வௌிநாடுகளிலுள்ள 3 இலங்கை தூதரகங்கள் மூடப்படுகின்றன

வௌிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையும் ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேவையின் தேவை மற்றும் செலவீனங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க, நைஜீரியாவிற்கான தூதுவர் மியன்மாருக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, சைப்பிரஸிற்கான கன்சியூலர் ஜெனரல் நாடு திரும்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆண்டு இலங்கையில் “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனம்

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022 ஆம் ஆண்டை – “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு. மு. பத்மவாசன் அவர்களினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லை ஆதீனக் குரு முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேற்படி பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான திரு.எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி.சாந்தி நாவுக்கரசன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி, திரு.சுந்தரலிங்கம், திரு.சுப்பிரமணியன், திரு.விக்னேஸ்வரன், திரு.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு அமெரிக்க தூதரை சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையில் தமுகூ தூதுக்குழு, நேற்று (16)அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில் மலையக தமிழ் மக்களின் எழுச்சி, இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு, பொறுப்புகூறல், எதிர்வரும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்கள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன.

புதிய வருடத்தில் அமெரிக்காவில் இருந்து அரசாங்க பிரமுகர்கள், அதிகாரிகள் இலங்கை வர உள்ளதாகவும், அவர்கள் தமுகூ உட்பட இலங்கையின் அனைத்து தரப்பினரையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதேபோல் அமெரிக்கா வந்து ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும்படியும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பிக்கு அமெரிக்க தூதர் அழைப்பு விடுத்தார்.

தற்போதைய தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டின் பின்னர், தேசிய, சர்வதேசிய அரங்குகளில் நாம் முன்வைக்க உள்ள, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பொது குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணத்துடன் நாம் சர்வதேச சமூகத்தை காத்திரமாக எதிர்கொள்வோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் பதிலளித்தார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தரப்பில் பதில் தூதுவர் மார்டின் கெலி, பதில் துணை தூதர் சுசன் வோல்க், அரசியல் அதிகாரி ஜெப்ரி சனின் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ எம்பியுடன், தமுகூ நிதி செயலாளர் கண்டி மாவட்ட எம்பி வேலு குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், இணை தவிசாளர் பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சிங்கள மக்கள் இனவாதிகளே- பகிரங்கமாக கருத்து வெளியிட்ட தேரர்!

இலங்கையில் சிங்கள மக்கள் இனவாதிகளே என தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக சமூகத்தில் நல்லிணக்கத்திற்கான அரசியலமைப்பு என்ற தலைப்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட வடவல சித்தார்த்த தேரர் என்பவரே, கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவுபடுத்தி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் இந்த கருத்துக்களை வெளியிட்டமையால் விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும், எனினும் அது தொடர்பில் தான் கவலையடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீண்ட காலமாக என் மனதில் இருக்கும் பெரும் வேதனையான ஒரு விடயத்தை நான் இந்த இடத்தில் சொல்ல ஆசைப்படுகின்றேன். நான் சிலாபம் பகுதியில் கடற்கரைக்கு அருகில் பிறந்தேன்.

நான் வாழ்ந்த அந்த பகுதியில் நிறைய தமிழ் குடும்பங்கள் அன்று வாழ்ந்து வந்தன. 1956 ஆம் ஆண்டு காலப் பகுதி அது. அந்த நாட்களில் நான் பாடசாலைக்கு சென்று வந்ததன் பின்னர் விகாரைக்கு சென்று அங்குள்ள புத்தகங்களை வாசிக்கச் செல்லுவேன்.

அன்று அதில் நான் பார்த்த விடயம் தான் இன்று வரை என்மனதில் பெரும் கவலையாக உள்ளது. சிங்களவர் தமிழர் இனக் கலவரம் இடம்பெற்ற வேளையில் சிங்களவர்களால் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் சிங்களவர்களின் உடல்களை அமிழ்த்துகிறார்கள்.

அதேபோல் மற்றொரு சம்பவத்தையும் பார்த்தேன் அதேபோல் தார் பீப்பாய்க்களை கொதிக்க வைத்து அதில் தமிழர்களின் உடல்களை அமிழ்த்தி கொல்கின்றார்கள். அன்று எனக்கு 10 வயது . இதை பார்த்த நாள் முதல் இன்று வரை சிங்கள தமிழ் கலவரம் பற்றி பேச்சை எடுத்தால் என் மனம் என்னிடம் சொல்லும் ”சித்தார்த்த நீ மாத்திரம் சிங்களவர்களுக்காக பேசக்கூடாது” என்று.

அதே போல் நேற்று மாலை ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த புத்தகத்தில் கடந்த 70 களில் நடத்த யுத்தம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த யுத்தத்தின் போது இருந்த தமிழ் குடும்பங்கள் வீடுகளை விட்டு காடுகளுக்குள் ஒளிந்திருந்து ஒரு வாரம் கழித்து வீடு உள்ளதா என பார்க்க வருவார்கள்.

வந்து பார்க்கும் போது வீட்டிற்கு குண்டு தாக்குதல் மேற்கொண்டு வீடு சுக்குநூறாகியிருக்கும். தாய் தன் தந்தையை தேடி அழுகிறாள். காரணம் தந்தையை காணவில்லை. பார்த்தால் தந்தை கிணற்றில் விழுந்துள்ளார் அல்லது இராணுவத்தினால் கொன்று வீசப்பட்டுள்ளார்.

இப்படியான நாட்டில் தான் நாம் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகின்றோம். இன்று தேரர்களாகிய நாம் மக்களிடத்தில் நிறைய, பிரபலமாக, கடுமையாக விமர்சனத்திற்குள்ளாகின்றோம். நாம் தான் இனவாதிகள் என நான் சொல்கின்றேன் அது உண்மை தான்.

இதை கூறியதற்காக என்னை விமர்சிப்பார்கள். பத்திரிகைகளில் எழுதினாலும் பரவாயில்லை அதுதான் உண்மை. தேரர்களாக எமக்கு, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய உயிரை உயிராக மதித்து அவர்களுக்கு உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் – உடன் வெளியேற்றுமாறு வலியுறுத்து

வட மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் குறைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்   வலியுறுத்தியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே சி.வி.விக்னேஸ்வரன் இதனைக் கூறியுள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இராணுவத்தின் பங்கேற்புடன் நீர், சுற்றாடல், மற்றும் விவசாய பாதுகாப்பு அமைப்பின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இராணுவத்தின் பிரசன்னம் குறித்து அவர் தமது கரிசனையினை வெளிப்படுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், வடக்கில் பாரியளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருவதாகவும், விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே வடக்கில் தங்கியுள்ள மேலதிக இராணுவத்தினரை உடன் வெளியேற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இராணுவத் தரப்பின் பங்கேற்புடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்மையினால் தம்மால் அதில் கலந்து கொள்ள முடியாது எனவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதாரம் 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி

2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகித எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 மூன்றாம் காலாண்டில் 2,536,490 மில்லியன் ரூபாவிலிருந்து 2021 மூன்றாம் காலாண்டிற்கான நிலையான விலையில் 2,497,489 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 4,087,148 மில்லியன் ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தற்போதைய விலையில் 4,132,955 மில்லியன் ரூபாவாக 1.1 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

Posted in Uncategorized

15 வருடங்களின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

இதேவேளை அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு , தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும் , தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு நெகிழ்ச்சியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடைச்சட்டமே காரணம்- கமல் குணரத்ன

இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய சாதகத்தன்மையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்ததென பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத விதத்தில் எவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவது என்பதை நாம் ஆராய்ந்ததுடன், இது குறித்த அறிக்கையை மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தோம் என கமல் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயங்களில் சர்வதேச தரப்பினர் ஒரு காரணியை வெளிப்படுத்தி அறிக்கையொன்றை முன்வைக்கையில், அதற்கு நாம் பதில் தெரிவிக்க தயாராகும்போது, அது குறித்த வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் உடனடியாக மற்றப்பக்கத்தில் வேறொரு அறிக்கையை முன்வைத்து முற்றிலும் மாறுபட்ட காரணிகளை வலியுறுத்துகின்றனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ரெலோவின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் மீதான வழக்கில் திருப்பம்?

கல்முனைமாநகரில் அமைக்கப்பட்டிருந்த வீதிப்பெயர்ப் பலகையொன்றினை உடைத்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  உபதலைவரும் த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான குலசேகரம் ஹென்றி மகேந்திரன் மீது தொடரப்பட்ட  வழக்கில் திருப்பம் ஏற்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு வருடங்களாக இவ்வழக்குவிசாரணை  கல்முனை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது.

இவ்வழக்கின் 34ஆவது தவணை கடந்த 15 ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எம்.சம்சுதீன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அச்சமயம் கல்முனை மாநகரசபையின்கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக்  சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அவர் அதற்கு பூரண தயார்நிலையில் இல்லாமையினால் மேலதிக விசாரணைக்காக வழக்கை அடுத்த வருடம்  பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு நீதிவான் சம்சுதீன் ஒத்திவைத்தார்.

ஹென்றிமகேந்திரன்சார்பில் பிரபல சிரேஸ்டசட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தாவின் வழிநடாத்தலில் சிரேஸ்ட சட்டத்தரணி என்.சிவரஞ்சித் ,சட்டத்தரணி என் மதிவதனன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்நிலையில் 35ஆவது தவணையின்போது எதிர்பாராத திருப்பம் ஏற்டலாமென தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாயண நிதியத்தை நாடுவதே டொலர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு – ரெலோவின் இளைஞர் அணித் தலைவர்

சர்வதேச நாயண நிதியத்தை நாடுவதே சிறிலங்காவின் டொலர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார, டொலர் நெருக்கடி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை அரசாங்கம் தற்போது எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறையாகும். கஐானாவில் இருப்பில் உள்ள டொலர் 1.5 பில்லியனாகும் ஆனால் டிசம்பர் மாத இறுதியில் சர்வதேச தவணைக் கடன்கள் செலுத்த 2 பில்லியன் டொலர் தேவை அத்துடன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய மேலும் ஒரு பில்லியன் டொலர் தேவை அத்துடன் துறைமுகத்தில் கப்பல்களில் காத்திருக்கும் உணவுப் பொருட்களை இறக்க வங்கிகளினால் எல் சீ கொடுக்க முடியாத அளவிற்கு டொலர் பற்றாக்குறை உள்ளது இதனால் பெரும் நெருக்கடிக்குள் ஏழாம் அறிவு நிதி அமைச்சர் உட்பட்டுள்ளார்.

டொலரை பெற அமைச்சர் பசில் இந்தியா சென்று முதல் கட்டம் 500 மில்லியன் டொலர் கோரியுள்ளார் சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கேட்டுள்ளார் தற்போது 16 திகதி டுபாய்க்கு சென்றுள்ளார் டொலர் தேடும் பணிக்கு ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக ராஐதந்திர வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்துள்ளன இதனால் மேலும் நெருக்கடிகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் ஐனாதிபதியின் பிடிவாதப் போக்கினாலும் மத்திய வங்கி ஆளுநரின் பதவி ஆசையாலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் , உலக வங்கி, ஜீ 7 நாடுகள் போன்றவற்றை நாட விடாது தடுப்பதாக ஆளும் கட்சித் தரப்பினர் கூறுகின்றனர் .

உண்மையாக சிங்கள மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மீறி பல நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டிய நிலை இருப்பதன் காரணமாகவே ஐனாதிபதி சர்வதேச நாயண நிதியம் போன்ற அமைப்புக்களிடம் செல்ல மறுப்பதற்கான உண்மை நிலை. ஆனால் என்ன நிபந்தனை வந்தாலும் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுதான் டொலர் பிரச்சினைக்கான தீர்வை சிறிலங்கா அரசாங்கம் வேண்டும்

Posted in Uncategorized