பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல – ரெலோ கண்டனம்

எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல. மக்களின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்க முற்படுகிறது அரசு என்று ரெலோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பிலும் அதற்கெதிராக அரசாங்கம் எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மாற்றீடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது என்று அரசாங்கம் அறிவித்திருப்பது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்கின்றது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டு இளைய சமுதாயத்தின் கல்வி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நாட்டினுடைய முதுகெலும்பில் ஒன்றான விவசாயத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து பஞ்ச நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது அரசு. உர மானியத்தை கோரிய விவசாயிகளுக்கு பதிலை வழங்காது இரசாயன உரத்தை ஒட்டுமொத்தமாக தடைசெய்கிறோம் என தவறான அறிவிப்பை செய்து இயற்கை பசளையை பயன்படுத்துமாறு தடாலடியாக கூறியதன் பின்விளைவே இதுவாகும்.

சர்வதேச நாடுகளை எடுத்தெறிந்து நடந்து திறைசேரியை வங்குரோத்தாக்கி பிணை முறிகளை விற்க முடியாமல், அளவு கணக்கில்லாமல் காசு அச்சடிக்கும் நிலைமைக்கு நாட்டை தள்ளியுள்ளது அரசு. வரலாற்றில் முதல் தடவையாக அந்நியச் செலாவணி இருப்பை துடைத்து எறிந்துள்ளது இந்த அரசு.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப் பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாற்று வழிகளை யோசிக்கிறோம் என்று மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரசு வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறது. நாட்டின் இன்னொரு முதுகெலும்பான ஆடை ஏற்றுமதி தொழிலை முடக்குகின்ற அபாய நிலையை தோற்றுவித்திருக்கிறது.

தற்போது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றாக திகழ்கின்ற மக்களின் அடிப்படை உரிமையான கல்வியையும் சீரழிக்க முற்பட்டிருக்கிறது அரசாங்கம். அதிபர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஜனநாயக முறைகளை பின்பற்றி அரசியல் நோக்கங்களோ கலப்படமோ இல்லாத போராட்டம். இதற்கான தீர்வு பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்படவேண்டும். அதை விடுத்து வேறு அரசு அதிகாரிகளை அவர்கள் இடத்திற்கு நியமிப்போம் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதென்பது அரசாங்கத்தினுடைய முறை அல்ல என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் ராணுவ காப்பரண்கள் அல்ல. மாறாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சந்ததியை வளர்கின்ற கல்விக்கூடங்கள். இதை பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் தான் நடத்த முடியும். விதண்டாவாத போக்குகளின் மூலம் ஏற்கனவே நாட்டை அதலபாதாளத்தில் தள்ளி இருக்கும் அரசாங்கம் கல்வியையும் சீரழிக்க முற்படுகின்ற நடவடிக்கையாகவே இதை நாம் நோக்குகிறோம். பதிலீடாக அனுப்பப்படும் அதிகாரிகள் நாளை சம்பள உயர்வு கேட்டால் அவர்களுக்கு பதிலாக நீங்கள் யாரை கொண்டு வரப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் வழியே தவிர அதற்கான மாற்றீடாக ஆட்களை நிரப்புவது தலைவலியை தீர்ப்பதற்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பாகும்.

நாட்டின் அரசியல் பிரச்சினை தீர்வுக்கு உரியவர்களுடன் பேச்சு நடத்தாமல் விதண்டாவாதமாக இழுத்தடிப்பது போல அல்லாமல் சம்பந்தப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மதிப்பளித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு சுமுகமான முடிவை காண்பது நாட்டினுடைய எதிர்கால சந்ததியின் கல்வியை காப்பாற்றும்.

லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (21) முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் எதிர்ப்புக்களை தெரிவிக்க முடியும்.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

18 வயதைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக, வாக்காளர் பதிவுச் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 18 வயதைப் பூர்த்தி செய்த வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட முழுமையான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதே இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் – இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின்  தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த  சிங்கள குடியேற்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி கிழக்கு பகுதியின் மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் 200 சிங்கள குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 ஏக்கர் வீதம் சிங்கள மக்களுக்கு வழங்க திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கின்றது

இந்த சிங்கள குடியேற்றத்தை செய்வதற்காக இலங்கையின் பௌத்த ஆலோசனைக்குழுவின் நடவடிக்கையின் பயனாக ஜனாதிபதியின் துணையுடன் கொழும்பு காணி ஆணையாளரது வழிகாட்டலின் பெயரில் இன்று இந்த பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடாத்துவதற்காக பௌத்த தலைமையிலான குழுவினருடன் பார்வையிட்டது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதை மத்திய அரசின் செயற்பாடு முன்நிறுத்துகின்றது.

இது தொடர்பாக அந்தபகுதியில்; மக்கள் பிரதிநிதிகளும் அந்தபகுதிமக்களும் ஒரு வெகுஜன ரீதியான எதிர்ப்பு போராட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்த இன்றைய தினத்தில் இந்த காணிகளை பாக்கச் சென்றவர்களுக்கு இதில் எதிர்ப்பு இருக்கின்றது என தெரியப்படுத்தியுள்ளது.

1983 ம் ஆண்டு 1985 ம் ஆண்டு கலவரங்களின் ஊடாக அந்த பகுதியில் குறிப்பிட்ட சில 4 அல்லது 5 சிங்கள குடும்பங்களும் தமிழ் குடும்பங்களும்  முஸ்லீம் குடும்பங்களும் இடம்பெயர்ந்தது என்பது வரலாறு இதற்கு 1982 ம் ஆண்டு வருடாந்த அனுமதிப்பத்திரம் இந்த பகுதியில் ஒரு குடும்பத்துக்கு 6 ஏக்கர் வீதம் 198 குடும்பங்களுக்கு இருந்ததாக பொய்யான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை தயாரித்து சம்மந்தப்பட்டோருக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

இந்த வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கையொழுத்து வைத்த உத்தியோகத்தவர் என்பவர் எங்கள் அறிவுக்கு எட்டியவரை அப்படி ஒரு உத்தியோகத்தர் வேலை செய்யவில்லை. ஆகவே காணி ஆணையாளா இந்த வருடாந்த அனுமதிப்பத்திரம் பொய்யா உண்மையா என இந்த விடயத்தை முதலில் விசாரணை செய்யவேண்டும்.

வருடாந்த அனுமதிப்பத்திரம் அந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அது இரத்து செய்யப்படும். ஆகவே ஒரு பொய்யான ஆவணத்தை தயாரித்ததாக ஒரு குற்றச்சாட்டடை நான் முன்வைக்கின்றேன் அது மட்டுமல்ல கடந்த பதினைந்து இருவது வருடமாக கிழக்கு மாகாண சபையில் இந்த விடையத்தை 4 வது தடவையாக நான் இங்கு இன்று பேசுகின்றேன்.

இந்த குடியேற்றம் தொடர்பாக கடந்த வருடம் அதற்கு முந்தியவருடம் பல முயற்சிகள் செய்யப்பட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கிழக்குமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பல ஆட்சேபனையை தெரிவித்து வந்தோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் மத்திய அரசாங்கமும்  பௌத்த ஆலோசனைக் குழு சிங்கள மக்களை நாங்கள் குடியேற்றி ஆகவேண்டும் என இன்று இதனை கையில் எடுத்திருக்கின்றது என்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு கேவலம் கெட்ட ஜனாதிபதிட்டபாய ராஜபஷவின்  தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும.

எனவே  இந்த திட்டமிட்ட  குடியேற்றத்தை வன்மையாக கண்டித்து இன்று இந்த நிலைமையில் அந்த இடத்திற்கு சென்று மக்கள் பிரதிநிதிகள் ஆர்பாட்டம் நடாத்துவது என்பது வரவேற்கதக்க விடையம் இதை உணர்ந்து மத்திய அரசு இதனை நிறுத்துவதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திருகுமார் நடேசனால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் – பா. உ. சமிந்த விஜேசிறி

பன்டோரா பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்ட சொத்து பதுக்கல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றியதால், திருகுமார் நடேசனால் தனக்கு உயிர் அச்றுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இது தொடர்பில் சபாநாயகர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற(21) அமர்வில் கலந்துகொண்ட சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், பன்டோரா பத்திரிகைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்த சொத்து பதுக்கள் தொடர்பில்  கடந்த பாராளுமன்ற அமர்வில் நான் உரையாற்றியிருந்தேன். இது தொடர்பில் கடந்த 11ஆம் திகதி எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் யார் என கேட்டேன். திருகுமார் நடேஷன் என அவர் கூறினார் என்றார்.

எனக்கு விளங்கவில்லை என்பதால் மீண்டும் யார் என்று கேட்டேன் திருகுமார் நடேசன் என்றே பதில்வந்தது. ”பன்டோரா பத்திரிகையில் வெளிவந்த சொத்து பதுக்கல் தொடர்பில் நீங்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தீர்கள்.” என சிரித்தபடியே கூறி அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்தார்.

இந்த தொலைபேசி அழைப்பை எனக்கு விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தலாகப் பார்க்கிறேன். நான் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் இதுபோன்ற விடயங்களை நாம் பேச வேண்டும். திருடனை திருடன் என கூறுவதில் எனக்கு பயமில்லை என்றார்.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பொறுப்பானவர் என்றரீதியில், சபாநாயகர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக யாழ் போதனா வைத்தியசாலையில் நினைவுத்தூபி!

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின்  உறவுகளால்  உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் ஒரு தூபி அமைப்பதற்கு தமக்கு இடம் ஒதுக்கித் தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும்

அந்த விடயம் தொடர்பில் தமது வைத்தியசாலையின்  பல்வேறுபட்ட குழுக்களின்  ஒப்புதலைப் பெற்ற பின்னர் புதிய வசதி ஒன்று செய்யப்பட்டு  ஒரு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டு நினைவுத்தூபி அமைக்கப்படும்என்றார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது யாழ்ப்பாண வைத்தியசாலையின செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன

தற்போது வைத்தியசாலையை நோக்கி பல்வேறு நோய் உடையவர்களும் பிரச்சினை உடையவர்களும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருக்கின்றார்கள் கொவிட்  தாக்கம் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது இருப்பினும் கோவிட்  சிகிச்சைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணம் உள்ளன

கொவிட்  தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது

ஆகவே பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையான வருத்தங்கள் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் அவர்கள் வைத்தியசாலைகளை நாடவேண்டும் அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்திய சாலைக்கு வந்து தங்களுடைய வருத்தங்கள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்

இதேவேளை  அனைவரும்   தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் தடுப்பூசியினை பெறாத நிலையில் அவர்களுக்கு ஏதாவது சிகிச்சைகளுக்கு ஏதாவது வைத்திய தேவைக்காக வர  வேண்டுமாக இருந்தால் அவர்கள் வரமுடியும் தடுப்பூசி போடாதவர்கள் என்ற ரீதியில் அவர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை அவர்களுக்கும் ஏனையவர்கள் போன்று சகல விதமான சிகிச்சைகளை மேற் கொள்ளப்படுகின்றது

குறிப்பாக வயோதிபர்கள் இளம் வயதினர் சிலர் தமக்கு விருப்பமான தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற நோக்கில் தாமதப்படுத்தி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாது விடாது தமக்குரிய தடுப்பூசியினை விரைவில் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம்

விசேட நாடாளுமன்ற தினமாக எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாமல்போன 50 வினாக்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த விசேட நாடாளுமன்ற தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலை உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டுச் சந்தையில் அதிகரித்துள்ளன.

அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பொருட்களின் ஏற்றுமதிகள் ஊடாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு 1கிலோவின் விலையானது தற்போது 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, கறுவா 1கிலோ 3,400 ரூபாவாகவும், கராம்பு 1கிலோ 1,400 ரூபாவாகவும், 1 கிலோ கோப்பி 1,250 ரூபாவாகவும், 1கிலோ பாக்கு 1,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மிளகு, கறுவா, கிராம்பு உள்ளிட்ட பிரதான பயிர்கள் 45,000 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையம் திறப்பு

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கட்டு நாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்ற விசேட விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் 1வதாக தரையிறங்கியது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1147 என்ற இந்த விசேட விமானத்தில், 95 தேரர்கள் உள்ளடங்கலாக 111 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.

புதிய அரசியலமைப்பு சட்டமூல தயாரிப்பு நிறைவு

புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்காக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்த விசேட குழு புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதனை நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பானது ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியின் யுகத்தில் 1978 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

கடந்த நான்கரை தசாப்தங்களாக நாட்டு மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அதற்கிணங்க புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ, சட்டத்தரணிகள் மற்றும் கல்விமான்களைக் கொண்ட விசேட குழுவை நியமித்தார்.

அந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா செயற்படுவதுடன் அந்தக் குழு தற்போது அரசியலமைப்புக்கான சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.

அந்த சட்ட மூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு இறுதி ஆவணம் தயாரிக்கப்படவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் அது அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பை கவனத்திற் கொள்ள வேண்டிய வாய்ப்பு நாடாளுமன்றத்திற்கு கிடைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized