கூட்டணியின் முடிவை பகிரங்கமாக கூறினார் மனோ கணேசன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.

தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம்.

ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை.

சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை.

இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம்.

ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது.

இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20 ஐ வாபஸ் வாங்கி, மீண்டும் 19 ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.

அடக்கிய முறையும் தவறு, ரணில் வந்ததும் தவறு – வீ.ஆனந்த சங்கரி

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தை அடக்கிய முறை தவறு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

நேற்றைய தினம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே   இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இன மத பேதமின்றி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் காலிமுகத்திடலில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்தது.

கடந்த திங்கட்கிழமை குறித்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது விரோத சக்திகளின் செயற்பாட்டின் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை யாவரும் அறிந்ததே.

எனது 70 வருட அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை பார்த்துள்ளேன் பல போராட்டங்களில் பங்குபற்றியுள்ளேன்.

ஆனால் இலங்கையில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் தற்போதைய காலிமுகத்திடலில் போராட்டமாக பார்க்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க என்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் தற்போது பிரதமராக பதவியேற்றுக் கொண்டமை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியபோது ஆட்சியை அப்போதைய சந்திரிகா அம்மையார் கலைத்தார்.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்ற போது என்னை திட்டமிட்டு தோற்கடித்தார்கள் இவை இரண்டைப் பற்றியும் நான் இப்போது கதைக்க விரும்பவில்லை.

இளைஞர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதியை வெளியேறுமாறும் பாராளுமன்றத்தை கலைத்துப்  புதிய தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தும் நிலையில் மக்களால் தெரிவு செய்யப்படாத ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ரணில் விடயத்தில் தீர்மானமில்லை : மாவை, செல்வம், சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தத்தமது கட்சிகளும், கூட்டமைப்பும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தாம் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, குறிப்பிடுகையில்,

தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்திலும், அதன் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவிலும் இவ்விடயம் ஆராயப்படும் என்று கூறினார்.

அதேவேளை, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமது கட்சியின் தலைமைக்குழு இவ்விடயம் தொடர்பில் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பாக தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர், தத்தமது அரசியல் மற்றும் தலைமைக் குழுக்கள் இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மானத்தினை எடுப்பது என்பது குறித்து கூடி ஆராயவுள்ளதோடு, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ரணிலுக்கு ஆதரவில்லையாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ‘சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளிப்பதென்று தீர்மானித்துள்ளோம். அதனை அவரிடத்தில் வெளிப்படுத்தியும் உள்ளோம்’ என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் தமது கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளநிலையில் அதே நிலைப்பாட்டுடன் பயணிக்கும். அத்துடன் ஜனநாயக விரோத நிலைப்பாடுகளை எமது கட்சி என்றும் எடுக்காது’ என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே ரணிலுக்கும் – “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை !

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் முதன் முறையாக தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் தாய்நாடு பிரஜைகளின் வலியுறுத்தல் யோசனை என சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு குறித்த கோரிக்கைக்கு பெயரிட்டுள்ளனர்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இவரது அரசியல் வரலாற்றை நன்கு அறிவோம். முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்த வேண்டும் அதனை விடுத்து கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று செயற்பட்டால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் எனவும் குறிப்பிட்டனர்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் நேற்று ஊடகசந்திப்பை நடத்தி தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தினர்.

குறித்த கோரிக்கையில் பல பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது குறித்த கோரிக்கையில் பிரதானமாக உள்ளது.

வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தலுடன் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைந்தப்பட்சம் 15 ஆக மட்டுப்படுத்தல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மீளாய்வு செய்தல் இரண்டாவது கோரிக்கையாகும்.

அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை விரைவாக முன்னெடுத்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை இரண்டு மாத காலத்திற்குள் அமுல்படுத்தல், 06 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் முக்கியமானதாகும்.

பொருளாதார நெருக்கடியை விரைவாக முகாமைத்துவம் செய்தல், சொத்து விசாரணை மற்றும் வெளிப்படுத்தல் ,ராஜபக்ஷர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும், அவர்களின் உறவினர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தல்,வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தல்,

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல்,வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பிற்குள் உள்ளடக்குதல் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை தொடர்ந்து இடம்பெறும் சகல தேர்தல்களும் சுதந்திரமாகவும், நீதியானதாகவும் நடத்தும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளல் அவசியமாகும்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

10 கட்சிகள் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படும்

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன.

ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலின் அரசாங்கத்தில் பங்குதாரராக தயாரில்லை: சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் பங்குதாரராக தாம் தயாரில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியோ அல்லது வேறு எந்த பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணமில்லை என கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய அமைச்சுகளுடன் இணைந்து, அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்தும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அது தொடர்பில் கட்சியினருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய அரசாங்கத்தில் எவ்வகையிலும் பங்குதாரர் ஆவதில்லை கலந்துரையாடலின் போது தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

11 கட்சி உறுப்பினர்களும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தமது நிலைபாட்டை தெளிவுபடுத்தினர்.

இதன்போது கருத்து வௌயிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,

ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த திடீர் பதவி கிடைத்தமைக்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் தற்போதைய நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை எமக்கில்லை. பசில் ராஜபக்ஸ என்பவர் சால்வை அணியும் ரணில் விக்ரமசிங்க, ரணில் விக்ரமசிங்க என்பவர் Tie-Coat அணியும் பசில் ராஜபக்ஸ என்பதே எனது நிலைப்பாடு

என தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தலைவர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோரி வரும் நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை நாட்டிற்கு பாதகமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

வன்முறைக்குப் பழக்கப்பட்ட அரசாங்கம் பழகிய வழியிலேயே போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் – தமிழ் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்

வன்முறைக்குப் பழக்கப்பட்டு போன சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் பொதுமக்களின் அமைதிவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தனது சொந்த இனமாக இருந்தாலும் தமக்குப் பழகிய வழிகளிலேயே பதிலளிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை கடந்த 09ம் திகதி நிரூபிக்கப்பட்டுள்ளது என தமிழ் சிவில் அமைப்புகளின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2022.05.09ம் திகதி கொழும்பில் உரிமைக்காக அமைதி வழியில் போராடும் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுதந்திர இலங்கையின் அரசாங்கங்களுள் மிகமோசமான அரசாங்கமான இராஜபக்ச குடும்பத்தினரின் அரசாங்கம் காலிமுகத்திடலிலும், அலரி மாளிகைக்கு முன்பாகவும் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராகத் தனது குண்டர்களை ஏவி வன்முறைத் தாக்குதல் ஒன்றை கடந்த 09.05.2022ம் திகதி நடாத்தியுள்ளது. இந்த அரக்கத்தனமான, மற்றும் ஜனநாயக விரோதமான நடவடிக்கையைத் தமிழ் சிவில் சமூக அமைப்புகளாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தவறான அரசியல், பொருளாதார கொள்கைகளால் சீரழிந்துவந்த நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் ஒட்டுமொத்தமாக நிலை குலைந்துள்ளது. இது மிகத்தீவிரமான பொருளாதார நெருக்கடிகளை மக்களுக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது. விளைவாக தெற்கில் பொதுமக்கள் பதவியில் உள்ள அரசுக்கு எதிராக குறிப்பாக இராஜபக்சக்களுக்கு எதிராக கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் தற்போதைய ஜனாதிபதியைப் பதவி விலகும் கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட போராட்டங்கள் படிப்படியாக மகிந்த  பதவி விலகவும், பின்னர் அனைத்து இராஜபக்ச குடும்பத்தினரும் பதவி விலகவும், இன்று அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவும் கோரும் போராட்டமாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. தெற்கின் இந்த மாற்றங்களைத் தமிழ் மக்களும் மிகவும் கரிசனையோடும், கவனத்துடனும் அவதானித்து வருகின்றனர். கடந்த கால தங்களது கசப்பான அனுபவங்களின் காரணமாக இன்னமும் பெரும்பாலான தமிழர் இப்போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் அவதானிப்பவர்களாக இருந்து வருகின்ற அதேவேளை குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் இந்த போராட்டங்களில் தங்களின் பங்களிப்பினை தனிநபர்களாகவும், குழுக்களாகவும் வழங்கி வருகிறார்கள்.

ஆரம்பம் முதல் தொடர்ந்து பதவிக்கு வந்த அனைத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்களும் தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்கும் நோக்கில் மேற்கொண்டு வருகின்ற இனவழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து ஆரம்பத்திலிருந்து (இருபது வருடங்களுக்கு மேலாக) அமைதி வழியில் தமிழ் மக்கள் போராடியபோது அந்த அரசாங்கங்கள் அவற்றை மிகையான வன்முறை மூலம் எதிர்கொண்டன. அமைதி வழியிலான எமது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன.  தொடர்ந்தும் தமிழினவழிப்பு செயற்பாடுகளை அரசாங்கங்கள் தொடர்ந்தன. இந்நிலை தமிழ் இளைஞர்களை வேறு வழியேதுமின்றி 1970களில் ஆயுதமேந்த உந்தித்தள்ளியது. அப்போதும் தமிழர்களின் வாழ்வுரிமைகளை வழங்க மறுத்த சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் தமிழர்கள் மீது மேன் மேலும் அதிகரித்த அளவில் வன்முறைகளைத் திணித்தன. ஈற்றில் இதே இராஜபக்ச குடும்பத்தின் முன்னைய ஆட்சி, தமிழ் மக்கள் மேல் தொடர்ச்சியான பாரிய படுகொலைகளை நடாத்தி, ஈற்றில் முள்ளிவாய்க்காலில் 2009 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த நூற்றாண்டில் உலகின் முதலாவது பாரிய இனப்படுகொலை மூலமாக தமிழர்களின் ஆயுதவழி எதிர்ப்பையும் மௌனிக்கச் செய்தது.

வன்முறைக்குப் பழக்கப்பட்டு போன சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கங்கள் பொதுமக்களின் அமைதிவழிப் போராட்டங்களுக்கு எப்போதும் தனது சொந்த இனமாக இருந்தாலும் தமக்குப் பழகிய வழிகளிலேயே பதிலளிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை நேற்று முன்தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசு வழமை போலவே, உரிமைகளைக் கோரிய போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதிராக வன்முறையை நேற்று முன்தினம் நிகழ்த்தியபோது தெற்கின் பொதுமக்கள் அரச வன்முறைக்கு பொதுமக்களின் வன்முறையே பதில் என வீதியிலிறங்கித் திருப்பி அடித்துள்ளதற்குப் பின்னாலுள்ள மன உணர்வை எங்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடிகின்றது. அந்த வன்முறைகளின் அங்கமாக தமது எதிரிகள் என நம்புவோரின் மீது தாக்குதல் நடாத்துவது, அவர்களின் சொத்துக்களை அழிப்பது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என வீதியிலிறங்கியுள்ள பொதுமக்களின் எதிர்வினைகள்  தொடர்கின்றன. இத்தகைய செயற்பாடுகளை போராடுபவர்களும் பொதுமக்களும் அவதானமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என நாம் அன்புடன் வேண்டுகின்றோம்.

ஏனெனில் சிங்கள பௌத்த  பேரினவாத அரசாங்கமும், அதனைத் தாங்கிப்பிடிக்கும் சித்தாந்தங்களும் அரசும் வன்முறையின் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியது என்பதற்கான அனுபவ சாட்சிகளாக தமிழ் மக்களாகிய நாம் உள்ளோம். ஆகவே தெற்கின் போராட்டக்காரர்களும் பொதுமக்களும் மிக அவதானமாகவும், நிதானமாகவும், தந்திரோபாயமாகவும், அதேவேளை பாதுகாப்பாகவும்  அரசுக்கு எதிரான தங்களது இந்த போராட்டத்தை இறுதி வெற்றிவரை கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

சிங்கள மக்களிடையே வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பெருமித சிந்தனைகளை அவற்றால் இலாபமடைந்து வரும் சக்திகள் தமது நலன்களையும் இருப்பையும் பாதுகாப்பதற்கு எப்போதும் பயன்படுத்தி வந்துள்ளனர். இப் போராட்டத்திலும் பிரிவினைவாத சிந்தனைகளாலும், தவறான ஏவல்களாலும் மட்டுமல்லாது போலித் தோழமையைத் தெரிவிப்பதனூடாகவும் போராட்டத்தைத் திசை திருப்பவும் முயற்சிக்கின்றனர்.

இந்த சக்திகள் தென்பகுதி மக்களின் தற்போதைய போராட்டங்கள்  தங்களது நலன்களைப் பாதிக்கக் கூடிய உண்மையான மாற்றங்களுக்கு வழிசமைக்கக்கூடுமோ, புரட்சிகரமான முழுமையான  மாற்றங்களுக்கு வழிவகுத்துவிடுமோ என அஞ்சுகின்றார்கள். பதிலாக தாமும் மக்களுடன் நிற்பவர்கள் என்ற போர்வையில் சிறிய யாப்பு மாற்றங்கள் மற்றும் ஒரு சில முக மாற்றங்கள் மூலம் தற்போதைய ஜனாதிபதியைத் தற்காலிகமாகவேனும் தக்க வைத்துக் கொண்டு, சிங்கள பௌத்த பேரினவாத நலன்களுக்கான தற்போதைய யாப்பை இயன்றவரை பேணும் வகையிலான தீர்வுகளைப் பரிந்துரைத்து போராட்டத்தை தறுக்கணிக்க முயன்று வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தெற்கு மக்கள் தங்களது போராட்ட இலக்குகளை இராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் இருந்து நீக்குவது என்ற குறுகிய இலக்குகளுக்கு அப்பால் வளர்த்தெடுக்க வேண்டும். அந்த இலக்குகளை தெளிவாகவும் வரையறுத்து வெளிப்படுத்தவும் வேண்டும். இந்த நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் இருந்து விடுவிக்கப்பட்ட மதச்சார்பற்ற, மக்களுக்கு பொறுப்புச் சொல்லும் வகையிலான ஒரு கூட்டாட்சி நாட்டையும், அதற்கேற்றவாறான மனோநிலை மாற்றத்தையும் உருவாக்குவதற்கு ஏற்றதாக ஒரு புரட்சிகரமான போராட்டமாக தங்களது போராட்டத்தை மாற்றி அமைப்பதனை நோக்கமாகக் கொண்டு முன்னேற வேண்டும். இதன் மூலமே இலங்கையின் ஏனைய தேசிய இனங்களும், சமூகங்களும் மனத் தடைகளோ, அச்சமோ இன்றி சிங்கள மக்களின் இன்றைய போராட்டத்தில் கைகோர்க்கும் நிலைமை உருவாகும். அத்தகைய புரட்சிகர நிலை ஒன்றும் அதன் மூலம் வருகின்ற மாற்றங்களும் மட்டுமே நாட்டின் இன்றைய பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கிய பாதையில் நாட்டையும் மக்களையும் முன்கொண்டு செல்லும் என தமிழ் சிவில் சமூக அமைப்புகளாகிய நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

• அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்
• அகரம்
• ஐராணி அறக்கட்டளை, மட்டக்களப்பு
• நீதிக்கும் மாற்றத்திற்குமான நிலையம்
• சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்பு, அம்பாறை
• கிழக்கு பிராந்திய சபை, அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
• கிழக்கு சமூக அபிவிருத்திக்கான அறக்கட்டளை
• யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
• காத்தான்குடி சிவில் சமூக நிறுவனங்களின் சம்மேளனம்
• சர்வ மதப் பேரவை, மட்டக்களப்பு
• யாழ்ப்பாணம் பொருளியலாளர் சங்கம்
• சமாதான ஆணைக்குழு, அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
• நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் மற்றும் துறவிகள், வடக்கு – கிழக்கு
• புழதி சமூக இயக்கம், திருகோணமலை
• தமிழ் சமூக செற்பாட்டாளர்கள் இணையம்
• தமிழ் சிவில் சமூக அமையம்
• தமிழர் மரபுரிமைப் பேரவை
• தளம், திருகோணமலை
• தென் கயிலை ஆதீனம்
• வெண் மயில் அமைப்பு, மட்டக்களப்பு

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

அலரி மாளிகை முன்பாக புதிதாக உருவாகியுள்ள No Deal Gama போராட்டக்களம்

அலரி மாளிகைக்கு முன்பாக No Deal Gama எனும் பெயரில் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை “மைனா கோ கம“ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், மஹிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்து கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆட்சிக்கு வரும் அனைவரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை எனவும், எந்தவொரு தலைவர் பதவியேற்றாலும், அவர்கள்
மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை வலியுறுத்துவதற்கே இந்த ஆர்ப்பாட்டக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலத்தின் போது தமது நலன்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடுவதாகவும் மக்கள் நலன் குறித்து அவர்கள் கரிசனை கொள்வதில்லை எனவும் அவர் கூறினார்.

இரண்டு நாட்களில் உணவையும் எரிபொருளையும் வழங்கி தமது குறிக்கோளை திசை திருப்ப முடியாது எனவும், சமூக செயற்பாட்டாளரான அநுருத்த பண்டார தெரிவித்தார்.

நெருக்கடியை தீர்ப்பதற்காக வௌிநாடுகளிலிருந்து கடன்களை தொடர்ந்தும் பெறுவது எதிர்கால சந்ததியினரை பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நிரந்தர தீர்வொன்றை எட்டுவதிலேயே பதவிக்கு வரும் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தும் வகையில் ‘No-Deal-Gama’ போராட்டக்களத்தை ஸ்தாபித்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர் அநுருத்த பண்டார குறிப்பிட்டார்.