அதிரும் கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் கொழும்பில் பரபரப்பு!- காணொளி

கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் தற்போது பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசிக்கும் மிரிஹான, அம்புல்தெனிய பகிரிவத்த லேனுக்கு அருகில் பெருமளவு மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக நுகேகொட 119 மஹரகம வீதி முற்றாக தடைப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்ட சிங்கள பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோட்டாவின் இல்லத்துக்கு செல்லும் பாதையை மறித்தே போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்பங்கிரிவத்தை வீதியின் குறுக்கே போலீசார் தடுப்புகளை அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தினர்

பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்கள் தற்போது முகங்கொடுத்து வரும் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடி படையினர் அழைக்கப்படுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியவை தடை செய்யுங்கள் – அவுஸ்திரேவியாவிடம் கோரிக்கை!

அவுஸ்ரேலியா வந்த சிறிலங்கா ஜெனரல் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த அவுஸ்ரேலிய காவல்துறையினர் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதேநேரம், அவுஸ்ரேலியாவின் புதிய மக்னெஸ்கி சட்டத்தின் கீழ் அவரை தடை செய்யும் நேரம் இதுவென மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஜகத் ஜயசூரிய சிறிலங்காவில் நடந்த கொடூர செயல்களுக்கு தலைமை தாங்கி நடாத்தியமைக்காகவும், அவுஸ்ரேலியாவிற்குள் அவரை விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்னர் அவரை அவுஸ்ரேலிய காவல்துறை விசாரணை செய்யத் தவறியதைத் தொடர்ந்தும் அவர் மீது தடைவிதிக்குமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அவுஸ்ரேலியத் தமிழர்களும் மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த அமைப்புக்கள் இணைந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியாவுக்கும் ஏனைய அரசாங்கங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே ஜயசூரியாவைத் தடைசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. மக்னிஸ்கை தடைகள் என்று அறியப்படும் அவுஸ்ரேலியாவின் புதிய மனித உரிமைகள் தடைச்சட்டத்தினைப் பயன்படுத்தி ஜயசூரியாவைத் தடைசெய்யுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தும் 100 பக்கங்களைக் கொண்ட முதலாவது வேண்டுகை கடந்த 2022 மார்ச் 4ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

2019ஆம் ஆண்டு மே இல் போர்க்குற்றவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஜகத் ஜயசூரியா தன் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக அவுஸ்ரேலியாவுக்கு வந்ததுடன் மட்டுமன்றி மெல்போணில் நடந்த பொது நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம், நீதி சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம், மனித உரிமைகள் சட்ட மையம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து அவுஸ்ரேலியச் சட்டத்திலுள்ள சர்வதேச சட்டஅதிகார வரம்பின் கீழ் ஜயசூரியா மீது அவசர குற்ற விசாரணையை நடத்துமாறு அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறைக்கு எழுதின.

தொடர்ந்து, கொடுமைகள், சித்திரவதைகளிலிருந்து உயிர்தப்பியவர்கள், சாட்சிகள் 40 பேருடைய ஒருதொகுதி வாக்குமூலங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை வரைவினையும் அவர்கள் சமர்ப்பித்திருந்தர்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர் சட்ட அதிகார வரம்பிற்குள் இருந்தும், அவர் மீண்டும் திரும்பவும் வருவதற்கான சாத்தியங்கள் இருந்தும் பாரதூரமான சர்வதேசக் குற்றச்செயல்கள் தொடர்பான அறிக்கைகளை சிரத்தை எடுத்து விசாரணை செய்யத் தவறியதன் ஊடாக பொறுப்புக்கூறலை சிறுமைப்படுத்துவதாக அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை மீது இவ்வமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

கடந்த 2019 ஒக்ரோபர் பிற்பகுதியிலும் நவம்பரிலும் ஜயசூரியா மீண்டும் அவுஸ்ரேலியாவுக்கு வந்திருந்தார் என்றும், பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவுஸ்ரேலிய கூட்டாட்சி காவல்துறை, அவுஸ்ரேலிய உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம், கொழும்பிலுள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரகம் ஆகியவற்றின் தவறான நடவடிக்கைள் மீது விசாரணை நடத்துமாறு இவ்வமைப்புக்கள் அழைப்பு விடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விசாரணைக் குழு ஒன்று அவசரமாகத் தேவைப்படுகின்றது என்பதையே இப்பாரதூரமான தவறுகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. அதன் மூலமாக சர்வதேச குற்றச்செயல்கள் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த விசாரணையாளர்கள் இவ்வாறான சூழ்நிலைகளில் விரைந்து செயற்பட்டு உடனடியாக பதில்தரமுடியும்.

2009 மே மாதத்தில் முடிவடைந்த சிறிலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றின் பாரதூரமான மீறல்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இட்டுச்சென்ற பரவலான நடவடிக்கைகளுக்கு அல்லது தவறுகளுக்கு ஜயசூரியா பொறுப்பானவராவார்.

பின்வரும் நடவடிக்கைகளுக்கு அவர் அங்கீகாரம் வழங்கி, மேற்பார்வை செய்துள்ளார்:

-சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள்,

-பாதுகாக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள் உட்பட சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் பாரதூரமான மீறல்கள்,

-பொதுமக்கள் கொலைகள்,

-வலிந்து காணாமல் ஆக்குதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள்,

2017 ஆகஸ்டில் ஜயசூரியா இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குரிய தூதுவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த நேரத்தில் பிரேசில், சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளிலுள்ள வழக்குத் தொடுனர்களுடன் இணைந்து சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் அவர் மீது குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர் சிறிலங்காவுக்குத் தப்பியோடினார்.

ஜயசூரியாவின் உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் தடைகளை நியமிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் இந்த தடைக்கோரிக்கையில் உள்ளடங்கும். இது அவுஸ்ரேலியாவின் மக்னிஸ்கை சட்டத்தின் கீழ் உள்ளது.

ஜயசூரியாவின் குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்ரேலியாவில் தங்கியிருந்து இங்கு மூன்றாம் நிலை படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் உள்நாட்டுப்போர் முடிந்து ஒரு தாசாப்தம் கடந்த நிலையிலும், போரில் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்குக் காரணமென எந்தவொரு சூத்திரதாரிகளும் தண்டிக்கப்படவில்லை. உலகளாவிய சட்ட அதிகார வரம்புக் கோட்பாடு என்பதைத் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் தப்பியவர்களுக்கு எந்தவொரு பொறுப்புக்கூறும் பொறிமுறைகளும் இல்லை. ஆகவே, பொறுப்புக்கூறலில் காணப்படும் இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கும், இந்த ஜெனரல்கள் அனுபவித்துவரும் தண்டனையிலிருந்து விலக்களிப்பினை இல்லாமல் செய்வதற்கும் இத்தடைகள் உதவும். இது சிறிலங்காவின் ஜெனரல்களைத் தடைசெய்யவேண்டிய நேரம் இது.

வன்னியின் பாதுகாப்பு வலயத்திலிருந்து உயிர்தப்பி வந்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பின்வருமாறு கூறினார்:

‘போரின் இறுதிக்கட்ட நேரத்தில் நான் ‘பாதுகாப்பு வலயத்தில்| இருந்தேன். நான் பயங்கர நிகழ்வுகளை நேரில் கண்டேன். போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதிலும், அதன் ஆறா வடுக்களும் மனப்பாதிப்புக்களும் இன்னமும் என்னுடைய வாழ்க்கையைப் பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. குற்றமிழைத்தவர்கள் எவ்விதமான வருத்தமும் இன்றி அல்லது தாம் செய்த தவறுகளுக்கு விமோசனம் தேடாமல், சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியும் என்பதை நினைக்கும்போது எனக்கு வலிக்கின்றது. நீதிக்கான வேட்கையில், தவறு செய்பவர்களுக்குரிய இச்சலுகைகள் மறுக்கப்படவேண்டும்.’

தமிழ் அகதிகள் சபையைச் சேர்ந்த திரு. அரண் மயில்வாகனம் பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவின் போரிலிருந்தும் அங்கு நடந்த சித்திரவதைகளிலிருந்தும் உயிர்தப்பி வந்த பல நூற்றுக்கணக்கானோர் எங்கள் சமூகத்தில் இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் அவுஸ்ரேலியக் குடிமக்களாக இருக்கின்றார்கள். இவர்களில் பலர் ஜகத் ஜயசூரியாவின் தலைமையின் கீழ் சிறிலங்கா இராணுவத்தின் குற்றச்செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து வந்து அகதித் தஞ்சம் கோரியவர்கள். அவர் செய்த குற்றச்செயல்களுக்கு எவ்விதமான விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாமல் சுதந்திர மனிதராக அவுஸ்ரேலியாவில் அவரை அனுமதித்தது அபத்தமானது.

உயிர்தப்பியர்வகளுக்கு அவுஸ்ரேலியா செவிமடுத்து, ஒன்றில் அவரைத் தடைசெய்யவேண்டும் அல்லது அவர் மீது விசாரணை தொடரவேண்டும். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவிலிருந்து வரும் போர்க் குற்றவாளிகள் என்று குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு அவுஸ்ரேலியா ஒரு சொர்க்கபூமியாக இருக்கக்கூடாது – குறிப்பாக இங்கே வாழும் பெரியளவிலான தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமைக் கடப்பாட்டினை மதிக்கவேண்டும் என்று தமது அரசாங்கத்தை எதிர்பார்க்கும் வேளையில் இது நிகழ்ந்துவிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது சொந்த நாடு நீதிவழங்க விருப்பமின்றி இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உண்மையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச சமூகத்திற்கு முக்கியமான கருவியாக மக்னிஸ்கை சட்டங்கள் காணப்படுகின்றன.

‘சர்வதேச நீதிக்கான அவுஸ்ரேலிய மையம் அமைப்பின் நினைவேற்றுப் பணிப்பாளர் றவான் அரவ் பின்வருமாறு கூறினார்: ‘

ஜகத் ஜயசூரியா தான் இழைத்த குற்றங்களுக்காக ஒரு நாள் நீதிமன்றத்திற்கு பதில்சொல்ல வேண்டிவரும் என்று நாம் நம்புகின்ற அதேவேளையில், அவர் சிறிலங்காவில் நடந்த கொடுமைகளில் அவர் வகித்த வகிபாகத்திற்காக அவரை தடைசெய்ய வேண்டும் என்று நாங்கள் அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம். அவருடைய குற்றச்செயல்களில் பாதிகப்பட்டு உயிர்தப்பி வந்த பலர் அவுஸ்ரேலியாவை தாயகம் என்று அழைக்கின்றார்கள். இப்பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதுடன், பிரித்தானிய மற்றும் இதர நாடுகளுடன் இணைந்து சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பான ஜயசூரியா மீதும் இதர சிறிலங்காவின் ஜெனரல்கள் மீதும் தடைகளை விதிக்கவேண்டும்.’

‘பாரதூரமான ஒரு குற்றவியல் பரிந்துரையையும் அவுஸ்ரேலியாவில் போர்க்குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் சுதந்திரமாக நடமாடுகின்றார் என்ற எங்களது எச்சரிக்கையையும் கையாண்ட விதத்திற்கும் அவர்கள் இழைத்த தவறுக்கும் அவுஸ்ரேலிய ஃபெடரல் காவல்துறை பதில்கூறவேண்டும். அவர்களது இக்குழப்பத்தின் மீது ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும். பல தடவைகள் எவ்வாறு ஜயசூரியாவால

அவருடைய ஆட்பரிசோதனையைத் தாண்டி பல தடவைகள் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு உள்நாட்டு அலுவலகம் பதிலளிக்கவேண்டும்.

‘நாங்கள் அவுஸ்ரேலிய ஃபெடரல் காவல்துறையை எச்சரிக்கை செய்து ஐந்து மாதங்களின் பின்னரும் அவர் மீண்டும் அவுஸ்ரேலியாவுக்குள் வந்துள்ளார் என்பது மனித குலத்திற்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து விசாரணை நடத்துவற்கான அவுஸ்ரேலியாவின் பொறுப்புக்கு விழுந்த ஒரு அவமானமாகும்.

அவுஸ்ரேலிய வாழ் தமிழ்ச் செயற்பாட்டாளராக மருத்துவர் சாம் பாரி பின்வருமாறு கூறினார்:

‘சிறிலங்காவில் நடந்த கொடுமைகளிலிருந்து உள்ளாகி உயிர்தப்பி இங்கு வந்துள்ள தமிழர்கள் அவுஸ்ரேலியாவை தயாகமாகவே அழைக்கின்றார்கள். இக்குற்றச்செயல்களில் ஈடுபட்ட சூத்திரதாரிகளை நீதியின்முன் கொண்டுவருமாறு அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகம் பல வருடங்களாக அறைகூறவல் விடுத்துவருகின்றது. இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக ஜயசூரியாவை விசாரணைக்குட்படுத்தத் தவறியதன் மூலமாக, பொறுப்புக்கூறலுக்கான உண்மையான ஒரு கட்டமைப்பினை ஒருபோதுமே ஏற்படுத்தாத சிறிலங்காவில் எப்படி அவர்கள் தண்டனைவிலக்கினை அனுபவிக்கின்றார்களோ அதேபோன்றே அவுஸ்ரேலியாவிலும் குற்றச்சாட்டப்பட்ட சூத்திரதாரிகள் தண்டனைவிலக்கினை அனுபவிக்கலாம் என்ற செய்தியையே அவுஸ்ரேலியா வெளியுலகுக்கு அனுப்புகின்றது.’

‘தனது சர்வதேச கடப்பாடுகளுடன் இணங்கிக்செல்வதற்காக ஒரு உண்மையான செயற்றிறன் மிக்க கட்டமைப்பினை அவுஸ்ரேலியா ஏற்படுத்தவேண்டும். விசாரணை செய்வதற்கான தன்னுடைய கடப்பாட்டிலிருந்து தவறியதன் ஊடாக, அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவில் கொடுஞ்செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை காட்டும் நம்பகரமான ஆதாரங்கள் உள்ள ஜயசூரியா போன்ற நபர்களைத் தடைசெய்யவேண்டும்.

ஜெய்சங்கர் சொல்லாமல், சொன்னது? – Elanadu Editorial

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய் சங்கர், கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வழக்கத்திற்கு மாறாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதாவது. அரசாங்கத்தின் அரசியல் யாப்பு முயற்சிகளுக்குள் சிக்கிவிடாதீர்கள். அண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய விடயங்களை சம்பந்தன் பகிர்ந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதியதோர் அரசியல் யாப்பு தொடர்பில் சம்பந்தன் தரப்பு, காலத்தை விரயம் செய்திருந்தது. சம்பந் தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒருமுறை கூட சம்பந் தன் இந்தியாவுக்கு செல்லவில்லை. புதிய அரசியல் யாப்பு முயற்சி வெற்றியளிக்காது – காலத்தை விரயம் செய்யாமல், அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்து, ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான முயற்சிகளை செய்யுமாறு பலரும் கோரியிருந்தனர்.
பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. குறிப்பாக டி. பி. எல். எவ் தலைவர் சித்தார்த்தன், புதிய அரசியல் யாப்பில் தனக்கு நம்பிக் கையில்லை என்று தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால், சம்பந்தனும் சுமந்திரனுமே புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தனர்.

ரணில் – மைத்திரி கால சம்பந்தனின் அணுகுமுறை முற்றிலும் கொழும்பு மட்டும் போதுமானது என்னும் அடிப்படையில்தான் இருந் தது. இந்தியாவின் உதவி தேவையில்லை என்னும் அடிப்படையிலேயே சம்பந்தனும் சுமந்திரனும் செயல்பட்டுவந்தனர். ஆனால், அனைத்தும் தோல்விடைந்த நிலையிலேயே மீளவும் இந்தியாவின் தயவை நாடினர். இந்த அனுபத்திலிருந்தே ஜெய்சங்கர் இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்கனவே, ரணில் – மைத்திரி கால அரசியலமைப்பு திட்டத்துக்குள் சிக்குப்பட்டு காலத்தை விரயம் செய்ததுபோல் மீளவும் செய்யாதீர்கள் – என்பதுதான் அவர் சொல்லா மல், சொன்ன செய்தி.

இலங்கையின் அரசியலமைப்பு பிரச்னையை வெறுமனே சட்டக் கண்கொண்டு நோக்கினால் அதிக விடயங்கள் விளங்காமலேயே போய்விடும். இலங்கையின் அரசியலமைப்பு விடயம் வெறும் சட்ட ரீதியில் தீர்க்கக் கூடிய பிரச்னையென்றால் பிரச்னைகள் எப்போதோ தீர்ந்திருக்கும். எனவே, விடயங்களை ஆழமாக விளங்கிக் கொண்டு, கூட்டமைப்பு, சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப விடயங்களைக் கையாள வேண்டும். முன்னைய அரசாங்கத்தில் எதிர்பார்த்த விடயங்கள் எவையும் நடைபெறாமல்போன பின்னர், இந்தியாவிடம் சென்றது போன்றல்லாமல், இந்தியா என்ன கூறுகின்றது – என்பதைத் துல்லிய மாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவது தொடர்பிலேயே கூட்டமைப்பினர் சிந்திக்க வேண்டும். ஜெய்சங்கர் அவ்வாறு கூறிய தற்கு பின்னால் பிறிதொரு விடயமும் உண்டு. அதாவது, அரசாங்கம்
தமிழர் பிரச்னையை ஓர் உள்நாட்டு பிரச்னையென்றவாறு வாதிட முயற்சிக்கின்றது.

தமிழர் பிரச்னையில் இந்தியாவின் தலையீட்டை நுட்பமாக தவிர்க்க விரும்புகின்றது. அரசாங்கத்தின் நகர்வுகளுக்குள் சிக்கிவிடாதீர்கள் – சிக்கிக் கொண்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். ஜெய்சங்கர் சொல்லாமல் சொன்ன இன் னொரு செய்தி இது.

Posted in Uncategorized

இ.தொ.கா சந்தா பெறாத தொழிற்சங்கமாக மாற்றியமைக்கப்படும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும்,  பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் நேன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்டது. எமது மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் நாம் தொடர்ந்து தீவிரமாக செயற்படுவோம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத சங்கமாக மாறவேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியமும்கூட. அதனை நாம் நிறைவேற்றுவோம். தற்போது சந்தா பெற்றாலும் கணக்கு விவரம் உரியவகையில் காண்பிக்கப்படுகின்றது.

அரசில் இருந்து வெளியேறுவது சம்பந்தமாக இன்று கலந்துரையாடப்படவில்லை. ” – என்றார்.

ராஜீவ் கொலை வழக்கு : எழுவர் விடுதலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், நளினியை விடுதலை செய்வது குறித்து எவ்வாறு உத்தரவுப்பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (புதன்கிழமை) மாலை முதலே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளில் அதிகளவானவர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

நாம் வாய் திறந்தால் நாடு பற்றியெரியும் – விமல்

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியுமென எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே  பசில் அவ்வாறு கூறினார் என்றார்.

பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்  திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அடுத்தவாரம் முதல் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.12 மணி நேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை. நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஏனைய அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்!

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும்.

எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில், ஜனாதிபதி அல்ல பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் நபரே பலம் மிக்கவராகக் கருதப்படுவார்

அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இது மிகவும் கடினமான விடயம் . அதனை மேற்கொள்ள மக்களின் பேராதரவு கட்டாயம் தேவை என உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிடமிருந்து கடன் கிடைப்பதால், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடன் வசதிகளுடாக கிடைக்கும் சலுகைகள் முடிவடைந்த பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு 113 பேர் ஒன்றிணைந்த பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியும் எனவும் அவர் கூறினார்.