இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலை CLF வளாகத்தில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக

இதேவேளை, கட்சியின் நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் 150 போராட்டங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தபோராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்ற நேற்று பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது.

இந்நெருக்கடியான தருணத்தில் இந்தியா தனது சகோதரத்துவக் கரத்தை இலங்கைக்கு நீட்டியதற்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுவரை இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவு மற்றும் அது எந்தளவிற்கு பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியில் பரவியுள்ளது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான உதவிகளை மக்கள் மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்; ரணில்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,

சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எமது ஆட்சியிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன. எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைப்புகளும் தடைபட்டியலில் இணைக்கப்பட்டன. அவைமீதான தடையை நீக்குமாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை நியாயமானது.

எமது ஆட்சியில் வேலை வாய்ப்பு இருந்தது, வருமானம் இருந்தது, உண்பதற்கு உணவு இருந்தது, ஆனால் தேசிய வாதம் பற்றி கதைத்தனர், நாட்டை மீட்போம் என சூளுரைத்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி கதைத்தனர். இறுதியில் தற்போது என்ன நடந்துள்ளது? இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா?

எனவே, இவ்வாறான அரசியலை விட்டுவிடுவோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம். தேரர்களும் இதனை வலியுறுத்துகின்றனர்.

புலிகளின் கதை முடிந்துவிட்டது. அவர்களால் மீண்டெழமுடியாது. புலம்பெயர் அமைப்புகளிடம் தற்போது நிதி இல்லை, தனி நபர்களிடம்தான் பண பலம் உள்ளது. புலம்பெயர் அமைப்புகளின் முதலீடு வந்தால் நல்லதுதான். குறிப்பாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால் புலம்பெயர் தமிழர்களை விடவும் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும். ஐரோப்பிய அரசுகள்கூட முதலீடுகளை மேற்கொள்ளும்.

அதேவேளை, எமது ஆட்சியில் புதிய அரசமைப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 7 மாகாண முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என யோசனை முன்வைத்தனர்.

இவர்கள் அனைவரும் சிங்களவர்கள், தீவிரவாதிகள் கிடையாது. அதேபோல முதல்வர்கள் ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்தவர்களும் அல்லர். இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றது. இது பற்றி கலந்துரையாடலாம் எனவும் கூறியது. சுசில் பிரேம ஜயந்த தலைமையில் இது தொடர்பில் ஆவணம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணம் குறித்து கலந்துரையாடி தீர்வை முன்வைக்கலாம் என்றார்.

Posted in Uncategorized

பேராதனை போதனா வைத்தியசாலை விவகாரம் – அவதானம் செலுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளவிருந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், தாம் மிகுந்த வருத்தமடைந்ததாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்தியா உதவக்கூடிய வழிகள் குறித்து ஆராயுமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இந்திய வௌிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திகதியிடப்பட்டிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

விநியோகஸ்தர்களின் தாமதம் காரணமாகவே சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தொன்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இது குறித்து ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பேராதனை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் குறித்த மருந்து மிகக்குறைந்தளவே கையிருப்பிலுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 248 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 16 அத்தியாவசிய மருந்துகளுக்கான கடன் கடிதங்களை துரிதமாக வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றா நோய்கள், இருதய நோய்கள் உள்ளடங்கலாக பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 16 வகையான மருந்துகளும் இதில் அடங்குகின்றன.

இதேவேளை, தேவையான மருந்துகள் வழங்கப்படுமென மருந்து விநியோக பிரிவினால் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக பேராதனை போதனா வைத்தியாலை தெரிவித்துள்ளது.

அரசின் பங்காளிகட்சிகள் சற்று முன்னர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளும் இந்த ஆண்டு தனித்தனியாக மே தினத்தை நடத்த தீர்மானித்துள்ளன.

இன்று (29) சற்று நேரத்திற்கு முன்னர் 11 கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மே தினம் குறித்துக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

நிலாந்தன்

சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும்.

ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பிச் செல்லும் வழி, அல்லது அரசாங்கம் தனது தோல்விக்கு எதிர்க் கட்சிகளையும் கூட்டுப் பங்காளிகள் ஆக்கும் அல்லது கூட்டுப் பொறுப்பாக்கும் ஒரு தந்திரம், அல்லது காலத்தை கடத்தும் ஓர் உத்தி. அதாவது எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசைதிருப்பி காலத்தை கடத்தும் ஓர் உத்தி எனலாம்.

குறிப்பாக,இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து கடந்த பல தசாப்தங்களாக வட்டமேசை மாநாட்டில் இருந்து தொடங்கி இன்று வரையிலான எல்லா சர்வகட்சி மாநாடுகளையும் தொகுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் தந்திரமான உள்நோக்கம் கொண்டவை என்பது தெரியவரும். இலங்கை அரசாங்கம் நியமித்த விசாரணைக் கொமிஷன்கள் போலவே சர்வகட்சி மாநாடுகளும் தீர்க்க விரும்பாத ஒரு பிரச்சினைக்காக கூட்டப்படும் மாநாடுகள்தான்.

தமிழ் அரசியலில் முதலில் வட்டமேசை மாநாடு என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஜி. ஜி. பொன்னம்பலம் என்று கூறப்படுகிறது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவர் எல்லா கட்சிகளும் ஒரு வட்ட மேசையில் அமர்ந்து பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்பொழுது அவருடைய அரசியல் எதிரிகளாக காணப்பட்ட தமிழரசுக் கட்சி அப்படி என்றால் சதுரமேசை மாநாட்டைக் கூட்டலாம் என்று அவரை கிண்டல் செய்தார்கள். ஆனால் வட்டமேசை மாநாடுகள், அல்லது சதுர மேசை மாநாடுகள், நல்லது சர்வகட்சி மாநாடுகள் போன்றன தமிழ் மக்களைப் பொறுத்தவரை தோல்வியுற்ற அரசியல் நடைமுறைகள்தான்.

இவ்வாறான தோல்விகரமானதொரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்தே கடந்த புதன்கிழமை நடந்த சர்வகட்சி மாநாட்டையும் பார்க்க வேண்டும்.நேற்று முன்தினம் நடந்த கூட்டமைப்புடனான சந்திப்பும் அத்தகையதா?

நாட்டை இப்பொழுது ஆள்வது மூன்றிலிரண்டு தனிச்சிங்கள பெரும்பான்மையை வென்றெடுத்ததாக மார்தட்டிக் கொள்ளும் ஓர் அரசாங்கம் ஆகும். நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தும்விதத்தில் 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் ஓர் அரசனுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் நிறைவேற்று அதிகாரமும் அவரை வெற்றி பெற்ற ஒரு நிர்வாகியாக நிரூபிக்க தவறி விட்டன. யுத்தமும் பொருளாதார நெருக்கடியும் ஒன்றல்ல என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் சிங்கள மக்கள் இப்பொழுது “கோட்டா வீட்டுக்குப் போ” என்று கேட்கும் ஒரு நிலைமை.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டை கூட்டி இருக்கிறது. சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஜனாதிபதியைப் பொறுத்தவரை கீழிறங்கி வருவதுதான். ஆனால் அவர் இதய சுத்தியோடு இறங்கி வருகிறாரா என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். அல்லது அவர் தனது தோல்வியை எல்லா கட்சிகளுக்கும் உரியதாக மாற்றப் பார்க்கிறாரா என்றும் கேட்கலாம்.

தமிழ் கட்சிகளில் தமிழரசுக்கட்சியும் பிள்ளையானின் கட்சியும் ஈபிடிபியும் புளட்டும் மட்டும் அதில் பங்குபற்றின. ஏனைய கட்சிகள் பங்குபற்றவில்லை. தென்னிலங்கை மையக் கட்சிகளில் மிகச்சில கட்சிகள்தான் பங்குபற்றின.

அந்த மாநாடு ரணிலின் மதிப்பை மேலும் உயர்த்தியிருக்கிறது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோரை ரணில் புத்திசாலித்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ரணில் தனது ஆளுமையை காட்டியிருக்கிறார்.

ரணில் ஒரே நேரத்தில் இரண்டு தரப்புக்கு தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.ஒன்று அரசாங்கத்துக்கு. மற்றது சாஜித்துக்கு.அப்படித்தான் சஜித்தும் அவரும் தனது பலத்தை ஒரே நேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவும் காட்ட வேண்டி இருக்கிறது, அதேசமயம் ரணிலுக்கு எதிராகவும் காட்ட வேண்டியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியம் இல்லை. சில மாதங்களுக்கு முன் மனோ கணேசன் கூறியது போல அரசாங்கம் எப்பொழுதோ தோற்று விட்டது. ஆனால் அந்த தோல்வியை தங்களுடையதாக சுவீகரித்துக் கொள்ளத் தேவையான ஐக்கியம் எதிர்க் கட்சிகள் மத்தியில் கிடையாது.

சர்வகட்சி மாநாடு ரணிலின் ஆளுமையை நிரூபித்திருக்கலாம். ஆனால் அதற்காக அவரை அங்கீகரிக்க அரசாங்கம் தயாரா? அல்லது சஜித்தும் எதிர்க்கட்சிகளும் தயாரா? என்று பார்க்க வேண்டும்.

மூத்த அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு கூறுவதுபோல மேற்கத்திய நாடுகளில் இவ்வாறான நெருக்கடிகள் வரும் பொழுது, எல்லாக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கும். அப்போதுதான் நாட்டின் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம். ஆனால் இலங்கை தீவில் அவ்வாறான செழிப்பான ஒரு பாரம்பரியம் இல்லை. ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கினால் இப்போதிருக்கும் நெருக்கடிகளை தற்காலிகமாக சமாளிக்கலாம்.ஆனால் அவ்வாறு ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு சிங்கள கட்சிகள் தயாரா ? ஏனெனில் அது எந்த தேசிய அரசாங்கம் என்பதே இங்குள்ள அடிப்படைக் கேள்வியாகும்.அது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசாங்கமா ? அல்லது இலங்கைத் தீவின் பல்லி த்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் ஓரூ தேசிய அரசாங்கமா என்பதுதான் இங்குள்ள பிரச்சினை.

தன்னைத் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தலைவராக பிரகடனப்படுத்தும் ஒரு ஜனாதிபதி அவ்வாறு பல்லினத்தன்மைமிக்க ஒரு தேசிய அரசாங்கத்தை எப்படி உருவாக்குவார்? அவ்வாறு மூன்று இனங்களில் தேசிய இருப்பையும் நிராகரித்த காரணத்தால்தான் அவர் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்று கூறுகிறார்.அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக கூறுகிறார் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணம் covid-19 தான் என்று.

ஆனால்,இனப்பிரச்சினைதான் பொருளாதார பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். நாட்டின் முதலீட்டுக் கவர்ச்சியை அது அழித்துவிட்டது. 2009 க்குப் பின்னரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. அதனால் நாடு அதன் முதலீட்டு கவர்ச்சியை கட்டியெழுப்ப முடியவில்லை. இவ்வாறு இனப்பிரச்சினை காரணமாக ஏற்கனவே நொந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டுவெடிப்பு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த அதிர்ச்சியை பெருந்தொற்று நோய் கொடுத்தது. அதாவது இனப்போர் காரணமாக ஏற்கனவே சரிந்து போயிருந்த பொருளாதாரத்தின் மீது ஈஸ்டர் குண்டு வெடிப்பும் covid-19உம் கோட்டாபய அரசாங்கத்தின் திறமையற்ற நிர்வாகமும் மேலும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தின என்பதே சரி.

எனவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது என்பது அதன் மூலப் பிரச்சினையில் இருந்தே தொடங்க வேண்டும்.உடனடிக்கு வேண்டுமென்றால் சரிந்து விழும் வாழைக்கு முட்டுக் கொடுப்பது போல எதையாவது செய்யலாம். அதைத்தான் இப்போது செய்ய எத்தனிக்கிறார்கள். ஆனால் நிரந்தரத் தீர்வு வேண்டுமானால், பல்லினத்தன்மை மிக்க ஒரு தீவைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

அண்மையில் உலகின் மிகவும் சந்தோஷமான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.அதில் பின்லாந்து மீண்டும் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. படைத்துறை ரீதியாக வளம் குறைந்த பின்லாந்து ரஷ்யப் பேரரசின் செல்வாக்கு மண்டலத்தில் வாழ்கிறது.கடந்த நூற்றாண்டிலிருந்து பேரரசுகளுக்கிடையிலான போட்டிக்குள் அது எப்பொழுதும் கெட்டித்தனம்டினமாகவும் கவனமாகவும் முடிவுகளை எடுத்தது வருகிறது. உக்ரைனைப் போலவோ அல்லது ஜோர்ஜியாவைப் போலவோ பேரரசுகளின் இழு விசைகளுக்குள் பக்கம் சாயாமல் நிதானமாக முடிவுகளை எடுத்தது. தமது நாடு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறக் கூடாது என்று சிந்தித்து பின்லாந்து மக்கள் பொருத்தமான முடிவுகளை எடுத்தார்கள்.

உலகின் மிகச்சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடாக பின்லாந்து கணிக்கப்படுகிறது. அதை அந்நாடு தனது வெளியுறவுக் கொள்கையில் அழகாக, தீர்க்கதரிசனமாக பிரதிபலிக்கிறது. இலங்கையும் இலவசக் கல்விக்கு பெயர் பெற்றது.ஆனால் இலங்கைத்தீவின் இலவச கல்வியானது இனப்பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டது. இலங்கைத்தீவின் இலவசக் கல்வியானது ஒருபுறம் வறிய மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்புக்களை வழங்கியது. அதேசமயம் அது இனப்படுகொலையை தீர்க்க தவறியிருக்கிறது. இப்போதிருக்கும் அரசாங்கம் வியத்மக எனப்படும் தொழில்சார் திறன் மிக்க நிபுணர்களைக் கொண்ட ஒரு சிந்தனைக் குழாத்தால் வழி நடத்தப்படுவது என்று கருதப்படுகிறது. இப்போதிருக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் அந்த சிந்தனைக் குழாத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால் இந்த புத்திசாலிகள் எல்லாம் நாட்டை எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள்?

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை – பிரதமர் மஹிந்த

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார அமைச்சரவைத் தீர்மானங்கள்!

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

01. விவசாய மற்றும் ஏனைய துறைகளில் தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்காக ஜப்பான் எஹிம் மாநிலத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

ஜப்பான் எஹிம் மாநிலத்தில் விவசாயம், உணவுப் பதனிடல் உள்ளிட்ட ஏனைய தொழிற்துறைகளில் குறிப்பாக அப்பிரதேசத்தில் வியாபித்துள்ள சிற்ரஸ் (Citrus) பயிரிடல் துறையில் காணப்படும் தொழில்களில் ஈடுபடுவதற்காக இலங்கையின் தொழிநுட்ப பயிலுநர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்காக குறித்த மாநிலத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2021.07.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமைய, விசேட திறன்களுடன் கூடிய இலங்கையர்களுக்கு அத்தகைய தொழில் மற்றும் பயிற்சி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்புக்கள் மற்றும் சந்தைப் பன்முகப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் ஜப்பான் எஹிம் மாநிலத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஐக்கிய நாடுகள் சபையின் கல்விசார், விஞ்ஞானம்சார் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைப்பின் (யுனெஸ்கோ அமைப்பு) கீழ் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்காக ஆராய்ச்சி வழங்கல்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
ஐக்கிய நாடுகள் சபையின் கல்விசார், விஞ்ஞானம்சார் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அமைப்பின் (யுனெஸ்கோ அமைப்பு) கீழ் இயங்கும் ‘அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண் விஞ்ஞானிகளுக்கான அமைப்பு’ இனால் செயற்படுத்தப்படும் ‘அடிப்படை தொழில்வாண்மை கூட்டு வேலைத்திட்டம்’ இற்குப் பொருத்தமான ஆய்வுக் கருத்திட்டமாகக் கருதி ஆய்வு ஒதுக்கீடுகளை வழங்குவதற்காக ஐந்து (05) இலங்கை பெண் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, அத்தகைய ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பெண் விஞ்ஞானிகள் பணிபுரியும் பல்கலைக்கழகங்கள் மற்றும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், குறித்த பெண் விஞ்ஞானிகள் மற்றும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையிலான ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவினால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுரிமையாளர்களுக்கு உரித்தாகும் நிவாரணங்களை வழங்குதலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக் காணிகளை வழங்கலும்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் அனைத்துக் கட்டுமானங்களும் தற்போது நிறைவடைந்து வருவதுடன், இக்கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் எதிர்வரும் 06 மாதங்களில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் சுரங்க அகழ்வின் போது ஏற்பட்ட நீர்க்கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டுரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்கான அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணி விடுவிப்பு வழங்கல் பத்திரங்களை வழங்குவதற்கும், மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சிகள் நிறுவனத்தால் அகற்றுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும், முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டியதுமான வீடுகளுக்கு துரிதமான இழப்பீட்டை வழங்குவதற்கும், மீளவும் குடியமர்த்தப்பட வேண்டிய வீட்டுரிமையாளர்களின் காணிகளில் திட்டவட்டமான நிபந்தனைகளின் கீழ் பயிரிடுவதற்கான வாய்ப்புக்களை ஏற்பாடு செய்து வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. டிஜிட்டல் அரசுக்கான மின்னஞ்சல் மற்றும் கூட்டு நெறிமுறை

தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றை ( Smart Nation ) உருவாக்குவதே தேசிய கொள்கைச் சட்டகத்தின் நோக்கமாகும். அதன்கீழ் மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் அரசை தாபித்தல், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்கல் போன்றன அரசின் தொலைநோக்கை வெற்றியடையச் செய்யும் மூலோபாயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச அலுவலகங்களில் பயன்பாட்டுக்காக சமகால தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இயலளவை அதிகரித்துக் – குறைக்கக் கூடியவாறான பாதுகாப்பான தொடர்பாடல் பணித்தளமொன்றை ( Communication Platform ) உருவாக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மற்றும் விசேடமாக அரசதுறைப் பாவனைக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட கூட்டான மின்னஞ்சல் பணித்தளத்தை ( E-mail and Collaboration Platform ) செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்கான 100,000 கூட்டான மின்னஞ்சல் பணித்தளப் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்கும், அதன் முதற்கட்டமாக 30,000 மின்னஞ்சல் பணித்தளப் பாவனையாளர் கணக்குகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. பற்சிகிச்சைகளுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை விநியோகிப்பதற்கான பெறுகை வழங்கல்
நோயாளர்களின் பற்சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபயோகப் பொருட்களை விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிப் பெறுகை கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 09 விலைமுறிகள் கிடைத்துள்ளன. தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு, விபரங்களுடன் கூடியதாக பதிலளித்துள்ள குறைந்த விலைமனுக் கொண்ட விலைமுறிதாரர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த பெறுகைகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளுக்கு வசதியளிப்பதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய வெளிநாட்டு செலாவணிச் சட்டம் உள்ளிட்ட தற்போது நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களிலிருந்து விடுவித்தல் அல்லது ஊக்குவிப்புக்களை குறித்தொதுக்கி வழங்குவதற்காக கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழு தேவையான சட்டங்கள் மற்றும் கட்டளைகளை வெளியிடும்ஃபிரகடனப்படுத்தும் வரைக்கும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்குள் முதலீடுகளுக்கான வசதியளிப்புக்களை மேற்கொள்வதற்காக வேறானதொரு பொறிமுறையை அறிமுகப்படுத்தி வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் பிரகாரம் தேவையான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளை வெளியிடுமாறு ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 7(1) இன் ஏற்பாடுகளுக்கமைய கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் IV ஆம் உறுப்புரையின் கீழ் இலங்கை தொடர்பாக 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை 2022.03.25 அன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“முடிந்தவரை உதவிகளை வழங்குவோம் என ஜெய்சங்கர் உறுதியளித்தார்” – வீ.இராதாகிருஸ்ணன் எம்.பி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக மக்கள் செல்வது, இந்தியாவிற்கு பெரும் இக்கட்டான சூழ்நிலை என்பதை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், தம்மிடம் எடுத்துரைத்ததாகவும் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு தாம் முடிந்தவரை உதவிகளை வழங்குவோம்.

அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகள் செல்வதானது, இந்தியாவிற்கு பாரமான விடயம் என்பதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துரைத்ததாகவும் இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.

நன்றி பிபிசி

Posted in Uncategorized