அதிகாரப் பகிர்வு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

அதிகார பகிர்வு அனைவரையும் உள்வாங்கும் அபிவிருத்தி ஆகியவை இலங்கையின் பேண்தகு அபிவிருத்திக்கு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூர்ய பெரும்பான்மைவாதம் குறித்தும் எச்சரித்துள்ளார்

இந்தியாவின் 2022 ரைசினா டயலொக் 2024 நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்ற கலந்துரையாடலில்கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை 1980களின் நடுப்பகுதியில் இனமோதலை எதிர்கொண்டது என்பது உங்களிற்கு தெரியும்- இனமோதலிற்கு முன்னர் நாங்கள் பாதுகாப்பு செலவீனங்களிற்காக மிகவும்குறைவாகவே 0.5செலவிட்டோம்.

இது 1985 இல் மூன்று வீதமாக அதிகரித்தது பின்னர் பத்து வருடங்களின் 1995 இல் 5.9 வீதமாக அதிகரித்தது.

1985 இல் எங்களின் பாதுகாப்பு செலவீனம் 188 மில்லியன் டொலர் 2008 இல் இது 1.5 மில்லியன் டொலராக மாறியது.

1980-90களில் எங்களின் சமூகஅபிவிருத்தி சுட்டிகள் ஏனைய தென்னாசிய நாடுகளை மிகவும் சிறப்பானவையாக காணப்பட்டன.

நாங்கள் அபிவிருத்தி;க்காக செலவிட்டிருக்ககூடியவற்றை பாதுகாப்பிற்காக செலவிட்டோம்,

இலங்கையை பொறுத்தவரை நாங்கள்அனைவரும் ஜனநாயகம் குறித்து நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் நாங்கள் பெரும்பான்மைவாதம் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும்.

1970களில் இலங்கையில் கல்விசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அது சில சமூகத்தினர் பாரபட்சத்திற்குள்ளாக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. இது அந்த சமூகத்தினர் ஆயுதங்களை ஏந்தும் நிலையை ஏற்படுத்தியது.

ஆகவே நாங்கள் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் ஜனநாயகத்தில் பெரும்பான்மை என்பதை நாங்கள் நம்புகின்ற போதிலும் அபிவிருத்தி என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியாக காணப்படவேண்டும்,சமூகத்தின் ஒரு பகுதியினருக்கான அபிவிருத்தியாக மாத்திரம் அது காணப்படமுடியாது.

ஒருநாடாகவும் முன்னோக்கி செல்வதற்கும் நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவேண்டும், நாங்கள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளாவிட்டால் அரசியல்வாதிகள் பெரும்பான்மைவாதம் என்ற துரும்புச்சீட்டை பயன்படுத்துவார்கள் ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தை மாத்திரம் கவரும் நோக்கத்துடன் செயற்படுவார்கள்.

Posted in Uncategorized

பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி. தொடர்ச்சியாக உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை மீளப்பெறுவதற்காக உதய கம்பன்பிலவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கான தனிநபர் பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவினால் இந்த தனிநபர் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் நிறையப் படிமுறைகளை தாண்டி வரவேண்டியிருக்கின்றது. தற்போதைக்கு அது சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன்.

ஒருவேளை, இந்த முயற்சி தொடர்ந்தும் முன்னகருமாக இருந்தால், நாம் உருவாக்கி வைத்துள்ள தேசிய நல்லிணக்கத்தினை பயன்படுத்தி, அதனை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் – கம்மன்பில

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும். ஆகவே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் ஏற்பாடுகள் முழுமையாக இரத்துச் செய்யப்பட வேண்டும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 22ஆவது திருத்த யோசனையை எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் அதிகாரத்தை இரத்து செய்யும் வகையில் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில முன்வைத்த இருபத்திரெண்டாவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்காக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடந்த ஆண்டு ஜூலை மாதமளவில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திக் பிரதான அம்சமாக மாகாண சபைத் தேர்தல் முறைமை,பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் காணப்படுகின்றன.பொலிஸ் அதிகாரத்தை நீக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவே முதன் முறையாக தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம் என ஜனாதிபதி குறிப்பிடுவது அடிப்படையற்றது.13ஐ அமுல்படுத்தினால் தற்போது உள்ள நல்லிணக்கம் கூட பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும்.பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் தமிழ் தலைமைகளுக்கு கிடையாது.பிரச்சினைகளை புதிதாக உருவாக்கி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

13 ஆவது திருத்தத்துக்கு அமைய பொலிஸ் சேவை மாகாண பொலிஸ் தேசிய பொலிஸ் என இரண்டாக வேறுப்படுத்தப்படும்.தேசிய பொலிஸ் அதிகாரிகள் மாகாணங்களுக்குள் இருக்கும் பொலிஸ் சீருடை அணிய அனுமதி வழங்கப்படமாட்டாது. அதற்காக மாகாண முதலமைச்சரின் அனுமதி பெற வேண்டும். பிரிவினைவாதிகளை தாக்க பாதுகாப்பு தரப்பினர் பிரிவினைவாதிகளிடம் அனுமதி கோர வேண்டும்.

இந்தியாவின் கடும் அழுத்தத்தின் ஊடாகவே இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அதனூடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது.இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காணி மற்றும் பொலிஸ் விவகாரங்கள் தொடர்பில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் தான் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்பின் 256 மற்றும் 257 அத்தியாயங்களில் மாநில அரசாங்கம் இந்தியாவுக்கு எதிராக செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டுடன் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தில் இலங்கைக்கு எதிராக மாகாணங்கள் செயற்படும் போது அதில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்ற ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக வழங்கினால் இலங்கை இராணுவத்துக்கும்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொலிஸுக்கும் இடையில் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறலாம். பொலிஸ் நியமனத்தில் மாகாண முதலமைச்சரின் தலையீடு காணப்படும். ஆகவே இது தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

13 ஆவது திருத்தத்தில் பொலிஸ் அதிகாரம் என்பதொன்று இருப்பதால் தான் தமிழ் தலைமைகள் அதனை முழுமையாக அமுல்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இரத்து செய்யும் வகையில் நான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே 22 ஆவது திருத்த யோசனை சட்டமூலத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.

ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

தமிழ்க் கட்சிகளாலேயே 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது – விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு

“தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் போதாது என்றும், கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றன. 13ஆவது திருத்தம் இன்று நலினமடைந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், 13ஆவது திருத்தத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் உரிய முறையில் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து மோதல்களுக்கும் அரசியல் முரண்பாட்டுக்கும்தான் தமிழ்க் கட்சிகள் முக்கியத்துவம் வழங்கிச் செயற்பட்டனவே அன்றி, 13ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையாவது உரியமுறையில் பயன்படுத்த எத்தனிக்கவில்லை.

இதனால்தான் வடக்கு மாகாணத்துக்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி, செலவிடப்படாமல் மீளத் திரும்பியது. கிழக்கு மாகாணத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்தது. ஆக, இருக்கும் அதிகாரங்களைக்கூட சரிவரப் பயன்படுத்தாமலிருந்துவிட்டு கூடுதல் அதிகாரங்களைத் தாருங்கள் என்று கேட்பது பொருத்தமற்றது.” – என்றார்.அ

மாகாண மட்டத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 13வது திருத்தத்தின் அதிகாரங்கள் போதுமானவை – ஜனாதிபதி

அதிகாரப் பகிர்வு பற்றி கதைப்பதுபோன்று, அந்த அதிகாரங்களை தமது மாகாணங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும். நாம் அரசியல் ரீதியாக அதிகாரப்பகிர்வு பற்றி பேசுகிறோம். சட்டத்தால் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் வழங்கலாம். ஆனால் உங்களின் மாகாணத்தை அபிவிருத்தி செய்ய போதிய பணம் இல்லை என்றால் அதன் பெறுமதி என்ன என்று நாம் கண்டறிய வேண்டும்.

அதிகாரப் பகிர்வு குறித்து நாம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் இன்றைய நிலவரப்படி மேல் மாகாணத்தால் மாத்திரமே தனது சொந்த செலவை செய்ய முடிகிறது. அதன்படி, எனைய அனைத்து மாகாணங்களும் மேல் மாகாணத்துடன் இணைகின்றன. எனவே, தமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய, தங்கள் சொந்த மாகாணங்களுக்குள் வலுவாக இருக்க வேண்டும்.

உங்கள் மாகாணத்தில் ஒரு வெளிநாட்டு மொழிப் பாடசாலையை நிறுவ விரும்பினால், அதற்கு அரசாங்கம் ஏன் பணம் வழங்க வேண்டும்? அதற்கான கேள்வி மற்றும் தேவை இருந்தால், நீங்கள் அதை எளிதாக ஆரம்பிக்க முடியும். மாணவர்கள் கல்வியைத் தொடர தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் கல்வி இப்படித்தான் செயல்படுகிறது. இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சீர் செய்யத்தான் என்னால் முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் சிறுமி தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

14 வயதான கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கில்மிஷா உதயசீலன் சிறுமி நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றிபெற ஆசிகளை தெரிவித்தார்.

இதன்போது கில்மிஷா ஜனாதிபதி முன்னிலையில் பாடல் ஒன்றையும் பாடினார்.

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைப் பெற மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குங்கள் – சுரேஷ் பிரேமஷ்சந்திரன்

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளைக் கோரிநிற்கும் ஜனாதிபதி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக வழங்குவதற்கு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்ற போர்வையிலேயே மாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் சாசனத்திற்கான பதின்மூன்றாவது திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

மகிந்த ராஜபக்சவிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவரை பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று அதிகாரங்களை வழங்குவோம் என்றும் மாகாணசபைகளை சரியான முறைகளில் நடைமுறைப்படுத்துவோம் என்றும் ஐ.நா. செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் இந்திய தலைவர்களுக்கும் பல்வேறுபட்ட உறுதிமொழிகளைக் கொடுத்தபொழுதிலும்கூட கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில்கூட மாகாணசபைகள் இயங்குமா என்ற கேள்வியும் எழக்கூடிய சூழ்நிலை இன்று தோன்றியிருக்கின்றது.

ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் அடுத்த வருடத்தை தேர்தல் ஆண்டாக குறிப்பாக பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறுமென்று கூறிவருகின்றனர்.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெறாத மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும் என்பது குறித்து எவ்வித அறிவித்தல்களும் இல்லை. இது உலக நாடுகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.

இப்பொழுது புதிய வரவு- செலவுத்திட்டத்திற்கான பிரேரணைகளை முன்மொழிந்த ஜனாதிபதி அவர்கள் நாட்டில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க புலம்பெயர் தமிழர்கள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதுடன் தனியார் மற்றும் தனி நிறுவனங்களும் மாகாணசபைகளும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.

இன்றைய சூழலில் பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் மக்கள் ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பதும் பொருளாதாரத்தில் கனிசமான முன்னேற்றத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள் என்பதும் வெளிப்படையான விடயமாகும்.

தாம் பிறந்து வளர்ந்த வடக்கு-கிழக்குப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறு தாம் விரும்பிய வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு முதலீடுகளைக் கொண்டுவருதவற்கு மாகாணசபைகளுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இதுவரை கிடையாது.

ஆகவேதான் இலங்கை திவாலான நாடாக அறிவிக்கப்பட்ட காலத்திலும்கூட, இலங்கையைப் பொருளாதார ரீதியாக மீட்சியடைய வைக்க வேண்டுமாக இருந்தால், சர்வதேச முதலீடுகளை இலங்கை உள்வாங்க தேவை இருப்பதாகவும் அதில் புலம்பெயர் மக்களின் கனிசமாக இருக்க முடியுமென்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளது.

அவ்வாறு புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீடுகளை உள்வாங்குவதாக இருந்தால், சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை மாகாண அரசுகளுக்கு வழங்க வேண்டுமென்பது முதன்மையானது.

அதுமாத்திரமல்லாமல், ஜனாதிபதி கூறுவது போன்று, பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான நிலங்களைப் பகிர்ந்தளிப்பது தொடக்கம், முதலீடு செய்ய முன்வருபவர்களுக்கான சகல சலுகைகளையும் வழஙகக்கூடிய அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு இருந்தாக வேண்டும்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக புலம்பெயர் மக்களின் முதலீடுகளைக் கோரி நிற்கின்றார். ஆனால் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான அதிகாரங்களை ஆக்கபூர்வமான வகையில் மாகாணங்களுக்குக் கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவது மாத்திரம் போதாது. மாறாக, பொருளாதார நலன்களை மேம்படுத்துவதற்கு சர்வதேச முதலீடுகளை உள்வாங்குவதற்கான புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். குறிப்பாக மாகாணங்களுக்கு அத்தகைய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகள் என்று சொல்கின்றபொழுது வெறுமனே பல்கலைக்கழகங்களில் மாத்திரமல்லாமல், சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலைகள், விவசாயம் மற்றும் கடல் வளங்களை உள்ளடக்கிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான வலுவான திட்டங்கள் உற்பத்திசார் தொழிற்சாலைகள் போன்றவற்றைச் செயற்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்.

இவை நடைபெற வேண்டுமாயின் உடனடியாக மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

எல்லா மாகாணசபைத் தேர்தல்களையும் நடாத்துவதில் நெருக்கடிகள் காணப்படுமாயின், குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல்களாவது நடாத்தப்படவேண்டும்.

பொருளாதாரத்தை வளப்படுத்த, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஒரு தார்மீக சமுதாயம் ஒன்றை உருவாக்கக்கூடிய வகையில் முடிவெடுத்து செயற்படக்கூடிய அதிகராங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும்.

இவற்றை விடுத்து வெற்று வார்த்தைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் முடிவுகளுக்கு அடங்கிப் போவதுமாக இருந்தால் இந்த நாட்டில் எதனையும் சாதிக்க முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது – சரத் வீரசேகர

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் வழங்கும் முன்மொழிவு பாரதூரமானது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை பகிர்ந்தளித்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகங்கள் தோற்றம் பெறும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒருசில முன்மொழிவுகள் வரவேற்கத்தக்கவை.

கொழும்பு மாவட்டத்தில் தொடர் மாடிv குடியிறுப்புகளில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனை வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாலும் அதில் மாறுப்பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு உரித்தாக்குவதில்லை.

ஏனெனில் காணி விவகாரம் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்புடையது.ஆகவே காணி உரிமையை முழுமையாக வழங்காமல் நிபந்தனை அடிப்படையில் தற்காலிக உரிமத்தை மாத்திரம் வழங்குவது பொறுத்தமானதாக அமையும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு பல்கலைக்கழகங்களை உருவாக்கும் அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுவது பாரதூரமானது. 13 ஆவது திருத்தத்தில் கல்வி கட்டமைப்பில் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் கிழக்கு மாகாணத்தில் வாஹப் கொள்கையுடைய சரியா பல்கலைக்கழகம் கிழக்கு மாகாணத்திலும்,மூளைச்சலவை செய்யும் பல்கலைக்கழகம் வடக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்படும்.

அரசியல்வாதிகள்,மாகாண ஆளுநர்கள் தமக்கு ஏற்றாட் போல் பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிப்பாளர்கள். ஆகவே மாகாணங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி என்ற யோசனை முறையற்றது என்பதை வெளிப்படையாக குறிப்பிடுவோம் என்றார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்கவே ஜனாதிபதியும் அரசாங்கமும் விரும்புகின்றனர் – பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடொன்று நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உரித்துரிமை பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் அமுலில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன். ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

நடைமுறைச் சாத்தியமற்றவற்றைக் கோரி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பங்களை ஒழிக்க வேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோரி பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும் முயற்சிகளையும் சந்தர்ப்பங்களையும் இல்லாதொழிக்க வேண்டாம் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் வாக்கு வங்கிக்கான தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் ஆகிய தரப்புக்களிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது. ஆகவே அதுபற்றிய விடயங்களை முன்னெடுக்கும்போது எதிர்ப்புக்களை வெளியிடுவது பொருத்தமல்ல. அத்துடன், அத்திருத்தச்சட்டத்தில் காணப்படுகின்ற நிர்வாக சிக்கல்களை தீர்க்கும் வகையிலான திருத்தங்கள் பாராளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளன.

அவ்வாறான நிலையில் வடக்கு அரசியல்வாதிகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை கோருவதில் பயனில்லை. அவ்வாறு அவர்கள் தொடர்ச்சியாக விடுக்கும் கோரிக்கையானது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்காது. மாறாக, அவை தொடர்ச்சியாக நீடித்துச் செல்லவே வழிசமைப்பதாக இருக்கும்.

அதேபோன்று தென்னிலங்கையில் வாக்கு வங்கிகளுக்காக கடும்போக்காளர்களாக தம்மை காண்பித்து, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும் தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தினை குழப்பிவிடக்கூடாது.

வடக்கு மக்களுக்கும், தெற்கு மக்களுக்கும் தற்போது வரையில் முழுமையான இருதரப்பு நம்பிக்கை ஏற்படுத்தப்படாமல் துருவப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலைமையையே முதலில் மாற்ற வேண்டும். அதற்காக ஜனாதிபதி முதற்கட்டமாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அதன் அடிப்படையில், இரு இன மக்களுக்கும் இடையில் புரிதலும் நம்பிக்கையும் ஏற்பட்டு நல்லிணக்கம் உருவாகின்ற தருணத்தில், மேலதிகமான விடயங்களை பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாமல், அரசியல் தரப்பில் உள்ளவர்கள் தமது நலன்களுக்காக அதி உச்சமான விடயங்களை விவாதித்துக்கொண்டிருப்பதானது சந்தர்ப்பத்தையும் காலத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் என்றார்.