ஆதரவை விலக்குமாறு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு மக்கள் அழுத்தம் – வீடுகளுக்கு முன்பாக போராட்டத்திற்கும் அழைப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­னரும் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றனர்.
20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் எம்.பி.க்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அகமட், எம்.எஸ். தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எம்.பி.க்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகி­யோ­ரையே இவ்­வாறு தமது ஆத­ரவை விலக்கிக் கொள்­ளு­மாறு வேண்­டு­கோள் வி­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று வரவு செலவுத் திட்­டத்தைத் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை வழங்கி வந்த அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷர்ரப் முது­நபீன், தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­ட­வுள்­ள­தாக நேற்று முன்­தினம் அறி­வித்­துள்ளார். அத்­தோடு, விமல் தலை­மை­யி­லான அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் கூட்­ட­ணி­யோடு கைகோர்த்­துள்ள தேசிய காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அதா­வுல்­லாஹ்வும் நடு­நிலை வகிப்­ப­தாக அறிவித்துள்ளார்.

இத­னி­டையே பொது ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பளீல் ஆகி­யோ­ரையும் அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை விலக்கிக் கொள்­ளு­மாறு மக்கள் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளனர்.

குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ராக ஆங்­காக்கே ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. பேரு­வ­ளையில் மர்ஜான் பளீ­லுக்கு எதி­ரா­கவும் கல்­மு­னையில் ஹரீ­சுக்கு எதி­ரா­கவும் ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது மக்கள் கோஷங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இதே­வேளை குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ராக அப் பகுதி மக்­களை போராட்­டத்தில் ஈடு­ப­டு­மாறு பலரும் சமூக வலைத்­த­ளங்­களில் கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர். அத்துடன் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

Posted in Uncategorized

பெரும்பான்மையை தக்கவைக்க பஷில் கடும் பிரயத்தனம் – கொழும்பில் தொடர் பேச்சுகள் முன்னெடுப்பு?

நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரிஷாட் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான முஷாரப் சுயாதீனமாக இயங்கப்போவதாக இன்று சபையில் அறிவித்தார்.

ஆனால் இசாக் ரஹ்மான், அலி சப்ரி ஆகியோர் தமது முடிவுகளை அறிவிக்கவில்லை.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தற்போது மௌனம் காத்துவருகின்றனர்.

எதிரணியில் இருந்து 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அரவிந்தகுமார், டயானா ஆகியோரும் தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இவர்களின் ஆதரவும் தமக்குதான் என அரசாங்கம் கருதுகின்றது.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மொட்டு கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. 20 ஐ ஆதரித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேசக்கரம் நீட்டினர்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145, ஈபிடிபி – 02, தேசிய காங்கிரஸ் – 01, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01, எமது மக்கள் சக்தி – 01, ஶ்ரீங்கா சுதந்திரக்கட்சி – 01, முஸ்லிம் காங்கிரஸ் – 04, மக்கள் காங்கிரஸ் – 02, அலிசப்ரி (புத்தளம்) – 01, அரவிந்தகுமார் – 01, டயானா – 01 என அரசாங்கத்திற்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக இன்று 40 பேர் அறிவித்தனர். (முடிவை மாற்றிய மூவர் உள்ளடக்கப்படவில்லை.)

எனவே 159 – 40 = 119, விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார். 119 – 01 = 118, இதில் சுயாதீனமாக செயற்படபோவதாக முஷாரப் இன்று அறிவித்தார்.

இதன்காரணமாக 118 – 01 = 117, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. அரசுக்கு ஆதரவு வழங்கக்ககூடாதென கிழக்கு மாகாண மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் 117 – 04 = 113, அரவிந்தகுமார், அலி சப்ரி, இசாக் ரஹ்மான் ஆகியோர் சுயாதீனமாக இயங்கும் முடிவை எடுத்தால் 113 -03 = 110 அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

அரசு கூறுவதுபோல இவர்களின் ஆதரவு தொடர்ந்தால் சாதாரண பெரும்பான்மை தக்கவைத்துக்கொள்ளப்படும்.

அதேவேளை, நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை:ஆட்சி மாற்ற போராட்டங்களில் தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்த முயற்சி

எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விளைகின்றார்கள் #P2P பேரெழுச்சி இயக்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் #P2P இயக்கம் இன்று வெளியிட்டுள்ள (05.04) ஊடக அறிக்கையில்,

“சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சாராத ஆட்சி முறைமையினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால், இன்று பாரிய அரசியல் கிளர்ச்சியினை சிங்கள தேசம் எதிர்நோக்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அறுபத்தி ஒன்பது லட்சம் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாக மார்தட்டிய சிங்கள ஜனாதிபதியை இன்று அதே மக்கள் வீட்டுக்கு போ என வீதியில் இறங்கி கோஷமிடுகின்றார்கள்.

தமிழராகிய நாமும் சிங்கள தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசமும் இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணமாக எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு இனவழிப்பு யுத்தத்திற்காக உலக நாடுகள் எங்கும் வாங்கிக்குவித்த கடனே ஆகும். இக்கொடிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் நாம் அந்த யுத்தத்தின் கடன் பளுவையும் சுமந்து நிற்கின்றோம்.

தமிழருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்திய அரசின் அனுசரணையுடன் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய் தமிழகமும், தமிழக அரசும் முன்னெடுத்துள்ள பொருளாதார உதவித் திட்டத்தை அன்புடன் வரவேற்கின்றோம். இவ்வுதவிகளை உங்களையும் எம்மையும் பிரிக்கும் கடலை தாண்டி நேரடியாகவே எமது மண்ணில் இந்திய நடுவண் அரசின் உதவியுடன் கொண்டுவந்து சேர்ப்பதுடன் தமிழ் மக்களின் கைகளிலேயே நேரடியாக கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்குமாறும் வேண்டுகின்றோம்.

சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை. எமது பட்டறிவில், ஆட்சிக்கட்டில் ஏறும் எந்த சிங்கள அரசுமே எமது உரிமைகளை பறிப்பதிலும், எமது நிலங்களை அபகரிப்பதிலும், எமது வளங்களை சுரண்டுவதிலும், தமிழரின் குடிசன பரம்பலை மாற்றியமைப்பதிலும் பின் நிற்கப்போவதில்லை.

நாம் பொருளாதார மீட்சிக்காக போராடவில்லை. மாறாக எமது பிறப்புரிமைக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றோம். இழந்த எமது இறைமையை மீட்கவே போராடிக் கொண்டிருக்கின்றோம். நாம் 20 வருடங்களுக்கு மேல் மின்சாரமின்றி, எரிபொருட்கள் இன்றி, அடிப்படையான அத்தியாவசியமான மருந்துகள் உட்பட்ட பொருட்கள் கூட இன்றி மிகக்கடுமையான பொருளாதார தடைகள் மத்தியிலும் சுதந்திர மனிதர்களாக, தன்னிறைவான தற்சார்பு பொருளாதாரத்துடன், சிறப்பான தலைமையை கொண்ட நடைமுறை அரசிலேயே வாழ்ந்து வந்தோம்.

இப்பொருளாதார நெருக்கடி எமக்கு ஒன்றும் புதியல்ல. ஆயின் தற்போது ஏற்படுள்ள நிலைமைகளை பயன்படுத்தி எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விழைகின்றார்கள். இது தொடர்பாக அனைத்துத் தமிழ் மக்களும் விழிப்புடன் செயல்படுமாறு வேண்டுகின்றோம். அவர்களை சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்.
இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கான மூல காரணங்களை ஆராயாது, சிங்கள தேசம் ஆட்சியாளர்களை மாற்றுவதன் மூலம் தீர்க்க விளைகின்றது. அதை விடுத்து, சிங்கள தேசம் தமிழ் மக்களின் நியாயமான உரிமை போராட்டத்தினை ஏற்றுக்கொள்வதுடன், எம்மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி பொறிமுறையினூடாக நீதி பெற வழிசமைப்பதுடன், இறைமையுள்ள வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதனூடாகவே மீட்சி அடைய முடியும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் – மனோ கணேசன்

அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், எமது இன மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகளையும் வலியுறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது முக நூல் பதிவில்,

‘தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி, அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே நாமும் போராடுவோம் என அவர்கள் எழுப்பும் அதே கோஷங்களை மாத்திரம் எழுப்பி போராடுவது உசிதமானதல்ல.

கோட்டாபய உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வெளியேற வேண்டும் என்பதில் எவரையும்விட நாம் மிக உறுதியாக இருக்கிறோம். அதேபோல், ராஜபக்சர்கள் வெளியேறுவதால் மாத்திரம், தமிழ் பேசும் மக்களின் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து, நமது வீடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் பாலுந்தேனும் ஓடப்போவதில்லை என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க

மக்களின் கோரிக்கைக்கு அமைய அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் நேற்றையதினம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியிருந்தார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முதலில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அதன் பின்னர் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பில் விவாதிக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் நடத்தி, பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அமைக்கலாமெனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த மக்கள் விடுதலை முன்னணி, இடைக்கால அரசாங்கத்தில் இணையப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தூதரகங்கள் சில மூடப்பட்டன!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவசரகால சட்டம் இரத்துச் செய்யப்பட்டது!

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இரத்து செத்துள்ளார்.

ஏப்ரல் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இது இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுக்குக்கு வரும் வகையில் இலங்கையில் அவசர கால நிலையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார்.

மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டத்தை அமுல்படுத்துவதாக, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் ஜனாதிபதி அந்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் சிக்கிய நிருபமா ராஜபக்ஷ டுபாய்க்கு பறந்தார் …!

முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்.

பண்டோரா வெளியிட்ட உலகளாவிய ரீதியில் மறைக்கப்பட்ட சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களில் நிருபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமக்கான நிரந்தர தீர்வை உறுதிப்படுத்தும் அரசியல் மாற்றத்தையே நாம் பரிசீலிப்போம்- ரெலோ திட்டவட்டம்

எமது நிரந்தர அரசியல் தீர்வுக்கான காலவரையறையை ஏற்றுக் கொண்டாலே அரசியல் ஆட்சி மாற்றங்களில் கரிசனை கொள்ளமுடியும் . இல்லையேல் எந்த மாற்றங்களும் எம்மக்களுக்கு அர்த்தமற்றதாகிவிடும்.

நாம் துல்லியமாக கணித்தபடி கடுமையான பொருளாதாரச் சிக்கலினாலும் உள்ளக அரசியல் மாற்றங்களினாலும் பாரிய மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. தாம் பெரும்பான்மையாக வாக்களித்து தெரிவு செய்த அரசாங்கத்தை அந்த மக்களே எழுச்சி கொண்டு துரத்தி அடிக்கும் சூழ்நிலை பிறந்துள்ளது. இந்த நேரத்தில் தற்காலிக அரசாங்கமா, இடைக்கால அரசாங்கமா காபந்து அரசாங்கமா என புதிய ஏற்பாட்டினை மேற்கொள்வதற்கு அரசும் எதிர்க்கட்சிகளும் முனைந்துள்ளனர்.

மாறி வந்திருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் எமது இனத்தின் எதிர்காலம், தீர்வு என்பன தங்கியுள்ளன. எம்மினம் முகம் கொடுத்திருக்கும் அன்றாட பிரச்சினைகளுக்கும் நீண்ட காலமாக கோரி வரும் அரசியல் தீர்வுக்கும் முடிவை எட்ட இந்தச் சூழ்நிலையை சரியான முறையில் நாம் கையாள வேண்டும். அந்தந்த தரப்புக்களோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்பதோ, அழைத்தவுடன் சென்று பேசுவதோ, ஓரிருவர் முடிவிலோ அல்லாமல் சரியான முறையிலே கையாளுவது தற்பொழுது தேவையாக உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு கூட்டமைைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய சில நிபந்தனைகளை ரெலோ கோரியிருந்தது அனைவரும் அறிந்ததே. அரசியல் கைதிகள் விடுதலை, எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பை உடனடியாக நிறுத்துதல், அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், சர்வதேச ஏற்பாடுகளுக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணை மற்றும் நீதி, அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வினை உடனடியாக நடைமுறைப்படுத்துதல் என்பன மிகக்குறைந்த பட்ச விடயங்களாக கருதப்படுகின்றன. பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையோடு இவற்றை நிறைவேற்ற முடியும்.

ஆகக்குறைந்தது இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தரப்புடன் பேசுவது பற்றிய பரிசீலனையை நாம் மேற்கொள்ள முடியும். இதுவே எம்மினம் சார்ந்து செய்யக்கூடிய சரியான அரசியல் நகர்வாக தற்போதைய சூழ்நிலையில் அமையும்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

திறந்து மூடப்பட்ட யாழ்.கலாச்சார மையம் ?

நிலாந்தன்
கடந்த திங்கட்கிழமை யாழ். கலாச்சார மையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.ஆனால் பொருத்தமான வார்த்தைகளில் சொன்னால் அது வைபவ ரீதியாக திறக்கப்பட்ட பின் மூடப்பட்டுள்ளது என்பதே சரி. இந்தியாவின் நிதி உதவியோடு கட்டப்பட்ட அக்கட்டடம் 11 மாடிகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தின் நில அமைப்பைப் பொருத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டிடங்களைக் கட்டுவதற்கு கட்டடநிர்மாணத் துறையினர் அனுமதிப்பதில்லை.எனினும் விசேஷ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய எல்லா கட்டடங்களை விடவும் உயரமான ஒரு கட்டடமாக கலாச்சார மையம் கட்டியெழுப்பப்பட்டது.யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழர்களின் தாயகத்தில் உள்ள மிக உயரமான கட்டடம் அது. அதன் அசாதாரண உயரத்தை வைத்து, இந்தியா அதன் மேற் தளத்திலிருந்து வடபகுதியை கண்காணிக்கப் போகிறது என்றெல்லாம் கதைகள் பரவின. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல மாதங்களுக்கு ஆட்புழக்கமில்லாத ஒரு பொதுக் கட்டடமாக அது காணப்படுகிறது.

அக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின் அதை இந்தியப் பிரதமர் மோடி வந்து திறந்து வைப்பார் என்றும் திறப்பு விழா கோலாகலமாக ஒழுங்கமைக்கப்படும் என்றும் அதில் இசையமைப்பாளர் ரகுமானின் இசை நிகழ்ச்சியிருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் கடந்த திங்கட்கிழமை அமைதியாகவும் அழைக்கப்பட்ட குறிப்பிட்ட தொகை விருந்தினர்களின் முன்னிலையிலும் மெய்நிகர் நிகழ்வு ஒன்றில் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்டது.

திறப்புவிழா soft opening என்று அழைக்கப்பட்டது.மெய்நிகர் வைபவம் என்பதால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது என்று ஒரு விளக்கம் உண்டு. ஆனால் திறப்பு விழாவை வைத்துக் கூறுவதென்றால் அது ஒரு பகுதியளவான திறப்புத்தான்.விழாவிற்கு வருகை தந்தவர்கள் கலாச்சார மையத்தின் கலையரங்கத்துக்குள் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கலாச்சார மண்டபத்தின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.மேலும் கலாச்சார மையத் திறப்பு விழா நடந்து கையோடு அது மீண்டும் மூடப்பட்டுவிட்டது. அது பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்படவில்லை.

எல்லாவற்றையும் விட முக்கியமாக கலாச்சார மையம் யாருடைய பொறுப்பில் இருக்கும் என்பது தொடர்பில் தெளிவான தகவல்கள் இல்லை. கலாச்சார மையம் மாநகரசபை எல்லைக்குள் வருகிறது. ஆனால் மாநகர சபையிடம் அவ்வாறான பிரம்மாண்டமான ஒரு மையத்தை நிர்வகிப்பதற்கு போதுமான நிதி இல்லை. யாழ் மாநகர சபையின் வருமானம் அதற்குப் போதாது.எனவே அதை மத்திய கலாச்சார அமைச்சு அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரக்கூடிய நிலைமைகளே அதிகமாக தென்பட்டன.மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டதும் அவர் கலாச்சார மையத்தை மாநகர சபை பொறுப்பேற்கும் என்று தெரிவித்தார்.அதற்கு வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார். இந்தியா அதற்குரிய நிதியை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்க முன் வந்ததாக ஒரு தகவல் உண்டு. இதுதொடர்பாக கொழும்பில் நடந்த சந்திப்புக்களில் ஒன்றின் போது கலாச்சார அமைச்சின் பிரதானி ஒருவர் மாநகர முதல்வரிடம் “நீங்கள் இந்தியாவை நம்பக்கூடாது அரசாங்கத்தைத்தான் நம்ப வேண்டும்” என்ற தொனிப்பட அறிவுறுத்தியிருக்கிறார். அவர் அவ்வாறு கூறும்பொழுது கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதுவரும் அங்கிருந்திருக்கிறார்.

எனினும் யாழ் மாநகர சபை தன் கொள்ளளவை மீறி கலாச்சார மையத்தை பொறுப்பேற்க தயாராக காணப்படுகிறது. ஆனால் இன்று வரையிலும் அவ்வாறு கலாச்சார மையத்தை இயக்குவதற்கு தேவையான நிர்வாக கட்டமைப்புக்கள் எவையும் உருவாக்கப்படவில்லை.அக்கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக ஒரு நிர்வாக சேவை அதிகாரியும் ஒரு கியூறேற்றரும் (curator) -எடுத்தாளுநரும்- நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.

இடையில் மாநகரசபை கலாச்சார மையத்தை நிர்வகிக்கத் தேவையான உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் உரிய நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவையும் இன்றுவரையிலும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கலாச்சார மையம் திறக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சார மையத்தை அரசாங்கம் மத்திய கலாச்சார அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவிரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியா அதை தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது. இப்போது கிடைக்கும் செய்திகளின்படி சிலசமயம் கலாச்சார மையத்தின் நிர்வாகம் ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற மையங்கள் உள்ளூர் மக்களின் பங்களிப்போடு நிர்வகிக்கப்படும் போதுதான் அவை மெய்யான பொருளில் பண்பாட்டு மையங்களாக திகழும் என்பதே உலக அனுபவம் ஆகும். ஆனால் கலாச்சார மையத்தை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பில் பொருத்தமான இறுதி முடிவுகள் எடுக்கப்படாத ஒரு வெற்றிடத்தில்தான் மேற்கண்டவாறு ஒரு மென் திறந்துவைப்பு நடந்திருக்கிறது.

ஒரு பிரம்மாண்டமான முழு அளவிலான திறப்புவிழா வரும் நவம்பர் மாதமளவில் ஒழுங்கு செய்யப்படும் என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.அதாவது சொஃப்ற் ஓப்னிங் எனப்படுவது பிரயோகத்தில் முழு அளவிலான திறந்துவைப்பு அல்ல என்றும் பொருள்.

இந்த மாதம் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தபோது அவர் கலாச்சார மண்டபத்தையும் திறந்து வைப்பார் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.மாறாக அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இந்திய வெளியுறவு அமைச்சரும் இலங்கையின் பிரதமரும் இணைந்து மெய்நிகர் நிகழ்வு ஒன்றின்மூலம் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்திருக்கிறார்கள்.

திறக்க வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக கலாச்சார மையம் திறக்கப்பட்டிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பிரதமர் மோடி வந்து அதை முழுமையாகத் திறந்து வைப்பார் என்றால் ஏன் அவசரப்பட்டு பகுதியளவு திறந்துவைக்க வேண்டும்?பிரதமர் மோடி வரும்வரையிலும் பொறுத்திருக்கலாம்தானே?

கடந்த சில மாதங்களாக இந்திய இலங்கை அரசாங்கத்துக்கு அதிக தொகை பணத்தை கடனாக கொடுத்து வருகிறது.அந்த அடிப்படையில் பார்த்தால் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவின் பிடி பலமடைந்து வர வேண்டும். அவ்வாறு இந்தியாவின் பிடி இலங்கைதீவில் பலமடைந்து வந்தால் இந்தியாவின் நிதி உதவியோடு உருவாக்கப்படும் இணைப்புத் திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும். குறிப்பாக கலாச்சார மண்டபத்தை முழுமையாக திறப்பது, பலாலி விமான நிலையத்தை இரண்டாம் கட்டத்திற்கு விரிவுபடுத்தி விஸ்தரித்து திறந்துவிடுவது, மூன்றாவதாக காங்கேசன்துறையிலிருந்து காரைக்காலுக்கு ஒரு பயணிகள் போக்குவரத்து படகை ஓடவிடுவது போன்ற இணைப்புத் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள்வரையிலும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதாக செய்திகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதேசமயம் கலாச்சார மையம் திறந்து வைக்கப்பட்ட அதேநாளில் கொழும்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஆறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.அவற்றுள் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் நிறுவப்பட இருக்கும் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டம், இந்தியா தனது தென் கடலோர கண்காணிப்பை ஒப்பீட்டளவில் அதிகளவு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்யும் ஓர் உடன்படிக்கை (MRCC)என்பனவும் அடங்கும்.

அதாவது இந்தியா கடனைக் கொடுத்து தனக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்கிறது.எனினும்,கலாச்சார மையத்தை மக்கள் பாவனைக்கு திறந்து விடுவது மேலும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது கலாச்சார மையம் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் போக்குவரத்துச் சேவை, மன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மற்றொரு பயணிகள் படகுச் சேவை போன்ற தமிழ் மக்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இணைப்புகளை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் இழுபட்டு இழுபட்டு நகர்கின்றன.

கலாச்சார மையம் கட்டப்பட்டு பல மாதங்களின் பின்னர் முழுமையாக திறக்கப்படாமலிருப்பது,பலாலி விமான நிலையத்தின் இப்போதுள்ள நிலைமையோடு ஒப்பிடத் தக்கது. அவ்விமான நிலையம் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தின் கடைசி பகுதியில் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலும் ராஜபக்சக்கள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதை முன்னுணர்ந்து ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் அவசர அவசரமாக அதை திறந்தார். திறக்கப்பட்ட பொழுது அந்த விமான நிலையத்தில் கொள்ளளவின்படி சிறிய விமானங்கள்தான் அங்கே வந்து போகக்கூடியதாக இருந்தது.சுமார் 70 பயணிகளை ஏற்றி இறக்கக்கூடிய விமானங்கள் மட்டும்தான் அங்கே வந்து போகலாம். பயணிகள் ஒவ்வொருவரும் இருபது கிலோ நிறை கொண்ட பொதிகளைத்தான் எடுத்து வரலாம். இதனால் விமான நிலையத்தை அடுத்த கட்டத்துக்கு விஸ்தரிக்க வேண்டிய தேவை இருந்தது.

இந்தியா அதற்கு நிதி உதவி வழங்குவதாகவும் கூறியது. ஆனால் அதற்கிடையே பெருந்தொற்றுநோய் பரவியது. அதனால் விமான நிலையம் மூடப்பட்டது. அதன்பின் விமான நிலையத்தை திறக்கப் போவதாக அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி கூறியிருக்கிறார்கள்.சிலசமயம் ஊடகங்களில் விமான நிலையம் மீளத்திறக்கப்படும் திகதியும் அறிவிக்கப்படுவது உண்டு. உதாரணமாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி விமான நிலையம் திறக்கப்படும் என்று ஒரு செய்தி வந்தது.ஆனால் இன்றுவரையிலும் அந்த விமான நிலையம் மீளத் திறக்கப்படவில்லை.அண்மையில்கூட யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமைச்சர் பீரிஸ் அந்த விமான நிலையத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அது திறக்கப்படவில்லை. அவசரமாக திறக்கப்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படாமல் அது மூடப்பட்டுவிட்டது. யாழ் கலாச்சார மண்டபம் திறக்கப்பட்ட விதமும் அது யாருடைய நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது என்பது தொடர்பாக காணப்படும் குழப்பமும் தவிர்க்க முடியாதபடி பலாலி விமான நிலையத்தை ஞாபகப்படுத்துகின்றன.இன்னும் எவ்வளவு காலத்துக்கு அது யாழ்ப்பாணத்தின் மிக உயரமான,ஆனால் ஆளரவமற்ற ஒரு பொதுக்கட்டடமாக இருக்கப்போகிறது?