாது. ஏனென்றால் எனது கடந்த வாரத்துக்கு முதல் வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தேசிய அரசாங்கம் என்பது சிங்கள பௌத்த தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால் அதில் தமிழ்மக்கள் இணைவதில் எந்த பயனும் கிடையாது. அது ஒரு பல்லித்தன்மை மிக்க தேசிய அரசாங்கமாக அமையுமாக இருந்தால்,தமிழ் பிரதிநிதிகள் அதைக்குறித்து தீவிரமாக யோசிக்கலாம்.

எனவே தென்னிலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பைக் கண்டு தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.கிருணிகாவுக்கு ரசிகர் மன்றத்தை கட்டியெழுப்பவும் தேவையில்லை.இப்பொழுது சஜித் பிரேமதாச கூறுகிறார் ஜனாதிபதி முறையை அகற்ற வேண்டும் என்று.ஆனால் அவரும் இதற்கு முன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்.மட்டுமல்ல சந்திரிகாவும் அவ்வாறு போட்டியிட்டவர்தான்.போட்டியிடுவதற்கு முன்பு ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டும் என்பார்கள்.ஆனால் தேர்தலில் வென்றதும் அதை மறந்து விடுவார்கள்.நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை என்பது இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை பலவீனப்படுத்தும் பல அம்சங்களில் ஒன்றுதான்.ஆனால் அதைவிட ஆழமான அம்சங்கள் உண்டு.சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி கட்டமைப்புதான் இலங்கைத் தீவின் ஜனநாயக இதயத்தை தொடக்கத்திலிருந்தே பலவீனப்படுத்தியது.இச்சிறிய தீவின் பல்லினத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமைதான் எல்லாவற்றுக்கும் மூல காரணம். எனவே இங்கு தேவையாக இருப்பது யாப்பு மாற்றம். அந்த யாப்பு மாற்றத்துக்குள் ஜனாதிபதி முறைமையும் அடங்கும்.இந்த அடிப்படையில் கோரிக்கைகளை முன்வைக்குமாறு தமிழ் தரப்பு எதிர்க்கட்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.அவ்வாறு ஊக்குவித்து இது விடயத்தில் எதிர்க்கட்சிகளுடன் ஓர் அரசியல் உடன்படிக்கையை உருவாக்க வேண்டும்.இது எரிகிற வீட்டில் லாபம் பிடுங்கும் அரசியல்தான்.ஆனால் அது தவிர்க்க முடியாதது.கடந்த சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் வீடுகளை எரித்த அரசியல் அது.எனவே அப்படியோர் உடன்படிக்கையைச் செய்ய முடிந்தால் அடுத்த கட்டமாக சிங்கள மக்களோடு இணைந்து தெருவில் இறங்கலாம்.

தென்னிலங்கையில் நடப்பவைகளோடு ஒப்பிடுகையில் தமிழ்மக்கள் அந்த அளவுக்கு கடந்த 12 ஆண்டுகளில் போராடவில்லை என்பது உண்மைதான். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் தம்மை நோக்கி வீசப்பட்ட கண்ணீர் புகைக்குண்டைத் திரும்பவும் போலீசாரை நோக்கி வீசுகிறார்கள். போலீசாரின் தற்காலிகத் தடுப்புகள் உருட்டிக் கொண்டு ஓடுகிறார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள்.அதிரடிப் படையோடு நெற்றிக்கு நேரே வாக்குவாதப்படுகிறார்கள்.எல்லாம் சரிதான்,ஆனால் அவர்கள் அவ்வாறு எதிர்த்துப் போராடுவதால் அவர்களை யாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதில்லை. இதையே தமிழ் மக்கள் செய்தால் நிலைமை என்னவாகும்? பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப் போட்டுவிடுவார்கள். கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் சட்டமறுப்பு போராட்டங்கள் பெருமெடுப்பில் தொடர்ச்சியாக நடக்காமைக்கு அதுவும் ஒரு காரணம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலிமையாக கேட்பதற்கு இது ஒரு பொருத்தமான சந்தர்ப்பம். கோட்டாவை வீட்டுக்கு அனுப்பத்துடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைப்பார்களா? பயங்கரவாத தடைச்சட்டம் இல்லையென்றால் தமிழ் மக்கள் சிங்கள மக்களை விட ஆக்ரோஷமாக போராட முன் வருவார்கள். ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்தான் தமிழ் அம்மாக்கள் காணாமல் போன தமது உறவுகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கத்தக்கதாகவே கேப்பாபிலவில் பெண்கள் காணிக்காகப் போராடினார்கள்.இரணைதீவுப் பெண்கள் தமது வீடுகளை மீட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மாக்கள் அதிரடிப்படையின் துப்பாக்கி வாய்க்கு நேரே நின்று நியாயம் கேட்கிறார்கள். ஆனால் இவையாவும் சிறிய மற்றும் தெட்டம் தெட்டமான போராட்டங்கள்தான். தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பது போன்று பெருமெடுப்பிலான தொடர்ச்சியான போராட்டங்கள் அல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் இல்லை என்று சொன்னால் தமிழ் அம்மாக்கள் இதைவிட ஆக்ரோஷமாக போராடுவார்கள். அதை அரசாங்கம் தாங்காது.

கடந்த வாரம் கிருனிக்கா யாழ் பேருந்து நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்த சம்பவங்களின் விளைவாக யாழ்ப்பாணத்தில் அவருக்கு ஒரு சிறு ஆதரவு அலை ஏற்பட்டது. ஆனால் இதே கிருனிக்கா கடந்த 12 ஆண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்காகப் போராடும் அம்மாக்களோடு சேர்ந்து போராடினவரா?கேப்பாபிலவில்,இரணைதீவில் தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து போராடினவரா?இல்லையே.இதுதான் தமிழ்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய இடம்.

எனவே தென்னிலங்கையில் நடப்பவை ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி என்ற அடிப்படையில் அதன் முற்போக்கான அம்சத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம் அந்த போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்து நிபந்தனையின்றி ஆதரிக்கவும் தேவையில்லை. இதை இந்த கட்டுரை சொல்லித்தான் தமிழ்மக்கள் செய்ய வேண்டும் என்றும் இல்லை.ஏனென்றால்,ஏற்கனவே தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்கள மக்களோடு பெருமெடுப்பில் இணையவில்லை. தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி நிலமை அப்படித்தான் இருக்கிறது. கிளிநொச்சி வளாகத்தில் உள்ள சிங்கள மாணவர்கள் போராடியபோது தமிழ் மாணவர்கள் அதில் பெரிய அளவில் இணையவில்லை. அப்படித்தான் யாழ் பல்கலைக்கழகத்திலும் சிங்கள மாணவர்கள் போராடிய பொழுது ஒப்பீட்டளவில் குறைந்தளவு எண்ணிக்கையான தமிழ் மாணவர்கள்தான் அதில் இணைந்தார்கள். இவ்வாறாக கடந்த வாரம் முழுவதும் நாடுபூராகவும் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கும் யதார்த்தம் எதுவென்றால் நாடு இவ்வாறான போராட்டங்களின் போதும் பெருமளவுக்கு இனரீதியாக பிளவுபட்டு நிற்கிறது என்பதே.

Posted in Uncategorized

தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுக்கும் ஊடக அறிக்கை

இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாதாரணப் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் தாமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான தீர்வு கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசாங்கமும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாண்டு, அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில் முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக் கூடிய மாபெரும் ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தீ பரவுவதற்கு முன்னர் அதனைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைப்பதற்கான நடவடிக்கைகளே இப்பொழுது உடனடியான தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த நெருக்கடி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அடிப்படையான காரணம் தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளது.

இன்று கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் தேவைப்படுவதெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்வதே ஆகும்.

எனவேதான், இந்த முடிவு இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப் படுவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இன்றைய நிலையில் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சகல அரசியல் தரப்புக்களும் செயற்பட்டு, இந்த முடிவுக்கு வந்து, அதனை நடைமுறைப் படுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதே நாடு எதிர்நோக்கி நிற்கும் மிகப்பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு, சரியான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடியாக இருக்கும் என்பதையும் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.

மாவை சேனாதிராஜா தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி
(த.தே.கூ)
நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் – பா. உ. தலைவர் – தமிழ் மக்கள் கூட்டணி
(த. ம. தே.கூ)
அ.அடைக்கலநாதன்- பா.உ தலைவர்- தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(த.தே.கூ)
தர்மலிங்கம் சித்தர்த்தன் – பா.உ தலைவர்- ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி (த.தே.கூ)
க.பிரேமச்சந்திரன் தலைவர்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணி ( த.ம.தே.கூ)
ந. சிறீகாந்தா தலைவர்- தமிழ் தேசியக் கட்சி (த.ம.தே.கூ)

ஜனாதிபதி செயலகம் முற்றுகை ! பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அமைதிவழிப் போராட்டம் ! காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம் !

கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.

பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின.

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதனால் அன்றாடம் இவ்வாறான பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பெறுமை இழந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

சதித்திட்டம் தீட்டி ஆட்சியை கைப்பற்ற முடியும், பாதுகாக்க முடியாது: கொழும்பு பேராயர் தெரிவிப்பு

சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு ஆட்சியை பாதுகாக்க முடியாமற்போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு – கிரீன்ஸ் விதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இணைந்து கொண்டிருந்தார்.

அருட்தந்தையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது,

இலங்கையில், மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற தாக்குதலை எம்மால் மறக்க முடியாது. இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும் போது, தாக்குதல் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. இந்த பேரழிவிற்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது. சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தௌிவாகின்றது. அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும், ஆனால் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது. கடவுளின் சாபம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆட்சியை கைப்பற்றினால் மாத்திரம் போதுமானதல்ல, அரசாங்கத்தை சரியாக நிர்வகித்து அதனை பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்தாது, முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி , தாக்குதலின் பின்னால் இருந்த அனைத்து சக்திகளையும் மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கிடைத்த சாபமே தற்போதைய நிலைமையாகும். சட்டமா அதிபர் இந்த திட்டங்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இந்நாட்டில் சட்டத்தை, நியாயத்தை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

என பேராயர் தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் சிவில் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி பேரணி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமானது.

குறித்த பேரணி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை முன்னெடுக்கப்படுகின்றது.

Posted in Uncategorized