அரசின் பங்காளிகட்சிகள் சற்று முன்னர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளும் இந்த ஆண்டு தனித்தனியாக மே தினத்தை நடத்த தீர்மானித்துள்ளன.

இன்று (29) சற்று நேரத்திற்கு முன்னர் 11 கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மே தினம் குறித்துக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

நிலாந்தன்

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும்.

ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பிச் செல்லும் வழி, அல்லது அரசாங்கம் தனது தோல்விக்கு எதிர்க் கட்சிகளையும் கூட்டுப் பங்காளிகள் ஆக்கும் அல்லது கூட்டுப் பொறுப்பாக்கும் ஒரு தந்திரம், அல்லது காலத்தை கடத்தும் ஓர் உத்தி. அதாவது எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பி காலத்தை கடத்தும் ஓர் உத்தி எனலாம்.

குறிப்பாக,இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து கடந்த பல தசாப்தங்களாக வட்டமேசை மாநாட்டில் இருந்து தொடங்கி இன்று வரையிலான எல்லா சர்வகட்சி மாநாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் தந்திரமான உள்நோக்கம் கொண்டவை என்பது தெரியவரும். இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணைக் கொமிஷன்கள் போலவே சர்வகட்சி மாநாடுகளும் தீர்க்க விரும்பாத ஒரு பிரச்சினைக்காக கூட்டப்படும் மாநாடுகள்தான்.

தமிழ் அரசியலில் முதலில் வட்டமேசை மாநாடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஜி. ஜி. பொன்னம்பலம் என்று கூறப்படுகிறது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் எல்லா கட்சிகளும் ஒரு வட்ட மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்பொழுது அவருடைய அரசியல் எதிரிகளாக காணப்பட்ட தமிழரசுக் கட்சி அப்படி என்றால் சதுரமேசை மாநாட்டைக் கூட்டலாம் என்று அவரை கிண்டல் செய்தார்கள். ஆனால் வட்டமேசை மாநாடுகள், அல்லது சதுர மேசை மாநாடுகள், நல்லது சர்வகட்சி மாநாடுகள் போன்றன தமிழ் மக்களைப் பொறுத்தவரை தோல்வியுற்ற அரசியல் நடைமுறைகள்தான்.

இவ்வாறான தோல்விகரமானதொரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்தே கடந்த புதன்கிழமை நடந்த சர்வகட்சி மாநாட்டையும் பார்க்க வேண்டும்.நேற்று முன்தினம் நடந்த கூட்டமைப்புடனான சந்திப்பும் அத்தகையதா?

நாட்டை இப்பொழுது ஆள்வது மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை வென்றெடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் ஆகும். நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும்விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் ஓர் அரசனுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிறைவேற்று அதிகாரமும் அவரை வெற்றி பெற்ற ஒரு நிர்வாகியாக நிரூபிக்க தவறி விட்டன. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் சிங்கள மக்கள் இப்பொழுது “கோட்டா வீட்டுக்குப் போ” என்று கேட்கும் ஒரு நிலைமை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை கூட்டி இருக்கிறது. சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஜனாதிபதியைப் பொறுத்தவரை கீழிறங்கி வருவதுதான். ஆனால் அவர் இதய சுத்தியோடு இறங்கி வருகிறாரா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். அல்லது அவர் தனது தோல்வியை எல்லா கட்சிகளுக்கும் உரியதாக மாற்றப் பார்க்கிறாரா என்றும் கேட்கலாம்.

தமிழ் கட்சிகளில் தமிழரசுக்கட்சியும் பிள்ளையானின் கட்சியும் ஈபிடிபியும் புளட்டும் மட்டும் அதில் பங்குபற்றின. ஏனைய கட்சிகள் பங்குபற்றவில்லை. தென்னிலங்கை மையக் கட்சிகளில் மிகச்சில கட்சிகள்தான் பங்குபற்றின.

அந்த மாநாடு ரணிலின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோரை ரணில் புத்திசாலித்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ரணில் தனது ஆளுமையை காட்டியிருக்கிறார்.

ரணில் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புக்கு தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஒன்று அரசாங்கத்துக்கு. மற்றது சாஜித்துக்கு.அப்படித்தான் சஜித்தும் அவரும் தனது பலத்தை ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும் காட்ட வேண்டி இருக்கிறது, அதேசமயம் ரணிலுக்கு எதிராகவும் காட்ட வேண்டியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் இல்லை. சில மாதங்களுக்கு முன் மனோ கணேசன் கூறியது போல அரசாங்கம் எப்பொழுதோ தோற்று விட்டது. ஆனால் அந்த தோல்வியை தங்களுடையதாக சுவீகரித்துக் கொள்ளத் தேவையான ஐக்கியம் எதிர்க் கட்சிகள் மத்தியில் கிடையாது.

சர்வகட்சி மாநாடு ரணிலின் ஆளுமையை நிரூபித்திருக்கலாம். ஆனால் அதற்காக அவரை அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா? அல்லது சஜித்தும் எதிர்க்கட்சிகளும் தயாரா? என்று பார்க்க வேண்டும்.

மூத்த அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல மேற்கத்திய நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள் வரும் பொழுது, எல்லாக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும். அப்போதுதான் நாட்டின் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். ஆனால் இலங்கை தீவில் அவ்வாறான செழிப்பான ஒரு பாரம்பரியம் இல்லை. ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கினால் இப்போதிருக்கும் நெருக்கடிகளை தற்காலிகமாக சமாளிக்கலாம்.ஆனால் அவ்வாறு ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிங்கள கட்சிகள் தயாரா ? ஏனெனில் அது எந்த தேசிய அரசாங்கம் என்பதே இங்குள்ள அடிப்படைக் கேள்வியாகும்.அது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசாங்கமா ? அல்லது இலங்கைத் தீவின் பல்லி த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் ஓரூ தேசிய அரசாங்கமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

தன்னைத் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவராக பிரகடனப்படுத்தும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு பல்லினத்தன்மைமிக்க ஒரு தேசிய அரசாங்கத்தை எப்படி உருவாக்குவார்? அவ்வாறு மூன்று இனங்களில் தேசிய இருப்பையும் நிராகரித்த காரணத்தால்தான் அவர் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்று கூறுகிறார்.அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக கூறுகிறார் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் covid-19 தான் என்று.

ஆனால்,இனப்பிரச்சினைதான் பொருளாதார பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை அது அழித்துவிட்டது. 2009 க்குப் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால் நாடு அதன் முதலீட்டு கவர்ச்சியை கட்டியெழுப்ப முடியவில்லை. இவ்வாறு இனப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே நொந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த அதிர்ச்சியை பெருந்தொற்று நோய் கொடுத்தது. அதாவது இனப்போர் காரணமாக ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டு வெடிப்பும் covid-19உம் கோட்டாபய அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமும் மேலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின என்பதே சரி.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்பது அதன் மூலப் பிரச்சினையில் இருந்தே தொடங்க வேண்டும்.உடனடிக்கு வேண்டுமென்றால் சரிந்து விழும் வாழைக்கு முட்டுக் கொடுப்பது போல எதையாவது செய்யலாம். அதைத்தான் இப்போது செய்ய எத்தனிக்கிறார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

அண்மையில் உலகின் மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் பின்லாந்து மீண்டும் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. படைத்துறை ரீதியாக வளம் குறைந்த பின்லாந்து ரஷ்யப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் வாழ்கிறது.கடந்த நூற்றாண்டிலிருந்து பேரரசுகளுக்கிடையிலான போட்டிக்குள் அது எப்பொழுதும் கெட்டித்தனம்டினமாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுத்தது வருகிறது. உக்ரைனைப் போலவோ அல்லது ஜோர்ஜியாவைப் போலவோ பேரரசுகளின் இழு விசைகளுக்குள் பக்கம் சாயாமல் நிதானமாக முடிவுகளை எடுத்தது. தமது நாடு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறக் கூடாது என்று சிந்தித்து பின்லாந்து மக்கள் பொருத்தமான முடிவுகளை எடுத்தார்கள்.

உலகின் மிகச்சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாக பின்லாந்து கணிக்கப்படுகிறது. அதை அந்நாடு தனது வெளியுறவுக் கொள்கையில் அழகாக, தீர்க்கதரிசனமாக பிரதிபலிக்கிறது. இலங்கையும் இலவசக் கல்விக்கு பெயர் பெற்றது.ஆனால் இலங்கைத்தீவின் இலவச கல்வியானது இனப்பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டது. இலங்கைத்தீவின் இலவசக் கல்வியானது ஒருபுறம் வறிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை வழங்கியது. அதேசமயம் அது இனப்படுகொலையை தீர்க்க தவறியிருக்கிறது. இப்போதிருக்கும் அரசாங்கம் வியத்மக எனப்படும் தொழில்சார் திறன் மிக்க நிபுணர்களைக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாத்தால் வழி நடத்தப்படுவது என்று கருதப்படுகிறது. இப்போதிருக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அந்த சிந்தனைக் குழாத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் இந்த புத்திசாலிகள் எல்லாம் நாட்டை எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்?

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை – பிரதமர் மஹிந்த

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார அமைச்சரவைத் தீர்மானங்கள்!

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

01. விவசாய மற்றும் ஏனைய துறைகளில் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்காக ஜப்பான் எஹிம் மாநிலத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

ஜப்பான் எஹிம் மாநிலத்தில் விவசாயம், உணவுப் பதனிடல் உள்ளிட்ட ஏனைய தொழிற்துறைகளில் குறிப்பாக அப்பிரதேசத்தில் வியாபித்துள்ள சிற்ரஸ் (Citrus) பயிரிடல் துறையில் காணப்படும் தொழில்களில் ஈடுபடுவதற்காக இலங்கையின் தொழிநுட்ப பயிலுநர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக குறித்த மாநிலத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2021.07.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, விசேட திறன்களுடன் கூடிய இலங்கையர்களுக்கு அத்தகைய தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்புக்கள் மற்றும் சந்தைப் பன்முகப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் ஜப்பான் எஹிம் மாநிலத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஐக்கிய நாடுகள் சபையின் கல்விசார், விஞ்ஞானம்சார் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைப்பின் (யுனெஸ்கோ அமைப்பு) கீழ் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்காக ஆராய்ச்சி வழங்கல்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்விசார், விஞ்ஞானம்சார் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைப்பின் (யுனெஸ்கோ அமைப்பு) கீழ் இயங்கும் ‘அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கான அமைப்பு’ இனால் செயற்படுத்தப்படும் ‘அடிப்படை தொழில்வாண்மை கூட்டு வேலைத்திட்டம்’ இற்குப் பொருத்தமான ஆய்வுக் கருத்திட்டமாகக் கருதி ஆய்வு ஒதுக்கீடுகளை வழங்குவதற்காக ஐந்து (05) இலங்கை பெண் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, அத்தகைய ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பெண் விஞ்ஞானிகள் பணிபுரியும் பல்கலைக்கழகங்கள் மற்றும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், குறித்த பெண் விஞ்ஞானிகள் மற்றும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையிலான ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுரிமையாளர்களுக்கு உரித்தாகும் நிவாரணங்களை வழங்குதலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளை வழங்கலும்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் அனைத்துக் கட்டுமானங்களும் தற்போது நிறைவடைந்து வருவதுடன், இக்கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் எதிர்வரும் 06 மாதங்களில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் சுரங்க அகழ்வின் போது ஏற்பட்ட நீர்க்கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்கான அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி விடுவிப்பு வழங்கல் பத்திரங்களை வழங்குவதற்கும், மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சிகள் நிறுவனத்தால் அகற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும், முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டியதுமான வீடுகளுக்கு துரிதமான இழப்பீட்டை வழங்குவதற்கும், மீளவும் குடியமர்த்தப்பட வேண்டிய வீட்டுரிமையாளர்களின் காணிகளில் திட்டவட்டமான நிபந்தனைகளின் கீழ் பயிரிடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. டிஜிட்டல் அரசுக்கான மின்னஞ்சல் மற்றும் கூட்டு நெறிமுறை

தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றை ( Smart Nation ) உருவாக்குவதே தேசிய கொள்கைச் சட்டகத்தின் நோக்கமாகும். அதன்கீழ் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அரசை தாபித்தல், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கல் போன்றன அரசின் தொலைநோக்கை வெற்றியடையச் செய்யும் மூலோபாயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச அலுவலகங்களில் பயன்பாட்டுக்காக சமகால தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இயலளவை அதிகரித்துக் – குறைக்கக் கூடியவாறான பாதுகாப்பான தொடர்பாடல் பணித்தளமொன்றை ( Communication Platform ) உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் விசேடமாக அரசதுறைப் பாவனைக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட கூட்டான மின்னஞ்சல் பணித்தளத்தை ( E-mail and Collaboration Platform ) செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கான 100,000 கூட்டான மின்னஞ்சல் பணித்தளப் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும், அதன் முதற்கட்டமாக 30,000 மின்னஞ்சல் பணித்தளப் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பற்சிகிச்சைகளுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை விநியோகிப்பதற்கான பெறுகை வழங்கல்
நோயாளர்களின் பற்சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபயோகப் பொருட்களை விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிப் பெறுகை கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 09 விலைமுறிகள் கிடைத்துள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு, விபரங்களுடன் கூடியதாக பதிலளித்துள்ள குறைந்த விலைமனுக் கொண்ட விலைமுறிதாரர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளுக்கு வசதியளிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளிநாட்டு செலாவணிச் சட்டம் உள்ளிட்ட தற்போது நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களிலிருந்து விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை குறித்தொதுக்கி வழங்குவதற்காக கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழு தேவையான சட்டங்கள் மற்றும் கட்டளைகளை வெளியிடும்ஃபிரகடனப்படுத்தும் வரைக்கும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்குள் முதலீடுகளுக்கான வசதியளிப்புக்களை மேற்கொள்வதற்காக வேறானதொரு பொறிமுறையை அறிமுகப்படுத்தி வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் பிரகாரம் தேவையான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளை வெளியிடுமாறு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 7(1) இன் ஏற்பாடுகளுக்கமைய கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் இலங்கை தொடர்பாக 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை 2022.03.25 அன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்” – வீ.இராதாகிருஸ்ணன் எம்.பி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக மக்கள் செல்வது, இந்தியாவிற்கு பெரும் இக்கட்டான சூழ்நிலை என்பதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தம்மிடம் எடுத்துரைத்ததாகவும் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு தாம் முடிந்தவரை உதவிகளை வழங்குவோம்.

அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் செல்வதானது, இந்தியாவிற்கு பாரமான விடயம் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துரைத்ததாகவும் இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

நன்றி பிபிசி

Posted in Uncategorized

புதிய அரசமைப்பு தொடர்பில் கவனமாக இருங்கள் – கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!

புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் – எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்”, என்று தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

மேலும், “13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளின் விடயத்தையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என்று இதன்போது செல்வம் அடைக்கலநாதன் எம். பி. வலியுறுத்தினார் என்றும் ஈழநாடுவுக்கு அறியவந்தது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்தபோதே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய தரப்பில் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அரசியல் விவகாரங்களுக்கான செயலர் பானு ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டார்.

சந்திப்பு விடயங்களை விளக்கிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் 13ஆவது திருத்தத்தைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரச தரப்பு பின்னடிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், சுமந்திரனை அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் கூறினார்.

ஜனாதிபதியுடனான பேச்சின் அடிப்படை அம்சங்களான வடக்கு, கிழக்கு காணிகள் அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசமைப்பு மூலமான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் விவகாரம், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் என 5 விடயங்களையும் விவரித்தார்.

இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், “புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருங்கள். அதற்காகக் காத்திருக்காதீர்கள். அது முன்னரைப்போன்று இல்லாமலும்கூட இருக்கலாம். அத்துடன், புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காண முடியாத சூழல் கூட உருவாகலாம்”, என்று அறிவுறுத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சித்தார்த்தன் எம். பி., “புதிய அரசமைப்பு உருவாகும் என்று நம்பவில்லை. அப்படியே வந்தாலும் அது பழையதை விட மோசமாகவே இருக்கும். ஆனால், அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு விடயங்கள் சாத்தியமாகும் என்று நம்புகிறோம். இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விடயங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்”, என்றார்.

“இதுவே சரியான முறைமை”, என்று கூறி ஜெய்சங்கர் அதை ஆமோதித்தார்.

தொடர்ந்து செல்வம் அடைக்கலநாதன் எம். பி.“13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவே, இதற்கு தகுந்த பதிலை வழங்கி ஆறு கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் பட்சத்திலேயே, அவை தொடர்ச்சியாக ஒற்றுமையாக பயணிக்க முடியும் – இது தொடர்பில் அரசாங்கத்துக்கும் அழுத்தம் உருவாகும்”, என்று கூறினார்.

“இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும்”, என்று ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார்.

Posted in Uncategorized

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பிடம் தெரிவிப்பு

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம், ஆனால் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் திங்கட்கிழமை (28) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களில் தாம் கூடிய அக்கறை செலுத்துவதாகவும், அதேபோல் அரசியல் அமைப்பு உருவாக்கம் தவிர்ந்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விடயங்களில் உண்மையை கண்டறிதல், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி விடுவிப்பு மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அரச தரப்புடன் பேசியதாகவும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேபோல் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஆனால் நீண்ட காலமாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு வழங்கிய கடிதம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து எம்மத்தியிலும் நம்பிக்கை இல்லை எனவும், ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு சில அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை சந்தித்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி முழுமையாக தெளிவுபடுத்தியதாக சம்பந்தன் தரப்பிடம் தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இப்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு நகர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கும் இல்லையெனவும், 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி வீரகேசரிக்கு தெரிவித்தார்.

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது தமக்கும் தெரிவதாக கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழர் தரப்பு இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் குறித்து கேட்டறிந்துகொண்ட போதிலும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் நிலஅபகரிப்பு முயற்சிகள் – ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வழங்கிய உறுதிமொழி பொய்யா? என மக்கள் கேள்வி?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன்பகுதியில்வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9.30 மணிக்கு தங்களது காணிகளுக்கான உறுதிகளுடன் சமூகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனது எல்லை பரப்பிற்குள் வருகின்ற மக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் பார்வையிட்டு மக்களின்காணிகளை தவிர்த்து தமது எல்லையினை வகுப்பதற்காக இன்று வருகை தரவுள்ளது என என கிராமசேவகர் அறிவித்துள்ளார்.
எனவே வைத்தியசாலை முன்பக்கம் தொடக்கம் தங்கராசா என்பவரது வீடு வரை உள்ள வயல் காணி உரிமையாளர்கள் காலை 8.30 மணிக்கு ஆவணங்களுடன் தயார் நிலையில் வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது காணி அபகரிப்பில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி வழங்கப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையி;ல் இன்று இவ் நில அபகரிப்பு இடம்பெறுவது மக்;கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளைதிருகோணமலை மூதூர் பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி முத்துமாரியம்;;பாள் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அளவை செய்யசென்றதால் நேற்று திங்கட்கிழமை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த கோயிலுக்கு சொந்தமான 20பேர்ச் காணியை தொல்பொருள் திணைக்களமும் நில அளவை திணைக்களமும் இணைந்து அளவீடு செய்யசென்றதால் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் கலாநிதி ஸ்ரீஞானேஸ்வரன் அங்கு சென்று மக்களுடன் இணைந்து இதனை தடுத்து நிறுத்தினார்.
இந்தப்போராட்டத்தை தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தினர் அவ்விடத்திலிருந்து சென்றனர்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவளத்திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவளத்திணைக்களத்தினருக்கு உரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின் கால்நடைகள் மேச்சலுக்காக சென்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குள் கால்நடைகள் வருவதை தடை செய்யும் வகையில் வேலி அமைத்து கால்நடை வளர்ப்பாளர்களையும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக தமது கால்நடைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்குள் காணப்படும் குளத்தின் நீரேந்து பிரதேசத்திலேயே கால்நடைகள் நீரை பருகுவதால் தற்போது அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிராம மக்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கான இடத்தினை வேலி போட்டு அடைப்பதனை வனவளத்திணைக்களத்தினர் நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திக்குளம் காட்டு அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த 2000 கால்நடைகளின் மேச்சல் தரை இல்லாமல் போவதாகவும் தாம் கால்நடை வளர்ப்பை கைவிட்டு கிராமத்தினை விட்டு இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில் ஊர்வலமாக சுமார் 3 கிலோ மீற்றர் சென்று மதுராநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரச்சனைகளை தெரிவித்தததை அடுத்து குறித்த பகுதிக்கு வனவளத்திணைக்களத்தினரை வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பணித்திருந்தார்.

இதனையடுத்து அங்கு வந்த வனவளத்திணைக்களத்தினரிடம் குறித்த வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக கைவிடுமாறும் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எனினும் வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதியில் வனம் உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் வனவளத்திணைக்களத்தினர் கிராம மக்கள் சந்தித்து குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அதுவரை வனவளத்திணைக்களத்தினர் பொதுமக்கள் கால்நடைகளை குறித்த பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த வனவளத்திணைக்களத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் குறித்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

நேற்றைய தினம் இந்தப் பத்தியில் ஜனாதிபதி – கூட்ட மைப்பினருக்கிடையே நடைபெற்ற பேச்சு வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்ற கருத்தில் எழுதியிருந்தேன்.
அதனைப் படித்துவிட்டு, ஊர்க்குருவியின் தீவிர வாசகர்களில் ஒருவர், அரசியல்வாதி மாத்திரமல்ல, சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

‘சந்திப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால், நல்லதுதான். ஆனால், அது நடக்கும் முன்னர் இப்படி எழுதி நம்பிக்கையை வளர்க்காதீர்கள். நம்பிக்கைகள் பின் னர் தகர்ந்து கொட்டும்போது அதன் வலி இன்னும் அதிகமாகும்” என்று எச்சரித்தார்.

ஜனாதிபதி முன்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலிருந்து அவரை அறிந்த ஒருவர், அவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

அவர் சொன்னது, நம்பிக்கை தருவதாக இருந்தது. அதுதான் அந்த நம்பிக்கை என்று விளக்கம் தந்தேன்.

‘பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாப யவுக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் எத்தனை வித்தியாசம். அவரின் உடல்மொழியே மாறியிருந்தது’ என்று அந்த பிரமுகர் சொல்லியிருந்தார்.

‘சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன. சம்பந்தன் மேசையில் தட்டி பொங்கி எழுந்தார் என்று நீங்கள் மாத்திரமல்ல, எல்லா ஊடகங்களுமே வர்ணித்திருந்
தனவே” என்ற அவர், எதற்காக அவர் அவ்வாறு ஆத்திரமடைந்தார் என்பதை கவனித்தீர்களா? என்று கேட்டார்.

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அவர் கோரியபோது, அதில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்று வெளிவிவகார அமைச்சர் போராசிரியர் பீரிஸ், மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் விளக்க மளித்தபோது அவர் கோபமடைந்தது நியாயமான துதானே – என்றேன்.
நியாயமானதுதான், ஆனால், பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் சொன்னபோதுதான் சம்பந் தனுக்கு கோபம் வந்திருக்கின்றது. இதில் ஏன் அவருக்கு கோபம் வந்தது?

இதை அன்றுதான் முதன்முதலாக ஆளும்தரப்பு சொன் னதா என்ன? இதைத்தானே முப்பது ஆண்டுகளுக்கும் மோலாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது மட்டும் ஏன் அவருக்கு கோபம் வந்தது?

நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருகின்றோம் என்று ஐந்து ஆண்டுகளை காலம்கடத்திய சம்பந்தன், அப்போதுஅதுவும் மைத்திரி பதவியேற்ற உடன் அந்த நூறுநாள் ஆட்சிக் காலத்திலேயே பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொத்திருக்கலாமே. அப் போதெல்லாம் இதனைக் கண்டுகொள்ளாத சம்பந்தன், இப்போது மாத்திரம் பொங்கி எழுவது ஏன் என்பதை யுமல்லவா ஊடகங்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று அந்த சட்டத்தரணி கேட்டபோது, அதற்கு இந்த ஊர்க்குருவியிடம் பதில் இருக்கவில்லை.

அது மாத்திமரமல்ல, மேசையில் ஓங்கி தட்டி, ‘எங் களை நாய்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் நாங்கள் தனியாகச் செல்லவேண்டிவரும்’ என்று எச்சரிக்கை விடுத்தபோது, முன்னால் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதுக்கென்ன போறதெண்டால் போகவேண்டியதுதானே என்பதுபோல சம்பந்தனைப் பார்த்தது அவருக்கு புரிந்திருக்குமோ என்னவோ?

அதுசரி, அது என்ன தனியாகச் செல்லவேண்டிவரும்? அப்படியெனில் தனியாகச் செல்லக்கூடிய நிலைமை இருந்தும், அவர் அப்படி தனியாக செல்லாமல் இப்போது இருந்துகொண்டிருக்கிறாரோ? என்று கேட்டுவிட்டு அந்தச் சட்டத்தரணி விடைபெற்றார்.
விடைபெற முன்னர், அவர் கேட்டதும் நியாயமானது தான், மிருசுவிலில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ சிப்பாயை பொதுமன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதி, ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரையாவது உடன் பொதுமன்னிப்பில் விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பினர் கேட்டிருக்கலாமே என்று கேட்டார். இப்படியும் நடக்கிறது…!

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

Posted in Uncategorized