“ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப்போவதில்லை”-ஜனா

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதியினால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும் எனதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு,திருப்பழுகாமத்தில் வைத்தியர் க.விஸ்வலிங்கம் அவர்களின் ‘நோய் நிவாரணி’ நூல் வெளியீடும்,சித்த வைத்திய முகாமும்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசுகின்றேன் என்று எங்களை அழைத்து எங்களை பகடைக்காய்களாக மாற்றி சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறான நாடகத்தினை நடாத்துகின்றார் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகயிருக்கின்றது.

இதேபோல சர்வகட்சி மாநாட்டை கூட்ட நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. சர்வகட்சி மாநாடும் ஒன்றுதான் பாராளுமன்றமும் ஒன்றுதான்.அதில் பங்குபற்றுவது குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தையினை நடாத்தவேண்டுமானால் முதலில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையுள்ளது அதற்கு தீர்வு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டன் பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேசமுடியும்.

மேலும் ஒரு அரசியல் தீர்வினை இந்த பாராளுமன்றம் ஊடாக கொண்டு வர வேண்டுமானால், அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டுமானால் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும் பான்மையிருக்கவேண்டும். ஜனாதிபதியுடன் இருந்த 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச்சென்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லை. எனவே ஜனாதிபதியினால் ஒரு அரசியலமைப்பினை கொண்டுவரமுடியாது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும். அவருடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப்போவதில்லை” என்றார்.

Posted in Uncategorized

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது.

அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது. மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன்.

சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை. கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி இன்று ஆஜரானார்.

அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது 75 நாட்களும் நான் மருத்துவமனைக்கு சென்றேன். அதில் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன். சசிகலா தான் உடன் இருந்து கவனித்துக்கொண்டார் என வாக்குமூலம் அளித்தார்.

தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த, கோட்டாபயவால் ஒருபோதும் வெல்லவே முடியாது – சரத் பொன்சேகா

தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது. எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலின்போதே மகிந்த ராஜபக்சவை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வெறுத்துவிட்டார்கள். அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடக்கில் எனக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. அதற்காக வடக்கு மக்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என மேலும் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது

மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.

இதேவேளை சர்வகட்சி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளார்.

அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? –ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.கேள்வி

ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி முதலில் இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக கூறினால் மாத்திரமே பேசசுவார்த்தைக்கு செல்வோம் என அவர் கூறினார்.

மேலும் கட்சியின் நிலைப்பாடு குறித்து பங்காளிக் கட்சிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயற்பாடு நேற்றும் நடைபெற்ற நிலையில் இந்த அரசாங்கம் இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே அவர்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளினுடைய ஒட்டுமொத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற வாய்ப்பினை ஜனாதிபதி பெறப்போகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அரசியற் தீர்வுக்காத்தான் அழைக்கின்றார் என்று நாம் கற்பனையில் இருந்தாலும் எதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் என்ற விடயம் ஜனாதிபதி செயலக நிகழ்ச்சி நிரலில் கூடச் சொல்லப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

1988ன் பின் தொடர்ச்சியாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சி ரெலோ மாத்திரம் தான்- செயலாளர் நாயகம் – கோ.கருணாகரம் ஜனா பா.உ

1988ல் அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ற்கு முன்பு இருந்த கூட்டமைப்பு வேறு, 2009ற்கு பிற்பாடு இருக்கும் கூட்டமைப்பு வேறு. 2009ற்குப் பின்னர் தனிக் கட்சி, தனிமனித கௌரவம் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு பிளவுபட்டிருக்கின்றது. 2010 தேர்தலுடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 2015 பாராளுமன்றத் தேர்தலுடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியது. வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகக் கொண்டு வந்தவர்களே அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்.

இன்று மூன்று கட்சிகள் தான் கூட்டமைப்புக்குள் இருக்கின்றன. அதிலும் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றது. தமிழரசுக் கட்சி கூட 2001 கூட்டமைப்பு தொடங்கப்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே அதில் அங்கம் வகித்தது. 2004லே ஆனந்த சங்கரி அவர்கள் கூட்டமைப்பின் அப்போதைய சின்னமான உதயசூரியனை கொண்டு சென்றமையால் சுமார் 34 வருடங்களுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னம் தூசு தட்டி எடுக்கப்பட்டதுதான் வரலாறு.

எனவே தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பு தொடங்கியதில் இருந்து இன்று வரைக்கும் இருப்பது மாத்திரமல்லாமல் 1988ம் ஆண்டு அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான். 2015ம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த நாங்கள் தற்போது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.

அண்மையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதில் சக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தாங்கள் ஒரு பெரியகட்சி என்று மக்கள் மத்தியில் தங்கள் பெயரைக் கொண்டு செல்வதற்காக இந்த வேலைத்திட்டத்தைச் செய்வதாகக் கூறியிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பெரிய கட்சிதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு 3 பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு வெறுமனே ஐந்து உறுப்பினர்கள் தான் இருக்கின்றார்கள். ஆறாவது உறுப்பினரான தேசியப் பட்டியல் உறுப்பினரை எம்முடன் கலந்தாலோசிக்காமல் அவர்களே பெற்றுக் கொண்டார்கள். அந்த தேசியப் பட்டியல் எமக்குக் கிடைத்திருந்தால் நாங்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.

கூட்டமைப்பைச் சிதைப்பதற்கு அல்லது அதிலிருந்து தாங்கள் வெளியேறுவதற்கு கூட்டமைப்பினை மேலும் பலவீனமாக்குவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். பல உதாசீனங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதன் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009ற்குப் பின்னர் இந்தளவிற்கு பின்னடவைச் சந்தித்திருக்கின்றது.

ஏனெனில் 2004லே 24 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த நாங்கள் அதன் பின்னர் படிப்படியாக 18, 16 என்றாகி இன்று தேசியப் பட்டியலுடன் சேர்த்து 10ற்கு வந்து நிற்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு எங்களது மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மாரை தாக்குவதற்கா பிரதமர் யாழ் வந்தார்? – தவிசாளர் நிரோஷ் கேள்வி

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனநாயன ரீதியில் நீதி கேட்டு போராட முயற்சித்த போது, அவர்களை வழி மறித்து பஸ்களில் இருந்து இறங்கவிடாது அச்சுறுத்தி தாக்கிய சம்பவங்கள் இலங்கையின் ஆட்சியாளர்களிடத்தில் தொடரும் ஜனநாயக மறுப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதமரின் வருகையின் போது நீதி கேட்டு ஜனநாயக வழியில் போராடுவதற்காக வேவ்வேறு மாவட்டங்களிலும் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்தனர். மட்டுவில் திறந்த வர்த்தக சந்தைப்பகுதி பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படும் போது, அமைதியாக கவனயீர்ப்பினை மேற்கொள்வதற்கு காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முயற்சித்தனர். இந் நிலையில் காணமலாக்கப்பட்ட தாய்மார் வருகை தந்த பேருந்து பொலிசாரினாலும் விசேட அதிரடிப்படையினராலும் வழிமறிக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டு பேருந்தின் சாரதியின் ஆவணங்களும் பறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டது. இதற்கு மேலாக நீதிக்காகப் போராடும் அந்த வயோதிபத் தாய்மார் மிகவும் கொடுரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். தடியடிப்பிரயோகம,; கட்டைகளாலும் அடிக்கப்பட்டு தூஷண வார்த்தைகளாலும் நிந்திக்கப்பட்டனர்.

இவ்வாறாக காட்டுமிராண்டித்தனம் நடைபெறுவதையடுத்து மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் உடனடியாக அங்கு சென்றபோது அப்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச நிகழ்வை முடித்துக்கொண்டு வெளியேறியிருந்தார். அவரின் வெளியேற்றத்தையடுத்து பொலிசாராலும் இராணுவத்தினராலும் அடித்து குத்தி அடக்கிவைத்திருந்த மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் குறித்த வர்த்தக கட்டிடத்தினை நோக்கி வந்தார்கள். தாக்குதல்களின் காரணமாக சாறி சட்டைகள் கிழிந்த நிலையில் அந்த தாய்மார் வருவதைக் கண்டேன். இதனைத் தொடர்ந்து நாமும் அவர்களுடன் இனைந்து ஜனநாய வழியில் போராடினோம். தாய்மார்கள் தாக்கப்படும் போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் மகிழ்ச்சியைக் கொண்டிக்கொண்டிருந்தனர்.

அடிப்படையில் ஜனாதிபதி உலகத்தினை ஏமாற்றுவதற்காக இங்கே தான் ஜனநாயக உரிமைகளுக்கு மட்டுப்பாடு விதிக்கவில்லை என ஐ.நாவில் உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார். ஆனால் வலிந்து காணாமலாக்கப்பட்டுதலுக்கு முழுமையான காரணகர்த்தாவும் இன்றும் பொறுப்புச் சொல்லவேண்டிய பதவியில் உள்ளவருமான பிரதமர் மகிந்த ராஜபக்ச நீதிக்காக போராடும் அப்பாவித்தாய்மார்களை அவர்களது அமைதியான போராட்டத்தை கூட ஏற்க முடியாது ஆயுதம் ஏந்திய படைகளைக் கொண்டு உத்தரவிட்டு அடக்கியிருக்கின்றார். தனக்கு தொந்தரவு என்பதற்காக அந்தத் தாய்மார்களை கொன்றொழிக்கவும் இந்த அரசாங்கம் பின்னிற்காது என்பது வெளிப்படையானது.
அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகள் ரீதியில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேசம் மடையர் ஆகிவிடக்கூடாது. இங்கே நியாயம் கேட்கும் சக்திகளை ஆயுத மற்றும் இதர அச்சுறுத்தல் வழிமுறைகள் ஊடாக அடக்கியாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் இறுதியாகவில்லை : ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழு வருவது உறுதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அந்த விஜயமாமனது இதுவரையில் உறுதிப்படுத்தப்பட வில்லை என தெரிவித்த டெல்லி செய்தி மூலங்கள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டன.

குறித்த திகதியில் ஓரிரு தினங்கள் முன்பின் ஆனாலும் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி மூலங்கள் மேலும் குறிப்பிட்டன.

வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் செயலர் ஹர்ஷ வர்தன் ஷரிங்லா தலைமையிலான உயர்மட்ட குழுவின் கொழும்பு வருகை பிரதமர் மோடியின் விஜயத்திற்கான முன்னேற்பாடுகளை மையப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு மார்ச் 30 ஆம் திகதி இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்திய உட்பட பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கொழும்பிற்கு வருகை தரவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதுடன் உத்தியோகப்பூர்வ அழைப்பிதழ்களையும் கையளித்துள்ளது.

குறிப்பாக அண்மையில் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் தொடர்பில் கலந்துரையாடி உத்தியோகப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் பலர் நேரடியாக சமூகமளிக்க உள்ளதுடன் மியன்மார் உட்பட ஓரிரு நாடுகள் மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக கலந்துக்கொள்ள உள்ளன. இந்தியாவை பொறுத்த வரையில் பிம்ஸ்டெக் மாநாடு முக்கியமானதொன்றாகும்.

எனவே உயர்மட்ட பிரதிநிதிகள் பலர் கலந்துக்கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் இறுதியாக உறுதிசெய்யப்பட உள்ளது.

அதே போன்று பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டால் இரு பிரதான விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அதாவது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பித்தல் மற்றும் யாழ் – இந்திய கலாசார மையத்தின் திறப்பு விழா என்பனவாகும்.

இந்த இரு விடயத்திலுமே இலங்கை சாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. உதாரணமாக யாழ் – இந்திய கலாச்சார மையத்தை பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

இரு தரப்பு கலாசார இராஜதந்திர உறவுகளை வலுப்பத்துவதில் யாழ். இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும்.

அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்த மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.

எனவே தான் அனைத்து விடயங்களிலும் இருதரப்பு புரிதலுடன் செயற்படுவதில் டெல்லி மிகுந்த பொறுமையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது.

அதாவது கலாச்சார மையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரித்தல் போன்ற விடயங்கள் குறித்து காணப்பட்ட இருதரப்பு கருத்து வேறுபாடுகள் இதற்கு முக்கிய காரணமாகியது.

ஆனால் தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே எனவே பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் சாத்தியப்பட்டால் யாழ் – இந்திய கலாசார மையம் திறந்து வைக்கப்படும்.

அதே போன்று பலாலி விமான நிலையம். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையம் இந்திய அனுசரணையில் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அமையப்பெற வேண்டும் என்பதே இந்தியாவின் ஆர்வமாக உள்ளது.

ஆனால் தற்போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் கொவிட் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடங்கி போயுள்ளன.

எனவே விமான நிலையத்தின் செயற்பாடுகளை துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதும் டெல்லியின் பணிப்பாக உள்ளது.

எனவே பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தில் இந்த இரு விடயங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த நல்லூருக்கு விஜயம்-எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஆகியன இணைந்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் கருத்து தெரிவிக்கையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எங்களுடைய நிலத்திலே வந்து தமிழினத்துக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டுக்கு வருவதாக ஏற்பாடாகி இருக்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்ககூடிய மஹிந்த ராஜபக்ச எங்களுடைய மண்ணுக்கு வருவதை முற்றுமாக எதிர்க்கின்றோம்.

இதற்காக நாளை காலை 10 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் எங்களுடைய உறவுகள் எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒன்று கூடுமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இன்றைய இந்த காலகட்டத்தில் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலேயே எங்களுடைய மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கு பகுதியிலேயே காணி அபகரிப்புகள் மிகவும் ரகசியமாக வேகமாக நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் திணைக்களம் வன இலாகா திணைக்களம் என அனைத்துமே மக்களுடைய காணிகளை அபகரிப்பு வருகின்றது.

எங்களுடைய காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கின்ற திட்டம் இடம்பெற்று வருகின்றன. பௌத்தமயமாக்கல் என்ற திட்டத்தில் இன்றும்கூட கந்தரோடையில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏற்பாடாகி இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இடங்களிலும் விகாரைகளை அமைத்து தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் எல்லாம் பௌத்த மதஸ்தலங்களாக மாற்றி எடுக்கின்ற முயற்சிகளை ஏற்க முடியாது.

தென்னிலங்கையிலே எங்கு சென்றாலும் எதிர்ப்பு இருக்கக் கூடிய சூழலில் எங்கும் போக முடியாமல் எங்களிடம் வந்து தஞ்சம் புகுந்து அரசியல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 13 வருடங்களில் தொட்டுக்கொண்டு இருக்க கூடிய நிலையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்புக்கு எந்த நீதியையும் வழங்காமல் எங்களையும் அனைவரையும் சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டு இப்படி ஒரு இனப்படுகொலையை செய்திருக்கக்கூடிய அரசியல்வாதி எங்களுடைய நிலத்தில் காலடி எடுத்து வைக்க முடியாது. அனைத்து மக்களும் இதனை உணர்ந்து இந்த எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், மாணவர் அமைப்புகள் மகளிர் அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், பொதுமக்கள்,இளைஞர் மன்றங்கள் என அனைத்து தரப்பினரும் நாளைய தினம் காலை 10 மணியளவில் நல்லூர் முன்றலில் ஒன்றுகூடி ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டவேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி நிற்கின்றது- என்றார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ்-அருட்தந்தை மா.சத்திவேல்

பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் அடுத்த வேளை உணவிற்கே கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தனது நரி நாடகத்தில் சிக்க வைக்கும் முயற்சியாகவே ஒரு லட்சம் ரூபா கொடுப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வறுமை நிலையை பயன்படுத்தி மரணச் சான்றிதழ் அல்லது காணாமல் போனதற்கான சான்றிதழை கொடுத்து போராட்டத்தை சிதைக்கவும் அமைப்புக்குள் கருத்து மோதலை உருவாக்கவும் ஆட்சியாளர்கள் காய் நகர்த்துகின்றனர்.

இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியலில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுவோர்க்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழும் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் காணாமல் போனதாக கூறப்படும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு சிலவேளை மகிழ்ச்சியைத் தரலாம். புது வருடத்திற்கான உதவித் தொகையாகவும் அமையலாம்.

ஆனால் வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது உறவுகளை தேடி 2009 ஆம் ஆண்டு அதைத் தொடர்ந்து நீண்ட போராட்டம் நடத்தியதோடு தற்போது ஐந்து வருடங்களை கடந்தும் தொடர் போராட்டம் நடத்துவது அரசு அறிவிக்கும் ஒரு லட்ச ரூபா பிச்சை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு அல்ல. தமிழ் உயிருக்கு உயிரான உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் அதற்கான நீதியை பெற்றுக் கொள்வதற்குமாகும். இதனை கொச்சைப்படுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகளே “நாங்கள் உங்களுக்கு பணம் தருகிறோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

நாட்டின் சுதந்திர தினத்தை கரி நாளாகவும், சர்வதேச பெண்கள் தினத்தினையும் அவ்வாறே அறிவித்து சர்வதேசத்தின் நீதிக்கதைகளை தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரூபா ஒரு லட்சம் தருகிறோம் எனக் கூறுவது போராட்டத்தை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல நீதிக்காக போராடும் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலுமாகும்.

அரசு ஒடுக்குமுறை இயந்திரத்தினால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு உயிருக்கு உயிரானவர்கள், அவர்கள் தமிழர் தேசத்தின் வாழ்வு காவலர்கள். இவர்களைத் தேடியே நூற்றுக்கும் அதிகமானோர் நோயில் விழுந்து மரணத்தை தழுவியுள்ளனர். இதுவும் சாட்சியங்களை மறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் அரசின் கொலை. எனவே நாம் கருதுகின்றோம், இக்கொலையும் பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே, காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் எனலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.