மாகாணசபை தேர்தல் குறித்து சிறந்த தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் – அரசாங்கம்

மாகாணசபை தேர்தல் தொடர்பில் சிறந்த தீர்மானம் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு நாடுதழுவிய ரீதியில் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுப்படுவோம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றியமைத்து தேர்தல் முறைமையில் சிக்கல் நிலைமையை தோற்றுவித்து தேர்தலை பழைய தேர்தல் முறையிலும், புதிய தேர்தல் முறையிலும் நடத்த முடியாத சிக்கல் நிலைமையை உருவாக்கியது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆகவே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் விரைவாக நடத்த வேண்டும் என தற்போது அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் தலைமைகள் நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஆரோக்கியமான நடவடிக்கைளை முன்னெடுக்கவில்லை.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தலை நடத்த பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாகாணசபை தேர்தல் தொடர்பில் வெகுவிரைவில் சிறந்த தீர்மானம் அறிவிக்கப்படும்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை கருத்திற் கொண்டு நாடுதழுவிய ரீதியில் இனி செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுப்படுவோம் என்றார்.

Posted in Uncategorized

பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களை உசுப்பேத்தி காலைவாரிய முன்னணி! :ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் குற்றச்சாட்டு

கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் இன்று (11) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் வடக்கு கடற்தொழிலாளர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மோசமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களாக வீதியில் போராட இறங்கியபோது கடற்தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பது போல மக்கள் போராட்டங்களுள் உள் நுழைந்து உசுப்பேத்தும் வீர வசனங்களை விட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படவிருந்த அழுத்தங்களை நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

உண்மையாக இலங்கை அரசாங்கம் தமிழக கடற்தொழிலாளர்களையும் வடக்கு கடற்தொழிலாளர்களையும் முரண்பட வைக்கும் பொறியாக மீனவர் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தி வருகின்றது.

இதற்கு ஆதரவாகவே முன்னணியின் ஒத்திவைப்பு பிரேரணை நாடகமும் அரங்கேறியுள்ளது.

வடமாகாண மீனவர்களின் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தில் கதைப்போம் என்று வடமராட்சி மீனவர் போராட்டத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்த முன்னணி, பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை சிந்திக்காது அரசாங்கத்தின் நலன்கள் பாதிக்காத வகையில் மீனவரின் வாழ்வாதாரப் பிரச்சினையை பலியிட்டுள்ளனர்.

முன்னணியின் வெற்றுக் கோசங்களும் உசுப்பேத்தும் ஊடக அறிக்கைகளும் தொடர்ந்து பொய்யுரைக்கும் செயற்பாடுகளும் இனத்தின் விடுதலைக்கு அர்த்தமற்றவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் மக்கள் சந்திப்பு

வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றிருந்தது.

இதன்போது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் க. யோகராசா,ரெலோ மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ. மயூரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட்ட அரச அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு தேவைகள் குறித்து இதன்போது கிராம மக்களினால் கோரிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக தீர்க்க கூடிய விடயங்கள் மற்றும் அமைச்சு மட்டத்தில் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதேச சபையினூடாக செயற்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி – காணாமல் போனவர்களின் உறவுகள் கொந்தளிப்பு

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை காவல்துறை தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவ சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று காவல்துறையினருக்கு பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காறர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத காவல்துறையினருக்கு அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன் கொலை குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் காவல்துறையினருக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் திரும்பி சென்றனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியாவில் பிறந்த இவர், கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும், கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராகவும் பணியாறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இவர், மாலைதீவுக்கான தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.

Posted in Uncategorized

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் திறந்து வைப்பு!

பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட
ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச் சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

“உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜெனீவா மாநாட்டுக்கு தயாராகும் இலங்கை – பேசுபொருளாகும் அம்பிகா சற்குணநாதனின் கருத்து

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 49வது அமர்வு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெறவுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருவதை காண முடிகிறது.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் இந்த முறை அமர்வில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், சமூக செயற்பாட்டாளர் அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்தொன்று இன்று பேசுப் பொருளாக மாறியுள்ளது. பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், அம்பிகா சற்குணநாதன் வெளியிட்ட கருத்து, இலங்கையில் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
அம்பிகா சற்குணநாதனின் கருத்து குறித்து, வெளி விவகார அமைச்சு பதில் வழங்கியுள்ளது.
அம்பிகா சற்குணநாதனின் குற்றச்சாட்டு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாக அம்பிகா சற்குணநாதன் செயல்பட்டு வருகிறார்.
இவர், இலங்கை சிறைச்சாலை தொடர்பான முதலாவது தேசிய வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார். மனித உரிமை தொடர்பிலான ஆணையாளர் நாயகத்தின் இலங்கைக்கான சட்ட ஆலோசகராகவும் அவர் செயற்பட்டு வருகிறார்.
இவ்வாறான சூழ்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற இணைக்குழு முன்னிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி, இலங்கையின் மனித உரிமை மற்றும் தொழிலாளர் உரிமை குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், அம்பிகா சற்குணநாதன், இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை – நோக்கம் என்ன?
யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம் என்ன?

மனித உரிமைகள் சட்டத்தரணியாக, அவர் இந்த அமர்வில் பல்வேறு விடயங்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.
01. போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இலங்கை போலீஸாரினால் சந்தேகநபர்கள் முறையற்ற விதத்தில் கைது செய்யப்படுகின்றமை மற்றும் தடுத்து வைக்கப்படுகின்றமை மாத்திரமன்றி, கொலை செய்யப்படுகின்றமையும் நியாயப்படுத்தப்படுகிறது.
02. அமைச்சுக்கள் இராணுவமயப்படுத்தப்படுகின்றன.
03. 2020ம் ஆண்டு முதல் அரச அதிகாரிகளின் வன்முறைகள்
04.’ ‘ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி
05. கிழக்கு மாகாண தொல் பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி
06. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா என்பன குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு, GSP+ வர்த்தக தடையை பயன்படுத்த வேண்டும் என அம்பிகா சற்குணநாதன் யோசனையொன்றை இதன்போது முன்வைத்துள்ளார்.
வெளி விவகார அமைச்சு குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பு

எவ்வாறாயினும், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனின் கருத்தில் உள்ளடங்கியுள்ள தவறான வழிக்கு இட்டுச் செல்லும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பொறிமுறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுடன் இலங்கை நீண்ட காலமாக ஒத்துழைப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு நடவடிக்கைகள் மற்றும் நிறுவனம் ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அம்பிகா சற்குணநாதன் முன்வைத்துள்ள இவ்வாறான கருத்தானது, இலங்கை அரசாங்கம் பல்வேறு பிரிவுகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ள முன்னேற்றத்தை அலட்சியப்படுத்துவதாக அமைகின்றது என அமைச்சு கூறுகிறது.
இவ்வாறான கருத்தானது, அரசாங்கத்தின் மீதான எண்ணம் மற்றும் நேர்மை ஆகியன குறித்து சந்தேகத்தை எழுப்புவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
GSP பிளஸ்-க்கு பாதிப்பு ஏற்படுமா?
அம்பிகா சற்குணநாதன் முன்வைத்த யோசனைகளுக்கு மத்தியில், மனித உரிமை தொடர்பாக அரசாங்கத்தின் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக ஐரோப்பிய சங்கம் GSP+ நிவாரண உதவியை பயன்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை குறித்து, தாம் கவலை அடைவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
கோவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில், நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ நிவாரணத் திட்டம் இலங்கைக்கு இல்லாது போகுமானால், அதன் பெறுபேறாக எதிர்நோக்க வேண்டிய நட்டம் காரணமாக வறுமை மேலோங்கி, வருமானம் அதிவுயர்ந்த பட்சத்தில் வீழ்ச்சி அடையும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
அத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் பிரதான தொழில்துறையான கடற்றொழில் மற்றும் விவசாயம் ஆகியனவும் இதனூடாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளி விவகார அமைச்சின் கருத்துக்கு, அம்பிகா சற்குணநாதன் பதிலளித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குமாறு, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு GSP+ வர்த்தக நிவாரணத்தை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் விடுத்த வேண்டுக்கோளின் மீதான, அரசாங்கத்தின் அதிருப்தி தனக்கு கவலையளிக்கின்றது என கூறியுள்ளார்
GSP+ வர்த்தக நிவாரண சலுகைகள், மனித உரிமை கடமைகளைப் பெறுபவரை பொறுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட மனித உரிமை பிணைப்பானது, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற விதத்திலும், ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள நாடு என்ற விதத்திலும் அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டியது பொறுப்பு என அவர் கூறுகின்றார்.
இவை இலங்கையின் பிரஜைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு ஒன்றிணைந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
”சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை போன்றோர், அரசாங்கத்தின் தோல்வியை வெளிகொணர்கின்றமையினால், ஏற்படுகின்ற எதிராக பெறுபேறுகள் காரணமாக அவர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என அரசாங்கம் கூறுகின்றது. இது குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியாகும். அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சமூகத்திற்கு ஏற்படக்கூடிய எதிரான பெறுபேறுகள் ஏற்படாத வகையில் உறுதிப்படுத்துவதற்காக, இது கணிக்க முடியாத மிக மோசமான கொள்கையின் விளைவு என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் கூறுகின்றார்.
விடுதலைப் புலிகளின் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு

வெவ்வேறு இனங்களை வெவ்வேறு விதமாக கவனிப்பதாக அம்பிகா சற்குணநாதனின் கருத்தில் உள்ளடங்கியுள்ள அடிப்படையற்ற குற்றச்சாட்டின் ஊடாக, மக்களுக்கு இடையில் வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சு குற்றஞ்சுமத்துகின்றது.
சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் இலங்கை தொடர்பில் போலி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதை தவிர்த்து, நாட்டிற்குள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைத்து இன மற்றும் மதங்களை கொண்ட நாடான இலங்கை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.
சட்டவாதிக்கம், நீதிக்கான அணுகுமுறை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகளை வலுப்படுத்த கூடுதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான நியாயமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், குறைபாடுகளை நிவர்த்தி செய்துக்கொள்ள மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த இனவவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கருத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, சிறுபான்மை சமூகத்திற்கு பாகுபாடு காட்டுவதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாததன் அடிப்படையிலேயே இவ்வாறான தெளிவற்ற கருத்தை முன்வைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளது.
இலங்கை அனைத்து இன மக்களும் வாழும் நாடு எனவும், இந்த நாட்டிற்குள் மதம் மற்றும் இன வேறுபாடின்றி அரசியலமைப்பின் கீழ் அனைத்து பிரஜைகளுக்கும் சமமான உரிமைகளுடன் வாழ உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெருமளவு விடுதலைப் புலி அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில், ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கூட, அந்த பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அழுத்தங்கள் இன்றி மக்கள் சேவையை செய்ய அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
இலங்கையின் பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன்: நெருக்கடியை சமாளிக்குமா ‘ராஜபக்ஷ’ அரசு?
இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் – விரிவான தகவல்கள்
எனினும், காணிகளை கொள்ளையிடுதல் மற்றும் சிறுபான்மை மக்கள் அதிகளவில் வாழும் பிரதேசத்தில், மக்களின் செறிவுக்கு எதிராக விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றே தொல்பொருள் ஜனாதிபதி செயலணி என அம்பிகா சற்குணநாதன் கூறுகின்றார்.

”ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, இனங்களுக்கு இடையில் வைராக்கியம் மற்றும் வன்முறைகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், இந்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இராணுவம் வசம் காணப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பான்மையானவை (92 வீதத்திற்கும் அதிகமான) காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
எஞ்சிய தனியார் காணிகளை விரைவில் வழங்குவதற்கான பொறிமுறையொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் கூறுகின்றது.
”போதைப்பொருளுக்கு எதிராக யுத்தம்” என்ற பெயரில், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நீதிமன்றத்திற்கு எதிரான கொலைகள் மற்றும் கைதுகள் தொடர்பில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், வெளியிட்ட கருத்திற்கும், வெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அரசாங்கம் தற்போது திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அந்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவூட்டி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
சற்குணநாதன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை சிவில் அமைப்புக்கள் எதிர்த்துள்ளன.
அம்பிகா சற்குணநாதன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட பதிலை 161 பேர் மற்றும் 41 அமைப்புக்கள் வன்மையாக கண்டித்துள்ளன.

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக, கொள்கை ஆராய்ச்சி, ஊக்குவிப்பு மற்றும் பொது சேவையில் பதிவுகளை கொண்ட ஒருவருக்கு விமர்சன ரீதியில் பதிலளிக்கும் விருப்பத்தை அரசாங்கம் மாற்று திட்டமாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றனர்.
தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் சுயாதீன உந்துதலை, விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களுடன் இணைத்து வெளிவிவகார அமைச்சு கருத்து வெளியிடுவதானது, அநீதியானது என்பதுடன், அது கொடூரமானதும், பயமுறுத்துவதுமானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கைக்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடுகளை முன்னெடுத்தல் – ஜெனீவாவில் என்ன நடக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 49வது கூட்டத் தொடர், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் முதலாம் தேதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பிலான உயர் ஸ்தானிகரின் வருடாந்திர அறிக்கை மற்றும் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மற்றும் பொதுச் செயலாளர் அலுவலகம் ஆகியவற்றின் அறிக்கைகள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கைக்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பது மற்றும் அறிக்கையிடுவதை மேம்படுத்துதல் மற்றும் சூழலில் விவாதிக்கப்பட வேண்டிய எழுத்துமூல புதுப்பிப்பை வழங்குதல் ஆகியவற்றையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 49/1 பிரேரணையின் ஊடாக, மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.
இதன்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகத்தின் A/HRC/49/9 அறிக்கை இம்முறை புதுப்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய் சொல்வதற்கு முயற்சிக்கின்றது?
இதேவேளை, அம்னஷ்டி இன்டர்நெஷனல் அமைப்பின் தெற்காசிய ஆராய்ச்சியாளர் தியாகி ருவன்பத்திரன, டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

”இன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் ஏற்படுத்தப்படுகின்ற திருத்தங்களின் ஊடாக, அது சர்வதேச சட்டத்திற்கு அமைய தயாரிக்கப்படுவதாக, மனித உரிமை தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைக்குழு முன்னிலையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. இது முழுமையாக பொய்யானது. பயங்கரவாதத் தடைச் சட்டம், சரியான செயற்பாடுகள், பாதுகாப்பு, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேசத்திற்கு மத்தியில் இலங்கையின் அர்ப்பணிப்பு ஆகியன முற்றியும் முரணானது,” என அவர் கூறியுள்ளார்;
சட்ட மூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இலங்கை சட்டத்தில் உள்ள முக்கியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்யத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

Thanks BBC Tamil

தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வை புறக்கணிக்கின்றோம்!ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி பறிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும், இவ்வாறான தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக அறிவிக்கும் நிகழ்விற்கு ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியான கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதனை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் குறித்த இடத்தில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிற்பகுதியை நோக்கியவாறு காணப்பட்டுள்ளது.

எனினும் அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடமாற்றியுள்ளனர்.

ஜனாதிபதி சிங்கள மொழிக்கும், பெளத்தத்திற்கும் முன்னுரிமை என தேர்தலில் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தே தெரிவித்து வரும் நிலையில், அதன் ஒரு வடிவமாகவே இந்த செயற்பாட்டையும் நோக்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மொழி முன்னுரிமை என அரசியலமைப்பு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வடக்கிற்கு வந்த நீதி அமைச்சரும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என தெரிவித்திருந்த நிலையிலும், இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்- தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம்

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தீவிர தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சிறிலங்காவின் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,“சிறிலங்காவின் அரசியலமைப்பில் தனியொரு நபருக்கு இழைக்கப்படும் அநீதிகள், விசாரணைகள், தடை உத்தரவுகள் என்பவற்றை நோக்கும் போது நாட்டின் ஜனநாயகத்தின் மீது பெரும் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றது.

இந்த நாட்டின் முக்கிய சட்டமான பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்கும், தமிழர்களை அடக்கி, ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இவர்களின் செயற்பாடுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது.

இவ் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதை ஆட்சியாளர்களும், பௌத்த பேரினவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனத்திற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி போராடும் அனைத்து தமிழ் அமைப்புக்கள் மீதும் சிங்கள பேரினவாதம் பாசிசக் கரம் கொண்டு கடுமையான சட்டங்களை பாய்ச்சி இந்த அமைப்புக்களை இல்லாது ஒழிக்கின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றது.

இதன் நீPட்சியியாகவே வடகிழக்கில் உள்ள தமிழ் அமைப்புக்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்மூலம் பொய் வழக்குகளை புனைந்து விசாரணை என்கின்ற பெயரில் பெரும் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை என்கின்ற எமது அமைப்பு கடந்த ஒரு தசாப்தமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வகையில் ஜனநாயக ரீதியில் அறவழியில் போராடி வருகின்றது.

மக்கள் சக்தியை திரட்டி போராடும் வேளைகளில் எல்லாம் இவ் அமைப்பின் மீது சிறிலங்கா அரசு பெரும் நெருக்கடிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உண்டாக்குகின்றது.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதுமட்டுமின்றி பொய்யான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திர தினம் அன்று காலை முதல் மாலை வரை பல மணி நேரம் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் யாழ் மாவட்ட அமைப்பாளரான கஜேந்திரன் ஜெனனன் மீது சிறிலங்காவின் பயங்கரவாத குற்றத்தடுப்பபு விசாரணைப் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு, பொலீஸ் குற்றத்தடுப்பு பிரிவு என பல பிரிவினரால் யாழ் மாவட்ட அவர்களது அலுவலகங்களில் தடுத்து வைத்து அச்சுறுத்தும் வகையில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் பல முறை சுவீகரன் நிஷாந்தன், நடராஜா ரவிவர்மா போன்றவர்களும் சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் விசாரணை எனும் பெயரில் இடம்பெற்ற அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தமிழ்த் தேசிய தீவிர செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் போன்றவர்களை அச்சுறுத்தும் வகையில் திட்டமிட்டு அரங்கேற்றும் விசாரணைகளை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையாக கண்டிப்பதுடன் இது போன்ற செயற்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எம் இளைஞர்களுக்காக தொடர்ந்தும் நாம் குரல் கொடுப்போம் என்று இந்த சிறிலங்கா அரசுக்கு குறிக்கொள்ள விரும்புகின்றோம்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை கடமை செய்ய விடாமல் தடுத்து வாகனம் சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை 08.02.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் மற்றும், மதிப்புறு எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது குற்றசாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக மன்றில் பிரசன்னமாகியிருந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆயராகி இருந்தார்கள். சட்டத்தரணிகள் நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக தொடர்ச்சியாக வழங்கு தாக்கல் செய்யப்படாமல் சட்டமாஅதிபரிடம் இருந்து எதிர்பாக்கப்படுவதாக சொல்லப்படுவதை அடுத்து

அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிபதியால் சொல்லப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized