கட்டுநாயக்கவில் நாளை முதல் பரிசோதனைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட பிசிஆர் பரிசோதனை வசதிகள் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இன்னும் இயங்கவில்லை என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சனிக்கிழமை முதல் விரைவான பரிசோதனை வசதி கிடைக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்த போதிலும், விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்ந்து ஆய்வகங்களுக்கு அறிக்கைகளைப் பெற அனுப்பப்படுகின்றன.

எவ்வாறாயினும், தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, நாளை (28) க்குள் இந்த மையத்தில் மாதிரிகளின் பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் – இராணுவ தளபதி

நாட்டை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, தேவையான வழிகாட்டுதல்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, விவசாயம், பொதுச் சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53% பேருக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், 30 வயதுக்கு மேற்பட்ட 98% பேருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஒரு டோஸைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் எம்.பி.க்கள் முறைப்பாடு

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள்.

இதற்கமைய சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

ஞானசார அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது.

எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு ஐ.சி.சி.பி.ஆர் (ICCPR )சட்டத்தின்கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயை அழைத்துவந்தது எதற்காக – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கரும்புள்ளி ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் சில நாட்களாக இலங்கையிலே குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பெயர் அடிபட்டவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்து பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திலே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் இணைந்து அவரது கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

தகவல்களின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நிறை வெறியுடன் சென்று தமிழ் அரசியற் கைதிகளைத் தன் முன் முழந்தாழிட வைத்து தனது கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லெஹான் ரத்வத்த கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது, அவருடன் இணைந்து சந்திப்பை நடத்தியது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே பாhர்க்கின்றேன்.

லெஹான் ரத்வத்தயின் தகப்பனாhர் அனுரத்த ரத்வத்த நான் பாராளுமன்றத்திலே இருந்த 1989ம் ஆண்டு காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலே நான் நினைக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே பிரேமதாசாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு கேட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை நேரடியாகச் சென்று சந்தித்தவர்.

தந்தை தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் மகன் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு தமிழ் அரசியற் கைதிகளை அவமானப்படுத்துகின்றார்.

2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கூட கண்டியிலே பதினொரு முஸ்லீம் இளைஞர்களைச் சுட்டுக் கொண்ட சம்பவத்தில் தகப்பன் மகன் இருவரும் சம்பந்தப்பட்டவர்களாகத் தகவல்கள் இருக்கின்றன. அந்த பரம்பரைச் செயல்களினூடாவே அரசியல் நடத்துபவர், தற்போது தமிழ் அரசியற் கைதிகளைத் தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பாதணியை நக்க வைத்துள்ளார்.

நான் பொதுவாக அரசியல்வாதிகளைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பவன் அல்ல. ஆனாலும் நானும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து, அதனூடாக அரசியலுக்குள் வந்தவன் என்ற அடிப்படையில் எனது இரத்தம் கொதிக்கின்றது. அதனால்தான் எனது கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றது.

மேற்சொன்னவாறு எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள். லொஹான் ரத்வத்த ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிவு அரசியல்வாதி. அந்தக் கழிவு அரசியல்வாதியை மட்டக்களப்பிற்குக் கொண்டு வர வேண்டாம்.

அவருக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்பவர்கள் இருவர். ஒருவர் பொலிஸிற்குப் பொறுப்பானவர். சரத் வீரசேகர கூறுகின்றார். அவர் கையில் வைத்திருந்தது அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கியாம், அனுமதிப்பத்திரம் வைத்துள்ள துப்பாக்கி என்றால் கொலை அச்சுறுத்தல் விடலாமா? இல்லை கொலை தான் செய்யலாமா?

அவருடன் இணைந்து லொஹானுக்கு ஆதரவு கொடுக்கும் மற்றையவர் விமல் வீரவன்ச. இலங்கையில் முதற்தர இனத்துவேசி. அவர் சிறைச்சாலை அமைச்சராக இருந்து செய்த குற்றத்திற்காகவே அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். அவர் வகிக்கும் ஏனைய பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டாம் என்கின்றார். அங்கும் ஏதாவது நடக்க வேண்டும். அதன் பின்னர் தான் அதிலிருந்தும் அவரை இராஜினாமா செய்ய வைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் நீதி அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே சம்மந்தப்பட்டவர்களிடமும், சம்மந்தப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றார். ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அவர்களது தலைமையில் இந்தச் சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பதற்கான குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த இராஜாங்க அமைச்சரை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து மாலை அணிவித்து நீங்கள் அவரை நல்லவராகக் காட்ட முற்படுகின்றீர்கள்.

இது மாபெரும் தவறு என்பதுடன், பன்றியுடன் சேரும் கன்றும் பவ்வி அருந்தும் என்ற பழமொழிக்கேற்றால் போலான வேலையையே செய்துள்ளீர்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திலும் செய்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை

சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை  முன்வைத்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின்  34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல்.

இனப் படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல்.

இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல்.

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்காக ஈடுசெய் நீதி கிடைப்பதை உறுதி செய்தல்.

ஈடு செய் நீதி கிடைப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த  5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது.

அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திலீபனின் நினைவேந்தல்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான  தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தனது குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது.

ஆனால், தமிழர்களான நாம் தியாகி திலீபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஞ்சலித்தமைக்காக, தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறாக இராணுவமும் பொலிஸாரும் நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

அந்த நினைவு கூர்தல் நிகழ்வு பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பங்காளிகள் எனப் பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை நினைவில் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் தமிழர் என்பதற்காக அரசாங்கம் வேறுபட்ட அணுகுமுறை வாயிலாக எமது நினைவுகூரலைத் தடுக்கின்றது என்பதே பிரச்சினை.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்தின் உள்நோக்கத்தினை சட்டம் ஒழுங்கு என நடைமுறைப்படுத்துகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறித்த குழு கலந்துரையாடவுள்ளது.

குறித்த குழு இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

Posted in Uncategorized

காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம்

காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும்.

எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி எந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராடவேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.

தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர்.

எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம்.

இதேவேளை ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்ளவதற்கான யுக்தியாகவே  ஜனாதிபதியின் ஐ.நா உரையை பார்கின்றேன்.

இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார்.

மேலும், தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவ பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது.

எனவே, இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அது உண்மைக்கு புறம்பானது.

காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியும் என தெரிவித்ததன் ஊடாக அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்க ஆரம்பமாகியது முக்கிய நகர்வு!

வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல் ஆயர், திருகோணமலை மறை மாவட்டம் மற்றும்  தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்னறை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டிருப்பதாவது,

இது தொடர்பில், கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்யும் சந்திப்புகளை நடத்துவதில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியோடு மதத்தலைவர்களும் இணைந்து ஊக்குவித்தோம்.

சில கூட்டங்களைத் தலைமையேற்றும் நடாத்தியிருந்தோம். சமீபத்தைய நாட்களில் மீண்டும் இதைப் போன்ற ஒரு வரலாற்றுத் தேவை எழுந்திருப்பதாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும்போது, அவற்றைத் தீர்த்துவைக்கவென மீண்டும் மீண்டும் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை வகுத்துக்கொள்வதை ஆராய்ந்து செயற்படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது.

இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில் முதற்கட்டமாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, அடுத்;தகட்டமாகப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடி, தக்க வழி ஒன்றை வகுக்க ஆவன செய்வதற்காகப் பூர்வாங்கச் செயற்குழு ஒன்றை எமது மேற்பார்வையில் உருவாக்கிவருகிறோம்.

வடக்கு-கிழக்கு இணைந்து மேற்கொள்ளும் இம்முயற்சியில் சட்டத்துறை சார்ந்த இளந்தலைமுறையோடு, சிவில் சமூக மற்றும் மரபுரிமைச் செயற்பாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்களும், ஊடக அமையங்களை ஸ்தாபித்துச் செயற்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களுமாக, எந்தவித அரசியற் கட்சிப் பின்னணியும் இல்லாத ஐவர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

முதற்கட்டமாக, இவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பூர்வாங்கக் குழுவின் பொதுத் தொடர்பை சட்டத்துறை சார்ந்த மூவர் கையாள்வது பொருத்தம் என்ற அடிப்படையிலும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடும், மேலும் இரண்டு சட்டத்தரணிகள், இயன்றவரை பால், மத, மற்றும் பிரதேச சமத்துவத்துடன் இணைக்கப்பட்டு பொதுத்தொடர்பைக் கையாளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

செயற்குழு மற்றும் பொதுத்தொடர்பில் பங்கேற்பவர்களின் விபரங்களை, ஆரம்பக் கலந்துரையாடல்கள் முடிவடைந்ததும் வெளிப்படைத்தன்மையோடு அறியத்தரும் பணியை மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் கையளித்திருக்கிறோம். இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும், இம் முயற்சியை ஊக்குவித்துச் செயற்படவும் விரும்புவோர் participate@tamildemocracy.org என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தமது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

கல்வித்துறை, சட்டத்துறை, மனித உரிமை, ஊடகத்துறை மற்றும் இதர சமூகப் பரப்புகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரோடும் கலந்தாலோசித்து, உகந்த ஒரு பொறிமுறையை வகுக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்ற நல்லாசியுடன் இம் முயற்சியை ஆரம்பித்து வைப்பதில் மனநிறைவடைகிறோம். அனைவரின் ஆதரவும் இம்முயற்சிக்குக்கிட்ட இறையருளை வேண்டிநிற்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.