இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் ஈரான் ஜனாதிபதி நம்பிக்கை

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றார்.

ஈரான் அதிபருக்கு முப்படையினரின் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது.

இருநாட்டு ஜனாதிபதிகளும் இரு நாடுகளின் தூதுக்குழுவை அறிமுகப்படுத்திய பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி தலைமையிலான கு

தனது விஜயத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி ரைசி, ஜனாதிபதி அலுவலகத்தின் சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பையும் பதிந்தார்.

தலைவர்களுக்கிடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர், இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான முறையான இராஜதந்திர உறவுகள் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. முறையான இராஜதந்திர உறவுகளை நிறுவுவதற்கு முன்பே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னெடுக்கப்பட்டன. முந்தைய பாரசீக காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமாக ஹோமூஸ் ஜலசந்தி வழியாக நடத்தப்பட்டன. ஈரான் தனது தூதரகத்தை 1975 இல் கொழும்பில் நிறுவியது.

இலங்கை தனது தூதரகத்தை தெஹ்ரானில் ஜனவரி 1990 இல் நிறுவியது. இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணுவதுடன், பலதரப்பு உறவுகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு ஜனாதிபதிகளும் ஆராய்ந்தனர்.

அத்துடன், கடந்த காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையின் அண்மைய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈரானிய ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததுடன், இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஜனாதிபதி ரைசி தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய துறைகள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் கையெழுத்திடப்பட்டன.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தேசிய நூலகம் மற்றும் ஆவணக் காப்பகத்திற்கும் இலங்கையின் தேசிய நூலகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கையொப்பமிட்டதுடன், கலாசார அலுவல்கள் அமைச்சர் மொஹமட் மெஹ்தி இஸ்மாயில்(Mohammad Mehdi Esmaeili),ஈரான் இஸ்லாமி குடியரசின் சார்பில் கைச்சாத்திட்டார்.

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் கலாச்சார விவகார அமைச்சர் முஹம்மது மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் ஊடகத்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதோடு இலங்கையின் சார்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பில் ஈரான் எரிசக்தி அமைச்சர் அலி அக்பர் மெஹ்ரா (Ali Akbar Mehra Biyan) பியான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான கலாச்சார, விஞ்ஞான, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வெகுஜனஊடகம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை தொடர்பான உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் ஈரானின், கலாச்சார விவகார அமைச்சர் முஹம்மது மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஈரான் கூட்டுறவுச் சபைக்கும் இலங்கை தேசிய கூட்டுறவுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் இலங்கை தேசிய கூட்டுறவு சபையின் தலைவர் ஜி.வி. சரத் வீரசிரி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சார்பாக ஈரான் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மொஹமட் மெஹ்தி இஸ்மாயில் (Mohammad Mehdi Esmaeili) ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, நளின் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை – இந்தியா இடையே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம்​ நாகப்பட்டினத்திலிருந்து செரியபாணி என்ற கப்பல் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.

ஆனால் மழை மற்றும் போதியளவு பயணிகள் பயணிக்காமை உள்ளிட்ட காரணங்களால் ஒரே வாரத்தில் இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை – இலங்கை இடையே பயணம் செய்ய இருப்பதாகவும் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கப்பலில் இரண்டு தளங்கள் உள்ளதாகவும், அதன் கீழ் தளத்தில் பயணிக்க 5000 இந்திய ரூபாவும், மேல் தளத்தில் பயணிக்க 7000 இந்திய ரூபாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை – மைத்திரி

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும். கம்பஹா மாநகர சபை வளாகத்தில் மே தினத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு; கடும் அதிருப்தியில் அமெரிக்கா

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது – அனுரகுமார

பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்

சண்டே டைம்சிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளர்ர்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வை பெற்றுதர முடியாது ஆனால் அது தங்களின் உரிமை என தமிழ் மக்கள் கருதுகின்றர் மாகாணசபைமுறை தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கேள்வி-

அரசமைப்பின் 13வது திருத்தம் குறித்து தேசிய மக்கள் சக்தியி;டமிருந்து எந்த கருத்தும் பதிலும் இல்லையே உங்களால் அதனை தெளிவுபடுத்த முடியுமா?

பதி;ல்- நாங்கள் பல தடவை 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைகள் குறித்த எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம்.

2019ம் ஆண்டு வெளியான எங்களின் கொள்கை குறித்த ஆவணத்திலும் இது குறித்து தெரிவித்திருக்கின்றோம்.

எனினும் நான் மீண்டும் உங்களிற்கு இதனை தெளிவுபடுத்துகின்றேன்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபைமுறையே முழுமையான தீர்வு என நாங்கள் கருதவில்லை எனினும் மாகாணசபைகள் கடந்த மூன்று தசாப்தங்களிற்காக மேல் நாட்டில் காணப்பட்டுள்ளன எங்கள் கட்சியும் மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வடக்குகிழக்கு மக்கள் மாகாணசபைகளை தங்களின் உரிமைகளில் ஒன்று என கருதுகின்றனர்.

பல வருடங்கள் வேண்டுகோள் விடுத்த பின்னர் தங்களிற்கு கிடைத்த வெற்றி மாகாணசபைகள் என வடக்குகிழக்கு மக்கள் கருதுகின்றனர்.

மாகாணசபை முறையை தொடரவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம்.

கேள்வி- தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அணுகும்?

பதில்-

மாகாணசபைமுறை மாத்திரம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு போதுமானதல்ல என்பதை நான் ஏற்கனவே உங்களிற்கு தெரிவித்துள்ளேன்.

இலங்கையில் பல வருடங்களாக அரசியல் என்பது ஒரு சமூகத்தை மற்றைய சமூகத்துடன் மோத விடுவதாக காணப்படுகின்றது.

உதாரணத்திற்கு 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவின் வெற்றி என்பது முழுமையாக முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான கோசத்தினை அடிப்படையாக கொண்டிருந்தது.

எங்கள் நாட்டின் வரலாறு முழுவதும் அரசியல் வெற்றிக்காக சமூகத்தின் ஒரு பகுதியினரை மற்றைய தரப்பிற்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

அரசியல்கட்சிகள் அவை எந்த சமூகத்தை சேர்ந்தவையாகயிருந்தாலும் சரி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக சில சந்தர்ப்பங்களில் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்டியுள்ளன.

எங்கள் அரசியல் முற்றுமுழுதாக இதிலிருந்து வேறுபட்டது.

மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாங்கள் தேசிய ஐக்கியம் இன ஐக்கியம் ஆகியவற்றிற்காக குரல்கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான முதல் நடவடிக்கையாக சமூகங்களை பிரிப்பதற்கு பதில் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் அரசியல் முறையை உருவாக்கவேண்டும்.

நாங்கள் அதனை செய்கின்றோம்.

கேள்வி- இதன் மூலம் பிரச்சினைகளிற்கு எவ்வாறு தீர்வை காணமுடியும்?

பதில்- தமிழர்களாக உள்ளதால் தமிழ் மக்கள் சில இனத்துவ நெருக்கடிகளை பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும்.

அது மொழி கலாச்சாரம் மத சுதந்திரம் அரசியல் அதிகாரத்திற்கான போதியளவு சமவாய்ப்பின்மை போன்றவையை அடிப்படையாக கொண்டவையாக காணப்படுகின்றன.

இவற்றிற்கு தீர்வை காணவேண்டும்.

அரசமைப்பில் சில ஏற்பாடுகள் உள்ளபோதிலும் அவற்றை பின்பற்றவில்லை நடைமுறைப்படுத்தவில்லை.

பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்து 15வருடங்களாகின்றது ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு நேர்மையான தீர்வுகள் எவற்றையும் முன்வைக்கவில்லை.

நாங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை நம்புகின்றோம்.

முதலாவது அரசியல் விவகாரம் -பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் அதிகாரத்திற்கான நியாயமான உரிமையை நாங்கள் உறுதி செய்வோம்.

இரண்டாவதாக இலங்கையின் ஏனைய சமூகத்தினரை போல தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் உள்ளன இந்த பிரச்சினைகளிற்கு தீர்வுகள் காணப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.

இல்லையேல் ஒருவரை ஒருவர் தூண்டிவிடுகின்ற பிரிவினைவாத அரசியல் கலாச்சாரத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது.

எனவே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொடுத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் நம்புகின்றோம்.

கேள்வி – நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கபடவேண்டும் – இது குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக உள்ளோம்.

நிறைவேற்று அதிகார முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அது பொருத்தமற்றது என நாங்கள் கருதிவந்துள்ளோம்.

46 வருடங்களிற்கு பின்னரும் இது இலங்கைக்கு பொருத்தமற்றது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஆகவே இதனை நீக்கவேண்டும்.

கேள்வி- தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் தொடர்பான உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்- ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கம் எங்களிற்கு தேவையில்லை அனைத்து சமூகத்தினரையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

நாங்கள் வடக்கை சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம், மலையகம் மற்றும் முஸ்லீம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் நாங்கள் சிங்களவர்களிற்கான அரசாங்கத்தை மாத்திரம் உருவாக்கவேண்டியதில்லை.

வடக்கு மக்கள் அது சிங்கள அரசாங்கம் என கருதும் ஒன்று தேவையில்லை.

நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கும் அரசாங்கமே எங்களிற்கு தேவை.

அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களின் பரந்துபட்ட ஆதரவு அவசியம் .அவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யவேண்டும்.a

2026 வரை இலங்கையின் வறுமை விகிதம் அதிகரித்த மட்ட்த்தில் காணப்படும் – உலக வங்கி

2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் வறுமை விகிதம் இருபத்தி இரண்டு சதவீதத்தை விட உயர் மட்டத்திலிருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக வங்கியின் அறிக்கைகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.2 வீத மிதமான வளர்ச்சியைக் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், 2022 இல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் பின்னர் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், நாடு இன்னும் அதிகளவிலான வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மையை எதிர்கொள்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் வறுமை விகிதங்கள் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக அதிகரித்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் 25.9 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 வரை நாட்டின் வறுமை விகிதம் 22 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்குமென்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் சென்றாலும், வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தொடர்ச்சியுடன் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் மிகவும் முக்கியமானவை என உலக வங்கியின் பணிப்பாளர் எச்.பரிஸ் குறிப்பிடுகிறார்.

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு தலைநகரில் வரவேற்பு பதாதைகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் இன்று(23) நாட்டிற்கு வருகை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன்(Sun Haiyan) இன்று(23) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தருவதாக தினகரன் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi), நாளை(24) நாட்டிற்கு வருகை தருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

உமாஓயா பல்நோக்கு திட்டத்தை திறக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரானிய ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

’’Foxhill supercross ’’ கார் பந்தயம்: 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்

தியத்தலாவ நரியகந்த, “Foxhill supercross” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 20பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான காணொளி தற்போது வௌியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டிலும் இலங்கை 33வது ஆண்டாக வரவு – செலவுத் திட்ட வருமான இலக்கை எட்டத் தவறும் – வெரிட்டே ரிசேர்ச்

2024ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33வது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட ‘2024 வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்’ எதிர்பார்க்கப்படுகிறது.

‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளமாக உள்ள PublicFinance.lk இல் வெளியிடப்படுகிறது.

இலங்கையின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் பொருளாதார மதிப்பீடுகளின் வலுவான பகுப்பாய்வு மற்றும் புறநிலை மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவால் (COPF) வெளியிடப்படும் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் நோக்கத்தையே இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது. இந்த இரண்டு அறிக்கைகளும் வரவு செலவுத்திட்டம் பற்றிய புரிதலையும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்திலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.வெரிட்டே ரிசேர்ச்சின் ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் அரசாங்கத்தின் கணிப்புகளை விடவும் வரவு செலவுத் திட்டவிளைவுகள் தொடர்பாக மிகவும் துல்லியமான கணிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. இது இலங்கையில் தொழில்சார் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான மேலதிக உள்ளீட்டை உருவாக்குகிறது.

மிகைப்படுத்தப்பட்ட வரி வருமானம்

1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான இலக்கை இலங்கை இதுவரை எட்டவில்லை. மிகச் சமீபத்தில், வழிவகைகள் பற்றிய பாராளுன்றக் குழு, 2023 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட இலக்கை விட வரி வருமானம் 13% குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூ.4,164 பில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது, இது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42% அதிகரிப்பாகும். எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை 14% பற்றாக்குறையை கணித்துள்ளதுடன், வருமானம் ரூ.3,570 பில்லியனாக இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது.

பெறுமதி சேர் வரி (VAT) மூலம் கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே கணிக்கப்பட்ட பற்றாக்குறையில் 61 சதவீதத்திற்குக் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டாண்மைவருமான வரி, தனிநபர் வருமான வரி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் சுங்க இறக்குமதி வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே மீதமுள்ள 39 சதவீதத்திற்குக் காரணமாகவுள்ளது.

வருமானத்தில் வட்டி விகிதம்

உலகில் வருமானத்திற்கு அதிக வட்டிச் செலவு விகிதத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், இந்த விகிதத்தைக் குறைப்பது பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்இந்த விகிதத்தை 64% ஆகக் குறைக்க எதிர்பார்க்கிறது. எவ்வாறாயினும், ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையின்’ வருமானக் கணிப்புகள் மற்றும் வட்டிச் செலவுகள் தொடர்பான அரசாங்கக் கணக்கீடு ஆகியவை, கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இது 70 சதவீதத்தைத் தாண்டும் எனக் குறிப்பிடுகின்றன. கடன் நிலைத்தன்மையின் முக்கிய குறிகாட்டியாக பொருளாதார வல்லுநர்கள் கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட பொருளாதார மீட்சித் திட்டத்தில் இலங்கை இதன் மூலமாக பின்தங்கும் நிலை ஏற்படும்.

Posted in Uncategorized