இலங்கையின் வலுசக்தித் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

வலுசக்தி துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து ரஷ்யாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ‘இலங்கையின் எரிசக்தி துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் கால்நடைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்

வடக்கு மாகாணத்தில் உள்ள கால்நடைப்  பண்ணைகளை ஒழுங்குபடுத்துவற்கு சில சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் சுமார் 80 வீத கால் நடைகள் திறந்த வெளிகளிலேயே வளர்க்கப்படுகிறது. இவை உற்பத்தி திறன் குறைந்தவையாக காணப்படுகின்றன. வடக்கில் 4 இலட்சம் மாடுகள், 10 ஆயிரம் எருமை மாடுகள், 3 இலட்சம் ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் 3 இலட்சம் மாடுகள் பால் உற்பத்திக்காக  திறந்த வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. இவை நாட்டு இன மாடுகாளாக காணப்படுகின்றன.

அத்துடன் நாட்டின் மொத்த இறைச்சித் தேவையில் 30 வீதத்தை வடக்கு மாகாணம் பூர்த்தி செய்கிறது. இதனால் வருமானமும் அதிகரிக்கிறது. எனினும் விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது அதிகமாக காணப்படுகின்றன. இதனால் வயல் நிலங்களை நாசம் செய்துவிடும் என்ற காரணத்தால், கால்நடைகள் பொருத்தம் இல்லாத இடங்களுக்கு மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன. இதனால் கால்நடைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சுமார் 30 ஆண்களுக்குப் பின்னர் வடக்கில் ஒரு துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கோடை காலத்தில் நீர் இல்லாமலும், மழை காலத்தில் வெள்ளத்தாலும் மாடுகள் இறப்பது வழமை. ஆனால் இப்போது முதல் தடவையாக குளிரால் மாடுகள் அதிகளவில் சில தினங்களுக்கு முன்னர் இறந்துள்ளன.

இதற்கு காரணம் மாடுகளில்  கொழுப்புப் படை இன்மையே ஆகும். 90 வீத மாடுகளுக்கு கொழுப்புப் படை இல்லை.இந்த பெரும் போக காலத்தில் அவைகளுக்கு  தீவனம் இல்லை. இம்முறை தான் இந்தப் குளிர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் கவனமாக அணுக வேண்டும்.

திறந்த வெளிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அலட்சியமாக உள்ளனர்.பண்ணைகளைப்  பதிவு செய்வதில்லை. மாடுகளின் இலக்கங்களை பெறுவதில்லை. உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெறுவதில்லை. இவ்வாறு அவர்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்குவதில்லை. கால் நடைகளுக்கான பராமரிப்பு போதியளவு இல்லை.

ஆகவே கால் நடைகளின் இறப்புகளை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைளை, சில சட்டங்களை பிறப்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப் படுத்த எண்ணியுள்ளோம். முறையான பதிவு மூலம் பண்ணைகளை நடாத்தி, அந்த கால்நடைகள் உயிரிழந்திருந்தால் ,அரசாங்கம் நட்ட ஈடு வழங்கும் பட்சத்தில்  நாம் பண்ணையாளர்களுக்கு வழங்குவோம் என்றார்.

குளிர்காரணமாக கிளிநொச்சியில் 529 மாடுகளும் முல்லைத்தீவில் 524 மாடுகளும் வவுனியாவில் 28 மாடுகளும் உயிரிழந்துள்ளன. இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் மாடொன்று உயிரிழந்துள்ளது.

அத்துடன், குளிர் காரணமாக  கிளிநொச்சியில் 266 ஆடுகளும்  முல்லைத்தீவில் 199 ஆடுகளும் வவுனியாவில் 52 ஆடுகளும் உயிரிழந்துள்ளன என்றார்.

நிதி இன்மையால் வட, கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தம்

வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு,  ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை.

இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட வீதி புனரமைப்புப்பணிகள் சிலவற்றை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சில வீதிகள் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாத்திரம் சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள உடன்படிக்கை பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மீள வழங்க உடன்பாடு காலத்தை பொறுத்துத் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிய வருகின்றது.

ரோட்டரியும் யுனிசெப்பும் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கையளிப்பு

ரோட்டரி இன்டர்நெசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்சும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக்கும் இணைந்து லைவ்லைன் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயிடம் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கையளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மருத்துவ பொருட்களிற்கு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரோட்டரி கழக வலையமைப்பு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இணையத்தள நன்கொடை தளம் மூலம் திரட்டிய நிதியை கொண்டு யுனிசெவ் கொள்வனவு செய்த 130 000 டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களே சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டன.

முதலாவது தொகுதி மருந்துகளை இலங்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம். இதன் மூலம் மக்களிற்கு சேவையாற்றலாம் என ரோட்டரி இன்டநசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

விசேடமான இலங்கைக்கு ஆதரவளிப்பது குறித்து ரொட்டரி வழிவகைகளை கண்டறியும் உங்கள் நாடு சிரிக்கும் அற்புதமான மக்களை கொண்டுள்ளது. இந்த சிரிப்பை நாங்கள் எதிர்காலத்திற்கு சேமிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பிரசவித்துள்ள பெண்கள் வலிநிவாரணம் உட்பட பல்வேறு மருந்துகளிற்கு இந்த மருந்துகள் உதவும்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் நீடித்த நிலைமை சமூகசேவை சுகாதாரம் கல்வி போன்றவற்றின் ஊடாக நீடிக்கின்றதுஎன யுனிசெவ்வின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக் தெரிவித்துள்ளார்.

யுனிசெப் அதன் கொள்முதல் மற்றும் தளவாட நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் குடும்பங்களுக்கு உயிர்காக்கும் பொருட்களை வழங்க அதன் கூட்டாண்மைகளைப் பயன்படுத்துகிறது” என்று யுனிசெப் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறினார்.

“இலங்கையின் பொருளாதார நிலையில் சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் தேவைகள் கடுமையாகவே உள்ளன மேலும் எங்களது உதவியை நிலைநிறுத்தவும் அதிகரிக்கவும் பல பங்குதாரர்களின் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்” என்று அவர் கூறினார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன் இலங்கை ரோட்டரி ஆளுநர் புபுது டி சொய்சா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த முயற்சி குறித்து தெளிவுபடுத்திய ரோட்டரி இன்டர்நெசனலின் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன்,

“ எங்களின் மருத்துவ விநியோகங்களின் 80 வீதம் இறக்குமதி செய்யப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக எங்களின் வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளதால் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

எங்கள் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் நிலையில் உள்ளது உயிர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.

சத்திர கிசிச்சைகள் பிற்போடப்படுகின்றன. சிறுவர்களும் கர்ப்பிணிகளும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுவே யதார்த்தம் நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு உதவுவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும் சர்வதேச தலைவர் இலங்கைக்கு மருந்துப்பொருட்களை கையளிக்க வந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரோட்டரி இன்டர்நெசனலும் யுனிசெப்பும் இணைந்து நாடாளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளிற்கு உயிர்காக்கும் மருந்துகளையும் சுத்தமான குடிநீர் ஏனைய முக்கிய வசதிகளையும் வழங்குவதற்கான நிதியை திரட்டியிருந்தன .

இலங்கையின் நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது அனைவரின் நலனிற்கு உகந்தது – பிரான்ஸ் தூதுவர்

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன்  பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம் என  தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது வெளிநாட்டுக்கடனை திருப்பி செலுத்தாதன் காரணமாக பிரான்சிலிருந்து இலங்கைக்கான கடன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை தனது நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டதும் கடன்களை வழங்குவது திருப்பி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் முதல்  பாரிஸ் கிளப் இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்படுகின்றது இன்றும் இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கிளப் ஏனைய கடன் வழங்குநர்களுடன் விடயங்களை பரிமாறிக்கொள்கின்றது எனவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடன்வழங்குவதை பத்து வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்னெடுத்துள்ளது,இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 15 கடன் மறுசீரமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இடைக்காலத்தில் பிரான்ஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிதொகைகளை வழங்கிவருகின்றது என தூதுவர் தெரிவித்துள்ளார்.

இவை சிறிய தொகை என்றாலும் இலங்கைக்கு முக்கிய உதவியாக உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோருக்கு என்ன நேர்ந்தது என அறியும் உரிமை அவர்களது உறவுகளுக்கு உண்டு – திஸ்ஸ விதாரண

”அரசியல் தீர்வுக்கு நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை” என சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முயற்சியில் ஜனாதிபதி அரசியல் தீர்வு விவகாரத்தை கையாளுகிறார்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பாராளுமன்றத்திலும் பொது இடங்களிலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சமஷ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

காணி பிரச்சினைக்கு தீர்வு, பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கல், முறையான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

முப்படைகளில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 30 வருடகால யுத்த சூழலில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தம் நிறைவடைந்த பிறகும் படையினரின் அதிகபடியான பங்குப்பற்றலுடன் இருப்பது பொருத்தமற்றது. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

யுத்தத்தில் காணாமல்போனோருக்கு நேர்ந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களின் உறவுகளுக்கு உண்டு. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு உறுதியான இறுதி தீர்வை எட்ட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தை அடிப்படையாக கொண்டு தீர்வு வழங்கும் வகையில் 3 வருடங்களாக பல்வேறு தரப்பினருடன் 128 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நான் முன்வைத்த திட்டங்களை தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன.

அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் முயற்சியை ஜனாதிபதி தற்போது கையாளுகிறார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்குவது சாத்தியமற்றதானால் இனங்களுக்கிடையில் மீண்டும் வெறுப்பு நிலை ஏற்படும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சிங்கள இனம் எமக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை என்று தமிழ் சமூகம் கருதும் நிலை ஏற்படும்.

அது உண்மையான இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என்றார்.

கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு

பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் செயலாளர் சந்திரா சாப்டரின் புதல்வரும் ஜனசக்தி குழுமத்தின் தலைவருமான தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறக்கும் போது அவருக்கு 51 வயது.

நேற்று பிற்பகல் குருந்துவத்தை மல் வீதி வீட்டில் இருந்து பல கோடி ரூபா கடனாகப் பெற்றுக் கொடுக்கவுள்ள ஒருவரை சந்திக்கச் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு குறித்த நபர் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது மனைவி சிறிது நேரத்தில் அவரை அழைத்ததாகவும், தலைவரின் தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் பொரளை மயான அருகில் இருப்பதாக மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு சமிஞ்ஞை கிடைத்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபரின் மனைவி, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியிடம் கூறி அவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்ததாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில், காரின் சாரதி இருக்கையில் குறித்த நபரின் கைகள் கப்பியினால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாகவும், கழுத்து ஒரு வயரினால் இறுக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரி மயானத்தில் பணிபுரியும் தொழிலாளியின் உதவியுடன் தலைவரின் கைகளிலும் கழுத்திலும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த கம்பிகளை அகற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

தலைவரின் காரை விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்வதை மயானத்தில் பணிபுரிபவர் பார்த்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் குறித்த நிறுவனத்தில் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் குறித்த நிறுவனத்தின் தலைவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மூன்று முறைப்பாடுகளை செய்துள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தலைவரை கடத்திச் சென்ற சிலர் அவரை மயானத்திற்கு அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொரளை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஏ.ஜே.எம்.ஆர். சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Posted in Uncategorized

வட,கிழக்கில் சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடு

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிகுளிருடன் கூடிய காலநிலையால், வடக்கு, கிழக்கில் பெரும் தொகையிலான கால்நடைகள் மரணமடைந்தன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டுமென வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் – சம்பிக்க

பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள்.

எனவே,  தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி தலைவர்களுடனான மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சர்வகட்சி தலைவர்கள் மாநாட்டில் இராணுவ த்தின் வசமுள்ள காணிகள் விடுக்கப்பட வேண்டும், சிறைச்சாலைகளில் உள்ள முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பபட்டுள்ளது.

மேலும், நிறைவேற்று அதிகாரம்  கொண்ட ஜனாதிபதியால் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் அந்த இயக்கத்துக்கு தலைமை ஏற்றிருந்த குமரன் பத்மநாதன் வௌியில் இருக்கிறார். ராமன், நகுல், கருணா  போன்றவர்களும் வௌியில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் சிறைச்சாலையில் உள்ள 31 முன்னாள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

அதேபோல் இராணுவத்தினரையும் விடுதலை செய்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். மேலும் அரசியலமைப்பு தொடர்பில் இதன்போது பேசப்பட்டது. அது தொடர்பில் பாராளுமன்றத்துக்குள்ளேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருளாதார பிரச்சினையால் கஸ்டத்தில் உள்ள தமிழர்கள் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார்கள். கஸ்டத்தில் உள்ள சிங்களவர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கிறார்கள். பணமுள்ளவர்கள் விமானங்கள் மூலம்  வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள். எனவே, பொருளாதாரப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும்,  தேர்தல் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. மீண்டும் ஜனவரி மாதம் சர்வக்கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றார்.

இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.