நீர் வழங்கல் துறையின் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கொள்கைத் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் கட்டமைப்பு பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காலநிலைக்கு ஏற்ற, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான நீர் வழங்கல் கட்டமைப்பு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் நீர் செயல்பாடுகளின் கட்டுப்பாடு, நிலைத்தன்மை, செயல்திறன், தாங்கும் திறன் மற்றும் கொள்ளளவு தொடர்பாக கொள்கைக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி இந்த மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் பிரதமர் அலுவலகம், நீர் வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட உள்ளது.

Posted in Uncategorized

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கடற்படை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும் வகையில் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நடவடிக்கை பயணிகள் போக்குவரத்துத் திட்டம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – ஜப்பான் தூதுவர்

கொழும்பு – மாலபே இடையிலான இலகு ரயில் சேவைத்திட்டத்தினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி தெரிவித்துள்ளார்.

இலங்கை மோட்டார் வர்த்தக சங்கத்தினால் நேற்று புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலகு ரயில் புகையிரத திட்டம் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது மற்றும் ஜப்பான் வர்த்தக சமூகத்தின் நம்பிக்கையை இலங்கையால் மீண்டும் பெற முடியுமா என்பதை பொறுத்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தினால் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் கொழும்பு, கோட்டையிலிருந்து மாலம்பே வரையான இலகு ரயில் சேவைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ஜப்பான் கடன் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக இரத்து செய்தது.

ஜைக்கா நிறுவனத்தினால் 12 ஆண்டுகள் சலுகை காலம் உள்ளடங்கலாக, 40 ஆண்டுகளுக்கு 0.1 சதவீத வட்டியுடன் கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், இதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய எவ்வித காரணமும் இன்றி, இலங்கை அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 2020 செப்டெம்பர் 24ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கமையவே இத்திட்டம் இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர், இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் இணங்கியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், ஜப்பான் தூதுவர் அதற்கு மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது – சுனில் ஹந்துனெத்தி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர்.

சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது.

பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா?

நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக 132 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இந்தியப் பெருங்கடலில் தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையமாக மாற இலங்கை எதிர்பார்க்கிறது.

இதற்கமைய துறைமுக அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளது.

இந்த முதலீடுகள் துறைமுக நடவடிக்கைகளில் இருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் செய்யப்படும்.

கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜெயா கொள்கலன் முனையத்திற்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இரண்டு முனையங்களும் அரசுக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையின் துணை நிறுவனங்களாகும்.

மேற்கூறிய முதலீடுகளைத் தவிர, திருகோணமலை துறைமுகத்தை மொத்த சரக்கு நடவடிக்கைகளுக்காகவும், காலி துறைமுகத்தை சுற்றுலாத் துறைக்காகவும் படகு சேவையுடன் மேம்படுத்தவும், பெரிய கப்பல்களை நங்கூரமிட வசதி செய்யவும் எதிர்பார்க்கிறோம். என கூறியுள்ளார்

அபிவிருத்திப் பணிகளுக்கு பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணபட்டியல்

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நாளை(செவ்வாய்கிழமை) இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணத்திற்கான கொடுப்பனவு பட்டியலை வழங்கும் இயந்திரம் மூலம் மாதாந்த கொடுப்பனவு தொகையை வழங்குவதுடன், வங்கி அட்டைகள் மூலம் கொடுப்பனவுகளை செலுத்தும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் விரைவில் சர்வதேச விளையாட்டு மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற  இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவைத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் ஸ்ரேடியம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

திருத்தப்பணிகளுக்காக ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும்.

இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்து சேவை வழங்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை பயணிக்கும் புகையிரதம் இதே ஐந்து மாத காலப்பகுதிக்குள் வவுனியா வரை இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகருக்கு புதிய விசா வசதிகள்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டார்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்கு வீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய உத்தேச வீசா வகைகள் வருமாறு

1.வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான “முதலீட்டாளர் வீசா” வகை

2.சேவை வழங்குநர்களுக்கான “சேவை வழங்குநர் வீசா” வகை

3.கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான “சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர்” வீசா வகை

Posted in Uncategorized